ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்.....11.





2010,ஜூலை 29…..

ஸ்வீட்டி தூங்கிக் கொண்டிருந்தாள். ஜோசப் தன் மகளருகே அமர்ந்து அவளது தலையை தடவிக் கொடுத்துபடி அவளை வாஞ்சையாய் பார்த்துக் கொண்டிருந்தார். தான் எப்படி அவ்வளவு மூர்கத்தனமாய் முந்தைய தினம் தனது செல்ல மகளிடம் நடந்து கொண்டோம்?என எண்ணியபடி தன்னையே திட்டிக் கொண்டார். வழக்கமாய் அப்படி அவர் நடந்து கொள்கிறவர் அல்ல. அவருக்கு ஸ்வீட்டி ஒரே மகளென்பதால் அவள் மீது அளவுகடந்த பிரியமும் பாசமும் உண்டு. இத்தனை ஆண்டுகளில் அவர் இப்படி நடந்து கொண்டது இதுவே முதல்முறை. எத்தனை கோபமாக இருந்தாலும் அவளை திட்டுவாறேயன்றி கை நீட்டியதில்லை.

சோபியா தற்செயலாய் முழித்தவள், தன் கணவனை கண்டதும் எழுந்து அமர்ந்து தன் தலைமுடியை வாரிச் சுருட்டி கொண்டையிட்ட வாறே எழுந்த குரலில் “ முட்டாத்தனமா நடப்பானேன்..... இப்படி தலைய தடவிட்டு இருப்பானேன்...என்றாள்.

“இல்லய்யே.... எம்மவள அடிக்கனும்னா அடிப்பேன்.... ஏதோ சாத்தான் புத்தியில மதியழந்து நடந்திட்டம்யே....

நேத்து புள்ள எப்புடி ஏங்கிப் போயிட்டா தெரியுமா? ஆனா உங்கள மாறியே அழுத்தக்காரி.... அப்பனும் மவளும் சண்ட போட்டுக்கிட்டீக பேவுள்ள எங்கிட்ட பேசமாட்டேன்னு நின்னுட்டாளே..... அப்படியே சாப்புடாம கொள்ளாம தூங்குனவ தான்..... உங்களுக்கென்ன கவல நீங்க நல்ல உங்க மருமவன் கூடப் போயி கூத்தடிச்சிட்டு வந்திட்டீக....

காலங்காத்தால ஆரம்பிக்காத தாயி....

அவள் முனுமுனுத்தபடியே எழுந்து சென்றாள். தூக்கம் கலைந்து விழித்த ஸ்வீட்டி தன் தந்தை தன்னருகே அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் மெல்ல தன் தலையை மட்டும் நிமிர்த்தி அவரது மடியில் படுத்துக் கொண்டாள்.

அப்பா உன்னைய ரொம்ப கலங்க வச்சிட்டனோ....? ஸாரிம்மா....என்றபடியே அவளது தலையை வாஞ்சையாய் அழுத்தினார்.

“விடுப்பா..... எனக்கு தலையெல்லாம் ரொம்ப வலிக்கு.... நான் இன்னக்கும் காலேஜ் போலப்பா....

நேத்தும் போலியேம்மா.... ஏதாவது சொல்லிரப் போறாங்க....

அப்பா ப்ளீஸ்பா..... இன்னக்கு ஒருநாள் மட்டும்பா....

சரிடா எந்தங்கம்....

ஜொஸியம்மே பூசை முடிந்து வந்து காலை சிற்றுண்டியும் தயார் செய்துவிட்டிருந்தாள். பிரவீண் விழித்திருக்கவில்லை. அவளுக்கும் அவனை எழுப்ப மனமில்லாமல் அங்குமிங்குமாய் அலைந்த வண்னமிருந்தாள். முந்தைய நாள் நிகழ்வுகள் அவளுக்குள் ஒரு இனம்புரியாத கவலையை அளித்துக் கொண்டிருந்தது. நேரம் பத்து மணியை நெருங்கி விட்டிருந்தபடியால் அவனை எழுப்பிவிடலாம் என முடிவு செய்தபடி அவனருகே சென்றால். அப்போதுஆச்சி....என்றபடி ஸ்வீட்டி வீட்டுக்குள் நுழைந்தாள். நேற்றைய சோர்வுகள் எதுவும் அவளிடம் தென்படவில்லை. நீல நிறத்தில் ஸ்கெர்டும் டாப்ஸும் அணிந்திருந்தாள். டாப்ஸ் வஞ்சகமில்லாமல் வளைவு நெழிவுகளில் பயணித்து அவளது உடலை இறுகி அணைத்து கொண்டிருந்தது. இயல்பான துள்ளலுடன் இருந்தாள்.

“வாம்மா.... என் சீதேவி எங்க ஆத்தாளுக்கு கோவமெல்லாம் தணிஞ்சிருச்சா....?

மச்சான எங்க....?

இன்னும் எந்திக்காம தூங்குறானேன்னு இப்பதான் எழுப்ப போனேன்.... நீ வந்திட்ட....

ஆச்சி நீங்க போங்க நானே மச்சான எழுப்புறேன்...

