புதன், 29 ஜூலை, 2009

போராட்டம் வென்றது


இது ஒரு தொடர் பதிவு.”எங்கள் போராட்டம்” என்ற தலைப்பில் நான் எழுதிய முந்தைய பதிவின் தொடர்சியே இது.

தோழர்களே!

எங்கள் போராட்டம் வென்றது.தோழர்.காமராஜும், நானும் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளோம்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமைக்கு எதிரானது எங்கள் தற்காலிகப் பணி நீக்கம் என்ற முறையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள பென்சிலும் வழக்கு தொடர்ந்திருந்தோம்.சொல்லி வைத்தாற் போல் சரியாக நாங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்த இருந்த 23.07.2009 அன்று எங்கள் தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்யச் சொல்லி நீதிமன்றம் STAYORDER வழங்கியது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

எனவே மிகுந்த நம்பிக்கையோடும்,உற்சாகத்தோடும் இரு சங்க தலைவர்களும் (PGBEA-PGBOU), BEFI-யின் மூத்த தலைவரும்,IOB STAFF ASSOCIATION-னின் பொதுச்செயலாளருமான தோழர்.G.பாலச்சந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்ட DSP-யின் முன்னிலையில் எங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது எங்கள் நிர்வாகமும் தனது இறுக்கமான சூழலில் இருந்து வெளிவரத் தயாராக இருந்தது ஒரு சாதகமான அம்சம். நிர்வாகத்தின் மனநிலையை புரிந்து கொண்ட சங்கத்தலைவர்களும் வெற்றி ஆர்பரிப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தைக்கு வழிசெய்தார்கள்.பல மட்டங்களில் ஏற்பட்ட புரிதல் கோளாரே இத்தகைய இறுக்கமான சூழலுக்கு காரணம் என்றும் வங்கி வளர்ச்சியே அனைவருக்கும் பொதுவானது என்ற வகையிலும் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் சாத்யமான வழிகளை ஆராய்வதாக உறுதியளித்தது.இறுதியாக எங்கள் தற்காலிக பணி நீக்கத்தை நீதிமன்றத்தின் ஆணைபடி உடனடியாக ரத்து செய்யவும் நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

அதனடிப்படையில் நாங்கள் இருவரும் 24.07.2009 முதல் எங்கள் பணிக்கு திரும்பியுள்ளோம்.

எங்களுக்காக தங்களது அன்றாட பணிகளைப் பற்றியோ குடும்பச் சூழலைப் பற்றியோ சிறிதும் யோசிக்காமல் நாங்கள் வேலைக்குச் செல்லும் வரை தாங்களும் வேலைக்கு செல்வதில்லை என்ற முடிவோடும் உறுதியோடும் சங்க அலுவலகத்தில் வந்து தங்கி எங்களுக்காக போராடி நாங்கள் மீண்டும் பணிக்கு சேர்ந்த பின்பே வேலைக்கு சென்ற தோழர்களின் உறுதிக்கு கிடைத்த வெற்றியிது.

தனது குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு செல்வதை ரத்து செய்து விட்டு எங்களுக்காக சங்க அலுவலகத்தில் பலியாக கிடந்து எங்களுக்கு தன் சொந்த காசில் காரோட்டியாக இருந்த ”முதலாளி” சங்கரசீனி போன்றோரின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியிது.

“மாப்பள நீ வேலக்கி போற வர நான் வேலக்கி போக மாட்டேன்....” என்று சொன்ன பழைய பேட்டை மணி மாமா,

“என்னய சஸ்பெண்ட் பண்றத விட உன்ன சஸ்பெண்ட் பண்ணினா எனக்கு அதிகம் வலிக்கும்ன்னு நிர்வாகத்திற்கு தெரிஞ்சிருக்கு...”என்று கரகரத்த சங்கரலிங்கம் மாமா,

”ஏண்டா! உனக்கு எதாவது எழுதனும்னு தோணினா டைரில எழுது அதவிட்டுட்டு பளாக்குல எழுதுன வொயிட்டுல எழுதுனன்னு தெரிஞ்சா அப்புறம் இருக்கு உனக்கு....”என்ற உரிமையோடு என்னை கேலி பேசிய மாப்பிள்ளை அருண்,அண்ணன் சங்கர்,

“டேய்! நாங்க இருக்கோம்டா தம்பி..”என்று நம்பிக்கையூட்டிய அண்ணன்கள்,

“இந்த சின்ன வயசிலே உங்களுக்கு இந்த அனுபவம்லாம் கிடைச்சது ரொம்ப நல்லது....”என்று போனில் மட்டுமே என்னிடம் இதுவரை பேசிய தோழர்.வேணுகோபால் போன்றவர்களின் ஆதரவிற்கும்,உறுதுணைக்கும் கிடைத்த வெற்றியிது.

