வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

இனி இவர்கள்...நம் தோழர்கள்...


அவர்களிடம் நாம் ஜாதி,மதம்,இனம்,மொழி எதையும் பார்பதில்லை.....

ஏன்? அவர்களை நாம் உயர்திணையாக கூட பார்ப்பதில்லை.....

அஃறிணைகளிடம் காட்டும் பரிவையும்,அக்கறையையும் கூட அவர்களுக்கு நாம் வழங்கியதில்லை.....

அவர்களை நமது கேலிப் பேச்சுக்களைத் தவிற வேறு எதுவும் தீண்டுவது இல்லை......

குடும்ப உறவுகள் துவங்கி.... நண்பர்கள்,சுற்றம் ,சமூகம் என திரும்பிய பக்கமெல்லாம் இவர்கள் எதிர் கொள்வது எல்லாம் கேலியும்,கிண்டலும், நிராகரிப்புமே !

வேற்றுமையில் ஒற்றுமை என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஜனநாயகத்தின் எந்தக் கதவுகளையும் அவர்களுக்காக நாம் இன்று வரை மறந்தும் கூட திறந்து விடவில்லை.....

இத்தனைக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குற்றம் என்று கூறும் எதையும் அவர்கள் செய்துவிடவில்லை.மனிதர்களாக பிறந்ததை தவிற......

பின் ஏன் இவர்கள் திரும்பிய திசையெல்லாம் நிராகரிக்கப்பை சந்திக்கிறார்கள்...?

நிராகரிப்புக்கு நிகரான வலியை மரணம் கூட மனிதனுக்கு தருவதில்லை.ஆனால் ஏன் இவர்களுக்கு இந்த நிலை...? யார் இவர்கள்...?

மிகச் சமீபத்தில் இந்த சமூகத்தால் திருநங்கை என்னும் ‘திரு’ நாமம் சூட்டப்பட்டு ஆதரவற்ற அபலைகளாக வாழும் எம் தோழர்களே..இவர்கள்

நமது திசுள்களில்(CELLS) இருபத்தி மூன்று ஜோடி நிறப்புரிகள்(CHROMOSOMES) இருக்கும்.அதில் உள்ள இருபத்திமூன்றாம் ஜோடி நிறப்புரியே நமது பாலினத்தை முடிவு செய்யும்.அதாவது XX-என்று இருந்தால் அது பெண்.XY-என்று இருந்தால் அது ஆண்.ஆனால் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு நிறப்புரிகள் கருவின் வளர்ச்சி நிலையின்(MEIOSIS) போது சரியாக பிரிக்கப் படாமல் மிக அதிக அளவிலோ அல்லது மிக குறைந்த அளவிலோ பிரிக்கப்படுவது உண்டு.இதை NON-DISJUNCTION என்று சொல்வார்கள்.அதன் விளைவாக DOWN SYNDROME,PATAU SYNDROME,EDWARD SYNDROME,KLINEFELTER SYNDROME,TURNER SYNDROME,TRIPLE X SYNDROME,XYY SYNDOME போன்ற பலவகையான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

X அல்லது Y நிறப்புரிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது தான் அவர்களது உடல் அளவிலான மாற்றங்களுக்கு காரணம்.இது ஒரு வகை பாலின ஊனம் மட்டுமே.ஆனால் இதற்காக அவர்களை ஏதோ பெரிய குற்றம் செய்தவர்களை போல நடத்துவது கொடூரம்.இந்த அநீதி அவர்களுக்கு நேற்று இன்று இழைக்கப்பட்டதல்ல.

வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் புரியும் நாம் இவர்களை எவ்வளவு இழிவாகவும்,கேவலமாகவும் பதிவு செய்தும் நடத்தியும் வந்துள்ளோம் என.....

நிப்ரூ(NIBRU) என்னும் திருநங்கையை நின்மா(NINMAH) என்னும் பெண் தெய்வம் களிமண்ணை கையில் பிடித்து உருவாக்கியதாகவும் அவன் பிறப்புறுப்பு எதுவும் இல்லாது இருந்ததால் அவனை அரசனுக்கு தலைமை அடிமையாக நியமித்ததாகவும் ஒரு புராணக்கதை சுமேரியன் நாகரீகத்தில் நம்பப்பட்டது.அதாவது சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

அதேபோல் மகாபரதத்திலும் ஒரு கதையுண்டு....பாண்டு மைந்தர்களில் ஒருவரான அர்ஜூனனால் கவரப்பட்டு கர்பமாகிறாள் வேடுவப்பெண்ணான நாகக்கன்னி.அதன் விளைவாக அவளுக்கும்,அர்ஜூனனுக்கும் அரவான் பிறக்கிறான்.

