சனி, 25 செப்டம்பர், 2010

அயோத்தியா யாருக்கு சொந்தம்..?



’அயோத்தியா’ என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு “வெற்றி கொள்ள முடியாத பகுதி” எனப் பொருளாகும். இப்போது நம் தேசத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி ‘அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதியை வெற்றி கொள்ளப்போவது யார்?’என்பதே.

மிக நீண்ட வரலாறு கொண்ட இந்த கேள்விக்கு பதிலாக பல நூறு ஆண்டுகளாக பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் பதிலற்று நிற்கிறோம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் அயோத்தி. இதை இந்துக்கள் ராமர் பிறந்த பூமி என நம்புவதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள். முஸ்லிம்களோ 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி என்பதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள்.

இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகந் ராமசந்திர தாஸ்பரமஹன்ஸ் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் தீர்பு தான் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

’சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி’என்றொரு சொலவடை உண்டு. இந்தப் பிரச்சனையில் நமது அரசாங்கங்களின் பங்கு அந்த ஆண்டியை போலத்தான். ஆங்கிலேயே ஆட்சியில் கூட அண்ணன் தம்பிகளாக ஒரே இடத்தில் வழிபாடு நடத்திவந்தவர்களை அங்காளி பங்காளியாக்கி அலங்கோலப்படுத்தியது இந்திய ஆட்சியாளர்கள் தான். இப்போது ‘கலவரம்,கலவரம்’ என கூப்பாடு போடுபவர்களும் அவர்கள் தான்.

அதேபோல் இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கிய அடுத்த பெரியபங்கு ஊடகத்துறைக்கே சாரும். அவர்கள் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க இந்தப் பிரச்சனையை முடிந்த அளவுக்கு அரசியலாக்கி ஆதாயம் பார்த்தாகிவிட்டது.அடுத்து மத விற்பன்னர்கள்....சொல்லவே வேண்டாம் இந்தப் பிரச்சனையின் மூலமும் அவர்களே முடிவும் அவர்களே!

இப்போது வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கலவரங்களில் இறந்து போன அப்பாவி பொதுஜனங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை...அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை.... நாம் தொலைத்து விட்டு நிற்கும் சகோதிரத்துவத்திற்கும் தீர்வு பிறக்க போவதில்லை... இதையெல்லாம் இழந்துவிட்ட பிறகு கிடைக்கும் அந்த நிலத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம்? மீண்டும் ஒரு பாபர் மசூதியா? அல்லது ராமர் கோயிலா?

லட்சகணக்கான உயிர்களின் தன்னலமற்ற போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சுதந்திரத்தை...இந்த ஜனநாயகத்தை....பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக சொல்லப்படும்...நம்பப்படும் மன்னர்களுக்கு சொந்தமானது எனச் சொல்லி சண்டையிட்டு கொள்வது எத்தனை அபத்தமானது? இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையும் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே சொந்தமானது என்பதை நாம் எப்போது உணர்வோம்?

ஆரியர்கள் வந்தார்கள் இந்துக்களோனோம்... முகலாயர்கள் வந்தார்கள் முஸ்லிம்களானோம்... ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறுத்தவர்களானோம்... சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சிரிங்க ப்ளீஸ்...


எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே...

***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.
ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள்.
உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள்.
திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி.

***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?

மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம்ன்னு பிரிச்சு கொடுத்துடுறேன். சரிதானே..?

கணவன்: ?????

***ஒருவன்: டாக்டர் சார், மரணமே இல்லாம வாழ்றதுக்கு ஏதாவது வழியிருக்கா?

டாக்டர்: அதுக்கு நீங்க கல்யாணம் தான் பண்ணிக்கனும்.

ஒருவன்: என்னது கல்யாணம் பண்ணிட்டா மரணமே இல்லாம வாழ வழி கிடைக்குமா?

டாக்டர்: நீங்க வேற...அப்பத்தான் இப்படிப்பட்ட விபரீதமான எண்ணங்கள் வராது.

***ஒருவன்: சார். என்னோட பொண்டாட்டிய காணோம்.

போஸ்ட்மாஸ்டர்: யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா..போயி போலிஸ் ஸ்டேஷன்ல புகார் கொடு.

ஒருவன்: அய்யோ...சந்தோசத்துல எங்க போறதுன்னே தெரியாமபோச்சே!!!

***மனைவி: நான் இப்படியே உங்களுக்கு சமைச்சு கொட்டிக்கிட்டே இருந்தா எனக்கு என்ன கிடைக்க போவுது?

கணவன்: ஆங். என்னோட இன்ஷுரன்ஸ் பணம் கிடைக்கும்...சீக்கிரமா...

***நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?
வீட்டிலிருப்பவனை ஒயின் ஷாப்பிற்கு போகவைப்பது காதல்.
ஒயின் ஷாப்பிலிருந்து தள்ளாட்டமாய் திருப்பி வீட்டிற்கு கூட்டி செல்வது நட்பு.

***அப்பா: டேய்! ஏண்டா இப்படி அழுவுற..?

மகன்: அம்மா அடிச்சிட்டாங்க...

அப்பா: இதுக்கா அழுவுற.ச்சீ அழாத...

மகன்: யோவ் போயா...உன்ன மாதிரியெல்லாம் என்னால அடிதாங்க முடியாது.

அப்பா: ????

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஒரு பட்டுப்பூச்சியின் மரணம்...


அவள் என் நண்பனின் மகள். வண்ண வண்ண கனவுகளுக்கும், மனம் மலரும் ஆசைகளுக்கும் சொந்தக்காரி. ஆறு வயது கிழவி அவள்.ஆம்! அத்தனை முதிர்ச்சியாக வாயாடுவாள். ஏதோ கேள்விகளின் அரசி போல் அத்தனை கேள்விகள் அவளிடம் உண்டு. சமாளிப்பாக நாம் எதுவும் சொல்லிவிட முடியாது. குடைந்து எடுத்துவிடுவாள். அதனாலே அவளிடமிருந்து வரும் கேள்விகளை நான் மிகவும் கவனமாகவே எதிர் கொண்டு பதிலளிப்பேன். எப்போதும் சுறுசுறுப்பாகவும்,சிறு குறும்பு பார்வையுடனும் உலா வரும் அவள் அன்று அவள் வீட்டிற்கு சென்றபோது அமைதியே உருவாக அமர்திருந்தாள்.

நான் அவள் அருகே சென்று அமர்ந்தேன். சோகமே உருவாக கன்னத்தில் கை வைத்து அம்ர்திருந்தவளை என் பக்கம் திருப்பினேன்.

‘என்னடா செல்லம் ஏன் கோவமா இருக்கீங்க..?’என்றவுடன்.

’டாடியும், மம்மியும் ஏசிட்டாங்க..’என்றது.

‘என் தங்கத்தயா திட்டுனான்....டேய்!ஏண்டா புள்ளய திட்டுனே...’அவளுக்காக நண்பனிடம் பொய் கோபம் காட்டினேன்.

‘நீ உன் செல்லத்துக்கிட்டேயே கேளு...வர வர கழுதக்கு அடம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..’என்று அவனும் விரைத்தான்.

நான் அவனை முறைத்துவிட்டு எனக்கு தேநீர் கொடுக்க வந்த அவன் மனைவியிடம் ‘ஏம்மா இந்தப் பய சும்மா இருக்க மாட்டானா? நீயும் ஏன் அவன் கூட சேந்துகிட்டு புள்ளய திட்டுற...’

‘அண்ணே! உங்களுக்கு தெரியாது வரவர இவளுக்கு எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் தான்...எது நாளும் புடிச்ச புடில வேணும்...’என்று அவளும் சேர்ந்து கொண்டாள்.

‘பக்கத்து விட்டு பொண்ணுக்கு இன்னக்கி பொறந்த நாளு அவ முட்டாய் கொடுக்க இங்க வந்தா...அவள பாத்திட்டு அவ போட்டிருந்த மாதிரியே இவளுக்கும் பட்டுப்பாவாடை வேணுமாம்..சரி! உனக்கு பர்த்டே வரும் போது வாங்கித் தாரேன் இவுங்க அப்பா சொன்ன பிறகும் ஒரே அடம். உடனே வேணுமாம்...’

‘எப்பா...ஆ இவ இப்படி பிடிவாதம் பிடிச்சா இவளுக்கு ஒண்ணும் வாங்கி கொடுக்காதீங்க....’என மேலும் எரியூட்டிய படி சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட துவங்கினாள்.

இப்போது குழந்தை மௌனம் உடைத்து விசும்ப தொடங்கியது.

நான் அவள் கண்களை துடைத்தபடி ‘உங்க ரெண்டு பேருக்கும் அறிவே கிடையாதா? அவளே அழுதுகிட்டு இருக்கா...இதுல நீ வேற சும்மா இருக்க மாட்டியாம்மா?’என நண்பனின் மனைவியை கடிந்தபடி..’வாடா! செல்லம் அங்கிள் உனக்கு பட்டுப்பாவாடை வாங்கித் தரேன்...அழக்கூடாது கிளம்பு..’ என்றேன்.

நான் ஏதோ சமாளிப்பதாய் நினைத்து கொண்டவள் கொஞ்சமும் சமாதானம் ஆகாமல் எழுந்து அழுதபடியே சோபாவில் போய் படுத்துக்கொண்டாள்.

இதைப் பார்த்து கொண்டிருந்த என் நண்பன் ‘விடு அவ அப்படித்தான்...அழுத்தக்காரி...கொஞ்ச நேரத்துல அவளே அழுது அடங்கிருவா... சரி! வாடா நாம போகலாம் ...’என்றான் எதையும் அலட்டிக்கொள்ளாமல்.

‘டேய்! அவ அழுதுக்கிட்டு இருக்காடா...பாவம் புள்ளய கூட்டிட்டு போவோம்..’என்றேன்.

அதற்கு உள் இருந்தபடியே அவன் மனைவி,’அண்ணே! நீங்க போயிட்டு வாங்க அவ சரியாயிருவா...நான் தான் இருக்கேன்ல...’என்றபடி நண்பனுக்கும் ஏதோ குறிப்பால் உணர்த்தினாள்.

அதை கவனிக்காதவன் போல் நானும் நண்பனோடு கிளம்பினேன்.

வழக்கமாக போகும் கடைக்கு சென்று ஆளுக்கு ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தபடி அவனிடம் ‘டேய்! நீயும் தான் அவளுக்கு அத வாங்கி கொடுத்தா என்ன?’என்றேன்.

‘மச்சான் மாச கடைசி வேற...அடுத்த மாசம் அவளுக்கு பொறந்த நாளு வருது அப்ப பாத்துக்கலாம் விட்டுட்டேன்’ என்றான்.

ஒருவழியாக நானும் சமாதானம் ஆகி வேறு விஷயங்களை கதைக்க தொடங்கினோம்.நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம்.

நாட்கள் சென்றது...அவளது பிறந்தநாளும் வந்தது...நானும் ஞாபகமாக அவளுக்கு ஒரு பட்டுப்பாவாடையை பிறந்தநாள் பரிசாக வாங்கிச் சென்றேன்.

என்னை உற்சாகமாக ஜீன்ஸ் பேண்டிலும், டீ சர்டிலும் எதிர்கொண்டு இனிப்பு வழங்கினாள். அவள் பட்டுப்பாவாடையை மறந்து விட்டாள் போலும் என நினைத்தபடி அவளிடம் ‘அங்கிள் இன்னக்கி உனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு பாப்போம்...’என அவளிடம் கேட்டேன்..

‘தெரியலியே..! நீங்களே சொல்லுங்களேன்...’என்றவளிடம் மேலும் புதிர் போட விரும்பாமல் பார்சலை பிரித்து ‘என் செல்லத்துக்கு பிடித்த பட்டுப்பாவாடை டோய்...’என்றபடி அவளிடம் நீட்டினேன்.

அதுவரை உற்சாகமாக இருந்த அவளது விழிகள் பட்டுப்பாவாடையை பார்த்தவுடன் சுருங்கியது ‘ஓ! இதுவா...’ என்றாள் உற்சாகமின்றி.

அவளே தொடர்ந்தாள் ‘அங்கிள் இது வேணாம் எனக்கு...’என்றாள்.

‘ஏம்மா...’ என்றேன் எதுவும் புரியாமல்.

‘அங்கிள் இத பட்டுப்பூச்சிய கொன்னு அதுல இருந்து செய்வாங்களாம் மம்மி சொன்னாங்க...பாவம் அதுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...அதோட மம்மி,டாடி எல்லாம் ரொம்ப அழுதிருப்பாங்க இல்ல...அதானால இது எனக்கு வேண்டாம் அங்கிள்...’என்றாள்.

நான் வாயடைத்து போய் நின்று கொண்டிருந்தேன். என்னை ஏறிட்டு பார்த்தவள் ‘அங்கிள் இதை பத்திரமா அடக்கம் பண்ணிருங்க அங்கிள்...’என கூறிவிட்டுச் சென்றாள்....

ஏதோ போதி மரம் என்னிடம் உரையாடி விட்டு சென்றதைப் போல் உணர்ந்தேன்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

புதுச்சேரியில்-ஒரு தொழிற்சங்க வைபவம்


கடந்த 08.08.2010 அன்று புதுச்சேரியில் உள்ள பார்வதி திருமண நிலையத்தில் வைத்து சிறப்பு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு கூட்டத்தை புதுவை பாரதியார் கிராம வங்கியின் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இணைந்து நடத்தினர். இதை வழக்கமாக கூட்டப்படும் தொழிற்சங்க கூட்டமாக நாம் பார்க்க முடியாது.ஏனென்றால் “தொழிற்சங்கம்” என்ற வார்த்தையை கூட இதுவரை எதிர்கொண்டிராத ஒரு புதிய தலைமுறையின் வண்ணமயமான தொழிற்சங்க பிரவேச விழா இது.

விழித்தெழ விசனப்பட்டுக்கொண்டு விடியலை மறுத்துக்கொண்டிருந்த அந்த அதிகாலைப்பொழுதை மலர்ச்சியாக்க மெல்லப் பரவும் ஒளிக்கீற்றுகள் போல பல்வேறு பக்கங்களில் இருந்தும் தோழர்களின் வருகை இருந்தது. AIRRBEA என்னும் எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கும் புதிய உறுப்பினர்கள் கூட்டிய சிறப்பு தொழிற்சங்க கூட்டத்தில் பங்கேற்க பாண்டியன் கிராம வங்கி,பல்லவன் கிராம வங்கி,சவுத் மலபார் மற்றும் சப்தகிரி கிராம வங்கிகளில் இருந்தும் திரளான தோழர்கள் வந்து குவிய துவங்கினார்கள்.வண்ணத்துப்பூச்சிகளின் திடீர் படையெடுப்பு போல இருந்தது புதுவை தோழர்களின் வருகை. அவர்கள் வந்திறங்கிய சிறிது நேரத்தில் அந்த இடமே ஒரு கல்லூரிவளாகம் போல் உருமாறியது. பல மணிநேர பயணக் களைப்பையும் மீறி ஒருவித புத்துணர்ச்சி எங்களுக்குள் பரவத்துவங்கியது.