அவள் உள்ளே வந்ததுமே பிரவீண் தூக்கம் கலைந்திருந்தான். ஆனாலும் தூங்குவது போலவே படுத்திருந்து கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

சரித்தா.... நீயே ஒன் நொச்சான எழுப்பு... என்றபடி ஜொஸியம்மே கிச்சனுக்குள் சென்றாள். ஸ்வீட்டி பிரவீண் அருகே அமர்ந்து கொண்டாள். அவன் கைகள் இரண்டும் தலையனையை அணைத்தபடி குப்புற படுத்து தலையை வலப்பக்கம் வைத்திருந்தான். அவள் குனிந்து அவன் காதருகே சென்றுபிரவீண் எழும்பு டா....என்றாள். அவன் தூங்குவது போலவே பாசாங்கு செய்தபடி.... தன் தலையை மட்டும் இடப்பக்கம் திருப்பியபடி படுத்துக் கொண்டான். அவளுக்கு புரிந்து போனது அவள் விழித்து விட்டான் என. இப்போது அவள் தனது முடிகற்றை கொஞ்சம் எடுத்து அவன் மூக்கின் அருகே கொண்டு செல்லவும்.... அவன் பட்டென்று மல்லாந்து திரும்ப..... அவளது முலைகள் ரெண்டும் அவன் முகத்தில் மோத அவளை படுத்தபடியே அணைத்துக் கொண்டான்.

“ஏய்.... திருட்டுப் பூன..... விடுடா....என்றபடி அவள் திமிரவும் அவன் மீண்டும் அவளை இறுக பற்றிக் கொண்டான். தற்செயலாய் அறையின் உள்ளே நுழைந்த ஜொஸியம்மே இந்த பிரிமனை திரிப்பை கண்டு திகைத்து பதறிப் போனாள். பட்டென்று வந்து ஸ்வீட்டியின் முதுகில் செல்லமாய் ஒரு அடியை போட்டபடி ”ஏய்! கழுத எழும்புடி....” என அவள் சொல்லவும் பிரவீண் பதறிபோனவனாய் அவளை விடுவித்தான்.

அவள் சற்று தள்ளி விலகிச் சென்று நின்றபடி “ஆச்சி.... நான் மச்சான எழுப்பதான்.... வந்தேன்.... மச்சாந்தான்....” என படபடப்பு அடங்காதவளாய் பேசினாள்.

“அய்யோ ஆச்சி நீங்க நெனச்சித்தான்.... நான்... அப்படி பண்ணிட்டேன்...” என பிரவீணும் உளரிக் கொட்டினான்.

“கெழவிக்கும் கொமரிக்கும் வித்தியாசம் தெரியலையாக்கும்..... நல்லா சொல்லுவீரே?”

“அப்படி கேளுங்க ஆச்சி”

“என்ன நோளுங்க ஆச்சி....? நீ இதுக்குதான் காலேசுக்கு போவாம இங்கனையே குட்டி போட்ட பூன மாறி சுத்துறியாக்கும்?”

“ஆமோ.... ஒங்க பேரம் பெரிய மன்மத குஞ்சு.... நான் அலையறதுக்கு?”

“அடி செருப்பால.... எம் பேரனுக்கு என்ன கொறடி எட்டு சீமையில தேடுனாலும் இப்படி ஒரு ராசா உனக்கு கெடப்பானாக்கும்?”

“ஆங்.... ரொம்ப பவுசுதான்!!! காக்கா வந்து தூக்கிட்டு போயிறபோது பத்திரமா பொத்தி வச்சிக்குங்க”

“ஏய் வா கிழிஞ்ச கொமறி வந்தேன் இப்போ....” என்றபடி ஜொஸியம்மே அவளை அவள் பக்கமாய் போகவும் “வெவ் வெவ்வே....” என அளவம் காட்டிய படி ஓடியே போனாள் ஸ்வீட்டி.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு நீமரு என்ன உக்காந்து போஸ் குடுத்துட்டு இருக்கியரு... போயி பல்ல வெளக்கிட்டு சாப்பிட வாரும்” என பிரவீணை எழுப்பி கிளம்பச் செய்தாள்.

ஸ்வீட்டியால் அவளது வீட்டில் அன்று ஒரு ஐந்து நிமிடம் கூட சேர்ந்தாற் போல் இருக்க முடியவில்லை. அவள் பிரவீணையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். முந்தைய தினத்தின் கசப்புகளெல்லாம் சுவடுகள் தெரியாமல் அவனுக்குள் அழியப்பட்டிருந்தது. சின்னச் சின்ன ஊடல்களுக்கு பிறகு ஏற்படும் அந்த கூடல்கள் அத்தனை ஆத்மார்தமானவை நாம் நமது பிரியத்துக்குரியவர்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அதன் ஒவ்வொரு கணமும் நமக்கு உணர்த்தும். ஆம்!! இனிப்பின் சுவை கசப்பை சுவைத்தவனுக்கே தெரிவது போல்.

மாலை 5.00 மணி.....

அழகான கரும்பச்சை நிற சுடிதார் அணிந்து தன் தந்தை ஜோசப்பிடமிருந்து அவரது இருசக்கர வாகனத்தின் சாவியையும் வாங்கிக் கொண்டு வந்து நின்றாள் ஸ்வீட்டி.