குருஷேத்திர யுத்ததில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணங்களும் பொருந்திய ஒருவனை மனிதப்பலியாக கொடுக்க வேண்டும் என அரூடம் கூறப்படுகிறது.

அதற்கிணங்க சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்தியவர்களாக மூவர் முன்னிறுத்த படுகிறார்கள்.அவர்கள் அர்ஜூனன்,கிருஷ்ணர் மற்றும் அரவான்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் மகன் செத்தாலும் பரவாயில்லை தான் வென்றால் போதும் என அர்ஜுனன் ஒதுங்கி கொள்கிறான்.முக்காலும் உணர்ந்த... எல்லாவற்றையும் தீர்மானம் செய்ய கூடிய... உலகிற்கே கீதாஉபதேசம் செய்த... கடவுளின் அவதாரமான கிருஷ்ணரே கூட ஜெகா வாங்கிக் கொண்டுவிட.... அப்பாவி அரவானை பலியிட முடிவு செய்கிறார்கள்.

அரவானும் அதை ஒத்துக்கொள்கிறான் ஒரு கண்டிஷனோடு....அதாவது அவன் தனது இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒருநாள் இல்லற வாழ்வு நடத்த விரும்புவதாக தெரிவிக்கிறான்.ஆனால் அவனை மணக்க மூன்று லோகத்திலும் ஒருத்தி கூட சம்மதம் தெரிவிக்கவில்லை.கடைசியாக ”பரமாத்மாவான” கிருஷ்ணரே மோகினியாக அவதாரமெடுத்து அவனுடன் இணைகிறார்(ஏதோ அவரால் முடிந்தது).ஒருவழியாக ஒருநாள் இல்லற வாழ்வு முடிந்து மறுநாள் பலிகளம் செல்கிறான் அரவான்.

இந்த புராணக்கதையை அடிப்படையாக கொண்டு தான் இன்றும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூவகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமியன்று பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் ஒன்றுகூடி தங்களையே மோகினியாக சித்தரித்து கொண்டும் முந்தைய நாளில் தங்களுக்கு தாங்களே தாலி கட்டிக்கொண்டும் மறுநாளில் அந்த தாலியை அறுத்து கொண்டும் அழுகிறார்கள்.....

புராணங்கள் கூட தேவலாம் என்ற அளவில் தான் இவர்களது வாழ்வின் யதார்த்தமான நடைமுறைகள் இருந்து வருகிறது.

ஆம் தோழர்களே!....

மண்வெறி பிடித்த மன்னர்களால் படையெடுக்க படும் போது போரில் தோற்ற மன்னருக்கு வாரிசுகள் இல்லையென்றால் இடைக்கால பலி ஆடுகளாக திருநங்கைகளை நியமிக்கும் பழக்கம் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் சொல்கிறது.அதேபோல் அந்தப்புரங்களில் “நம்பிக்கைகுரிய” காவலர்களாகவும் நியமிக்கப் பட்டார்கள். நல்ல அரசுச்சம்பளம்... நிம்மதியான வருவாய்... என நினைத்து வறுமையில் வாடிய பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளில் ஒன்றை உறுப்பறுத்து அரண்மனைகளுக்கு அனுப்பி வைத்த சம்பவங்களும் வரலாற்றில் உண்டு.மேற்கித்திய நாடுகளில் பதினாறாம்,பதினேழாம் நூற்றாண்டுகளில் கூட மன்னர்களுக்கு மூத்திரசட்டி ஏந்துவது போன்ற பல கொடுமையான பணிவிடைகளுக்கு திருநங்கைகள் உபயோகப் படுத்தப்பட்டதாக வரலாறுகள் உண்டு.எந்தவித மயக்க மருந்துகளும் இன்றி பிறப்பு உறுப்பிகளை அறுத்து பாலின மாற்றம் செய்யப்படும் கொடூரங்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இப்படியாக அடிமைகளாகவும்,பலியாடுகளாகவும் தான் எல்லா இனக்கூட்டங்களிலும்....எல்லா நாகரீகங்களிலும்.... எல்லா காலக்கட்டங்களிலும்... நடத்தப்பட்டு வந்துள்ளார்கள்.