முதலில் சிறிது தயக்கத்துடன் நுழைந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான நிலைக்கு திரும்பி எங்களோடு சகஜமாக உரையாட துவங்கினர். விழா அரங்கத்தை சீரமைப்பது,பேனர்கள் கட்டுவது என பரபரப்பானார்கள். மணப்பெண்ணை தயார் செய்வது போல் கருமசிரத்தையோடு அரங்கத்தை தயார் செய்தனர். எங்களது அகில இந்திய தலைவர்களின் வருகைக்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் கூட்டம் மிகச் சரியாக 11.00மணிக்கு துவங்கியது.

புதிய இளம் தலைமுறையினருக்கு இடையே பல தலைமுறைகளை கடந்த பழுத்த பழமாக எங்களது அகில இந்திய சங்கத்தின் (AIRRBEA) பொதுச்செயலாளர் தோழர்.D.K.முகர்ஜி அவர்கள் அமர்ந்திருந்தார். சமீபத்தில் தான் செய்து கொண்ட அறுவைசிகிச்சையின் காயம் கூட ஆறாத நிலையில் தனது குடும்பத்தின் புதிய அங்கத்தினர்களோடு கலந்துரையாட மிகுந்த உற்சாகத்தோடு காத்திருந்தார். கூட்டத்தை புதுவை பாரதியார் கிராம வங்கியின் அலுவலர் சங்கத்தலைவர் தோழர். முருகன் துவக்கி வைத்தார். புதுவை பாரதியார் கிராம வங்கியின் ஊழியர் சங்கத்தலைவர் தோழர்.சசிகுமார் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

அதுவரை உறவுகளின் முறைகளை சொல்லியும், நண்பர்களின் பெயர்களை சொல்லியும் மட்டுமே பழக்கப்பட்டிருந்த அவர்களின் உதடுகள் முதல்முதலாக “காம்ரேட்” என உச்சரிக்க துவங்கியதால் சிறிது பதட்டத்துடன் அதை பதம் பார்த்தார்கள். குழந்தைகளின் ’கிள்ளை’ மொழி போல அதுவும் அழகாகதான் இருந்தது.தோழர்.ரமன்யா வரவேற்புரையை தெளிந்த ஆங்கில நடையில் வழங்கினார். எங்கள் சங்கத்தின் (AIRRBEA) தமிழ்மாநில பொதுச்செயலாளரும், புதுவை பாரதியார் கிராம வங்கியின் தொழிற்சங்க அமைப்பாளருமான தோழர்.சோலைமாணிக்கம் அவர்கள் ஒரு மூத்த தகப்பனை போல் அவர்களுக்கு மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களை பற்றியும்,எங்கள் சங்கத்தின் பாரம்பரியத்தை பற்றியும் விளக்கி கூறினார்.

எங்கள் அகில இந்திய சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான் தோழர்.வெங்கடேஸ்வர ரெட்டி (GS-NFRRBO) அவர்கள் மிகத்தேர்ந்த வார்த்தைகளில் காலம் கருதி சுருக்கமாக தனது சிறப்புரையை வழங்கினார். அடுத்து பேசிய தோழர்.ராஜீவன் (PRESIDENT-NFRRBE) அவர்கள் புதிய தோழர்களின் வருகையால் தனக்கு அளப்பரிய உற்சாகமும், சங்கத்தின் எதிர்காலம் குறித்தான புதிய நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அவரை தொடர்ந்து தோழர்.K.கிருஷ்ணன் (SECRETARY-BEFI) அவர்கள் மெல்ல தன் முழக்கத்தை ஆரம்பித்தார். தோழர்.D.K.முகர்ஜியின் ஓய்வறியா வாழ்க்கை முறையையும், போராட்டங்கள் நிறைந்த அவரது தொழிற்சங்க பயணத்தையும் இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கை பாடமாக கொள்ள வேண்டுமென கூறினார். மேலும் தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை குறித்தும்,அதிகாரவர்க்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத போக்கினை குறித்தும் அவர்தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

எமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.D.K.முகர்ஜி அவர்கள் தனது சிறப்புரையை மிக மெல்லிய குரலில் ஆரம்பித்தவர் தனது உடல்நிலையையும் மறந்து மெல்ல மெல்ல தனது வழக்கமான கர்ஜனைக்கு மாறினார்.கிராம வங்கிகளுக்கு புதியவர்களின் வருகை புதுரத்தம் பாய்ச்சியிருப்பதாகவும் அதேசமயம் கிராம வங்கி ஊழியர்களுக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதாகவும் உறுதியளித்தவர். கிராம வங்கிச் சேவையிலிருந்து புதியவர்கள் வேறு வேலைகளுக்கும் மாற்றலாகி போகவேண்டாம் என்ற தனது கோரிக்கையையும் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் வைத்தார். கிராம வங்கி ஊழியர்களின் போராட்டங்கள் நிறைந்த கடந்த காலங்களை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைத்தார். நமது நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்தும் அதன் இன்றைய நிலை குறித்தும் மிக தெளிவாக எடுத்துரைத்தார்.ஒருமணி நேரத்திற்கும் மேலான அந்த நீண்ட உரையை தங்களது பசியையும் மறந்து வடித்து வைத்த சிலைகளைப் போல சிறு சலனமும் இன்றி உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.அவர் தனது சிறப்புரையை நிறைவு செய்த போதும் அரங்கத்தின் சுவர்களில் அவரது குரல் எதிரொலித்து கொண்டே இருந்தது.

இறுதியாக கூட்டத்தின் நிறைவு உறையை இளம் தோழர்.மனோஜ் பிரபாகர் அவர்கள் வழங்கி அந்த அருமையான அமர்வை நிறைவு செய்தார். தொழிற்சங்கங்களை முடக்குவதிலும், தொழிலாளர் உரிமைகளை சிதைப்பதிலும் அதிக சிரத்தையோடு ஆளும் அதிகார வர்க்கம் செயல்பட்டு வரும் வேளையில் இது போன்ற தொழிற்சங்க கூட்டங்கள் நடைபெறுவது நமக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும்,புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது.

வியாழன், 27 மே, 2010

என் ஜீவன்...


சுற்றும் பூமியிலிருந்து சற்றே விலக செய்து
அவனை சுற்றி வரவிட்டான்....

என் சிந்தனைகளை சிறைபிடித்து அவனைதாண்டி
படராமல் பார்த்துக்கொண்டான்....

என் இரவுகளை பகலாக்கி
எனது பகல்களை இரவுகளாக மாற்றிவிட்டான்....

தன் பொக்கைச்சிரிப்பில் என்னை மயங்கவைத்து
அவன் என் கைகளை கட்டிவிட்டான்....

தன் பிஞ்சுக்கால்களை என் நெஞ்சில் உதைத்து
என்னை அவன் அடிமையாக்கிக்கொண்டான்....

என் விரைத்த மார்பில் அவன் கழித்த சிறுநீர்தான்
என்னை இளக செய்ததோ...?தெரியவில்லை...ஆனால்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றிக்கொண்டும் வருகிறான்....

என்னை கடித்த எறும்பை கூட மெல்ல பிடித்து
தரையில் விடுகிறேன்...பத்திரமாக தன் குட்டிகளுக்கு
இரையெடுத்து செல்லட்டுமென....

வேகமாக வந்து என்னை மோதுவது போல்
கடந்து சென்றவனையும்...ஆத்திரப்படாமல் பார்த்து சிரிக்கிறேன்
என்னைப் போல் அவன் தன் பிள்ளையை காணச் செல்கிறான் என...

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்....
இந்தப் புரிதலும்,பொறுமையும் எனக்கு கூட சாத்தியமா?
என என்னையே நான் வியக்கிறேன்..

’பெற்றவள் சொல்லி கேட்காத நீ உன் பிள்ளையிடம் அடங்கிப்போவாய்..’என
எப்போதோ என் அன்னை விட்ட சாபம்
இப்போது இன்பமாய் பலிக்கிறது.

இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம்...என
என் உலகையே தனதாக்கி கொண்டு என்னை முழுவதுமாய்
ஆக்கிரமித்துவிட்டான்.....என் ஜீவன்...!!!!!!!!!

சனி, 13 மார்ச், 2010

எனது பார்வை...


தோழர்களே! நான் தோழர்.தமிழச்செல்வனின் (தமிழ்வீதி) ”மகளிர் தினமும் இரண்டு கதைகளும் என்னும்” என்ற பதிவையும் வெண்ணிற இரவுகளின் ”நீதிக்கு தண்டனை” என்னும் பதிவையும் நேற்று படித்தேன். அவர்களிருவரும் சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்பு ஒன்றை பற்றி மிக கடுமையான விமர்சனம் வைத்திருந்தார்கள். அந்த விமர்சனத்தின் எனது முரண்பாடை நான் தோழர்.தமிழ்செல்வனுக்கு பின்னூட்டமாக எழுதிவிட்டு அதை முடித்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் தற்போது எனது ’அன்புமாமா’ காமராஜ் (அடர் கருப்பு) போன்றவர்களும் மேற்கூறிய அதே விமர்சனத்தையே கொண்டுள்ளார்கள் என்பதால் நான் எனது இந்தப் பதிவை அதன் தொடர் பதிவாக இடுகிறேன்.....இது எனது சொந்த கருத்துக்கள்.....இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக மட்டுமே பார்க்கப்படும் எனவும் நம்புகிறேன்....

முதலில் அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்வோம்......’சுஷ்மா’ இவள் உத்திரபிரதேச மாநிலத்தவள்.தற்போது மும்பையில் வசிக்கும் 25 வயது இளம் யுவதி. பிராமண சாதியம் பூசிக்கொண்ட குடும்பத்தவள். இவள் கேரளத்தின் ’கீழ்சாதியான’ ஈழவ சமூகத்தை சார்ந்த பிரபு என்கிற இளைஞனை காதலித்து இருக்கிறாள். அவர்களது அந்த அழகான காதல் கல்யாணமாகவும் மலர்ந்திருக்கிறது. இல்லறத்தை துவக்கிய அந்த இளம் பிஞ்சுகளின் வாழ்வை சாதியவெறி அழித்தொழித்திருக்கிறது. ஆம்! சுஷ்மாவின் அண்ணன் திலீப் திவாரி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபுவின் வீட்டிற்கு செல்கிறான். அந்த நேரத்தில் கெட்டதிலும் ஒரு சிறு நல்லதாக கர்ப்பிணியான சுஷ்மா வெளியே சென்றிருந்திருக்கிறாள். அப்போது அந்த கொலைவெறி கும்பல் பிரபுவையும்...அவனது தந்தையையும், அங்கு விளையாடி கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்று குவித்து தங்களது சாதியவெறிக்கு இரையாக்கி இருக்கிறது.

அப்போது சுஷ்மா அந்த கொலையாளிகளை எதிர்த்து மும்பை கோர்ட்....மராட்டிய உயர்நீதி மன்றம்....என போராடி அவளது அண்ணனுக்கு தூக்கு தண்டனை பெற்று தந்திருக்கிறாள். அவன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறான். உச்சநீதி மன்றமுமோ அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கிறது. மேலும் தனது தீர்புக்கு வலு சேர்க்கும் விதமாக கீழ்கண்ட வற்றை காரணமாகவும் கூறுகிறது. அது......

The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “

”ஒரு குடும்பத்தில் ஒரு இளைய சகோதிரி வழக்கத்திற்கு மாறான ஒரு செய்கையில் ஈடுபட்டால்...அதாவது சாதிய மறுப்பு திருமணத்திலோ,அல்லது மதமறுப்பு திருமணத்திலோ அல்லது ரகசிய காதல் திருமணத்திலோ என்றால் இந்த சமூகம் அவளது மூத்த சகோதரனையே அத்தகைய செய்கையை தடுத்து நிறுத்தாதற்கான பொறுப்பாளியாக கருதும்.”

மேலும்:”அதாவது அவனே தனது செயல்களுக்கு முழுமுதற் பொறுப்பாளி என்றாலும் இந்த வழக்கை பொறுத்தவரை மரண தண்டனை என்பது சற்று அதிகபட்சமானது தான்....ஏனென்றால் சாதியம்,இனம்,மதம், போன்றவகளின் பிடிப்பு நியாயப்படுத்த முடியாத ஒன்றானாலும் அதன் தாக்கங்கள் தற்போதைய யதார்தமே...”என்கிறது.

இப்போது இந்த மேற்கண்ட தீர்பே பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இது உயர் சாதிய மனோபாவத்திற்கு துணை போகும் தீர்ப்பு என்றும் பெண்ணியத்திற்கு எதிரானதாகவும் விமர்சிக்க பட்டு வறுகிறது. மேலும் சுஷ்மா இந்த தீர்ப்பை எதிர்த்து போராடி வருகிறார். அதற்கு வலுசேர்க்கும் விதமான பதிவுகளே இங்கு பதியப்பட்டு வருகிறது.

தோழர்களே!

இங்கு ஒரு சில விஷயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. நீதி என்பது தனிமனிதனை போல் உணர்ச்சிவசப்பட்டு செயல்பட கூடிய அமைப்பாக மாறிவிட கூடாது. அது தான் ஆபத்தானது. இங்கு சுஷ்மா வேண்டுவது என்ன? தன் கணவனையும்,அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்ற தன் அண்ணனுக்கு மரண தண்டனை வேண்டுமென்பதே.

இதில் உச்சநீதிமன்றத்தின் பார்வை மிகச்சரியான ஒன்றுதான். அது திலீபின் மரண தண்டனையை 25ஆண்டுகள் சிறைதண்டனையாக மாற்றித்தான் தீர்ப்பளித்திருக்கிறது. அவனை நிரபராதி எனக் கூறி விடுதலை செய்யவோ அல்ல அவனது கொலைகளை நியாயப்படுத்தவோ செய்யவில்லை.ஆனால் அவனது செய்கைக்கான காரணிகளை சமூக யதார்த்தத்தோடு முன்வைத்து அலசியிருக்கிறது. எந்த ஒரு கொலைக்கும் கொலையாளியை விட அதற்கான காரணிகள் தான் முக்கியமானதாக கருதப்பட வேண்டும். இங்கும் அதைத்தான் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.... இப்படி ஒரு சாதிய கட்டமைப்பில் உருவாகும் இளைஞர்கள் வேறு எப்படி செயல்படுவார்கள்? என்ற கேள்வியையும் இந்த கொலைகளுக்கான காரணிகளாக சாதிய கட்டமைப்பையும் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது. ஆகவே நாம் ரௌத்திரம் கொள்ள வேண்டியது இந்த சாதிய கட்டமைப்புகளுக்கு எதிராகத்தானேயொழிய இது போன்ற தனிநபர்களுக்கு எதிராக அல்ல.