“எங்களுக்காக பேசப் போய்தான உங்களூக்கு இந்த நெலம....எங்களால தான உங்களுக்கு வேல போயிடுச்சாம்.....”என போனில் பரிதவித்த எத்தனையோ தற்காலிக ஊழியர்களான எமது சகோதர,சகோதரிகளின் அன்பிற்கு கிடைத்த வெற்றியிது.

”ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது.ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிறு தோல்வியானாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.”-சே

புதன், 22 ஜூலை, 2009

எங்கள் போராட்டம்.....


”நவீன கொத்தடிமைகள்....” என்ற தலைப்பில் சென்ற மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் எங்கள் வங்கியில் (பாண்டியன் கிராம வங்கி) பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் நிலை குறித்தும்,அதன் பொருட்டு எங்கள் தொழிற்சங்கங்கள்(PGBEA-PGBOU) நடத்த இருந்த போராட்டங்கள் குறித்தும் எழுதியிருந்தேன்.

அக்கட்டுரை தோழர்.மாதவராஜின்(தீராத பக்கங்கள்) பரிந்துரையின் பேரில் BANK WORKERS UNITY என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டது.
அதேபோல் தோழர்.காமராஜ் (அடர் கருப்பு) அவர்களும் “அவுட் சோர்சிங்கிற்கு எதிரான ஒரு முன்னோடிப் போராட்டம்” என்ற தலைப்பில் அதில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.தற்போது அந்த கட்டுரைகளுக்காக எங்கள் இருவரையும் எமது வங்கி நிர்வாகம் 17.07.2009 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

எங்கள் தொழிற்சங்கத்தில் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) நான் செயற்குழு உறுப்பினராகவும்,தோழர்.காமராஜ் அவர்கள் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளோம்.ஆகவே எங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிவிடலாம் என்ற பகல் கனவோடும்,இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமையை பறிக்கும் விதமாகவும் வழங்கப்பட்ட இந்த இடைக்கால பணி நீக்க உத்தரவை இந்திய தொழிற்சங்களுக்கு எதிரான அதிகாரவர்கத்தின் அறைகூவலாக பார்த்த எங்கள் தொழிற்சங்கம் எங்கள் வங்கி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை துவங்கியுள்ளது.

தோழர்களே!

எங்களை பொறுத்தவரை இந்த இடைகால பணி நீக்க உத்தரவை எங்கள் தொழிற்சங்க வாழ்விற்கான அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.எமது வட்டார மேலாளர் இந்த உத்திரவை எனது கிளையில் (பசுவந்தனை) வைத்து எனக்கு வழங்கும் போது எங்களது தொழற்சங்க தலைவர்கள் எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.

ஒருவகையான பெருமிதமான மனநிலையில் தான் அங்கிருந்து விருதுநகரில் உள்ள எங்கள் தொழற்சங்க அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன்.தோழர்.காமராஜ் அவர்களையும் என்னையும் தோழர்கள் அனைவரும் கட்டித்தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.அதிலும் எங்கள் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கமும்,தோழர்.செல்வகுமார் திலகராஜ்(PGBOU-CHIEF ADVISER) அவர்களும் தங்களது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழிற்சங்க வாழ்வில் தங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் மூன்று ஆண்டு தொழிற்சங்க அனுபவம் மட்டுமே கொண்ட தொழிற்சங்க ஜீனியரான எனக்கு கிடைத்துவிட்டதாக சொல்லி என் உச்சிமுகர்ந்தது என் வாழ்வின் மிகப்பெருமையான தருணங்கள்.

பல்வேறு கிளைகளிலிருந்து அதிகம் பரீச்சயமில்லாத தோழர்கள் கூட தங்கள் ஆத்மார்த்தமான ஆதரவையும்,தோழமையையும் வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட உணர்வுகளை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை......