அந்த காலம் தொட்டு இன்றுவரை இவர்களை அந்தப்புர காவலர்களாகவே இந்த சமூகம் சித்தரிக்க முயல்கிறது.பாலியல் தொழில் செய்வதற்கே இவர்கள் பிறப்பெடுத்துள்ளார்கள் என இன்னும் பல மூடர்கள் நம்புவதே அதற்கு காரணம்.ஆணுக்கு பெண் சரி நிகர் சமம் என்று தனது பாடல்களால் சமத்துவ வேள்வி சமைத்த முண்டாசுக் கவிஞன் கூட “அலிகளுக்கு இன்பமுண்டோ...” என்றே வினவினான்.அந்தோ பரிதாபம் அறியாத மூடர்கள் என் செய்வர்...ஆனால் அவர்களது மூடத்தனத்திற்கு மூட்டை கட்டும் விதமாக பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தங்களது சமூக அங்கீகாரத்திற்காக மிக நீண்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் எமது தோழர்கள்.

ஒரு சிறு உதாரணம்...

பல இன்னல்களையும்,அவமானங்களையும் கடந்து ஏன் பெற்றவர்களாலேயே நிராகரிக்கப்பட்டு இருந்தாலும் கூட தனது தன்னம்பிக்கையாலும்,விடாமுயர்சியாலும் பரதகலையில் பல சாதனைகள் புரிந்து வரும் நர்த்தகி நடராஜ் என்பவர் தான் திருநங்கை என்னும் முத்திரையோடு முதல் கடவுச் சீட்டு(PASSPORT) வாங்கியவர்.அதாவது இருபத்தியோரம் நாற்றாண்டில் தான் மூன்றாம் பாலினம் இருப்பதாக இந்த சமூகம் ஒத்துக்கொள்ள முனைகிறது....இதைவிட எமது தோழர்களின் நிலை சொல்ல வேறு உதாரணங்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

தோழர்களே!

இப்படியாக காலம்காலமாக வெறும் அவமானங்களையும்,கேலிகளையும் மட்டுமே சரித்தரங்களாக சுமந்து கொண்டு வாழ்வில் சமத்துவத்திற்காக ஏங்கும் அந்த எளிய ஜீவன்களின் மேல் நாம் எப்போது கவனம் செலுத்தப் போகிறோம..?.உலிகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க முனைவோர் கூட இவர்களை வெறும் கேலிச் சித்திரங்களாக பார்க்கும் கொடுமை எப்போது தீரும்...?

வாருங்கள்! பஞ்சமா பாதகர்களின் ஏய்ப்புகளுக்கு பலியாகி கிடக்கும் எம் தோழர்களின் வாழ்வு மலர......அவர்களை மனிதர்களாக காண வாருங்கள்....

இனி இவர்களும் நம் தோழர்கள் தான்....

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

விடியலை தேடி...


விடியலுக்கான ரேகைகள் வானில் படர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் நகரம் இன்னும் விழிக்கவில்லை.
ஒரு நூறு மீட்டர் இடைவெளியில் எனக்கு முன்னால் ஒருவர் என்னைப்போல் நடைபயிற்சியில் இருந்தார்.
முதுமையின் காரணமாக அவரது நடையின் வேகம் சற்று நிதானமாகவே இருந்தது.
அதனால் ஒரு நிமட நடையிலே அவரை கடந்துவிட்டேன்.

சரி! தனியாக நடப்பதைவிட அவரிடம் பேசிக்கொண்டே நடக்கலாம் என தோன்றியதால் சற்று நிதானித்து அவரை என்னிடம் நெருங்க வைத்தேன்.முதுமையின் தளர்ச்சி அவரது நடையில் மட்டுமல்லாமல் முகத்திலும் பரவியிருப்பதை காண முடிந்தது.

“ஐயா! இதுக்கு முன்னாடி உங்கள இந்தப் பக்கம் பார்த்ததில்லையே!...இப்பத்தான் மொத தடவையா இந்தப்பக்கம் வாக்கிங் வாரீங்களா...?”