ஒரு பேச்சுக்கு அப்படியே மரண தண்டனை வழங்கப்பட்டு விட்டால் இனிமேல் இது போன்ற திலீப்களை இந்த சாதிய சமூகம் உருவாக்காமல் விட்டு விடுமா? இதுதான் இது போன்ற கொலைகளுக்கு தீர்வா? கொலைக்கு கொலை தீர்வாகுமா? மரணம் என்பது ஒரு தண்டனையா?

பொதுவாக தண்டனைகள் என்பது தனிமனிதர்கள் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள இந்த சமூகம் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைய வேண்டும். அது தனிமனித வன்மத்தின் வடிகால்களாக அமைந்து விடக்கூடாது.

மரணதண்டனைகள் நம் சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னும் அது தொடர்வது கொடுமையானது. ஆனால் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதே தவிற குறைந்து விடவில்லை. இதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது மரணதண்டனையின் மூலம் எந்த தாக்கத்தையும் இந்த சமூகத்தில் ஏற்படுத்தி குற்றங்களை குறைத்து விடமுடியாது என்பதே!

அதனால் நாகரிகமான ஒரு மனித சமூகத்தில் ’மரணம்’ என்பது ஒரு தண்டனையாக தொடர்வதை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சரி! இது போன்ற நிகழ்வுகளுக்கு என்னதான் தீர்வு?

தனிமனிதர்களால் உருவானதே சமூகம். அதனால் தனிமனித மாற்றங்களால் தான் இதை சரி செய்ய முடியும்.ஆம்! நாம் நமது அடுத்த தலைமுறையையாவது சாதிய அடையாளத்திலிருந்து விடுவிக்க வேண்டும். நமது சாதிய அடையாளங்கள் நம்மோடு ஒழிந்து போட செய்ய வேண்டும்.

சரி இந்த இடத்தில் சில கேள்விகள் எழலாம்....சாதிய அடையாளங்களை தொலைத்து விட்டால் நமது குழந்தைகள் பொதுப் பிரிவில் அல்லவா சேர்க்கப்படுவார்கள்? அப்படியென்றால் இடஒதுக்கீட்டு சலுகைகளை நம் குழந்தைகள் இழந்து விடுவார்களே?

ஆம்! உண்மைதான்.... பல நூறு ஆண்டுகளின் கழிவை சிறு சிறாய்ப்புகள் கூட இல்லாமல் இங்கு சரி செய்ய முடியாது. பல லட்சம் பேர் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் செய்த தியாகத்தின் விளைவுதான் இன்றைய நமது சுதந்திர சுவாசம்.

வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்... சாதிய அடையாளத்தை துடைத்து எறிவோருக்கு என்று புதிய....ஏன் எந்தப் பிரிவினருக்கும் இல்லாத அதிக சலுகைகளை கோரி இயக்கங்கள் நடத்தலாம். இதை முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் சார்ந்த சாராத அமைப்புகள் ஒருங்கிணைத்து போராடலாம்.ஆனால் இதுவெல்லாம் ஒரே இரவில் நடைபெறக் கூடிய ஒன்றல்ல......என்பது யதார்த்தம்.

ஆனால் அதேநேரத்தில் இங்கு நடைமுறையில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் மாபெரும் போராட்டங்களின் விளைவாகவே உருவாக்கப்பட்டவை (உதாரணம்: தொழிற் தாவா சட்டங்கள்).....என்பது சரித்திரம்.

நாம் ஒன்றிணைவோமா.....? புரிந்து கொள்வோமா....?

வியாழன், 11 மார்ச், 2010

தோழர் ஆனேன்...6

இது ஒரு தொடர் பதிவு.....

புத்தருக்கு ஞானம் தந்த போதிமரத்தின் வேர்கள் பாய்ந்த மண்ணிற்கு பயணிக்கிறோம் என்ற நினைப்பே பெரும் ஆவலை எங்களுக்குள் தூண்டுவதாய் இருந்தது. பயணக் களைப்பையும் மீறி ஒருவித ஆர்வத்தோடு பயணித்தோம். நாங்கள் பயணித்த பாதையின் இருபுறங்களிலும் பச்சைபசேல் என இருந்த வயல்வெளிகள் அந்த மக்களின் உழைப்பை எங்களுக்கு சொல்லியது. ஆனால் அத்தகைய அளப்பெரிய உழைப்பிற்கு சொந்தகாரர்களான மக்களின் வாழ்நிலையோ சூன்யம் நிறைந்து இருப்பதை எங்களால் காண முடிந்தது.

கட்டுகட்டாய் கடைவிரிக்கப்பட்டிருந்த பற்துலக்கும் குச்சிகளும்.....ஐந்து ரூபாய் கூலிக்கு மைல் கணக்காய் கை ரிக்‌ஷா இழுக்க முண்டியடித்த மனிதர்களும்....மின்சாரக் கம்பிகளின் நிழல்களை கூட கண்டிராத தெருக்களும்.....களிமண்ணை தவிற வேறு எதையும் கொண்டிராத குடிசை சுவர்களும்....என நாங்கள் பார்த்ததெல்லாம் நவீன நாகரீகத்திற்கு குறைந்தது ஒரு அரை நூற்றாண்டு காலம் பின் தங்கிய அவலக் கோலமே!

நாங்கள் மாநாட்டு பந்தலுக்கு சென்று இறங்கிய போது எங்களது உற்சாகமும்,ஆவலும் வடிந்து விட்டிருந்தது. அந்த மக்களின் வாழ்நிலை குறித்த ஆதங்கம் மட்டுமே எங்களிடையே அப்போது பேசு பொருளாய் இருந்தது. மாநாட்டு பந்தலருகே புதிதாய் கட்டப்பட்டிருந்த ஒரு பௌத்த மடாலயத்தில் தான் எங்களுக்கான தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அது ஒரு கல்லூரி விடுதியை போல் இருந்தது. அங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்த வந்திருந்த தோழர்களுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு அறையில் குறைந்தது இருபது பேர் தங்கும் அளவிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. நாங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கவைக்கப்பட்டோம்.

மாநாட்டிற்கு முந்தைய நாளே சென்றுவிட்டோம் என்பதால் கொஞ்ச நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.....

புத்தகயாவிற்கு இருவித தோற்றங்கள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. அது போதி மரத்தை காண வரும் வெளிநாட்டினருக்கும்....வெளிமாநிலத்தவருக்கும்... சகலவித வசதிகளும் கொண்ட ஒரு சுற்றுலா தளமாக இயங்கிய அதேவேளையில் சொந்த மக்களை அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வஞ்சிக்கவும் செய்வதாய் இருந்தது. உழைக்கும் வர்கத்து பிரதிநிதிகளாக சென்றிருந்த நாங்களும் வழக்கம் போல் புலம்பியபடி ஊர் சுற்றலானோம்.

ஆசையே அழிவிற்கு காரணம் என்ற ஞானத்தை புத்தருக்கு தந்த போதியின் ஒரு இலையாவது கிடைக்காதா என ஆசையோடு போதியை சுற்றி அலைந்தோம். போதியை சுற்றவரும் மக்களை சுற்றி வியாபாரம் செய்தபடி ஒரு பெருங்கூட்டம் அலைந்தது. இப்படி அலையும் எல்லாவற்றையும் மௌனப் புன்னையோடு புத்தரும் பார்த்துக்கொண்டிருந்தார்.(பாவம்! அவரால் வேறு என்ன செய்ய முடியும்?!)

புத்தகயாவில் இருந்து....ராஜ்கிர்...நாலந்தா என எங்கள் சுற்றுலா தொடர்ந்தது. ராஜ்கிரில் அழகான மலை மீது கட்டப்பட்ட பௌத்த ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்திற்கு ரோப் காரில் தான் செல்ல வேண்டி இருந்தது. மிகவும் விறுவிறுப்பான பயணம் அது. ராஜ்கிரில் சுற்றி அலைந்து விட்டு நாலந்தா சென்றோம்.....

நாலந்தா பல்கலைகழகம் 1500 ஆண்டுகளுக்கு மேலான பழமையும்,பெருமையும் கொண்டது. அங்கு ஒரே சமயத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்திருக்கிறார்கள்..... இரண்டாயிரத்திற்கும் மேலான ஆசிரியர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள்....கணிதம், வானசாஸ்திரம்,இலக்கணம்,தத்துவம்,வேத சாஸ்திரங்கள் என பல பாடப்பிரிவுகள் இருந்துள்ளன.குப்த அரசர்கள் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அந்த பல்கலைகழகம் கி.பி.1200களின் போது கில்ஜி அரசர்களின் படையெடுப்பினால் அழிவை சந்தித்துள்ளது. அங்கிருந்த மாபெரும் நூலகங்களையும் தீக்கிரையாக்கி உள்ளனர். இடிந்து போன அந்த பல்கலைகழகத்தின் எச்சங்களை காணும் போதே அதன் கட்டுமானத்தின் பிரம்மாண்டம் தெரிந்தது.

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் கில்ஜி அரசர்களின் வாரிசுகளைப் போல் இன்றும் பீகாரின் அதிகார வர்க்கம் செயல்படுவது கண்கூடாய் தெரிந்தது. ஏனென்றால் புத்தகயாவிலிருந்து நாங்கள் பயணித்த நாலந்தா வரை கல்விக்கூடத்திற்கான சுவடுகளே எங்கள் கண்ணில் படவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மண்வெறியாலும்,அதிகார வெறியாலும் தரைமட்டமாக்கப்பட்ட மக்களின் கல்விக்கு இன்று வரையிலும் அங்கு தீர்வு காணப்பட்டதாய் தெரியவில்லை.மொத்ததில் போதியை அனுமதித்த ஆளும் வர்க்கம் மக்களிடையே ஞானத்தை மட்டுமே வளர அனுமதிக்கவில்லை என புரிந்தது.

அப்படியே நேரம் காலம் மறந்து சுற்றி கொண்டிருந்த எங்களை மாலை 5.00மணி நெருங்கியவுடன் எங்களது இடத்திற்கு கிளம்ப சொல்லி வேன் டிரைவர் படபடத்தார். அவரை கொஞ்சம் நிதானப்படுத்தி விசாரித்த போது அவர் கூறிய விஷயம் எங்களுக்கு படபடப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது.

அதற்கு காரணம்......

மாலை 6.00மணிக்கு மேல் அங்கு உலவுவது பாதுகாப்பானது இல்லை என்றும்....எந்த நேரத்திலும் எந்த முனையில் இருந்தும் தாக்குதலுக்கான ஆபத்து இருப்பதாக சொல்வதாய் எங்கள் அனைவருக்கும் இருந்த இந்தி புலமையை வைத்து புரிந்து கொண்டோம்.. ஆதனால் எதற்கு வம்பு என வண்டியில் ஏறி தவ்வி எங்கள் இருப்பிடத்திற்கு விரைந்தோம்.

அது ஒரு மூன்று நாள் மாநாடு. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் எங்களது அகில இந்திய சங்கத்தின் கிராம வங்கி ஊழியர்கள் பிரதிநிதிகளாகவும், பார்வையாளர்களாகவும் வந்திருந்தார்கள். அப்படி ஒரு மாபெரும் மனித சங்கமத்தை நான் அதுவரை கண்டதில்லை.

ஆனால் அத்தனை பெரிய மகாசமுத்திரமே ஒரு ஒற்றை மனிதனின் விரலசைவுக்கு கட்டுபட்டது. அப்படியொரு கம்பீரமும்,மிடுக்கும் அவரிடம் மிளிர்ந்தது....எழுபதை கடந்த வயது ஆனால் தோல்களின் சுருக்கத்தையும் மீறி வசீகரித்தார்.....எப்போதும் சுறுசுறுப்புடனும்,பரபரப்பாகவும் காணப்பட்டார். அவர் பார்த்தவைகளில் எல்லாம் அவரால் திருத்தங்கள் சொல்ல முடிந்தது. அதேநேரத்தில் அதை உறுதி கலந்த கனிவுடன் கூறி நடைமுறை படுத்துவதையும் காண முடிந்தது.

தயவு தாட்சண்யம் இல்லாமல் அவரால் விமர்சனங்கள் செய்ய முடிந்தது. அதேநேரம் யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு அதை இயல்பாக கடந்து செல்லவும் முடிந்தது. அவரை அங்கு கூடியிருந்தவர்கள் எல்லாம் ”தாதா...தாதா...”என அன்போடு அழைக்க கண்டேன். இதையெல்லாம் பார்த்த நான் அப்போது எனக்கிருந்த உலக ஞானத்தை கொண்டு அவரை ஏதோ பீகாரின் ’வேலுநாயக்கர்’ என நினைத்துக் கொண்டு இருக்கையில்... என்னை அவரிடம் கூட்டிச்சென்று அறிமுகம் செய்துவைத்தார்கள். அப்போது தான் தெரிந்தது அவர்தான் எங்களது அகில இந்திய பொதுச்செயலாளர்... திலிப்குமார் முகர்ஜிஎன்று.



முதல் நாள் பெண்கள் மாநாட்டுடன் எங்களது 10ஆவது முப்பெரும் அகில இந்திய மாநாடு கோலாகலமாய் துவங்கியது.இரண்டாம் நாள் பிரிதிநிதிகளின் மாநாடு....அதன் பின்பு பொதுச்செயலாளர் அறிக்கை....அதன் மீதான காரசார விவாதங்கள் என பகல் பொழுதில் அனல் பறந்த மாநாட்டு பந்தல் இரவுகளில் கலைநிகழ்ச்சிகளால் களைகட்டி கலகலப்பானது. மூன்றாம் நாள் பொதுச்செயலாளரின் பதில்களும்...தீர்மானங்களும்.....அதனை தொடர்ந்து புதிய அகில இந்திய செயற்குழுவும்,பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒரு பிரம்மாண்டமான கனைவைப் போல் இருந்தது அந்த மாநாடு.

வெவ்வேறு மாநிலங்கள்....வெவ்வேறு மொழிகள்...வெவ்வேறு கலாசாரம் என வேறுபாடுகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் AIRRBEA.....என்றவுடன் எல்லோரும் ஒருமித்த உணர்வுடன் ஒரே குரலாய் ஜிந்தா...ஆஆஆஆபாத்.....!!!! என ஆர்பரித்த போது தான் எனக்கு புரிந்தது உழைக்கும் வர்கத்திற்கு ஜாதியில்லை....மதமில்லை...மொழியில்லை....என்று.