20.07.2009 அன்று மாலையில் விருதுநகரில் உள்ள எங்கள் வங்கி நிர்வாக அலுவலகத்தினுள் சேர்மேன் அறை முன்பாக அமைதியாக அமர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட தோழர்கள் எங்களது இடைகால பணி நீக்கம் ரத்தாகும்வரை அங்கிருந்து அகலப்போவதில்லை என உறுதிபட கூறி போராட்டத்தை துவக்கினார்கள். இதற்கிடையில் தகவல் கேள்விபட்டு விருதுநகரில் உள்ள சகோதர தொழிற்சங்கங்களான அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள்,விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள்,BEFI தோழர்கள்,CITU,DYFI,தமுஎச,சாலைபணியாளர் துறை சங்கப் பிரதிநிதிகள்,சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் என பல தரப்பட்ட தோழர்களும் எங்களோடு தோள் கோர்க்க வந்துவிட்டார்கள்.

நிர்வாகம் போராட்டத்தை வலுவிழக்க வைக்க தன்னால் முடிந்த அத்துணை முயற்சிகளையும் மேற்கொண்டது.ஆனால் தோழர்களின் உறுதியை கண்டு நிலைகுலைந்தார்கள்.அதனை தொடர்ந்து காவல்துறையை வைத்து எங்களை அகற்றப்பார்த்தார்கள். ஆனால் காவல்துறையினர் எங்களது கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு எங்கள் தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகத் தரப்பினரோடு சமரச பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சித்தார்கள்.ஆனால் நிர்வாகம் தன் பிடியிலிருந்து இறங்குவதாயில்லை.போராட்டம் தொடர்ந்தது....

ஒருகட்டத்தில் மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் வரவழைக்கப்பட்டார்.அவர் சிவகாசி அருகில் ஒரு தீ விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் இங்கு வந்ததாகவும் அவர் அங்கு அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாகவும்,மேலும் வருகிற 23.07.2009 அன்று தனது முன்னிலையிலே நிர்வாகத் தரப்போடு தொழற்சங்க தலைவர்களை பேசவைத்து பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.அதனடிப்படையில் அவரது பணிச் சூழலை மனிதாபிமானத்தோடு பார்த்த தோழர்கள் அவரது வார்த்தைகளை நம்பி போராட்டத்தை ஒத்திவைக்க சம்மதம் தெரிவித்தார்கள்.

ஒரு உன்னதமான நோக்கத்திற்கான போராட்டத்தில் எதிரிகளின் ஆயுதங்களால் தாக்கப்படும் போது ஏற்படும் காயங்களே போராளிகளுக்கான நிஜமான பதக்கங்கள்.அந்த பதக்கங்கள் வழங்கப்படும் போது போராளிகளுக்கு ஏற்படுவது பெருமித உணர்வேயன்றி வலியல்ல...இந்த உணர்வோடு எங்கள் போராட்டப் பயணம் தொடரும்.......

” நமது போர்முழக்கம் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்,இன்னொரு கரம் நம் ஆயுதத்தை கையிலெடுக்க துணியுமானால்,மற்றவர்கள் நமது இறுதிச்சடங்குகளில் இயந்திரத் துப்பாக்கிகளோடு வந்து புதிய போர் முழக்கத்தை அறிவிப்பார்களேயானால்,மரணம் திடீரென வந்தால் கூட அதே வரவேற்கலாம்”-சே

சனி, 18 ஜூலை, 2009

தாய்மண்


பரணில் தூசி அதிகமாக இருந்தது. கண்ட கண்ட பொருள் எல்லாம் கையில் தட்டுப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நான் தேடுவது மட்டும் என் கண்னில் சிக்கவே இல்லை.
எப்பவோ நான் தேடிய பொருள்களெல்லாம் இப்போது தேவையற்ற நேரத்தில் கையில் சிக்குகிறது.
ஆனால் இவைகள் தேவைபட்ட நேரத்தில் நான் வீட்டை இரண்டாக்கிய போதும் இவைகள் எனக்கு கிடைக்கவில்லை.

தூசி கிளம்பி விடும் என்பதால் மின் விசிறியை வேறு போடமுடியவில்லை. அதனால் புழுக்கத்தால் உடலில் வேர்வை கசகச வென்றிருந்தது.இவ்வளவு அவஸ்தையிலும் அது எப்படியாவது கண்ணில் தட்டிவிட வேண்டும் என மனம் மட்டும் ஏங்கி கொண்டிருந்தது.