“மச்சான் கெளம்புங்க….. வெளியில போவனும்?”

“எங்கையே கிளம்பனும்?”

“கிளம்புங்க சொல்றேன்…..”

“எங்கடி எம் பேரன கிளம்பச் சொல்ற…..?”

“கெழவி….. இங்க யாரும் உங்ககிட்ட பேசல…. மச்சான கூட்டிட்டு எங்கையாவது போவேன் உங்களுக்கு என்ன?”

“போவடி போவ….. அதெல்லாம் அவன் உங்கழுத்துல தாலிய கெட்டுன பெறவு போ…. இப்ப உங்கப்பன கூட்டிட்டு போ….”

“எங்களுக்கு எல்லாம் தெரியும்….. எங்க அப்பாகிட்டயும் சொல்லியாச்சு தெரியுதா…..” என்றபடி ஜோசப்பின் பைக் சாவியை ஆட்டிக் காண்பித்தாள்.

“எம்மா….” என்றபடியே ஜோசப்பும் உள்ளே வந்தார்.

“வாய்யா இந்த வாயாடி பேவுள்ள என்னமோ சொல்றாளே என்னனு கேளு?”

“எம்மா…. அதெல்லாம் ஒண்ணுமில்லமா…. அவ ரெண்டு நாளா காலேஜுக்கு போல இல்லையா…. அதான் ரொமிளா வீட்டுக்கு போயி ஏதோ பாடம் கேட்டிட்டு வாரேன் சொன்னா அதான் போயிட்டு வான்னு சொன்னேன்”

“அதுசரி அதுக்கு எதுக்கு இவன கூப்புடுறா?”

“அவ தனியா எப்படி போவா? பிரவீணனையும் கூட்டிட்டு போன்னு சொன்னேன்”.

“எல கூறுகீறு கெட்டுப் போச்சா உனக்கு ஒண்ணு நீ கூட்டிட்டு போவனும் இல்ல ஒம்பொண்டாட்டிய போவச் சொல்லனும் அத வுட்டிட்டு சின்னஞ் சிறுசுகள ஒண்ணா போவ சொல்றியே? ஊர் நாலு பேசும்னு வேண்டாமா?”

“என்னமா நீங்க…. எந்த காலத்துல இருக்கீங்க? ஊரு பேசும் கூறு பேசும்ட்டு”

“நீயும் ஒம்மவ கூட சேந்துகிட்டு ஆடுனா அவளுக்கு நல்ல கொண்டாட்டமாத்தான் கெடக்கும்…. நான் சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் நீயாச்சு, உம்மவளாச்சு, உம்மருமவனாச்சு….” என சொன்னவளுக்கு காலையில் தான் கண்ட காட்சி ஏனோ நினைவில் வந்து நிழலாடிச் சென்றது.

பிரவீண் கிளம்பி பைக்கை ஸ்டார்ட் செய்ய அவள் அவன் பின்னால் ஏறி அமர்ந்து அவனது தோள்களை பற்றிக்கொண்டாள்.

வண்டியை ஓட்டியபடியே பிரவீண் “எனக்கு உம் பிரண்டு வீடு தெரியாது எப்படி போவனும்னு சொல்லு?”

“பிரண்டு வீட்டுக்கெல்லாம் பெறவு போய்க்கிறலாம் இப்ப நீங்க எங்கையாவது போங்க. மச்சான்”

பைக்கை சட்டென்று நிறுத்தியவன் அவள் பக்கமாய் திரும்பி “ஏய்!! விளாடுறியா? எங்கையாவதுன்னா எங்க போவ?”

“மச்சான் மொதல்ல வண்டிய எடுங்க நடுரோட்ல நிப்பாட்டிகிட்டு…..”

அவன் மெல்ல வண்டியை ஓட்டியபடி “எங்க டீ போவனும்?”

“மச்சான் பீச்சுக்கு போவமா?”

“பீச்சுக்கா….. தேவையில்லாம பிரச்சனைய வெலக்கு வாங்க சொல்றீயா?”

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது….. போங்க மச்சான் பொட்டப்புள்ள நானே தைரியமா சொல்றேன்…. நீங்க என்னடான்னு இப்புடி பயப்புடுறிங்க….”

“நேரம்டி…. சரி எந்த பீச்சுக்கு போகனும்?”

“தூத்துக்குடில தொள்ளாயிரத்தி எட்டு பீச்சா இருக்கு?”

”ரோச் பார்க்கா இல்ல ஹார்பர் பீச்சான்னு கேட்டேன்”

”எது தூரமோ அங்கையே போங்க…..”

“நீ வெவரந்தாண்டி….”

“இல்லாட்டி உங்களயெல்லாம் சமாளிக்க முடியுமா?”