அந்த மாநாடும் அதற்கான பயணமும் என்னை வெகுவாக மாற்றியிருந்தது. அந்த மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. அத்தனை காலமாய் நான் ஒரு சிறு கூட்டிற்குள் என்னை சிறைவைத்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோ உலகத்திலே அதிகமான சுமைகளுக்கு நான் தான் சொந்தக்காரன் என்ற எனது எண்ணம் எவ்வளவு அபத்தமானது எனவும் புரிந்து கொள்ள துவங்கியிருந்தேன். அந்த பயணம் மற்றுமல்ல சில விலைமதிக்க முடியாத உறவுகளையும் எனக்கு பெற்று தந்தது.

அது.....

----தொடரும்.......

செவ்வாய், 9 மார்ச், 2010

தோழர் ஆனேன்....5


இது ஒரு தொடர் பதிவு......

எங்களது அகில இந்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அப்போது பீகாரில் உள்ள புத்தகயா என்னும் ஊரில் வைத்து நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள எங்கள் சங்கத்தலைமையிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் மிகுந்த உற்சாகத்தோடு அதில் கலந்து கொள்ள என் விருப்பத்தை தெரிவித்தேன். அதுதான் எனது முதல் வட இந்திய பயணம். அதனால் மிகுந்த ஆவலோடு பயணத்திற்காக காத்திருந்தேன்.....அந்த நாளும் வந்தது....

தூத்துக்குடியிலிருந்து நானும், தோழர்.அருள்ராஜும் பயணமானோம்.....தூத்துக்குடி....சாத்தூர்....மதுரை என ஒவ்வொரு நிறுத்தங்களிலும் எங்கள் தோழர்கள் வந்திருந்து எங்களை வழியனுப்பி வைத்த அந்த நிமிடங்கள் நான் அதுவரை வாழ்வில் பார்த்திராதது. மிகவும் பெருமிதமான உணர்வோடு எனது அந்த பயணம் துவங்கியது.ஒவ்வொரு நிறுத்தங்களிலும் எங்களது சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவராய் எங்களோடு இணைந்து பயணிக்க ஆரம்பித்தார்கள்.

முற்றிலும் புதிய மனிதர்கள்....புதிய சூழல்....என எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தனிமை படர துவங்கியது. என்னோடு பயணித்தவர்களுக்கும் எனக்கும் ஒரு தலைமுறை இடைவெளி இருந்தது. எனக்கு அவர்களிடம் என்ன பேசுவது என்று கூட அப்போது தெரியவில்லை. ஆனால் எனக்குள் எழுந்த அந்த தயக்கத்தை அவர்கள் கொஞ்ச நேரம் கூட நீடிக்க விடவில்லை. ஒவ்வொருவராய் வந்து என்னிடம் தங்களைப் பற்றியும், எனது அம்மாவை பற்றியும் அவர்களது கடந்த கால நினைவுகளை பற்றியும் பகிர்ந்தபடி என்னிடம் நெருக்கம் கொள்ள ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நானும் சகஜமானேன்.

மறுநாள் காலை 9.30 மணியளவில் இரண்டு மணி நேர தாமதத்தோடு சென்னை எழும்பூர் சென்று சேர்ந்தோம். எங்களுக்கோ காலை 10.00 மணிக்கு சென்னை செண்ட்ரலில் இருந்து கிளம்பும் கோரமண்டல் ரயிலை பிடிக்க வேண்டிய நிர்பந்தம். அதாவது வெறும் அரை மணி நேர கால அவகாசமே இருந்தது. அவசர அவசரமாக அங்கிருந்து ஆட்டோ பிடித்து சென்னை நெரிசலில் மிதந்து செண்ட்ரல் சேரவும் ரயில் கிளம்பவும் மிகச் சரியாய் இருந்தது. எங்களது பெட்டி படுக்கைகளோடு சென்னை செண்ட்ரலில் நாங்கள் ஓடிய காட்சி தமிழ் சினிமாக்களின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல.

ஒருவழியாக ஆளுக்கு ஒரு பெட்டியில் ஏறி விழுந்து ஒருங்கிணைந்தோம். ஆனால் இதிலெல்லாம் எந்த சலனமும் இல்லாமல் ரயிலோ தனது வழக்கமான தடதடப்புடன் பயணித்து கொண்டிருந்தது.....

பொதுவாக பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அதிலும் இது போன்ற அசாத்திய சூழலும் இணையும் போது அதன் சுவாரஸ்யம் இரட்டிப்பாகத்தான் செய்கிறது. எனது முந்தய நாளின் தயக்கங்கள் முழுவதுமாக வடிந்துவிட்டிருந்தது.

நாங்கள் ரயிலேறிய விதத்தை சிலாகித்தபடி ஆரம்பித்த எங்கள் உரையாடல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடு பயணித்த தோழர்களின் அதற்கு முந்தைய இது போன்ற பயண அனூபங்கள்....முந்தைய அகில இந்திய மாநாட்டு அனூபவங்கள்....என கிளை விட துவங்கியிருந்தது. அவர்களுக்கு என்னிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும்....வரலாறுகளும் மீதம் இருந்தது. எனக்கோ அவர்கள் பேசிய ஒவ்வொன்றும் புதிதாகவும்,ஆவலை தூண்டுவதாகவும் இருந்தது.

நிறைய பேசினார்கள்....என்னையும் பேச வைத்தார்கள்.....தோழமை என்னும் அந்த வீரியமிக்க உணர்வை எனக்குள் செலுத்தி தலைமுறை இடைவெளியையும் தகர்த்தெரிந்தார்கள். தனது குடும்பம்...தனது வேலை...தனது தேவைகள்....என எல்லாவற்றையும் விடுத்து அவர்களிடம் பொதுவான பேசு பொருளாய் இருந்தது...தொழிற்சங்கம். அவர்கள் சிலாகிக்க....நெஞ்சம் விறைத்து பெருமிதம் கொள்ள....ஒருவரை ஒருவர் சீண்ட என எல்லாவற்றிற்கும் அவர்களுக்கு அந்த மந்திர சொல் வழிவகை செய்திருந்தது.

மேலாளர்..எழுத்தர்...கடைநிலை ஊழியர்....என எல்லா பதங்களும் மருவி தோழர் என்ற ஒற்றை சொல்லாய் அவர்களிடம் நிலை பெற்றிருந்தது. அது எனக்கு அவர்கள் மீதும்....எங்கள் தொழிற்சங்கத்தின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்த ரயில் பயணத்தை ஏதோ தங்களது இளமை காலத்தை நோக்கிய பயணமாய் அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். சீட்டு கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது....உற்சாக பானம் தந்த துணையோடு அவர்கள் அடித்த கொட்டம் அவர்களது நரைத்த மயிரை கூட கருக்க செய்வதாய் இருந்தது. கேலியும்,கிண்டலுமாய் தொடர்ந்த பயணம் மறுநாள் காலை புவனேஸ்வரில் இறங்கி வேறு ரயில் மாறிய பின்பும் கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்தது.

ஒருவழியாக நாங்கள் பீகார் ரயில் நிலையம் சென்று சேர்ந்த போது அதிகாலை 4.00மணி இருக்கும். அங்கு எங்களை வரவேற்க பீகார் மாநிலத்தின் கிராம வங்கி தோழர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தார்கள்.

பீகார் ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த நிமிடங்களிலிருந்து நாங்கள் பார்த்த ஒவ்வொரு காட்சியும் அந்த மாநிலத்தின் நிலையையும்,அந்த மக்களின் அவல நிலையையும் எடுத்துச் சொல்வதாய் இருந்தது.....

எங்களை ரயில் நிலையத்தின் அருகே ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அமரச் சொன்னார்கள். அந்த ரயில் நிலையத்திலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு அரைமணி நேர பயணமாவது ஆகும் என்றும் அதற்கு விடிந்த பின்பே பயணிப்பது பாதுகாப்பானது என்றும் எங்களை வரவேற்க வந்த தோழர்கள் கூறினார்கள். நாங்களும் அந்த மூத்திர நெடி சூழந்த கட்டிடத்திற்குள் ஒரு இரண்டு மணி நேரம் முடங்கிக்கொண்டோம். ஒருவழியாக 6.00மணி அளவில் இரண்டு வேன்களில் எங்களை புத்தகயாவிற்கு அழைத்து சென்றார்கள்.

---தொடரும்....

திங்கள், 8 மார்ச், 2010

தோழர் ஆனேன்....4

இது ஒரு தொடர் பதிவு.....

நாட்கள் சென்றன....நான் இரெகுநாதபுரத்திலிருந்து ஓட்டப்பிடாரம் கிளைக்கு எமது சங்கத்தின் பரிந்துரையின் பேரில் பணி மாறுதல் செய்யப்பட்டேன். ஓட்டப்பிடாரம்....இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரம் செறிந்த போராட்டங்களின் விளைநிலமாக விளங்கிய வீரபூமி. பரங்கியர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய வ.உ.சி அவதரித்த புண்ணிய பூமி. ஆனால் அதுவெல்லாம் அப்போது எனக்கு பெரிதாய் தெரியவில்லை.

எனக்குள் அந்த கிளை சம்பந்தமான ஆர்வத்தை தூண்டிய ஒரே விஷயம் அது என் தாய் மேலாளராக பணிபுரிந்த கிளை என்பதே! எத்தனை பிள்ளைகளுக்கு இந்த பாக்கியம் வாய்க்கும் என தெரியவில்லை.ஆனால் எனக்கு கிட்டியது. அவள் அமர்ந்த இருக்கைகளில் நான் அமரப்போகிறேன்..... அவள் பார்த்து பழகிய மனிதர்களிடம் நானும் பழகப்போகிறேன்...... என்பன போன்ற பல எண்ணங்கள் எனக்குள் ஆர்வத்தை தூண்டி இருந்தது.

அங்கு நான் பணிபுரிந்தது இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் அவை. என்னை பொறுத்தவரை அது வெறும் அலுவலகம் அல்ல. நான் புடம் போடப்பட்ட பட்டறை அது. அப்போது அங்கு ஜோசப் ரூபன் விக்டோரியா என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு எங்கள் வங்கியில் கறார் பேர்வழி எனப் பெயர். யாருக்காகவும், எதற்காகவும் வளைந்து கொடுத்து போகத் தெரியாதவர்.

அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டேன்.ஆனால் நானோ எனக்கு அறிவுரை சொல்லியவர்களிடம் நானா? அவரா? என பார்த்து விடுவேன் என சூளுரைத்து வந்திருந்தேன். ஓரிரு நாட்கள் இயல்பாக சென்றது. ஒரு நாள் அவசர விடுப்பொன்று எடுத்தேன். எனது அந்த விடுப்பையும் என் வீட்டில் வேலை செய்த அக்காவின் மூலம் மேலாளரிடம் சொல்ல சொல்லிவிட்டு வெளியூருக்கு பயணமானேன்.

மறுநாள் நான் பணிக்கு திரும்பியவுடன் அவர் எனது முறையற்ற தகவல் பரிமாற்றத்திற்காக என்னை கடிந்து கொண்டார். நான் செய்தது தவறு எனப் புரிந்தாலும் அவரை எப்படியாவது வேறு வழியில் பழிவாங்க வேண்டும் என முடிவு செய்து சந்தர்பத்திற்காக காத்திருந்தேன். ஆனால் எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காத வண்ணம் அவர் நடந்து கொண்டதோடு என்னை மெல்ல மெல்ல வாஞ்சையான வார்த்தைகளால் நெருங்கவும் செய்தார்.

கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் இருந்த வன்மம் குறைந்து நான் அவரை புரிந்து கொள்ள துவங்கினேன்....

எந்த தொழிற்சங்கத்திலும் உறுப்பினராய் இல்லாதவர். ஆனால் ஆழமான தொழிற்சங்க பார்வையும்,சமூகத்தின் மேலான அக்கறையும் அவரிடம் நான் கண்டதுண்டு. தனக்கு சரி என்று பட்டால் தயங்காமல் பாராட்டவும், தனக்கு தவறு எனப்பட்டதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டிக்காட்டுவார். அதேசமயம் மிகவும் மென்மையான மறுபக்கம் கொண்டவர். இசையின் மேல் அளப்பறிய காதலும் ,ஞானமும் அவருக்கு உண்டு. அது அவரிடம் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நான் அவரிடம் பல விஷயங்கள் குறித்து கருத்தாடி இருக்கிறேன். அவரும் சளைக்காமல் எனக்கு பதிலளித்து கொண்டு இருப்பார். எங்கள் சர்வீஸ் ஏரியாவில் உள்ள கிராமங்களில் நடைபெறும் குழு கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்ல ஆரம்பித்தார். இந்த சமூகத்தின் கடைகோடி மக்களையும் அவர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ள இது போன்ற கூட்டங்கள் எனக்கு பெரிதும் உதவியது. வங்கி அதிகாரிகள் என்பதால் அவர்கள் எங்களிடம் காட்டிய மரியாதையை பார்த்த போது என் பணிமீதான காதலும்,கர்வமும் எனக்குள் அதிகரித்தது.

வங்கித்துறை குறித்த தெளிவான பார்வை அவருக்கு உண்டு. எந்த ஒரு வேலையையும் அதன் அர்த்தம் புரிந்து செய்திட வேண்டுமென்பார். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்....சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால் மேலாளர்--எழுத்தர் என்பதையும் தாண்டி ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவே எங்களுக்குள் இருந்ததாய்.....இருப்பதாய்....உணர்கிறேன்.

இப்படியாக சென்று கொண்டிருந்த எனது அன்றாட வாழ்க்கையில் என் வாழ்வை திசைமாற்றிய அந்த பயணத்திற்கான அழைப்பு எங்கள் சங்கத்திலிருந்து வந்தது.......
தொடரும்..........

ஞாயிறு, 7 மார்ச், 2010

நான் பேசுகிறேன்...


சமீபத்தில் நடந்தேறிய ஒரு மூன்று சம்பவங்களும் அதன் விளைவாக இந்த சமூகத்தில் ஏற்பட்ட சில அதிர்வுகளும் நிச்சயம் விவாதிக்கபட வேண்டியது. விவாதங்களும் பெரும் அளவில் நடைபெற்றுள்ளது. ஆனால் பெரும்பான்மையான விவாதங்களில் நடுநிலைத் தன்மை என்பது காவு வாங்கப்பட்டு தனிமனித அரசியலும்,மூடத்தனங்களும் மேலோங்கி இருப்பதாய் எனக்கு படுவதால் நான் இந்த பதிவை இடுகிறேன்.....

முதலில் அந்த சம்பவங்கள்.....

1.உத்திரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர்.சீனிவாச ராமச்சந்திரா சிராஸ் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக “புகார்” கூறி அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

2.தோழர்.டபிள்யு.ஆர்.வரதராஜனின் மரணம்.

3.நித்தியானந்த சாமிகளின் ”லீலைகள்”.