அவரை நேற்று மீட்டிங்கில் சந்தித்திராவிட்டால் இந்த அவஸ்தையே எனக்கு கிடையாது.இத்தனைக்கும் நேற்றுதான் அவரை முதன்முதலாக சந்தித்தேன்.
வெறும் பரஸ்பர புன்னகை பரிமாற்றத்தோடு கூட எங்களது அந்த சந்திப்பு முடிந்து போயிருக்கும், என்னை அவருக்கு அறிமுகப்படுத்திய என் நண்பர் நான் யாருடைய மகன் என்று சொல்லாமல் விட்டிருந்தால்....

ஆனால் நான் இன்னாரின் மகன் என்று என் தாயின் பெயரை சொன்னவுடன் அவர் வாஞ்சையுடன் என் கைகளை பற்றிக்கொள்வதாக நினைத்து கொண்டு மோதிரத்தோடு என் விரல்களை நசிக்கியபடியே என் தாயின் மறைவிற்கு தன் இரங்கலை தெரிவித்தார்.

நான் எந்த வலியால் நெளிகிறேன் என்று கூட புரியாமல் என்னைப் பற்றிய விசாரிப்பு முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்.ஒருவழியாக பேச்சினூடே சமாளித்தவாறு என் கைகளை விடுவித்து கொண்ட போது என் விரல்களுக்கு நடுவே மோதிரத்தடம் பதிந்து வலித்தது.
இப்படி வலிக்க வலிக்க ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவர்... திடீரன்று என்ன நினைத்தாரோ என் குடும்ப சூழல்குறித்தும் தற்போதைய எங்கள் வீட்டின் வசதிவாய்ப்பு குறித்தும் கேட்க தொடங்கினார்.

வாய்க் கொழுப்பு சீலையில் வடியுங்கிற கதையாக நானும், என் தாயின் மறைவிற்கு பின் ஏற்பட்ட கடன் தொல்லையால் எங்கள் சொந்த வீட்டை விற்ற கதையையும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதையும் குறிப்பிட்ட போது,’கடம்பூர் பக்கத்தில் உள்ள நிலத்தையும் விற்று விட்டீர்களா?’ எனக் கேட்டார்.

”கடம்பூர் பக்கத்தில் எங்களுக்கு நிலமெல்லாம் இல்லையே...” என்று அப்பாவியாக கூறிய என்னை விடாமல்
“என்ன தம்பி இப்படி சொல்றீங்க அங்க உங்கம்மா நிலமுடிச்சது எனக்கு நல்லா தெரியுமே...”என்றவாறே தொடர்ந்து “ உங்க அப்பாகிட்ட கேட்டு நல்லா தேடிப் பாருங்க... பத்திரம் உங்க வீட்ல எங்கையாவது தான் இருக்கும். இப்ப அது பல லட்சம் தேறும்” என்று வேறு ஆசையை தூண்டி விட்டு விட்டு சென்றார்.

இரவு வீட்டுக்கு வந்து என் அப்பாவிடம் கேட்ட போது,”அப்படியெல்லாம் ஒன்னும் முடிக்கலியெப்பா....எனக்கு ஒன்னும் ஞாபகமில்லையே..”என்று இரண்டும் கெட்ட மனநிலையில் இழுத்தவர்....சற்று நேரத் தாமதத்திற்கு பின்,”உங்கம்மா! எல்லாத்தையும் அவ இஷ்டத்திற்கு தான் செய்வா எங்கிட்ட எதையும் சொல்ல மாட்டா...அவளுக்கு எல்லாமே அவ அம்மாவும்,தம்பியும் தானே.... போயி உம் மாமன்கிட்டயும்,பாட்டிக்காரிகிட்டயும் கேளு....”என்று புலம்பியவாறே அவரது அறைக்குள் போய் மீதம் வைத்த சரக்கை பொரிகடலையை சவைத்தவாறே அடிக்க ஆரம்பித்தார்.