அவன் பைக்கை திருகி அல்பர்ட் அன்கோ வளைவிலிருந்து பீச் ரோட்டை நோக்கி வண்டியை விட்டான். வண்டி பீச் ரோட்டை நெருங்கியதும் மாதா கோயிலுக்கு மக்கள் ஓரிருவராய் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. பிஷ்ஷிங் கார்பரை வண்டி தாண்டியதும் மக்கள் நடமாட்டம் கொஞ்சம் குறைய துவங்கியது ஸ்வீட்டி அவனை இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள். அவனது தோளில் இருந்து தன் கையை எடுத்து அவனது இடுப்பில் படர விட்டுக் கொண்டாள். அவனும் அந்த திடீர் நெருக்கத்தால் கதகதப்படைந்து போனான். அவனது கைகள் வேறுவழியின்றி ஆக்சிலேட்டரை திருக ஆரம்பித்தது. ரோச்பார்க்கையும் அதன் பாலத்தையும் தாண்டி வண்டி விரைந்தது. கடல் நீர் ஒருபக்கமாகவும் உப்பளங்களுக்கு செல்லும் காயல் நீர் ஒருபக்கமாகவும் என ரோட்டிற்கு இருபக்கமும் நீரோடிக் கொண்டிருக்க நடுவில் சாலையில் அவளோடு அந்த மாலை நேரத்தில் பைக்கில் அவன் பயனித்தது அழகான ஓவியம் போலிருந்தது.

மாதா கோயில் திருவிழா நேரம்….. அதுவும் வியாழன் மாலை என்பதால் பீச்சிலும் அதிக கூட்டம் இருக்கவில்லை. பைக்கை கடலுக்கு அருகே கொண்டு நிறுத்தியவன் அவளோடு கைகோர்த்தபடி கரையோரம் நடக்கத் துவங்கினான்.

அங்கே மாலை மங்கிக் கொண்டிருக்க….. வஞ்சியவள் கூந்தலை வருணன் வருட….. கதிரவன் மறைய மறுத்து அவள் பொற்கன்னங்களில் தன் வீச்சிழந்த கதிர்களைக் கொண்டு முடியாமல் முகர்ந்து கொண்டிருக்க….. அலைகள் வந்து அவள் காலடியை முத்தமிட துடிக்க…. வங்கக்கடல் ஆர்ப்பரிக்க….. ஐம்பூதங்களையும் வென்ற கர்வத்தோட மங்கையவள் கரம்பிடித்து….. காற்றிற்கும் பூமிக்கும் இடையே கால்வைத்து நடக்கத்துவங்கினான்….. பிரவீண்!!!

காலம் கொஞ்ச காலாறத் துவங்க….. அங்கே இருவருக்குமான மொழி அவர்கள் கண்கள் வழியே பிறக்கத் துவங்கியது. பின்னிய கரங்கள் நசநசக்க….. கோர்த்த விரல்கள் பிசுபிசுக்க…. அவர்களது உடல்களில் காந்தவிசை படரத்துவங்கியது. மூளைக்கும் கால்களுக்குமான செய்தி தொடர்பில் ஏற்பட்ட திடீர் தடங்கள்களால் அவர்களது நடை பாதியில் நின்று போயிருந்தது. ஏதேதோ பேசிக் கொண்டார்கள்….. இருவரும் சில மனஒப்பந்தங்களும் எடுத்துக்கொண்டார்கள்….. சின்னச் சின்ன சண்டைகளும்…. செல்லச் செல்ல சீண்டல்களும்… என வார்த்தைகளற்ற அவர்களது மொழியில் நீண்ட சம்பாஷனைகள் நடக்கத் துவங்கியது. கொஞ்சம் கொஞ்சமாய் அதுவும் மௌனிக்க களைத்துப் போய் அவன் தோள்களில் அவள் சாய்ந்தாள்.

அவளது தலையை கோதியவாறு நினைவடுக்குகளிலிருந்து தமிழை மீட்டு “என்னமா…..”

“மச்சான் இப்படியே இறந்திரலாம் போல இருக்கு”

“ச்சீ…. என்ன பேச்சு பேசுற….. வாய முடு டீ”

“இல்ல மச்சான் ஏதோ பயமா இருக்கு….”

“என்ன பயம் வேண்டிக் கெடக்கு அதான் நான் இருக்கனே…. என்ன மீறி என்ன வரும் உனக்கு….”

அவள் கண்கள் திடீரென்று பனித்துக் கொண்டது.

“என்ன லூசு மாறி அழுவுற….. இதுக்குதான் பீச்சுக்கு போவோம் மச்சான்னியா?”

“உங்கள உடனே கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுது”

“நாளைக்கே பண்ணிக்கலாமா?”

“ம்….”

“அதுசரி…..உனக்கு என்னடி ஆச்சு….ஏன் லூஸு மாறியே பேசுற?”

“இல்ல மச்சான் நேத்து காலைல தான் நாம இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு பிரியத்த சொன்னோம் ஆனா சாயந்திரமே நமக்குள்ள சண்டையாகிப் போச்சு….”

“ஏய்!!! லூஸு நம்ம சந்தோஷத்துக்கும் சரி….. சண்டைக்கும் சரி நாமதான காரணமே….. நாம எதையும் யோசிச்சு பேசியிருந்தா நேத்து சண்டையே வந்திருக்காதே….”