முதலாவது சம்பவம் ‘வாய்ஸ் ஆஃப் நேஷன்’ (VNI) என்னும் இந்தி சேனலின் நிருபர்கள் குழு ஒன்று ரகசிய கேமிரா மூலம் பேராசிரியரின் படுக்கை அறையை பதிவு செய்து அவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வெளியிட்டு உள்ளார்கள். இந்த மாபெரும் ”சமூக சேவை”யின்
விளைவு....பேராசிரியர் குற்றவாளி கூண்டில் நிறுத்தபடுகிறார்....சஸ்பெண்ட் செய்யபடுகிறார்....ஓரின சேர்க்கை தேசிய குற்றமாக மலினபடுத்த பட்டு விவாதங்கள் அரங்கேறுகிறது.

ஆனால் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக களமிறங்கிய கயவர்கள் சமூக ஆர்வலர்களாக மாறிப் போகிறார்கள்....ரகசிய பதிவுகள் ஒளிபரப்பப்பட்டு வர்த்தகமாக்கப்படுகிறது.

இதில் எது குற்றம்? ஓரினச் சேர்க்கையா? அல்லது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான வர்த்தக அராஜகமா?

ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்ப்பது பாசிச பார்வையே ஆகும். இயற்கையை ஏற்க மறுக்கும் மூடத்தனம். நாம் அணிதிரள வேண்டியது இந்த வர்த்தக அராஜகத்திற்கு எதிராகத்தான்.பத்திரிகை சுதந்திரம்...எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித அந்தரங்கங்களை படமாக்கும் அபத்தக்களுக்கு எதிராகத்தான்.

இரண்டாவது சம்பவம்...

தோழர்.டபிள்யு.ஆர். வரதராஜனின் மரணம். அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு எதிராக ஏந்திய கடைசி ஆயுதம் “மரணம்”.ஆனால் நாம் அதையும் சர்ச்சையாக்கி அரசியல் ஆதயம் தேடும் தொடர் முயற்சியில் இறங்கி இருப்பது கொடுமையிலும் கொடுமை. உழைக்கும் வர்க்கத்திற்காக தனது வாழ்க்கையை அர்பணித்த அந்த அற்புத தோழர் தனது மரணத்தை தன் தரப்பு நியாயங்களுக்காக அர்பணித்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? பெண் ஒருவருக்கு ‘தகாத குறுந்தகவல்கள்’ அனுப்பினார் என்பதே. அவர் அப்படி அனுப்பியதாய் வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு என்று எனக்கு புரியவே இல்லை. வன்புணர்ச்சி குற்றம்...தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதுமா குற்றம்?

அந்தந்த காலகட்டத்தின் தனிமனித ஒழுக்கங்களாய் ஒரு சமூகம் கொண்ட வரையறைகளை மீறியவர் என்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட இந்த சமூகமும் அவர் சார்ந்த கட்சியும் வரையறுத்த ஒழுக்க நெறிகளை மீறியவர் என்றும் குற்றம் சாட்டலாமா? இப்படி எந்த விரலை நீட்டி குற்றம் சாட்ட முயற்சித்தாலும் தன் எண்ணங்களை வெளிப்படுத்த அவர் முயற்சித்ததை குற்றமாக எப்படி பாவிக்க முடியும்? குற்றம் எவர் செய்தாலும் குற்றமே! என்று கண்ணை மூடிக்கொண்டு தீர்பளித்து விட்டோம். இனி சிதறியவை மாணிக்க பரல்கள் எனத் தெரிந்தால் என்ன செய்யலாம்?”யானோ அரசன்?யானே கள்வன்?”என உயிர்(பதவி) துறந்திடுவோமா? நிச்சயம் மாட்டோம்.

பொதுவாக மரணத்திற்கு மௌனத்தை அஞ்சலியாக செலுத்துவது நமது மரபு.ஆனால் அதை கூட நாம் அந்த அற்புத தோழனுக்கு தர மறுப்பது எந்த வகையில் நியாயம்?

மூன்றாவது சம்பவம்.....

காவி துறந்து காமம் தழுவிய ‘சாமியாரின்’ கதை. இதில் எனக்கு நித்தியானந்தரின் மேல் எந்த கோபமும் இல்லை. அவர் நிச்சயம் புத்திசாலிதான். சொல்பவன் பேச்சை கேட்டு கேட்பவன் மதியை இழந்தால் குற்றவாளி சொல்பவனா? கேட்பவனா? இந்த நேரத்தில் எனக்கு ஒரு சர்தார்ஜி ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது....

சர்தார்ஜி: நான் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு என் பக்கத்து வீட்டுகாரரிடம் பந்தயம் கட்டி இரண்டாயிரம் ரூபாய் இழந்துவிட்டேன்.

நண்பர்: யாராவது ஒரு மேட்சிற்கு இரண்டாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுவார்களா?

சர்தார்ஜி: நான் என்ன முட்டாளா? நான் ஆயிரம் ரூபாய்தான் ஒரு மேட்சிற்கு பந்தயம் கட்டினேன்.

நண்பர்: பின்பு எப்படி இரண்டாயிரம் இழந்தீர்கள்?

சர்தார்ஜி: நான் நேற்று முன்தினம் நடைபெற்ற மேட்சிற்கு ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினேன். மறுநாள் மேட்சில் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு நேற்று ஹைலைட்சிலாவது ஜெயிப்பார்கள் என நம்பி மீண்டும் பந்தயம் கட்டி இந்தியாவை நம்பி மோசம் போனேன்....என புலம்பினானாம்.

இப்படித்தான் இருக்கிறது நம்மவர்களின் கதைகள். எத்தனை தடவை பட்டாலும் நமக்கு உறைக்காது. முதலாவது சம்பவத்தை போலவே செய்திதாள்களும், டி.வி சேனல்களும் இதை பரபரப்பாக்கி விற்பனை செய்வதே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. எந்தவித சமூக சிந்தனையும் இவர்களுக்கு கிடையாது. வியாபாரம் ஒன்றே தான் இவர்களது குறிக்கோள். நாமும் தொடர்ந்து இவர்களது வியாபார தந்திரந்திற்கு பலியாகி வருகிறோம். நாம் நியாயப்படி கோபப்பட வேண்டியது இவர்களைப் போன்ற வியாபாரிகளை பார்த்தும்....நமது முட்டாள்தனத்தை நினைத்தும் தான்.

தோழர்களே!

மேலே நான் குறிப்பிட்ட மூன்று சம்பவங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது காமம் குறித்து இந்த சமூகத்தின் புரிதல்களே ஆகும். காமம் ஒரு இயற்கையான உணர்வு. பாலின பேதம் காமத்திற்கு இல்லை. அது ஒரு உயிரின உணர்வு. அதற்கான வடிகால்களும் இயல்பானதே! எந்த ஒரு உயிரையும் வன்புணர்ச்சி செய்வதே இயற்கைக்கு மாறானது. அதுதான் கண்டனத்திற்கு உரியது. எல்லா உயிரினமும் தனக்கான உணவை தானே தேடிக்கொள்கிறது. காமமும் அது போலத்தான். தனக்கான இணையை தானே முடிவு செய்வது தனிமனித சுதந்திரம். காமத்திற்கான பொதுவிதிகளை வரையறுக்க இங்கு தனிமனிதருக்கோ அல்லது ஒரு சமூக அமைப்பிற்கோ உரிமை கிடையாது. ஆனால் நாம் அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்.

விவிலியத்தில் ஒரு சம்பவம் உண்டு விபச்சாரம் செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை கல்லால் அடிக்க முற்படுவர். அப்போது இயேசுநாதர் அவர்களை தடுத்து,”உங்களில் எவன் குற்றமற்றவனோ அவனே முதல் கல்லை எறியட்டும்” என்பார் உடனே தங்கள் கைகளில் உள்ள கற்களை வீசியெறிந்து விட்டு அனைவரும் கலைந்து செல்வதாய் ஒரு கதையுண்டு.

இதைத்தான் நாமும் இங்கே சொல்ல விரும்புவது மேலே சேற்றை வாரி இறைக்கவும்....நீதி சொல்லவும்.....சேதப்படுத்தவும் செய்வோரெல்லாம் யோக்கியர்கள் தானா? இல்லை குற்றமற்ற மகாத்மாக்களா?

தவறுகள் தான் மனிதன்.அதனால் தண்டனைகள் தந்து தலையறுப்பதை விட. மன்னித்து அரவணைப்பதே மனித செயல். நாம் மனிதர்களாக மாறுவோமா?

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தோழர் ஆனேன்...3


இது ஒரு தொடர் பதிவு.....

குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை பாதையை நாம் வாழும் சமூகத்தை நோக்கி திரும்ப செய்தது எமது தொழிற்சங்கம் தான். இந்த சமூகத்தின் நிஜமான பக்கங்களை அது எனக்கு புரட்டிக் காட்டியது.அதுவரை நான் கண்டு நம்பி வந்த பிம்பங்களின் சுயரூபங்கள் தோலுரிக்கபட்ட போது நான் பெரிதும் அதிர்ந்து போனேன்.

இந்த சமூகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் இருக்கும் அரசியலை தெரிந்து கொள்ள எனது தேடுதலை துவங்கினேன். அப்போது நிழல்கள் நிஜங்களாகவும்...நிஜங்கள் நிழல்கள் கூட இல்லாமலும் இருப்பதை கண்டேன். கார்ல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின்,ஸ்டாலின்,சேகுவேரா,காஸ்ட்ரோ...என ”புதிய புதிய” தோழர்கள் எனக்கு அறிமுகமாகத் துவங்கினார்கள். எனக்குள் தோன்றாத கேள்விகளுக்கு கூட அவர்களிடம் பதில்கள் கிடைத்தது.

“கம்யூனிஸம்” என்ற அவர்களது நூற்றாண்டு கால கனவு என்னை வசீகரித்தது. அது வெறும் சித்தாந்தம் அல்ல.மனித சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக நிலவும் பல்வேறு வகையான ஏற்றதாழ்வுகளுக்கான ஒரு தீர்வு என புரிந்துகொண்டேன். எனக்கு புரிந்த வரை ஒரு சில வார்த்தைகளில் அதன் சாரத்தை சொல்ல வேண்டுமானால் வர்க்கப் பேதமற்ற, தேச பிரிவினைகளற்ற, தட்டுப்பாடுகளற்ற ஒன்றிணைந்த ஒரே மனித சமூகம் என்ற நிலையே கம்யூனிசமாகும். உலகத்தின் எந்த மூலையிலும் இதுவரை பூரண கம்யூனிச ஆட்சி மலர்ந்ததில்லை,சோவியத் ரஷ்யா உட்பட. ஏனென்றால் லெனின்,ஸ்டாலின் போன்றவர்களால் கூட ரஷ்யாவில் சேஷியலிச ஆட்சியை தான் மலரச் செய்யமுடிந்தது. சோஷியலிசம் என்பது கம்யூனிசத்தின் முதல்படியே ஆகும். கம்யூனிசம் என்பது மனித சமூகத்தின் உன்னதமான நிலை.

ஆனால் இந்த உன்னதமான நிலையை மனித சமூகம் அடைந்து விட கூடாது என நினைக்கும் சுயநலவாதிகள் தான் சோவியத் வீழ்ந்தது...கம்யூனிசம் தோற்றது...என தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து நம்மை மூளைச் சலவை செய்துள்ளார்கள். பெரும் முதலாளிகளுக்கும், அவர்களை அண்டிப்பிழைத்து உடல் உழைப்பில்லாமல் ஊனை வளர்க்கும் வீணர்களான முதலாளித்துவ தரகர்களுக்கும் கம்யூனிசம் பொது எதிரியானது வியப்பிற்குரிய ஒன்றல்ல.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களை அடிமைகளாகவும், கூலிகளாகவும் சுரண்டிப் பிழைத்தவர்களுக்கு தொழிலாளற்களின் எழுச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே எல்லோருக்கும் எல்லாம் சமம் என்றாகிவிட்டால் நாமும் உழைத்து பிழைக்க வேண்டி வருமே என்ற பயமே அவர்களை கம்யூனிசத்தை வெறுக்க செய்தது. அதனால் தான் தொழிற்சங்கங்களை முனை மழுங்க செய்ய தங்களாலான அத்துணை முயற்சிகளையும் இன்றளவும் செய்து வருகிறார்கள்.

தொழிற்சங்கம் என்ற ஒன்றை பற்றி இனிவரும் தலைமுறையினர் கனவிலும் நினைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து தொழிற்சங்கங்கள் குறித்தும், தொழிற்சங்க தலைவர்களை குறிவைத்தும் உண்மையற்ற பிரச்சாரங்களை மிகவும் நைச்சியமாக மக்கள் மத்தியில் படரவிட்டு வருகின்றனர். இதை புரிந்து கொள்ளாத நம்மவர்களும் தொழிற்சங்கம் என்றால் தொட்டதற்கெல்லாம் வேலைநிறுத்தம் செய்பவர்கள்,சம்பளத்தை உயர்த்தக் கோரியும், போனஸ் கோரியும் கொடி பிடிப்பார்கள் என்பன போன்ற தவறான பிம்பங்களே இருக்கிறது.

உதாரணமாக.....

நாம் வீதிகளில் பயணிக்கும் போது அவ்வப்போது செங்கொடி ஏந்தி நகரத்தின் முக்கிய இடங்களில் ஒரு சிலர் ஒன்று கூடி முழக்கங்கள் செய்த வண்ணம் இருப்பதை கண்டிருப்போம். அப்போது நாம் அவர்களுக்கு இதைவிட்டால் வேறு வேலையே இல்லை என முணங்கியபடி ஒருவித எரிச்சலுடன் அவர்களை கடந்தும் சென்றிருப்போம். ஆனால் கொடுமை என்னவென்றால் அவர்கள் நமக்காகத்தான் அவர்களது அன்றைய ஊதிய இழப்பை கூட பொருட்படுத்தாமல் முழங்கி கொண்டிருப்பர்.

அதேசமயம் மாபெரும் பொருட்செலவில் தேவையில்லாத ஆடம்பரத்துடன் பொது சொத்துக்களை விரயம் செய்தபடியும் மிக அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியபடிம் தமது அன்றாட பணிகளையே ஏதோ மாபெரும் சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும் நம்மை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றும் பொய்யர்களுக்குப் பின்னால் அணிவகுப்போம். ஊடகங்களும் இத்தகைய அரசியல் விற்பன்னர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவர்களது கோமாளிதனங்களை தலையில் வைத்து கொண்டாடும் போக்கே இன்றைய யதார்த்தம்.

இந்தப் புள்ளியில் தான் வியாபாரிகள் வீரத் தலைவர்களாகவும்....போராளிகள் பிழைக்க தெரியாதவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள்.

ஆனாலும் மனம் தளரா மார்க்கண்டேயர்களாக இன்னும் எங்களை போன்ற தொழிற்சங்கங்கள் மக்களுக்கான போராட்டங்களை மிகவும் நம்பிக்கையோடு முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம்.

-தொடரும்.........

புதன், 10 பிப்ரவரி, 2010

எனது முதல் பொதுக்குழு அனூபவம்.....