“அடடே!... தம்பி கரெக்டா சொல்லிட்டீங்களே நீங்க ரெகுலரா இந்தப்பக்கம் நடக்குறவர் போல அதான் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க...”

“ஆமாய்யா! வேற ஏரியாவுல எங்கயும் இதுக்கு முன்னாடி வாக்கிங் போனதில்லையா.....?”

“இல்லைய்யா! சொன்னா நம்ப மாட்டீக நான் பொறந்ததுல இருந்து இன்னூ வரைக்கும் விடியலை பார்த்ததே இல்லன்னா பார்த்துக்கோங்களேன்...”

“அப்படீன்னா இப்ப என்ன திடீர்ன்னு......?”

“அத ஏன் கேக்குறீங்க தம்பி நின்னது நிக்க நேத்து திடீர்ன்னு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டேன்...இதுவரைக்கும் அப்படி ஆனதே இல்ல எம்புள்ளைவளும் பதறி அடிச்சு என்ன ஆஸ்பத்தரிக்கு கூட்டிட்டு போச்சுங்க அங்க.... தெரியாதா நம்ம டாக்டர்மாருகள பத்தி அந்த டெஸ்டு எடு இந்த டெஸ்ட் எடுன்னு சொல்லி நல்லா கறந்திட்டு...சக்கரவியாதி இருக்கு,ரத்த அழுத்தம் இருக்கு அப்படி இப்படீன்னு ரொம்ப பயமுறுத்திட்டாங்க.....அதான் இப்புடி....”

“என்னையா இது மொதல்லே கவனமா இருந்திருந்தா அப்படியெல்லாம் ஆயிருக்காதில்லையா...”

“என்ன தம்பி செய்ய பட்டாதானே புத்தி வருது...இல்லனா நம்ம பாட்டுக்கு தானே நாம அலைவோம்...என்ன சொல்றீங்க...?”

“அதுவும் சரிதான்...ஐயா! உங்கப் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா...?”

“எம் பேரு ’சுதந்திரம்’ தம்பி......!”

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

என்னை தேடும் நான்...


உள்ளம் குமைந்து கொண்டிருக்கிறது
ஆசைக்கும் யதார்ததிற்குமான இடைவெளியில்.......

விண்ணில் பறக்க வானவில் உதவுமா?-என
சோளி போட்டு சோதிடம் பார்க்கிறேன்

கண்ணீர் துடைக்க கைகள் வேண்டி
கல்லறைச் சுவர்களில் கறைந்து போகிறேன்

வாழ்வை காண வெளிச்சம் வேண்டி
இரவல் விடியல் கேட்கிறேன்

செய்து முடித்த தவறுகளை திருத்த
கடந்து போன காலம் வேண்டுகிறேன்

மறந்து போன பாதை தேடி
பயணம் செய்ய பார்க்கிறேன்

சொல்லி முடித்த சொற்களை அள்ளி
சொப்பனமாய் மாறச் சொல்கிறேன்

மண்ணில் விழுந்த மழைதுளியை-மீண்டும்
ஒருமுறை நனைக்க நினைக்கிறேன்

காலம் கடந்த ஞானம் கண்டும்
முடிவின் முடிவில் -ஒரு
தொடக்கம் தேடுகிறேன்.....

சனி, 8 ஆகஸ்ட், 2009

ஒரு தங்கப்பெட்டியும்...ஆயிரம் முத்தங்களும்...


தனது எட்டு வயது மகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை ஜோடனை செய்ய தான் வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட தங்கத்தாள்களை கிழித்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு கோபம் வந்தது.அவர் எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் கிழித்தும்,அதை வைத்து விளையாடிக் கொண்டும் இருந்ததை கண்டு குழந்தையை சரமாரியாக அடித்து திட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.வெகு நேரம் கழித்து அவர் வீட்டுக்கு திரும்பி வருகையில் அவரது மகள் தூங்கிவிட்டிருந்தாள்.

அழுது வீங்கியிருந்த குழந்தையின் முகத்தை கண்டவுடன் தனது தவறையுணர்ந்து அதை வாஞ்சையுடன் தடவி கொடுத்தபடி அவரும் தூங்கிவிட்டார்.