“அதெல்லாம் இல்ல மச்சான்…. எங்கப்பா நான் என்ன செஞ்சாலும் அடிக்க மாட்டாரு ஆனா பாருங்க நேத்து அவுரு அவ்ளோ பேர் முன்னால யோசிக்காம என்ன கை நீட்டிடாரு…. எனக்கு என்னோட சந்தோஷமெல்லாம் நிரந்தரமா இருக்காதோன்னு தோணுது மச்சான்….”

“கண்டதையும் போட்டு மனச கொழப்பிக்காத….. வா இருட்டிருச்சு வீட்டுக்கு போகலாம்” என்றபடி நடக்கத் துவங்கினான். ஏனோ இருவருக்கும் அப்போது மனம் கணத்திருந்தது. மீண்டும் பைக்கில் ஏறியவுடன் அவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். காற்றை கலைத்தபடி காதல் பயணம் தொடர்ந்தது…..

.......தொடரும்.

சனி, 28 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்.....10.





மாதா கோயிலில் திருவிழா நடக்கும் பத்துநாள் மாலையும் மக்கள் வெள்ளத்தால் கோயிலே அல்லோகல்லோப் படும். குடும்பம் குடும்பமாய் மாலை ஆசிர்வாதத்தை பார்த்துவிட்டு பீச்சு ரோட்டில் நீண்ட வரிசையாய் போடப்பட்டிருக்கும் கடைகளுக்கு போகவும்…… சவேரியானா மைதானத்தில் மாதா கோவில் திருவிழாவையொட்டி போடப்படும் பொருட்காட்சியை காணவும்…… கோயில் காம்பவுண்டிற்குள் அமர்ந்தவாறு அன்றன்று நடந்தேறும் பள்ளி,கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை காணவும், உறவினர்களோடும், நண்பர்களோடும் சேர்ந்து குதுகலிக்கவும்…… மக்கள் கூட்டம் தினமும் அலைமோதும்.

பிரிந்த உறவுகளுடன் முறுக்கி திரியவும், அலங்கார ஆடம்பரத்தோடு பவுசை காட்டவும், திருமணங்களுக்கு வரன்கள் கூடவும், ஊர்வம்பை உற்சாகமாக பேசவும்….. என வேறு சில காரணங்களுக்கும் கூடுவோர் உண்டு. காரணங்கள் எதுவாக இருந்தாலும் பல்வேறு தரப்பட்ட மக்கள் ஓரிடத்தில் வருடத்தின் இந்தப் பத்து நாட்களிலாவது ஒன்றாய் கூடுவதென்பது எத்தனை மகிழ்ச்சியானது. தொலைக்காட்சிகளுக்கு பின்னால் துண்டாடப்பட்ட இந்தச் சமூகத்தை…… தனித்தனித் தீவுகளாய் மாறிப்போன வீடுகளில் வாழும் இந்த காலத்து மனிதர்களை ஒன்றிணைக்கும் வல்லமை ஒன்றிற்காவது பனிமய மாதாவை நாம் வணங்குவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.

ஏனெனில் மிகப்பெரும் சர்வாதிகார அரசுகள் எல்லாம் கூட அச்சம் கொள்வது மனித சங்கமிப்பை கண்டுதான். மக்கள் சங்கமிப்பது ஆட்சியாளர்களை கலவரப் படுத்தும். இதுவரை உலகில் நடந்தேறிய மாபெரும் மாற்றங்கள் எல்லாம் மனித சங்கமத்தாலே சாத்தியமானது. பலதரப்பட்ட மனிதர்களை ஒற்றை நோக்குடன் ஒன்று கூட்டிவிட்டால் இங்கு எல்லா மாற்றங்களும் சாத்தியமாகும். இயேசு பிரானை கண்டு அஞ்சவில்லை ஏரோது மன்னனின் மதக்குருமார்கள் அவர்கள் அஞ்சியது அவர் பின்னால் கூடிய கூட்டத்தை. இயேசு நாதரில் ஆரம்பித்து…….கரம் சந்த் காந்தி வரை மாற்றங்களை சாத்தியமாக்கியது அவர்களல்ல…….அவர்கள் பின்னால் அணிவகுத்த அறியாமை நிறைந்த மனித சங்கமங்களே‼‼

பிரவீணும் அவனது குடும்பத்தாரும் ஆசிர்வாதம் முடிந்து கோயில் மணிக் கூண்டிற்கு அருகே வெளியே வீற்றிருந்தனர். ஸ்வீட்டியும், பிரவீணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அந்த மௌனப் பார்வை இருவருக்குமே பிடித்திருந்தது.

ஜோசப்ஏன்யே இப்படியே உக்காந்திருக்கீக…… அப்படியே ஒரு சுத்து போயிட்டு வரலாம்ல

நீங்க கூட்டிட்டு போன நாங்க ஏன் வர மாட்டோம்னா சொல்றோம்”-சோபியா.

எனக்கு கொஞ்சம் வேல இருக்குயே…… பிரவீண் தான் இருக்கான்ல? நீங்க எல்லாம் போயிட்டு வாங்க…..”

ஏன் உங்களுக்கு என்ன இந்நேரத்துல வேல…..?”

நம்ம வின்செண்டை கூட்டிட்டு ஒரு எடத்துக்கு போவனும் பாத்துக்க….”