இது ஒரு தொடர் பதிவு......

தோழர்
ஆனேன்..2

எங்கள் சங்கத்தால் நடத்தப்படும் ஒவ்வொரு கூட்டங்களிலும் எனது அமர்வை தவறாமல் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.தொழிற்சங்க கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம் அதில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகளோடு எங்கள் வட்டார தோழர்கள் கலந்துரையாடிய முறை அங்கு பரிமாறப்பட்ட கருத்தாக்கங்கள் எல்லாமே எனக்கு வினோதமாகவும் அதேசமயம் விஷயம் செறிந்ததாகவும் இருக்கும்.அவர்களிடம் ஏதாவது கேள்விகள் கேட்டு எனது இருப்பை பதிவு செய்ய விரும்புவேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை அப்படி செய்யவிடாமல் தடுத்து விடும்....அது எனது தேவையற்ற கூச்சம் என்று நினைக்கிறேன்.

என்னுள் இருந்த அந்த கொஞ்ச நஞ்ச தயக்கங்களையும் களைந்து எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் தோழர்.சுந்தரவடிவேல் அவர்கள். அவர் அப்போது கீழக்கரை கிளையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். தொழிற்சங்கம் குறித்து எனக்குள் எழுந்த அத்துணை கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது.அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.அவரை உண்மையில் ஒரு ஆதர்ச நாயகனைப் போல் காணலானேன்.ஏனென்றால் அத்தனை கம்பீரமும்,உறுதியும் அவரிடம் உண்டு.தனக்கு தவறு என்று தோன்றினால் அதை தயங்காமல் தட்டிக்கேட்கும் துணிச்சலும் அவரிடம் உண்டு.

எங்கள் கிளையில் நீண்ட காலமாக சரி செய்யப்படாத கணக்குகளை சீர் செய்யும் பொருட்டு தோழர்.சுந்தரவடிவேல் அவர்களை எங்கள் கிளைக்கு தற்காலிக பணிமாற்றம் செய்தார்கள்.அவர் கணக்குகளில் இருந்த குழப்பங்களை மட்டும் அல்ல எனக்குள் தொழிற்சங்கம் குறித்து இருந்த சிறு சிறு குழப்பங்களையும் அந்த குறுகிய காலத்தில் சரி செய்தார்.

அந்த சமயத்தில் தான் எங்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் வைத்து நடைபெற்றது.அதுதான் எனது முதல் பொதுக்குழு கூட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் போராட்ட காலங்களை தவிர்த்து எங்கள் வங்கியின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் தோழர்கள் ஒன்றாக சங்கமிப்போம். ஒரு இரண்டு ஆண்டுகளில் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அசைபோட்டு விட்டும்... புதிய செயற்குழுவை தேர்ந்தெடுத்து விட்டும்... கலையும் சம்பரதாய கூட்டமல்ல அது.

அது எங்கள் குடும்ப விழா..... அங்கு வரும் தோழர்கள் தங்கள் கடந்தகால இனிமையான நினைவுகளை மீட்டெடுத்து அவர்கள் மேல் காலம் படர விட்ட முதுமையை களைந்து விட்டு புதிய பொலிவோடும், இளமையோடும் உற்சாகமாக இருக்கும் தருணங்கள் அவை. வேறு எந்த தொழிற்சங்கத்திற்கும் இல்லாத ஒரு பெருமை எங்கள் சங்கத்திற்கு உண்டு. அது கடைநிலை ஊழியர்,எழுத்தர்,அலுவலர் என்ற எந்த பாகுபாடும் எங்கள் தோழர்களுக்கு இடையில் கிடையாது. மேலாளரை கூட உரிமையுடன் பெயர் சொல்லியும்,உறவு சொல்லியும் அழைக்கும் எத்தனையோ கடைநிலை ஊழியர்களையும்,எழுத்தர்களையும் நான் கண்டதுண்டு. உத்தியோகத்தின் பெயர்களை தவிர வேறு எந்த பிரிவினையும் எங்களுக்கிடையில் இல்லை.

அந்த பொதுக்குழு கூட்டத்தின் வரவேற்பில் வருகை பதிவேடுடன் அமர்ந்திருந்தார் தோழர்.காமராஜ் (அடர்கருப்பு).நான் முதலில் அவரை எதிர்கொண்டவுடன் அவர் என் பெயரை கேட்டார்.நான்,”அண்டோ...”என்றேன்.அவர் விடாமல் முழுபெயரையும் சொல் என கொஞ்சம் குரலுயர்த்தினார்.நான் முறைப்பாக,”அண்டோ கால்பட்...”என்றேன்.அவர் உடனே சிரித்தபடி,”நீ கன்சோலா அக்கா மகன் தானே...நானும் உங்க அம்மாவும் ஒண்ணா வேலை பாத்திருக்கோம் தம்பி...எங்க அக்கா அவ....”என்று நிறுத்தியவரிடம்.நான் சமாதானமாக,”அப்படியா சார்...”என முடிப்பதற்குள்..”சார் என்ன சார்....மாமான்னு கூப்பிடு என அன்பு கட்டளையிட்டார்.அன்றுலிருந்து அவர் எனக்கு ’மாமா’மட்டும் தான்......

அங்கு நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் என் தாயின் பெயரை சொல்லி அறிமுகமாக துவங்கினேன்.அப்போது ஒவ்வொருவரும் என் அம்மாவின்... அவர்களது நினைவுகளையும் என் அம்மாவை பற்றிய தங்களது மேலான மதீப்பீடுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள துவங்கினர். அப்போது தான் நான் அவர்களுக்கு அந்நியமானவன் அல்ல என்பதை உணரத்துவங்கினேன்.

நான் அந்த பொதுக்குழுவிற்கு சென்றதற்கு மேலும் ஒரு முக்கியமான காரணம்....எப்படியாவது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கத்தை சந்தித்து எனது சொந்த ஊருக்கு பணிமாறுதல் வாங்கித்தர உதவி கேட்பதற்கே.அவரை அதற்கு முன் எனது பணிநியமனத்தின் போதும்...ஓரிரு முறை இராமநாதபுர மாவட்டத்தில் வைத்து நடைபெற்ற எங்கள் சங்க கூட்டங்களிலுமே சந்தித்திருந்தேன். அந்த சந்திப்புகளின் போது அவர் என் தோள் தட்டி நலம் விசாரிப்பார் ஆனால் என் பதிலுக்கு கூட காத்திராமல் அடத்தவரிடம் சென்றிடுவார்.அதனால் அவரை எப்படியாவது பொதுக்குழுவில் வைத்து பிடித்துவிட வேண்டும் என தீர்மானித்து சென்றிருந்தேன்.

அவரோ என்னிடம் சிக்குவதாய் இல்லை. ஏதோ கால்களில் இறக்கை முழைத்தவர் போல் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தார். ஒருவழியாக தோழர்.முருகானந்தம் அவர்களின் உதவியோடு அவரை பிடித்தேன். அவரோ,”இன்னும் கல்யாணம் கூட ஆகல தானே... இன்னும் கொஞ்ச நாள் அங்க இருக்கலாமே....”என இடியை இறக்கினார். நான் என் குடும்ப நிலையையும் என்னோடு இராமநாதபுரத்தில் தங்கியிருந்த எனது தாத்தா,பாட்டியின் உடல் நிலைகுறித்தும் விவரித்து எனது பணிமாறுதலுக்கான அவசியத்தை எடுத்துச் சொன்னேன்.உடனே அவரும் உறுதியளித்தார். நான் அதற்கு ’நன்றி’ சொல்வதற்கு முன் வழக்கம் போல் மறைந்துவிட்டார்!!!!!

ஒருவழியாக பொதுக்குழு ஆரம்பமானது. தலைவர்களின் உரை...தீர்மானங்கள்....பொதுச்செயலாளர் அறிக்கை...அதன் மேல் விவாதங்கள்....பொதுச்செயலாளரின் பதில்கள்.....புதிய செயற்குழுவின் தேர்வு....என அங்கு நடந்தேறிய எல்லாமே எனக்கு புதிய விஷயங்கள் தான்.”தொழிற்சங்கம்” என்பது தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்ட சுயநல கூடாரமல்ல என்பதை நான் அநூபவ பூர்வமாக அன்று உணர்ந்தேன். தொழிற்சங்கத்தின் வேர்களை நோக்கி எனது பார்வையை செலுத்த வைத்த அற்புதமான வைபவம் அது.அதன் ஒவ்வொரு நினைவுகளும் இன்றும் என்னுள் பசுமையாக மலர்கிறது.....


தொடரும்..................

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

"தோழர்" ஆனேன்....


“தொழிற்சங்கம்” என்ற வார்த்தையே தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒன்றுதான்.ஆறு வருடங்களுக்கு முன்பு நானும் அவர்களில் ஒருவராகத்தான் இருந்தேன்.என் தாயின் திடீர் மரணம்....எனது அப்போதைய குடும்பச் சூழல் எல்லாம் சேர்ந்து எனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு என்னை எனது தாயின் வங்கிப்பணியை வாரிசு உரிமை அடிப்படையில் ஏற்கச் செய்தது.

என்னை இராமநாதபுர மாவட்டத்தில் இருக்கும் இரகுநாதபுரம் என்னும் ஊரில் உள்ள எங்கள் வங்கி(பாண்டியன் கிராம வங்கி) கிளைக்கு ’எழுத்தராக’ பணிநியமனம் செய்தார்கள்.அங்கு எங்களது சங்கத்தின் (பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்) அப்போதைய உதவி பொதுச்செயலாராக இருந்த தோழர்.முருகானந்தம் அவர்கள் காசாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.அவரிடமிருந்து தான் எனது தொழிற்சங்க வாழ்வின் அகரம் ஆரம்பமானது.

அதுவரை நான் கேட்டறிந்தது எல்லாம் ஒரு வங்கி கிளையில் மேலாளர் என்பவர் சர்வ அதிகாரம் படைத்தவர். அவர் நினைத்தால் அந்த கிளையின் ஊழியர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் அவர் சொல்படி கேட்டு அவரது விருப்பபடி நடந்தால் மட்டுமே என் போன்ற ஊழியர்களின் வேலை தப்பும்.அதற்கு மாறாக தொழிற்சங்கத்தில் இணைந்தால் அவர்கள் நம்மை காரணமில்லாமல் போராட செய்து மேலாளரின் கோபத்திற்கும், நிர்வாகத்தின் கோபத்திற்கும் நம்மை ஆளாக்கி நமது வேலையை இழக்கும்படி செய்துவிடுவார்கள் என்பதுமே ஆரம்பத்தில் எனக்கு தொழிற்சங்கம் குறித்த கேள்விஞானமாக இருந்து வந்தது.

ஆனால் தோழர்.முருகானந்தம் அவர்களிடம் எங்கள் கிளைமேலாளர் மட்டுமல்லாமல் அப்போதைய இராமநாதபுர வட்டாரமேலாளரே நடந்து கொள்ளும் விதம் எனக்கு பெரும் வியப்பளித்தது.ஒரு சாதாரண காசாளருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ஒரு வட்டார மேலாளரே தனது வட்டார ஆளுமையின் கீழ் இயங்கும் வங்கிகள் குறித்தும் நிர்வாகத்தால் தனக்கு இடப்பட்டிருக்கும் முக்கிய உத்தரவுகள் குறித்துமான தனது அன்றாட நிகழ்வுகளை ஏன் இவ்வளவு சிரத்தையுடன் ஒரு காசாளரிடம் பகிர்ந்து கொள்கிறார்?என்பன போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தது.

எனது அத்தனை கேள்விகளுக்கும் அவர் ஒரு “தொழிற்சங்க தலைவர்” என்ற பதிலே எனக்கு கிடைத்தது.”தொழிற்சங்கம்” குறித்தான எனது பயங்களும்,தவறான புரிதல்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.தயக்கங்கள் களைந்து தொழிற்சங்கம் என்னும் மாபெரும் விருட்சத்தின் விழுதுகள் நோக்கி எனது கைகள் நீள துவங்கின.தோழமையுடனும்,வாஞ்சையுடனும் இராமநாதபுர வட்டார தோழர்கள் என்னுள் நெருக்கம் பிடித்தனர்.மெல்ல மெல்ல அவர்கள் கைப்பிடித்து நான் தொழிற்சங்க கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.அப்போது எனக்கு அது ஒரு புதுவிதமான அநூபவமாக இருந்தது.

மாபெரும் தொழிற்சங்க பாரம்பரியமும்,சளைக்காத உழைப்புக்கும் கொண்ட எங்கள் சங்கத்தின் பெரும்பான்மையான தோழர்களுக்கும் எனக்கும் ஒரு தலைமுறையின் இடைவெளி உண்டு.ஆனால் அவர்கள் என்னிடம் பாராட்டிய தோழமையை என் சக வயதினரிடம் கூட நான் அதுவரை கண்டதில்லை.என் தாயின் திடீர் மரணத்தால் எனக்குள் ஏற்பட்டிருந்த ரணத்திற்கு அவர்களது தோழமையே சிறு மாறுதலை தருவித்தது.

எங்கள் வங்கியின் நிர்வாகம் எப்போதெல்லாம் ஊழியர் விரோத நடவடிக்கையில் இறங்கியதோ அப்போதெல்லாம் சங்க நிர்வாகிகளின் தலைமையில் எங்கள் வட்டார(இராமநாதபுரம்) தோழர்களும் நிர்வாகத்திற்கு எதிராக களம் கண்டனர்.”பயம்” என்ற சொல்லை கூட கேட்டறியாதவர்களை போல் அவர்கள் வீதியில் இறங்கி செய்யும் முழக்கங்கள் என்னை மட்டுமல்ல விண்ணையும் அசைப்பதாய் இருக்கும்.முதலில் அவர்களோடு வீதியில் இறங்கி கோஷமிடுவதற்கு எனக்கு கொஞ்சம் கூச்சமாக கூட இருந்தது.ஆனால் அவர்களது போராட்டத்தின் வீச்சும் அதை உறுதியோடு அவர்கள் முழங்கிய விதமும் என்னையும் அறியாமல் எனது குரலை அவர்களோடு உயர செய்தது.நரம்பு புடைக்க நமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புது இரத்தம் பாய்வதை நாம் உணரலாம்.நான் உணர்ந்தேன்....!

........தொடரும்

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சரித்திரத் தேர்ச்சி கொள்....