“ஆமா! இப்படி என் நேரமும் குடி குடின்னு குடிச்சிக்கிட்டே இருக்குற ஆள நம்பி எந்தப் பொண்டாட்டி தான் சொத்து வாங்குன விஷயத்தை சொல்லுவா....பைத்தியக்காரி கூட சொல்ல மாட்டா..”என நான் படபடக்க அவர் அதற்கு பதிலுரைக்க என கொஞ்ச நேரத்தில் குருஷேத்திரமானது என் வீடு.ஒரு வழியாக என் மனைவி தலையிட்டு ’கீதா உபதேசம்’ செய்த பிறகே இருவரும் ஓய்ந்தோம்.சமாதானம் ஆனாலும் கொஞ்சம் புலம்பியபடியே தன் அறைக்குள் சென்று அப்பா படுத்துக்கொண்டார்.

ஆனாலும் மழை விட்டு தூவானம் ஓயாத கதையாக என்னிடம் மெல்ல“எப்ப பார்த்தாலும் உங்களுக்கு இப்படித்தான் சின்ன விஷயத்தையும் பெரிசாக்கி சண்ட போடாட்டி நிம்மதியா இருக்கமுடியாதே....ஏன் மாமா கூட இப்படி வார்த்தைக்கு வார்த்தை மோதுறீங்க...பேசாம படுங்க எல்லாம் காலையில பார்த்துக்கலாம்.....”என்றவளிடம்

“ஆங்! நா லூசு அதனாலதான் இப்படி பேசுறன்...வந்துட்டா எல்லா...ஆங் தெரிஞ்ச மாதிரி.”என்று சலம்பியபடியே படுக்கப்போனன்.
“எதயும் ஒத்துக்குற மாட்டீங்களே....”என்றவாறே விளக்கை அணைத்து விட்டு அவளும் படுத்தாள்.அறை இருண்டது. இரவில் சமரச ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது தானே இந்திய வரலாறு........

காலையில் எழுந்து பார்த்தால் என் அப்பா தன் அறையில் உள்ள அலமாரியில் அந்தப் பத்திரத்தை தேடிக் கொண்டிருந்தார்.என் மனைவி சிரித்தபடியே,” நீங்களும் மாமா கூட சேர்ந்து தேடுங்க...”என்றாள்.

அப்பா,”ஏம்மா!இங்க என் அலமாரியல இல்ல... அவன உங்க அத்தயோட சின்ன இரும்பு பெட்டி ஒண்ணு உண்டு அத தேடச் சொல்லு...அதுல இருக்கான்னு பாப்போம்... ”

அன்று ஆபிஸுக்கு விடுப்பு சொல்லி விட்டு அதை வீடு முழுவதும் தேடினோம்... கடைசியில் அதை தேடவே இப்போது பரண்மீது ஏறி நிற்கிறேன்.பல மணி நேரத் தேடலுக்கு பின் அந்தப் பெட்டி கிடைத்தது.ஆனால் அதனுள்ளே பத்திரம் எதுவும் இல்லை.தேடி அலுத்து ஒய்ந்த பின்பு....என் அப்பா,”டேய்!ஓங்கிட்ட சொன்ன ஆளுக்கு போன் போட்டு எந்த பத்திர ஆபிசில் எப்ப முடிச்சதுன்னு கேளு நாம மேக்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு பாப்போம்”என்றார்.

எனக்கும் அது சரியாக படவே அவருடைய நம்பரை என் நண்பனிடம் வாங்கி போன் செய்தேன்.என்னை அவருக்கு மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு சம்பரதாய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு.....

“சார் நேத்து நீங்க சொன்னீங்க இல்லையா எங்கம்மா கடம்பூர் பக்கத்துல நிலம் வாங்குனாங்கன்னு அது எந்த வருஷம்...?எந்த பத்திர ஆபிசுலன்னு ஞாபகமிருக்கா..? ஏன்னா வீடு முழுக்க தேடிப் பார்த்துட்டோம் பத்திரத்த எங்கயும் காணல அதான்...”

“தம்பி நான் என்ன சொன்னன்னு நீங்க சரியா புரிஞ்சிக்கலியா....உங்கம்மா அங்க நிலம் வாங்கப் போறத என்கிட்ட சொன்னாங்க அவங்க வாங்குனாங்களா இல்லையான்னு எனக்கு தெரியலையே....”என்று அவர் ஏதேதோ பேசிக் கொண்டே போக இப்போது நிஜமாகவே என் காலடியில் உள்ள நிலம் பின் வாங்குவது போல் ஆனது......