நீங்க ஒரு எடத்துக்கும் போக வேண்டாம்…… நீங்க போனா எங்க போவீங்கன்னு தெரியும்….. அதனால எங்க கூடயே வாங்க…..”

இவ ரொம்ப கண்டா….. போயிட்டு வான்னா….. ஏட்டிக்கு போட்டி பேசிக்கிட்டு…..”

இரண்டு நாளா மருமகப்புள்ள வந்திட்டார்னு சும்மாதான கெடந்தீங்க…..அந்த கருமத்த குடிக்க முடியாம இப்ப தூக்கி போட்டு உதையுதாக்கும்?”

இவ ஒருத்தி என்னத்தையாவது ஒளரிக் கொட்டிக்கிட்டு……போய்யே போ…..”

நா போத்தான் போறேன்…… நான் போனாத்தான் என் அரும உங்களுக்கு புரியும்…..”

கொஞ்சம் கொஞ்சமாய் இருவருக்குமிடையே ஆரம்பித்த வாக்குவாதம் சண்டையாகிப் போனது. இதை பார்த்து கொண்டிருந்த ஜொஸி….”ஏ புள்ளைகளா….‼‼ என்ன பேச்சு பேசுறீங்க ரெண்டு பேரும்? சின்னஞ் சிறுசுக கணக்கா சண்ட போட்டுகிட்டு….. எல அய்யா ஜோசப்பு நீ எங்கையும் போக வேண்டா(ம்) கேட்டியா…..”

எம்மா நீங்க வேற….. சும்மா இருங்க என்ன?”

விடுங்கத்த இவருக்கு நம்மள விட அதுதான் முக்கியோ(ம்)….. தான் புடிச்சா புடிச்ச புடிதான்…..”

மாமா…… நீங்க இப்ப எங்கையும் போக வேண்டாம் முதல்ல நாம சுத்திப் பாப்போம் பிறகு இவங்கள வீட்ல விட்டிட்டு நானே உங்கள கூட்டிட்டு போறேன் சரியா…..?” பிரவீண் இப்படி சொன்னதும் சோபியா வாயடைத்துப் போனாள். இதுவரை அமைதியாய் இருந்த ஸ்வீட்டியின் கண்கள் தான் ஆங்காரத்தில் மின்ன ஆரம்பித்தது. பிரவீண் அவளை கவனிக்கவே செய்தான்.

தன் அத்தை சோபியாவை பார்த்து…..”எத்த நீங்க தப்பா நெனச்சுக் காதீங்க….. மாமாவ ரொம்ப குடிக்க உட்டுறமாட்டேன் எப்படி கூட்டிட்டு போறேனோ அப்படியே கூட்டிட்டு வர்றேன்……”

இல்லய்யா….. கொஞ்சமா குடிச்சமா விட்டமான்னு இருக்க மாட்டாருய்யா…. இவுரு தனக்கு மிஞ்சி குடிச்சிட்டு அந்த கெடையா கெடப்பாரு அதுக்குத்தான் வேண்டாங்கிறேன்.

சரித்த.... மாமாவ கூட்டிட்டு எங்கையும் போகல.... நானே போய் வாங்கிட்டு வந்து நம்ம ஆச்சி வீட்டு மாடில வச்சு சாப்புடுறோம் சரியா....?

அவளுக்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லையென்றாலும் பிரவீணின் பேச்சுக்கு கட்டுபட்டவளாய் அமைதியாகிப் போனாள். ஒருவழியாய் எல்லோரும் கிளம்பி கடைதெருவுக்கு போனார்கள். ஸ்வீட்டி மாத்திரம் அவனை முறைத்து கொண்டு கோபத்துடன் யாருடனும் பேசாமல் நடந்து சென்றாள்.

டில்லி அப்பளமும், அவித்த கடலையும் வாங்கினான். ஸ்வீட்டியிடம் அப்பளத்தை நீட்டவும்நான் ஒண்ணும் சின்ன பப்பா இல்ல அப்புளோம் சாப்பிட....என விறைத்தாள்.

“ஏட்டி உனக்கு என்ன ஆச்சு உன் ஆத்தா பேயி உம்மேல ஏறிக்கிச்சோ....?என சிடுசிடுத்தார் ஜோசப்.

“ஆமோ எங்க ஆத்தா பேயிதான் இப்ப அதுக்கு என்னங்குறீங்க?

அடிச் செருப்பால வாய்க்கு வாய் பேசிக்கிட்டு....

மாமா நீங்க சும்மா இருங்க அவ ஏதோ விளாட்டுக்கு பேசுறா....?

நீங்க என்ன எனக்கும் எங்க அப்பாவுக்கும் நடுவுல....என அவள் பேசி முடிக்கும் முன்பே அத்தனை பெரிய கூட்டத்திலும் ஜோசப்பின் கை அவள் கன்னத்தை பதம் பார்த்தது. அவமானத்தால் துடித்து அழுது..... அங்கேயே அமர்ந்து விட்டாள்.