”நம் பள்ளிக்கூடங்களில் உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது. சரித்திர பாடம் கற்றுக் கொடுப்பதன் நோக்கம்,சில தேதிகளையும் சம்பவங்களையும் மாணவர்கள் உருப்போட்டு மனப்பாடம் செய்ய வேண்டுமென்பதல்ல. ஒரு தளபதியோ அல்லது வேறொருவரோ பிறந்த தினம்,ஒரு மன்னரின் பட்டாபிஷேக நாளை அறிந்து கொள்வதில் மாணவர்களுக்கு என்ன சிரத்தையிருக்க முடியும்? அவை அவ்வளவு முக்கியமான விஷயங்களா? சரித்திரப் பிரசித்தமான சம்பவங்களுக்கு காரணங்களையும்,அச்சம்பவங்களை உருவாக்கிய சக்திகளையும் ஆராய்ந்தறியும்படி செய்வதுதான் சரித்திர பாடத்தின் தத்துவம்....”- ’மெய்ன் காம்ப்’(எனது போராட்டம்) என்னும் தனது சுயசரிதையில் அடால்பு ஹிட்லர்

”சரித்திரத் தேர்ச்சி கொள்”
என்கிறான் பாரதி. அவன் சரித்திரத்தை தெரிந்து கொள் என சொல்லவில்லை.மாறாக தேர்ச்சி கொள் என்கிறான். ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது என்பது கற்றலின் தொடக்கம் அதுவே தேர்ச்சி கொள்வது என்பது கற்றலின் உச்சம். தேர்ச்சி கொள்ளுதல் என்றால் திறம்பட வினாக்களுக்கு விடையளித்தல் என பொருள் கொள்ளுதல் கூடாது.ஒன்றை நடுநிலையுடன் ஆராய்ந்து கசடற கற்று அதை திறம்பட கையாளுதலே தேர்ச்சியாகும்.

சரி! இன்றைய காலகட்டத்தில் சரித்திரத் தேர்ச்சி அவ்வளவு அவசியமான ஒன்றா?

இன்றைய சமூகத்தில் சரித்திர பாடத்திட்டம் ஏட்டு சுரக்காயாகவே பார்க்கப்படுகிறது. பிந்தைய தலைமுறையினருக்காக தங்களது இளமையையும்,வாழ்வையும் தொலைத்த வீர புருஷர்களின் சரித்திரங்கள் தெரிந்து கொள்ளாததால் தான் இன்றைய இளைய தலைமுறையினர் அரசியலை அருவருக்க தகுந்த ஒன்றாக பார்கிறார்கள். அதனால்தான் இன்று கண்ட கண்ட தரித்திரங்களையெல்லாம் தலையில் வைத்து தலைவனாக கொண்டாடும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் மாறிப்போய்யுள்ளனர்.

சரித்திரங்கள் முலமாக தான் வெற்றிக்கான வழிகளையும்,தோல்விக்கான காரணங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும்!

மனிதர்களாகிய நாம் சமூக மிருகங்களே! இந்த சமூக அமைப்பை சாராமல் வனங்களில் கூட இன்று தனித்து வாழ முடியாது. அப்படி இருக்கும் போது இந்த சமூகத்தின் கட்டுமானங்களை தெரிந்து கொள்ளாமல் வாழ முயற்சிப்பது எவ்வளவு அபத்தம்?நாம் சார்ந்த சமூகத்தில் இன்று நாம் அனுபவித்து வரும் ஒவ்வொரு சலுகைக்கும் ஒரு வரலாறு உண்டு.

ஆனால் இது எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் நாம் நம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டு சுயநலமாய் வாழ்ந்து மடிவது நியாயமாகுமா?

முந்தைய சரித்திரங்களிலிருந்து பாடங்கள் படிக்காத எத்தனையோ இனக்குழுக்களும்,பேரரசுகளும்கூட இருந்த தடம் தெரியாமல் அழிந்து போன வரலாறுகள் ஏராளம் இங்குண்டு.

இதற்கு மிக சமீபத்தில் நாம் கண்கூடாக பார்த்த ஒரு மிகச் சிறந்த உதாரணம் இலங்கை......

விடுதலை புலிகளின் கிளர்ச்சி இலங்கை வரலாற்றில் நிச்சயம் ஒரு சகாப்தம் தான். ஆம்! வரலாற்றின் பாடமும் அதுதான். அது ஒரு சகாப்தம் மட்டுமே!(சகாப்தம்-ஒரு காலப்பகுதி). அது ஒரு நீண்ட கால தீர்வல்ல. ஆயுத முனையில் பெறப்படும் எந்த ஒரு பிரிவினையும் நிலைத்ததல்ல என்பதே சரித்திரம் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் பாடம். உலகின் ”வெற்றிகரமான” பிரிவினைகள் எல்லாம் அரசியல் மூலமாய் வலிகளுடன் ”அமைதியாய்” ஏற்பட்டவையே! (உதாரணம் இந்தியா-பாகிஸ்தான்.)

அமெரிக்க கறுப்பின புரட்சி என்பது இலங்கை தமிழர் பிரச்சனையை காட்டிலும் நீண்ட கால வரலாறு கொண்டது.தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல கறுப்பினத்தின் வலிகள்.கறுப்பின தோழர்கள் பல நூற்றாண்டுகளாய் சிந்திய இரத்தம் பசிபிக் பெருங்கடலை விட அடர்த்தியானது.

இன்று வெள்ளை மாளிகையின் அதிபராக ஒரு கறுப்பின பிரதிநிதி கொலுவேறி இருப்பதற்கு காரணம் அங்கு மால்கம் எக்ஸ் போன்றவர்கள் ஆயுதம் அளித்த அதேவேளையில் மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் மக்களுக்கு அரசியலையும் வழங்கினார்கள்.

அமெரிக்க கறுப்பின போராட்டங்களின் வெற்றி என்பது ஏதோ ஒரு நூற்றாண்டின் போராட்ட வெற்றியல்ல.நூற்றாண்டுகால அடிமைதழைகளை ஒரு தலைமுறை போராட்டத்திலே வேரோடு களைந்திட முடியும் என நினைப்பது கடல்நீரை கையால் அள்ளி இடம்மாற்றிடலாம் என எண்ணுவது போலாகும்.

விடுதலை புலிகளின் விழ்ச்சி என்பது அவர்கள் முந்தைய சரித்திரங்களில் இருந்து பாடங்களை ஏற்காமல் இயக்கம் வேறாகவும் மக்கள் வேறாகவும் கடைசிவரை தனித்து அல்லது வேறுபட்டு இருந்ததேயாகும். எந்த ஒரு போராட்டமும் அது முழுமையான மக்கள் இயக்கமாக மாறாமல் வெற்றி அடைந்தது இல்லை என்பதே வரலாறு. ஆனால் விடுதலை புலிகள் இயக்கமோ வீட்டுக்கு ஒருவருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய அதேவேளையில் மற்றவர்களுக்கு அரசியல் பயிற்சியும் வழங்கி இருந்தால் இன்று நிச்சயம் இந்த வீழ்ச்சி தவிற்க பட்டிருக்கும்.

அதேசமயம் புலிகள் தரப்பு அந்தந்த காலகட்டங்களில் ஏற்படவிருந்த அமைதி ஒப்பந்தங்களில் இருந்த பாதகமான அம்சங்களுக்காக அவர்களுக்கு கிடைக்கவிருந்த சிறுசிறு வெற்றிகளையும் தங்களது இறுதி இலக்கிற்காக(தமிழீழம்) புறந்தள்ளியதும் இந்த வீழ்ச்சிக்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்று.

எந்த ஒரு போராட்ட வடிவத்தாலும் நேரடியாக நமது இறுதி இலக்கை அடைந்துவிட முடியாது. சிறுசிறு போராட்டங்கள் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் தற்காலிக ஒப்பந்தங்கள்.... அந்த ஒப்பந்தங்களின் சாதகமான அம்சங்களை போராட்டத்தின் வெற்றியாகவும்,பாதகமான விஷயங்களை அடுத்தகட்ட போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாகவும் மாற்றி... மீண்டும் போராட்டங்கள்.... அதை தொடர்ந்து வரும் சிறுசிறு வெற்றிகளின் மூலமாகவுமே இறுதி இலக்கை அடைந்திட முடியும்.

தோழர்களே!

வரலாறு என்பது காலக்கண்ணாடி. நமது இன்றைய நிலையை அதன் முன் நிறுத்தி ஒப்பீட்டு பார்த்தால் அது நமக்கான பாதையை மிக தெளிவாக காட்டும். நமது தவறுகளை அதை பார்த்து களைந்து விட்டு நம்பிக்கையோடு நமது போராட்ட பயணத்தை தொடர்ந்தால் இன்றைய நிலையும் மாறும். நாளைய வரலாறும் நமதாகும். ஆதலினால் சரித்திரத் தேர்ச்சி கொள்வீர்!

திங்கள், 18 ஜனவரி, 2010

என் கவிதையின் கதை....


கவிதை எழுத வேண்டும்....
சரி! எதைபற்றி எழுதலாம்

‘காதல்..’வேண்டாம்! வேண்டாம்!
காகிதங்களே வெட்கும் அளவிற்கு
காதலித்துவிட்டார்கள்

‘இயற்கை..’வேண்டாம்! வேண்டாம்!
காலம்காலமாய் கவித்து அதையும்
காலாவதியாக்கிவிட்டார்கள்.

சரி! வேறு எதைப்பற்றி எழுத...

கவிதைக்கான கருவை யோசித்து
கண்கள் அயர்ந்தன...வார்த்தைகளை
தர மறுத்து தமிழும் என்னை
தனிமைபடுத்தியது.

நிலம் வாழும் மீனைப்போல்
என் நிலையானது.
கவிதை எழுத எடுத்த
காகிதமோ...
நான் வைத்த ‘ஒற்றை’ புள்ளியுடன்
என்னை கேலி செய்தது.

இயலாமை கோபமானது....
பேனாவையும்,காகிதத்தையும்
வீசி எறிந்தேன்!
கண்கள் மூடினேன்!
தூக்கம் பிடிக்கவில்லை.

திடீரென்று காற்றின் தாளம்
என் ஜன்னலில் கேட்டது
ஜன்னல் திறந்தேன்....

அங்கோ....

முகிலினங்கள் மாரியாய் மாறி
மண்ணை முத்தமிட்டு கொண்டிருந்தது...

இரை தேடிச் சென்ற எறும்பொன்று
மழையோடு போராடி
இரையோடு சுவரேறி கொண்டிருந்தது....

எனக்குள் ஏதோ ஒரு வெளிச்சம்!!!!

வேகவேகமாய் சென்று வீசியெறிந்த
பேனாவையும்,காகிதத்தையும்
கையிலெடுத்தேன்!

இப்போது....
அந்த ‘ஒற்றை’ புள்ளி....
“கவிதை எழுத வேண்டும்...”
என உருமாற துவங்கியது.

சனி, 9 ஜனவரி, 2010

படிங்க....சிரிங்க...


கீழ் கண்டவைகள் படிப்பதற்கும்....சிரிப்பதற்கும் மட்டுமே!!!!!!!!! சமீபத்தில் எனக்கு வந்த ஒரு சில குறுஞ்செய்திகளின் தமிழாக்கத்தை நீங்கள் சிரிப்பதற்கு மட்டுமே தருகிறேன்.அநூபவித்து சிரியுங்கள்.....ஆராய்ச்சிகள் வேண்டாம்!!!!!!!!

****மனைவி: என்னங்க...! முதல்ல நம்ம கார் டிரைவரை(driver) வேலையை விட்டு நிறுத்துங்க.அவன் கார் ஓட்டுறேன் சொல்லி என்னை இரண்டு தடவ கொலை பண்ணப் பாத்துட்டான்...

கணவன்: சரி விடுமா! அவனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்....

****வங்கியில் கொள்ளையடிக்க வந்த திருடன் ஒருவன் வாடிக்கையாளர்களை நோக்கி,”இங்க நான் திருடுனதை யாராவது பாத்ததா சொன்னீங்க உங்கள கொன்னுடுவேன்...” என்று மிரட்டியபடி வாடிக்கையாளர் ஒருவரை பார்த்து,”ஏய்! நான் திருடுனதை நீ பாத்ததா சொல்லுவியா...?”

வாடிக்கையாளர்:”நான் சொல்ல மாட்டேன் ஆனா பயந்து போய் எம் பொண்டாட்டி சொன்னாலும் சொல்லுவா...”

****ரங்கா:”நீ ஏன் லாரிய பாத்தாலே பயப்படுற?”

சங்கர்:”நீ வேற...போன மாசம் எம் பொண்டாட்டிய ஒரு லாரி டிரைவர் கடத்திட்டு போயிட்டான்.எங்க அவன் திரும்பி வந்து எம்பொண்டாட்டிய எங்கிட்டயே விட்டிட்டு போயிருவானொன்னு ஒரே பயம்மா இருக்கு...அதான்...”

****ராஜா நடுராத்திரியில் எழுந்து தன் மனைவியிடம் கேட்டான்,”ஏம்மா! கொஞ்சம் கொஞ்சமா வலிய அனுபவிச்சு சாவுறது நல்லதா இல்ல...பட்டுன்னு போயிடுறது நல்லதா...?”

மனைவி:”சாவுன்னா பட்டுனு போயிடனுமுங்க...”

ராஜா:”அப்ப சரி நீ உன் இன்னொரு காலையும் தூக்கி எம்மேல போடு....”

****மனைவி:”ஏங்க! எப்படி உங்களால மட்டும் கவலையே இல்லாம இருக்க முடியுது...?”

கணவன்:”நான் எப்ப பிரச்சனை வந்தாலும் உன்னை நினைச்சுப்பன் எங்கவலை எல்லாம் பறந்து போயிடும்.”

மனைவி:”எம்மேல அவ்வளவு பிரியமா உங்களுக்கு...?”

கணவன்:”அதெல்லாம் ஒண்ணுமில்ல...உன்னவிட வாழ்க்கையில என்ன பெரிய பிரச்சனை எனக்கு வந்திட போவுதுன்னு நினைச்சுப்பேன்...”

****மனைவி:என்னங்க...! நான் இந்த சாமி படத்துக்கு பின்னால பத்திரமா வச்சிருந்த நூறு ருபாய எடுத்து என்ன செஞ்சீங்க?

கணவன்:அத எடுத்து எனக்கு ஒரு ஜட்டி வாங்குனேன் இது தப்பா?

மனைவி:இப்படித்தான் நீங்க எப்பவும் ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் செலவு செஞ்சு வைப்பீங்க....

கணவன்:..........???

****நீங்க எப்படி உங்க கணவரை இத்தனை பேருக்கு மத்தியில இந்த கப்பல்ல கண்டுபிடிச்சீங்க???

மனைவி:ரொம்ப சுலபம்ங்க!!! அந்த வெண்ண மட்டும்தான் முதுகுக்கு பின்னால பேராசூட் கட்டி இருந்துச்சு!!!!!

****டிராபிக் போலிஸ்:ஏம்பா!!! உன் பொண்டாட்டி உன் பைக்கில இருந்து விழுந்தது கூட தெரியாமலா வண்டி ஓட்டின?

கணவன்:அடக் கடவுளே!!!! எனக்கு தான் திடீர்ன்னு காது கேட்காம போயிருச்சோன்னு நினைச்சேன்!!!!