அதிகாலையில் ஏதோ பிஞ்சு விரல்கள் தன்னை வருடுவதாக உணர்ந்தவர் விழித்து பார்க்கையில் அவரது மகள் கையில் அழகான ஒரு சிறு தங்கப்பெட்டியுடன் அவரது பிறந்த நாளைக்கு வாழ்த்து சொல்லி அந்த தங்கப்பெட்டியை பரிசளித்தது.தனக்கு பரிசளிப்பதற்காக தான் அந்த தங்கத்தாள்களை நேற்று தனது மகள் கிழித்து கொண்டிருந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவர் கண்கள் பனிக்க தனது மகளை வாஞ்சையுடன் அனைத்து கொண்டு மன்னிப்பு கேட்டார்.

அந்தப் பெட்டிக்குள் தான் மிக விலையுயர்ந்த பரிசுப்பொருள் ஒன்றை வைத்திருப்பதாக அவரது மகள் சொன்னவுடன் ஆசையோடு அந்தப்பெட்டியை திறந்து பார்த்தவருக்கு அதில் ஒண்ணும் இல்லாததை கண்டவுடன் ஏமற்றம் ஏற்பட்டது.தனது மகள் தன்னை ஏமாற்றி விட்டதாக கோபப்பட்டவரிடம் அழுது கொண்டே அவரது மகள்,”அப்பா!உங்களுக்காக அதில் நான் ஆயிரம் முத்தங்களை வைத்திருந்தேனே அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...”என்றது.

இப்போது அந்தப் தங்கப்பெட்டிக்குள் இருக்கும் முத்தங்களை அவரால் நன்றாக பார்க்க முடிந்தது.ஆனால் காலனின் கொடுங்கரங்கள் அந்தப் பிஞ்சு மொட்டினை பறித்துவிட்டிருந்தது.பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவருக்குள் அவரது குழந்தையின் குரலே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க... கண்களில் நீர் உருண்டோட அவரது மகளின் நினைவிடத்தில் நின்றபடி இருந்தவருக்கு அந்தப் பெட்டிக்குள் இருக்கும் முத்தங்கள் தான் இப்போது ஆறுதலாய்.....

எப்போதோ படித்தது இந்த ஆங்கிலச் சிறுகதை.

நாம் எப்போதும் இப்படித்தான்....

நம்மை சுற்றியுள்ள அற்புதங்கள் நமது கண்களுக்கு தெரிவதேயில்லை அதை நாம் தொலைக்கும் வரை.பிரியும் கணங்களில் தான்
உறவின் ஆழம் உணர்கிறோம்.உண்மை உணர்கையில் யாருமற்று தனித்து விடப்படுகிறோம்.

ஆதலால் காதல் செய்வோம்.... நம்மையும் நமது வாழ்வின் அற்புதங்களான நம்மை சுற்றியுள்ள அனைத்து உயிர்களையும்.....

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

அந்த ஒரு நாள்....



”ஏ.....ய்! தேவுடியா.....ஆ பயலே...இன்னொரு தடவ இந்த பக்கோம் வந்த அறுத்துருவேன் அறுத்து....”என சீறி முடித்து காரித் துப்பியவள்..
“ஒனக்கு என்ன வேணும்....ஏன் இப்புடி நிக்க...”என்று சினந்தாள்.
“ஒண்ணுமில்ல வின்சென்ட் அண்ணந்தான்......போன் பண்ணிருப்பாரே.....”
“ஆங்...ஆள் எங்க...?”
“கீழ கடைல நிக்காப்ல.வரச் சொல்லவா? பையன் புதுசு பெரிய எடோம் வேற...”
“எதுவும் வம்பு தும்பு ஆயிராதே..?”
“இல்லக்கா அதெல்லாம் ஒண்ணூ ஆவாது நம்ம கஸ்டமர்...அந்த வெள்ள ஜிப்பாகாரர் சொல்லித்தா..ன்.....வந்திருக்காப்ல”
“சரி வரச் சொல்லு...ஆங் எல்லாத்தையும் சொல்லி அனுப்பு...”

கீழிறங்கி வந்தவன் நேரே என்னிடம் வந்து,”சார். மேல மூணாவது ரூம்மு... எல்லாமே பேசியாச்சு....வேற ஏதாவது...?”என்று தலையை சொறிந்தவனிடம் இருநூறு ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு,”வேற ஒண்ணும் பிரச்சனையாயிராதே...?”எனக் கேட்டேன்.