“இவுருக்கு கொஞ்சம் கூட அறிவே கெடையாது வயசுக்கு வந்த புள்ளயை நாலு பேரு முன்ன இப்படியா அடிக்கிறது.எனச் சோபியா சொன்னதும் தன் தவறை உணர்ந்தவராய் ஜோசப்பும் அமைதியாகிப் போனார். பட்டென்று அவர்களை சுற்றி ஒரு கூட்டமும் கூடத் துவங்கவே..... மேற்கொண்டு யாரும் பேசாமல் நிலைமையை புரிந்தவர்களாக அங்கிருந்து நடக்கத் துவங்கினார்கள்.

வீட்டிற்கு சென்றதும் துணிகளை கூட மாற்றாமல் ஸ்வீட்டி போய் படுத்துக் கொண்டு விம்மத்துவங்கினாள். சோபியாவும், ஜொஸியம்மேவும் அவள் அருகே அமர்ந்து கொண்டு அவளை சாமாதானப் படுத்த முயற்சித்து கொண்டிருந்தார்கள்.

பிரவீணும், ஜோசப்பும் அவர்களை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு மது அருந்த ஹோட்டல் ஜோனிக்கு சென்றார்கள். மங்கலான விளக்கொளியில் சிகிரெட் நெடி ஏ.சி குளிரில் உலவ.... தடுப்புகளுக்கிடையில் போடப்பட்டிருந்த சோபாவில் இருவரும் தங்களை இருத்திக் கொண்டார்கள். ஆர்டர் எடுக்க பேரர் இவர்களை நெருங்கிய போது....என்ன மருமகனே என்ன சாப்புடுவீங்க..... பீரா...? இல்ல மத்தெதா?

மாமா உங்களுக்கு....?

நமக்கு எப்பவும் எம்.சி.பிராந்தி தான்....

ஆளுக்கு மூணு எம்.சி. லார்ஜ்......மாமா தண்ணி தானே? இல்ல சோடா....எதாவது?

தண்ணிதான்....

சரி.... ஒரு லிட்டர் கூல் வாட்டரும்..... ஒரு லெகர் சோடாவும்....

சார் சைட் டிஷ் என்ன வேணும்?

அவன் தன் மாமனை பார்த்தான். அவரோ அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.... நீங்க வழக்கமா குடுக்குறத மட்டும் குடுங்க....அவர் தலையாட்டியவாறே சென்று விட்டார்.

பேரர் மீண்டும் வந்து அவர்கள் கேட்டதை சப்ளை செய்யும் வரை அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிரவீணுக்கு இன்னும் அதிர்ச்சி அடங்கவில்லை ‘அவளா இப்படிச் சொன்னாள்?என்றே அவனுக்குள் தோன்றிக் கொண்டிருந்தது. மாதா கோயிலில் வைத்து பேசும்போது கூட அவன் அன்று மது அருந்துவதாய் முடிவு செய்யவில்லை. தன் மாமனுக்கு மட்டும் வாங்கிக் கொடுத்து விட்டு சும்மா பேசிக் கொண்டிருக்கவே அவன் விரும்பினான். அவளை கலவரப்படுத்தவே தானும் குடிக்க வருவதாய் அப்போது சொல்லி வைத்தான். ஆனால் அவள் அப்படி பேசியதும் இப்போது வீம்புக்காக குடிக்க வந்து விட்டான்.

“எய்யா.... அந்தக் கழுத பேசுனத நீ தப்பா எடுத்துக்காத.....”

“ச்சே..... நீங்க என்ன மாமா..... ஆனாலும் நீங்க அவள அடிச்சிருக்க கூடாது...”

“அது இல்லய்யா.... உன்னைய நீ யாரு கேக்குறதுக்குன்னு? அவ கேட்டவுடனே எனக்கு தாங்க முடியலைய்யா..... நீ எம் மருமவன்.... என் அக்கா மவன்....” என்றபடி பாதியில் நிறுத்தியவர் ஒரு லார்ஜை படக்கென்று ஒரே மடக்கில் குடித்து முடித்தவர் “அவ எப்படிய்யா கேக்கலாம்....? நான் மாமன் இப்ப சொல்றன்.... இங்க வச்சு அத பேசக்கூடாது.... சரி! விடுய்யா....”

“மாமா சும்மா இருங்க முடிஞ்சு போனத பத்தி பேசிக்கிட்டு.....”

“எதுய்யா முடிஞ்சு போச்சு..... எதுவும் முடியல.... இதுல கொஞ்சம் தண்ணி ஊத்துங்கய்யா....” என்றபடி அடுத்த லார்ஜை நீட்டினார். அவன் அதில் தண்ணியை ஊற்றிக் கொண்டே ”என்ன மாமா? ஏன் இவ்ளோ வேகமா குடிக்கீங்க?”

அவர் பதிலேதும் பேசாமல் முதல் ரவுண்டைப் போல அடுத்ததையும் காலி செய்தவர். அங்கு வைக்கப்பட்டிருந்த பொறிகடலையை கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.

“என்னய்யா அது என்ன மாதா கோயில் தீத்தமா...? சும்மா வச்சு பாத்துகிட்டு இருக்க குடிய்யா....”

அவரையே பார்த்துக் கொண்டிருந்த பிரவீண் உணர்வு மீண்டவனாய்” ஆங் சரி மாமா....” என்றபடி அவன் தன் லார்ஜை கொஞ்சம் சுவைத்து விட்டு வைத்தான்.