புதன், 15 ஜூலை, 2009

வாங்க...சிரிங்க...


சமீபத்தில் நான் ரசித்து படித்த சில குறுஞ்செய்திகள்......இந்த பதிவின் நோக்கம் இதை படிப்பவர்களை சிரிக்க வைப்பது மட்டுமே அதனால் இதில் தத்துவார்த்த குற்றங்களை கண்டுபிடித்து யாரும் கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போட வேண்டாம்...

***ஆதாமும்,ஏவாளும் சீனர்களாக பிறந்திருந்தால் என்னவாகியிருக்கும்...?

நாம் இன்னும் ”ஏதேன்” தோட்டத்தில் தான் வாழ்ந்திருப்போம்.ஏனென்றால் அவர்கள் பழத்தை விட்டு விட்டு பாம்பை தின்றிருப்பார்கள்.

***தேன் சொன்னது,” நான் தான் இந்த உலகத்திலே அதிகம் சுவை படைத்தவன்”

கடவுள் சிரித்தவாறே பதிலுரைத்தார்,”அவசரப்படாதே! நீ இன்னும் இந்த குறுஞ்செய்தியை படிப்பவரை பார்க்கவில்லை அதனால் தான்
இப்படி சொல்கிறாய்..”என்றார்.
( நீதி: கடவுளும் சில சமயங்களில் பொய் சொல்வது உண்டு...)

***ஒரு குட்டிச் சாத்தான் என்னிடம் ,” நான் யாரையாவது தொந்தரவு செய்ய வேண்டும்.”என்றது.

நான் உன் பெயரை சொன்னேன்.அது ஓங்கி என் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னது,” நாங்கள் எங்கள் தலைவரிடம் அப்படி
விளையாடுவதில்லை..” என்று.

***ஓர் அற்புதமான வாக்கியம்.... நெடுஞ்சாலை பெயர் பலகையில் இப்படி இருந்தது.,”மிஸ்டர்.லேட் என்பது லேட்.மிஸ்டர் என்பதை விட
சிறந்தது.” அதனால் மித வேகம் மிக நன்று...

***கண்டக்டர்: டிக்கெட் பரிசோதகர் வருகிறார்...எல்லோரும் அவரவர் டிக்கெட்டை காண்பியுங்கள்.

மாணவ பயணி: முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல சார்.போன ஸ்டாப்ல தான் என்னோட டிக்கெட் இறங்கி போச்சு.

***மனைவி:என்னங்க! ”பின்னாடி FIGURE இருந்தா கண்ணு தெரியாதா”..ன்னு லாரிகாரன் உங்கள திட்டிட்டு போறான். நீங்க சிரிக்கிறீங்க?

கணவன்:பின்ன சிரிக்காம என்ன பண்றதாம்.உன்னை போய் FIGURE ன்னு சொல்றானே குருட்டுப் பய....

***ஒரு சர்தார்ஜியிடம் நேர்முக தேர்வின் போது......

மேலாளர்: உங்களது பிறந்த தேதி என்ன?
சர்தார்ஜி : ஏப்ரல் 25ஆம் தேதி.

மேலாளர்: எந்த வருடம்?
சர்தார்ஜி : என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி இது...ஒவ்வொரு வருடமும் தான்.

கடைசியாக இரு அஜால் குஜால் குறுஞ்செய்திகள்.......

*** 90 வயது முதியவர் ஒருவர் மருத்துவரிடம் வருகிறார்.....

முதியவர்:ஐயா! இந்த வயதில் நான் எந்த கோணத்தில் உடலுறவு கொள்வது நல்லது?

மருத்துவர்: நாய்கள் செய்வது போல்.....(அவர் முடிக்கும் முன்பு)

முதியவர்:அதாவது பின்னாலிருந்தா...?

மருத்துவர்:இல்லை இல்லை... நாய்களை போல் என்றால்....அவைகளை முகர்ந்து விட்டு மட்டும் செல்வதே நல்லது என்று சொல்ல
வந்தேன்.

***குற்ற உணர்ச்சியின் உச்ச கட்டம் எது...?
இரவு உறக்கத்தில் மனைவியின் உளறல்...”சீக்கரம் என் புருஷன் வந்திட்டார்....”
பக்கத்தில் படுத்து இருந்தவர் அவசரமாக ஜன்னல் வெளியே குதித்து விட்டு...”ஐயோ! இது என்ன மடத்தனம் பக்கத்திலிருந்தது என்
மனைவியல்லவா...”என்று தாமதமாக உணர்வது.