“சார்,இது நம்ம ஏரியா நீங்க பாட்டுக்கு போங்க நா இங்க தான் இருப்ப(ன்) என்ன வேணும்னாலும் என் செல்லுக்கு கூப்பிடுங்க ஓடியாந்திர்ரேன்...”என்று சிரித்தவனிடம் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மாடியேறினேன்.

ஒ! நான் யார்...?ஏன் இங்க வந்தேன் சொல்ல..ல இல்லையா?

நானும் திவ்யாவும் ஏழு வருஷம் ”உயிருக்கு உயிரா” காதலிச்சோம்.எனக்கு ஒண்ணுனா அவ பதறிடுவா.எம்மேல் அவ அவ்வளவு பொசசிவ்வா இருந்தா....ஆமா! இதெல்லாம் போன மாசம் வரைக்கும்.

இப்போ..... அவளுக்கு நாளைக்கு கல்யாணம். எவனோ ஒரு ”இளிச்சவாயன்” அவளுக்கு மறுபடியும் சிக்கியிருக்கான்.....என்னப் பொறுத்த வரைக்கும் காதல்ங்கிறது ஒரு ”நம்பிக்க” ஆனா அவ அதக் கெடுத்துட்டா அதுக்காக தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழையும் இல்ல.....அவள கொலை பண்ணுற அளவுக்கு கெட்டவனும் இல்ல...அதுக்காக அவள பழிவாங்காம என்னால சும்மா இருக்கவும் முடியல....அதனாலதான் இங்கவந்தேன்....பொம்பள அவளுக்கு நாளைக்கு ஒரு ராத்திரிக்கு சாந்தி முகூர்த்தம்னா ஆம்பள எனக்கு ஒவ்வொரு ராத்திரியும் சாந்தி முகூர்த்தம்தான்.

எங் கத கிடக்கட்டும்....இப்போது மாடியில் உள்ள மூன்றாவது அறை முன் நின்று கொண்டிருந்தேன்.

கதவு பூட்டப்படாமல் சாத்தி வைக்க பட்டிருந்தது.மெல்ல கதவை திறந்தேன். குண்டு பல்பு ஒளியில் அறை மங்கலாக இருந்தது.டி.வியில் ஏதோ ஒரு லோக்கல் சேனலின் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டிலும் அதன் மேல் உள்ள மெத்தையில் இருதலையணைகளும் திசைக்கு ஒன்றாய் கிடந்தது. நான் அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கையிலே பாத்ரூம் கதவை திறந்து கொண்டு முகத்தில் அப்பியிருந்த ஈரத்தை துடைத்த படி அவள் வெளிப்பட்டாள்.

ஆள் மாநிறம் கொஞ்சம் பெருத்த சரீரம் நைட்டி அணிந்திருந்ததால் மற்றவைகளை சிறப்பாக எடுத்துக் கூற முடியவில்லை.இருபத்தி ஐந்து வயதிலிருந்து முப்பது வயது வரை இருக்கும் என அவளது முகப்பொலிவு சொன்னது.

“என்னப் பார்த்துகிட்டு அப்படியே நிக்கிறீங்க வாங்க......”என ஆரம்பித்தாள்.

எனக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
“இல்ல யாரும் இல்லயோன்னு பார்த்தேன்.....அதான்.....”என்று இழுத்தேன்.

”என்ன இதான் முத தடவையா.....?”இந்த கேள்வி என்னை ஆச்சர்யப்படுத்தியதைவிட அவளது அனுபவத்தை உணர்த்தியது.

“இல்..ஆமா முத தடவ தான் ஏன்..?எப்புடி கண்டுபிடிச்ச... ?”

“யாரும் வந்து சொல்ல வேற செய்யணுமா...அதான் பார்தாலே தெரியுதே...” என்றபடி கட்டிலில் அமர்ந்தாள்.

“ஏன் தேவயில்லாம பேசிக்கிட்டு அதான் காசு கொடுத்தாச்சுல...”

“சாருக்கு ரொம்பத்தான் அவசரம்...”என்றபடி என்னைப் பார்த்து சிரித்தாள்.

“வேணும்னா பாத்ரூம் போய்ட்டு வாங்க...”