“என்னே மருமவனே....? சின்னப் புள்ள பால சப்புன மாறி நக்கி நக்கி குடிச்சிகிட்டு....” அவர் அப்படி சொல்லி முடிக்கவும் மீதத்தை ஒரே மடக்காக அடித்து முடித்தான்.

“ஆங்.... இப்புடி சாப்பிடுவியா... அத வுட்டிட்டு....” என்றபடி கொஞ்சம் மிக்சரையும் அள்ளி வாயில் போட்டுக்கொண்டார்.

பிரவீண் இதற்கிடையில் தனக்கு அடுத்த லார்ஜை ஊத்திக் கொண்டு சுவைக்க போனவன் கடைசி நொடியில் தன் முடிவை மாற்றிக் கொண்டு வேகமாய் அருந்த முயற்சிக்க.... அது புரையேறி தொலைத்தது..... ஜோசப் பதறியவறாக அவன் தலையை தட்டியவாறு “பாத்துய்யா பாத்து..... பேசுறதையும் பேசிட்டு அவதான் நெனைக்கா போல....” என நிறுத்தியவரை பிரவீண் அர்த்ததோடு பார்த்தவுடன் “ எனக்கு எல்லாம் தெரியும்யா..... நீ எம் மருமவன்.... ஒன் வயசக் கடந்து தான நானும் வந்திருக்கேன்..... அதான் எனக்கும் ஆச்சர்யம் மச்சான் மச்சாண்டு கெடந்தவ எப்படி படக்குனு அப்படி பேசுனான்னு?”

பிரவீண் அவர் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான். அவர் ஒவ்வொரு லார்ஜுக்கும் கொஞ்சம் எக்ஸ்டிரா லார்ஜாகவே பேசிக் கொண்டே போனார். பிரவீண் நான்கு லார்ஜோடு நிறுத்திய பின்னும் அவர் ஆறு லார்ஜ் வரை போய் ஒரு ஸ்மாலுக்கு அடிபோட்டு பார்த்தார். அதற்கு மேல் அவரை விட்டால் முதலுக்கே மோசமாய் போய் அவரை தூக்கி செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிப் போவோம் என உணர்ந்தவனாய் அவரது நச்சரிப்பையும், அன்புத்தொல்லைகளையும் மீறி பில்லுக்கு ஆர்டர் கொடுத்து கணக்கை முடித்தான்.

ஒருவழியாய் இருவரும் வீடு வந்து சேர பதினோரு மணிக்கு மேலாகி விட்டிருந்தது. கதவை உள்தாழிடாமல் சோபியாவும், ஸ்வீட்டியும் தூங்கி இருந்தபடியால் ஜோசப்பை ஒருவாறு வீட்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு அவன் தன் பாட்டி வீட்டு கதவை தட்டினான். ஜொசியம்மே அவனுக்காக தூங்காமல் காத்திருந்தாள்.

மாமனும், மருமவனும் நல்லா குடிச்சு கூத்தடிச்சிட்டு வந்திருக்கீய என்னல…..?”

அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆச்சி….. நான் கொஞ்சமாத்தான் அடிச்சேன் உங்க மவன் தான் யம்மாடி ஆளே மட்டையாகிப் போயிட்டாரு”.

கழுத விட்டைல முன்விட்ட வேற பின்விட்ட வேறையாஇருக்க போகுது? இந்த ஆச்சி உங்கிட்ட கேடுக்குறதெல்லாம் ஓண்ணே ஒண்ணுதான் மறுபடியும் குடிக்காதய்யா….. எனக்காக இல்லாட்டினாலும் உம் மாமன் மவ ஸ்வீட்டிக்காகவாவது இந்தக் கருமத்தை இன்னையோட விட்டிருய்யா…..”

போங்க ஆச்சி…. எனக்கும் உங்கள விட்டா யாரு இருக்கா?”

என்ன அப்புடி சொல்லிட்டியரு….. அந்த சின்னக் குட்டிக்கு உம்மேல அவ்ளோ பிரியம்…. அத அப்படி நெனைகாதய்யா……”

அப்ப ஏன் அப்படி சொன்னா…..?

எய்யா ராசா..... அத இத போட்டு மனச அலட்டிக்காத…. ஆச்சி சொல்றங் கேளு….. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப காலத்துக்கு நல்லா இருப்பீகய்யா…. அவளுக்கு உம்மேல கோவமே நீ தண்ணியடிப்பேன்னு சொன்னது தான்….. சின்னப் புள்ள இல்ல அவளுக்கு அத எப்புடி பக்குவமா உங்கிட்ட சொல்றதுன்னு தெரியல….. நாளக்கே பாரு மச்சான்னு வந்து நிக்காளா இல்லையான்னு….”

அவள் ஏதேதோ பேசி அவனை ஒருவாறு சமாதானப் படுத்தி தூங்கச் செய்தாள். ’ஆத்தி எம்புள்ளையலுக்கு யார் கண்ணு பட்டிச்சோ....’ என எண்ணிக் கொண்டவள் மறுநாள் விடிய சுத்தி போட வேண்டும் என எண்ணிய வாறு அவளும் தூங்கப் போனாள்.

 .......தொடரும்.