வெள்ளி, 10 ஜூலை, 2009

நான் பேசுகிறேன்....


தொடர்ந்து எங்கள் வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை எதிர்த்து எங்களது தொழிற்சங்கத்தின் சார்பில் இயக்கங்கள் நடந்து வருவதால் ஒரு சிறு இடைவேளை விழுந்து விட்டது.இந்த இடைவேளையில் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.சரி ஒவ்வொன்றாய் பார்போம்....

***இந்திய அரசின் குற்றவியல் சட்டம் 377-ன் கீழ் ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது என தண்டிப்பது அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்ற (இந்திய) வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.பாராட்டுக்குறியது.

மேலை நாடுகளில் ஓரின ஜோடிகள் சட்டப்பூர்வமாக பதிவு செய்வது நடைமுறையில் இருந்தாலும் கலாச்சாரம்,கருமாந்திரம் என உளரி கொட்டும் மூடர்கள் நிறைந்த நமது தேசத்தில் இந்த தீர்ப்பு நீதிமன்றங்களின் மேல் மரியாதையை அதிகரிக்க செய்கிறது.

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த தீர்ப்பு வந்த தினமே இந்திய ஓரினத் தம்பதிகளின் சுதந்திர தினம் ”.

***நீதிபதி ரகுபதி தன்னை ஒரு மத்திய அமைச்சர் அவருக்கு வேண்டிய ஒருவருக்கு ஜாமீன் தரச் சொல்லி மிரட்டியதாக பகிரங்கமாக சொன்னது நாடு தழுவிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் சாமான்யர்களின் நம்பிக்கைச் சின்னங்கள்.

அப்படிப்பட்ட நீதிமன்றங்களை ஆளும் நீதிபதிகளை மிரட்டியோ அல்லது வேறு வகையிலோ அடிபணிய வைக்க முடியும் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவர் தன்னை சர்வாதிகாரியாக கருதுகிறார் என்றே அர்த்தம்.அப்படிப்பட்ட ஒருவர் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் ஒளிந்திருப்பது நம் ஜனநாயகத்திற்கே ஆபத்தானது.

அந்த ஜனநாயக விரோதியை அடையாளம் காட்டத் தவறுவது குற்றத்திற்கு துணை போவதற்கு சமம்.ஆகவே தன்னை மிரட்டியவரை மக்கள் மன்றத்திற்கு முன் அம்பலப்படுத்துவது நீதிபதி ரகுபதியின் ஜனநாயக கடமை.

***அவனது திறமையாலும்,விடா முயற்சியாலும்,தன்நம்பிக்கையாலும் அவனை நிராகரித்தவர்களும்,வெறுத்து ஒதிக்கியவர்களும் கூட அவனை கொண்டாட செய்தான்.

ஐந்து வயதிலே தொழில்முறை நடனக்குழுவிற்கு வந்து தன் குழந்தைபருவத்தை தொலைத்தவன்.அதை மீட்டெடுக்கும் விதமாக 2700 ஏக்கர் பரப்பளவில் கலிபோர்னியாவில் நெவர்லேண்ட் ராஞ்ச் என்னும் குழந்தைகளுக்கான மாளிகை கட்டி அதில் தானும் ஒரு குழந்தையாக வாழ முயற்சித்தான்.ஆனால் சில சுயநல விஷமிகளால் வீண் பழிக்கும் கடும் விமர்சனங்களுக்கும் ஆளான போதும் அவனை கோடிக்கணக்கான இதயங்கள் நேசிக்கவே செய்தன.

உலகின் எல்லா மூலைக்கும் தன் இசைதிறமையாலும், நடன அசைவுகளாலும் அவன் அறிமுகமாகி புகழும்,பணமும் அவனை வந்து சேர்ந்த போதும் அவன் நாடியது தனிமையும், நிம்மதியுமே. நிம்மதியாய் துயில மாத்திரைகள் வாங்கினான் அவன் உயிரை விலையாய் கொடுத்து.

ஆம்!இப்போது நிம்மதியாய் துயில்கிறான்.....மைக்கேல் ஜாக்சன்