எனக்கும் அது தேவைபட்டதால் முகத்தை அலம்பிக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வந்தேன்..அவள் அதற்குள் அறையை சாத்திவிட்டிருந்தாள்.இப்போது டி.வியில் சன்னமான சத்தத்தில் பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது.இப்போது சற்று தைரியம் வந்திருந்ததால் அவள் அருகில் போய் அமர்ந்தேன்.

“என்ன ஆள முழுங்குற மாதிரி பாக்குறீக....”

“இல்ல நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்த....”வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம எதோ கேட்டுத் தொலைத்தேன்.

“இப்ப என்ன ஏன் கதைய கேக்குறதுக்கா இங்க வந்தீக....சீக்கரம்.....”என்றாள்.

அதற்கு மேல் நானும் பேச்சை வளர்க்க விரும்பாமல் வந்த வேலையில் கவனமானேன் அவளது ஒத்துழைப்புடன்......இருள் சூழந்தது.....

“தம்பீ...! வாயை துறங்க...ஆ..... சொல்லுங்க....”ஏதோ ஒளி என் கண்ணில் படர்கிறது.என் தாயின் அழுகுரல் சன்னமாக என் காதுகளில் ஒலிக்கிறது.என் கால்கள் அசைவில்லாமல் நான் படுக்கையில் இப்போதும்.....

ஒருவருடத்திற்கு முன் நான் திவ்யாவை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு செய்த வினைகளுக்கு இப்போது எதிர்வினையாக பால்வினை நோய்களோடு படுக்கையில்..... நாட்கள் நரகத்தில் நகர்வதாக உணர்கிறேன். நிலையற்ற கோபத்தால் தடுமாறி.... என் வாழ்க்கை தடம்மாறி.... மரணத்தை யாசித்துக் கொண்டிருக்கிறேன்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

கடனாய் ஒரு கல்வி...


நேற்று எங்கள் வங்கிக் கி்ளைக்கு ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார்.அவர் தனது மகனை ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்திருப்பதாகவும் அதற்கு கல்விக்கடன் வேண்டும் எனவும் கேட்டார். நாங்கள் அவரது தொழில் குறித்தும் அவரது வருமானம்,இருப்பிடம் குறித்தும் விசாரித்தபடியே கல்விக்கடன் வழங்குவதில் ஏற்படும் நடைமுறை தாமதங்கள் குறித்தும் விளக்கினோம்.

அதனால் முதல் ஆண்டுக்கான கல்லூரிக்கட்டணத்தை அவரை முதலில் செலுத்தும் படியும்.பின்பு எங்களுக்கு கடன் வழங்க அனுமதி கிடைத்த பின்பு அவர் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தை கல்லூரியின் பெயருக்கே நாங்கள் வரைவோலையாக(DEMAND DRAFT) தந்துவிடுவோம் என்றும் அதை கல்லூரியில் கொடுத்து அவர் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்தினோம்.

ஆனால் வந்திருந்தவரோ ஒரு ஏழை விவசாயி.அவரால் அந்த நடைமுறை யதார்தங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.அவர் தனக்கு வசதியில்லாததனால் தான் வங்கியை நாடி வந்திருப்பதாகவும் முதல் ஆண்டுக்கான கட்டணத்தையும் நாங்கள் கடனாக வழங்கிய பின்பே அவரால் கட்ட முடியும் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார்.

மேலும் மத்திய அமைச்சரே உத்தரவிட்ட ஒரு விஷயத்திற்கு வங்கி அதிகாரிகளாகிய நாங்கள் அதையும் இதையும் சொல்லி கடன் வழங்குவதில் தாமதப்படுத்துவதாகவும் அவரது புலம்பல்கள் தொடர்ந்தன.அவரது இந்த புரிந்து கொள்ளாத தன்மை எங்களுக்கு எரிச்சலை உண்டாக்கினாலும் அவரது தோற்றமும் தவிப்பும் அவர் மேல் பரிதாபத்தை உண்டாக்கியது.

அகவே மேற்கொண்டு ஏதும் விவாதிக்காமல் அவரது நிலை எங்களுக்கு நன்றாக புரிகிறது என்றும் அதனால் எங்களால் முடிந்த அளவு எவ்வளவு விரைவாக முடிகிறதோ அவ்வளவு விரைவாக முடித்து தருவதாக உறுதியளித்து அவரை சமாதனப்படுத்தி அனுப்பிவைத்தோம்.

தோழர்களே!

ஒரு வங்கியாளனாக மட்டுமே இருந்து இதை வெறும் சம்பவமாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.ஏனென்றால் அந்த ஏழை விவசாயியின் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும் இது ஒரு ஜனநாயக வன்முறை என்று.ஆம்! கல்வி என்பது ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படையான கடமை.

ஆனால் இங்கு நடப்பது என்ன?

கல்வி கற்பதற்கான விஷயமாக இல்லாமல் அது விற்பதற்கான விஷயமாக மாற்றப்பட்டுள்ளது.அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயக பாரம்பரியம் கொண்ட நமது நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரின் கல்விக் கொள்கை என்ன தெரியுமா?
கல்வி வேண்டுமா..? காசு கொடு..! காசு இல்லையா...?கடனை எடு..!

இங்கு கல்விக்கான கட்டணத்தை குறைப்பதற்கு எந்த அரசுக்கும் வக்கில்லை.ஆனால் வங்கி அதிகாரிகளை கல்விக்கடன் வழங்கச் சொல்லி மட்டும் நிர்பந்திப்பார்கள்.இது என்ன நியாயம்?

ஒரு வங்கியின் பணம் என்பது அதன் வாடிக்கையாளர்களின் அதாவது பொதுசனங்களின் சேமிப்பேயாகும்.பொதுமக்கள் தங்களது வயிற்றை கட்டி வாயை கட்டி தங்களது உழைப்பின் ஒரு பகுதியை நாளைய தேவைக்காக அரசாங்கத்தை நம்பி அரசுடைமை வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அந்தப் பணத்தை என்ன செய்கிறது? எவனோ ஒரு கல்வி வியாபாரி தின்று கொழுப்பதற்கு பொதுமக்களை கடன்காரர்களாக்கி கல்வி வியாபாரத்திற்கு துணை போகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் இப்படி கடனெடுத்து நான்கு ஆண்டுகள் படித்து வரும் இளைஞர்கள் பட்டதாரிகள் ஆகிறார்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் இந்த ஆட்சியாளர்களின் தயவால் பல லட்சங்களுக்கு கடன்காரர்கள் ஆவார்கள்.குடியானவர்களை கடன்காரர்களாக்கி வாங்கிய கடனுக்காக அவர்களை அடிமப்படுத்தினார்கள் அன்றைய ஜமீன்களும்,ஆண்டைகளும். அதேபோல் இன்று குடிமக்களை கடன்காரர்களாக்கி கல்வி விற்பன்னர்களையும்,பெரும் முதலாளிகளையும் கொழிக்க செய்கிறார்கள் இன்றைய அரசியல்வா(வியா)திகள்.

இதைவிட பெருங்கொடுமை என்னவென்றால் பொதுமக்களோ இவை எதையும் புரிந்து கொள்ள முடியாமல் சாமி வரம் கொடுத்தும் பூசாரி தர மறுத்த கதையாக இருக்கிறதே என்று வங்கியாளர்களின் மீது கோபம் கொள்வது தான்.

அதிகாரவர்கத்தின் இது போன்ற திட்டங்கள் முழுக்கமுழுக்க முதலாளித்துவ நாடுகளின் வழிகாட்டுதலின் பெயரிலே அமல்படுத்தப்படுகிறது.இந்த சூட்சமங்கள் ஏதும் புரியாமல் பொதுமக்களோ அரசியல்வாதிகள் விரிக்கும் மாயவலையில் சிக்குண்டு கொள்கிறார்கள்.

இனியும் இது போன்று ஏமாறாமல் இருக்க வேண்டுமாயின் ஜனநாயகத்தின் மாண்புகளை மக்கள் உணர வேண்டும்.ஓட்டுப் போடுவது மட்டுமே ஜனநாயக கடமை என்றும் அதன் பின்பு ஆட்சியமைத்தவர்கள் அடிக்கும் கூத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கும் பார்வையாளராகவே இருக்கும் தன்மையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

விடியல் காண வேண்டுமாயின் விழத்திருப்பது அவசியம்.

பட்டுக்கோட்டையார் தனது பாடல் ஒன்றில் சொன்னது போல்....
“சூழ்ச்சியில் சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச் சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா..........

தெரிந்து நடந்து கொள்ளடா....” என்ற யதார்த்த வரிகள் காலம் கடந்து இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.....