****மனைவி:நேற்று கூட்டத்துல உங்க பேச்சு ரொம்ப நல்லா இருந்துச்சுங்க...

தலைவர்:நான் நல்லா பேசி என்ன செய்ய அங்க வந்திருந்தவனுங்க எல்லாம்
முட்டாப்பயலுகளால்ல இருந்தானுங்க..

மனைவி: ஓ!!! அதான் என் அருமை உடன்பிறப்புகளே-ன்னு உங்க பேச்சை ஆரம்பிச்சீங்களோ!!!!!!

தலைவர்:..........!!!!!!!!!!!!!!!!!!!!

****ஜக்கு:ஏண்டா எப்பவுமே கல்யாண போட்டோல ஆம்பளைங்க வலது பக்கமாவும் பொம்பளைங்க இடது பக்கமுமாகவே இருக்குறாங்க????????

பப்பு:அது ஒண்ணுமில்லடா...வரவு செலவு நோட்டுல சொத்துக்கள் வலது பக்கமாவும் செலவினங்கள் எப்பவும் இடது பக்கமாவும் இருக்குறதில்லையா அது மாதிரி தான்....

****தோழி 1:ஏண்டி உன் இரண்டு புள்ளைகளுக்கும் ஒரே பெயரை வச்சிருக்கியே உனக்கு கூப்பிடுறதுக்கு கஷ்டமா இல்லை?????

தோழி 2:இதுல என்ன கஷ்டம் அதான் இரண்டு பேருக்கும் வேற வேற இன்ஷியல் வச்சிருக்கேனே!!!!!!

சனி, 2 ஜனவரி, 2010

அக்கினிக் குஞ்சுகள்....


எங்கள் தொழிற்சங்க வாழ்வின் முக்கியமான அத்தியாயங்கள் எங்கள் வங்கி(பாண்டியன் கிராம வங்கி) நிர்வாகத்தின் உதவியால் வரையபட்டுக்கொண்டிருக்கிறது......

நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு பெயர் நிர்வாகம்.சரி! நிர்மூலமாக்குவதற்கு என்ன பெயர்....? தெரிந்து கொள்ள வேண்டுமா?அகராதியை தேடி ஓட வேண்டாம்.வாருங்கள்...! விருதுநகரில் உள்ள எங்கள் வங்கியின்(பாண்டியன் கிராம வங்கி) தலைமை அலுவலகத்திற்கு....

“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்பது சாத்திரமாகும்” என்று சொல்வார்கள்.இப்போது எங்கள் வங்கியில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.தனிமனித சர்வாதிகாரத்தால் பொதுத்துறை நிறுவனமான எங்கள் வங்கி வீழ்ச்சி பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக எல்லா வங்கித்தலைவர்களும் வங்கியின் வணிகம் குறித்தும்,வளர்ச்சி விகிதம் குறித்தும் ஒப்பந்தமிட்டு பணியாற்றுவர்.ஆனால் எங்கள் வங்கியின் நிர்வாகியோ ஊழியர் விரோத போக்கை அதிகரிப்பது குறித்தும்,தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவது குறித்தும் ஒப்பந்தமிட்டு உழைத்து வருகிறார்.

தோழர்களே! சுமார் இருபத்தி ஆறு மாதங்களுக்கு முன்னால் எங்கள் வங்கியின் சேர்மேனாக(CHAIRMAN) எங்கள் தாய் வங்கியான ஐ.ஓ.பியால் அவர் நியமிக்கப்பட்டார்.அவர் ஒரு பட்டியலின சமூகத்தை சார்ந்தவர்.அப்போது எங்கள் வங்கியில் ஒரு பார்ப்பனர் சேர்மேனாக இருந்தார்.அவருக்கோ எங்கள் வங்கியின் சேர்மேன் நாற்காலியை காலி செய்வதில் துளியும் விருப்பம் இருக்கவில்லை.புதிதாக நியமிக்கப்பட்ட இப்போதைய எங்கள் சேர்மேனுக்கோ அப்போது இருக்கைகள் கூட ஒதுக்கப்படவில்லை.

ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட தொழிற்சங்கமாதலால் எங்களால் இந்த கொடுமையை காண சகியாமல் இப்போதைய சேர்மேனுக்காக நாங்கள் போரட்ட களம் கண்டோம்.அப்போது அவருக்காக எங்கள் நிர்வாக அலுவலகம் முன்பாக எங்கள் ஊழியர்களையும் தோழமை சங்கங்களையும் ஒன்றிணைத்து ஓரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினோம்.

அதன்விளைவாக எங்கள் தாய் வங்கியும் ஒரு மாபெரும் பதட்டத்தை தவிற்கும் விதமாக அப்போதைய சேர்மனை உடனே திருப்பி அழைத்துக்கொண்டது.மாபெரும் போராட்டத்தின் விளைவாக எங்கள் வங்கி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பட்டியலினத்தவர் சேர்மேனாக பொறுப்பேற்றார்.

ஒரு சில மாதங்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி வங்கிப் பணிகள் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது.அப்போது ஊழியர்கள் சார்பாக சில கோரிக்கைகளை கொண்டு நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.பேச்சுவார்த்தையும் சுமூகமாகவே இருந்தது.எங்கள் கோரிக்கைகளில் சிலவற்றை உடனே நிறைவேற்றி தருவதாகவும்,சிலவற்றை எங்கள் தாய் வங்கியிடம் அனுமதி பெற்று நிறைவேற்றி தருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.ஆனால் அவர் அனைத்தையுமே ஒப்புக்குத்தான் ஒப்புக்கொண்டாரே ஒழிய அவர் அதில் எதையும் நிறைவேற்றவில்லை.

நாங்கள் தொடர்ந்து நினைவுபடுத்தும் போதும்,வலியுறுத்தும் போதும் அப்போதைக் அப்போது தலையாட்டுவாரே ஒழிய அவர் எதையும் நிறைவேற்றவில்லை.அதேவேளையில் சாமர்த்தியமாக காலம் தாழ்த்தியும் வந்தார்.ஒரு கட்டத்தில் எங்கள் பொறுமை எல்லையை கடந்தது.நாங்கள் போராட்ட களம் புகுவதை தவிற்க முடியாமல் போகும் என நிர்வாகத்தை எச்சரித்தோம்.அவர் தனது சுயரூபத்தை மெல்லமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்.எந்த அவசியமும் இல்லாமல் தொழிற்சங்க தலைவர்களை டிரான்ஸ்பர் என்ற பெயரில் பந்தாடினார்.நாங்கள் வேறு வழியின்றி போராட்ட களம் கண்டோம்.அதன் விளைவாக நிர்வாகம் பணிந்தது.எங்கள் போராட்டம் வென்றது.

இப்படியாக நிர்வாகம் அப்போதைக்கு அப்போது முருங்கை மரம் ஏறுவதும் நாங்கள் அதை போராட்டத்தின் மூலமாக இறக்குவதும் தொடர்கதையானது.இதற்கிடையில் நாங்கள் எங்கள் வங்கியில் பணிபுரியும் நிரந்தரமாக்கப் படாத தோழர்களுக்காக போராட்டங்கள் நடத்தினோம்.அந்த மாபெரும் போராட்டங்களையும்,அதன் அவசியத்தையும் விளக்கி நானும்,தோழர்.காமராஜ்(அடர் கருப்பு) அவர்களும் எழுதிய கட்டுரைகளுக்காக வங்கி நிர்வாகத்தால் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டோம்.அதை காணச் சகியாத எங்கள் தோழர்களும்,வங்கி சார்பற்ற மற்ற தொழிற்சங்கங்களும் எங்களுக்காக போராட்ட களம் கண்டார்கள்.அதன் விளைவாக மூன்றே நாட்களில் நாங்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டோம்.எங்கள் போராட்டம் மீண்டும் வென்றது.

இப்போது ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்த சேர்மேன் பல கிளைகளுக்கு போன் செய்து அந்தந்த கிளை மேலாளர்களை தனது அதிகார மமதையால் மிகவும் மோசமான முறையில் வசைபாடியுள்ளார்.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வங்கியின் வளர்ச்சியை தவிற வேறு எதையும் அறிந்திராத உழைப்பின் சின்னங்கள் அவர்கள்.இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் எங்கள் வங்கியின் மொத்த வணிகமே ஒரு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.ஆனால் இன்றோ மொத்த வணிகம் 3000கோடி ரூபாய்க்கும் மேல் ஆகிவட்டது.ஆனால் இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இப்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை குறைவானதே!

அதற்கு காரணம்.....

எங்கள் வங்கியின் வளர்ச்சிக்காக தங்களது உடல்நலனைப் பற்றியோ அல்லது நேரத்தைப் பற்றியோ சிறிதும் கவலைபடாமல் உழைத்ததால் இன்று எங்கள் வங்கியிலிருந்து முறைப்படி பணிமூப்பு அடைந்து சென்றவர்களை காட்டிலும் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம்.(அப்படி உயிர் நீத்தவர்களில் என் தாயாரும் ஒருவர்! என்பது என் பெருமிதம்).வங்கியின் வளர்ச்சியும் தங்கள் வளர்ச்சியும் வேறு வேறானதாக பிரித்தரியாத உழைப்பின் சிகரங்களால் உருவாக்கப்பட்ட வளர்ச்சி இது.அப்படிப்பட்டவர்களைத் தான் இந்த சேர்மேன் “வேலையை ராஜினாமா செய்து விட்டு போ...”என தடித்த திமிர் மிகுந்த வார்த்தைகளை கொண்டு பரிகாசம் செய்துள்ளார்.

அதேபோல் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட பெண் தோழர் ஒருவருக்கு அவரது சொந்த மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறையால் இயங்க முடியாமல் இயங்கி வரும் எங்கள் வங்கியின் கிளை ஒன்றிற்கு பணி மாறுதல் கேட்டோம்.(அவர் புதிதாக திருமணம் ஆனவரும் கூட.)அதற்கு இந்த சேர்மேன் சொன்ன வார்த்தைகள்...”இப்ப ஊர் பக்கத்துல மாறுதல் கேப்பீங்க அந்தப் பொண்ணு போய் அவ புருஷன் கூட சேர்ந்து வாழும்,பிறகு மெட்டர்னிட்டி லீவ்(maternity leave) கேப்பீங்க இது தேவையா..?”என்றார்.

அதேபோல் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு பெண் தோழர் நிறைமாத கர்ப்பினியாக இருந்தார்.அவருக்கு கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிளைக்கு பணி மாறுதல் வழங்கினார்.அதற்கு அந்த பெண் தோழர் தான் பிள்ளையை பெற்றெடுத்த பிறகு அந்த கிளைக்கு செல்வதாகவும் அதுவரை தான் தற்போது பணிபுரியும் கிளையிலேயே பணிபுரிய அனுமதி வழங்க கோரி கேட்டார்.ஆனால் இந்த சேர்மேனோ எந்தவித இரக்கமும் இல்லாமல் அதை நிராகரித்து விட்டார்.அதனால் இப்போது அந்தப் பெண்ணின் கருகலைந்துவிட்டது.ஆனாலும் இன்றுவரை அந்தப் பணிமாறுதலை நிர்வாகம் திரும்ப பெறவில்லை.

மேலும் தொழிற்சங்க தலைவர்களோடு பேச்சு வார்த்தையின் போது அவர் வங்கி ஊழியர்களை thick skinned people என குறிப்பிட்டுள்ளார்.அதாவது ”எருமைமாடுகள்” என்று.
.
தோழர்களே!

சுயமரியாதைக்காக மானம் போற்றும் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டும்,நடத்தப்பட்டும் வரும் தொழிற்சங்கத்தால் எப்படி இந்த அக்கிரமங்களையும்,ஆணவத்தையும் கண்டு அமைதிகாக்க முடியுமா?இப்படி குறைந்த பட்ச மனித மாண்புகளே இல்லாமல் ஊழியர்களை ஏதோ ”மாக்கள்” போல் கருதி வருபவருக்கு எதிராக ஒன்று திரண்டோம்! போராட்ட களம் புகுந்தோம்!

PGBEA-PGBOU-PGBOA(PANDYAN GRAMA BANK- Employees Association-Officers Union-Officers Association) என்ற எங்கள் வங்கியின் பெரும்பான்மை ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் கூடி எங்கள் சுயமரியாதைக்காகவும், நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராகவும் இந்த நிர்வாகத்தை கண்டித்து “நெல்லை பிரகடனம்” ஒன்றை அறிவித்தோம்.அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பம்மாயின......

முதற்கட்டமாக 30/11/09 முதல் 04/12/09 வரை எங்கள் தலைமை அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் கண்டோம்.மாபெரும் எழுச்சி மிக்க துவக்கத்தை அது தந்தது.ஆம் தோழர்களே! எங்கள் வங்கியின் பெரும்பான்மை ஊழியர்களின் சராசரி வயது ஐம்பதுக்கும் மேல்.உடலளவில் ரத்தகொதிப்பு முதல் சர்க்கரை நோய்வரை பல உடற்கோளாறுகள் இருந்த போதிலும் தோழர்கள் கொஞ்சமும் தயக்கமின்றி மிகுந்த உற்சாகத்தோடு பட்டினிப் போராட்டம் கொண்டது என் போன்ற இளம் தலைமுறையினருக்கு “தொழிற்சங்கம்” என்ற மந்திரச் சொல்லின் வீரியத்தை உணர்த்துவதாய் அமைந்தது.

அந்தப் பேரெழுச்சியோடு அடுத்த கட்ட போராட்டங்களுக்கான திட்டமிடல்களோடு எங்கள் தொழிற்சங்கங்கள் பயனித்து கொண்டிருந்த போது எங்கள் தோழமை சங்கத்தின் தலைவர் ஒருவரை(தோழர்.முத்துவிஜயன்) எந்தவித விளக்கமும் இன்றி இடைக்கால பணிநீக்கம் செய்து தனது பழிவாங்கல் நடவடிக்கைகளை துவக்கி வைத்தது எங்கள் நிர்வாகம்.அந்த சமயத்தில் தான் தாய்வங்கியான ஐ.ஓ.பி-யின் பொதுமேலாளர்களில் ஒருவர் எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.அவர் எங்கள் வங்கியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களையும் சந்திக்க விரும்புவதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.நாங்கள் சென்றோம்.எங்கள் குறைகளை கேட்டார்.நம்பிக்கை அளித்தார்.எங்களது சேர்மேனோடு மறுதினம் பேச்சுவார்த்தை நடத்த அனுமதியும் வாங்கி தந்தார்.

நம்பிக்கையோடு சென்ற தலைவர்களை கொஞ்சமும் நாகரீகமின்றி பேச்சுவார்த்தைக்கு அனுமதி தர மறுத்து அவமதித்தார் இந்த சேர்மேன்.இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டதால் தோழர்.முத்துவிஜயனுக்கு(PRESIDENT-PGBOA)பேச்சு வார்த்தையில் அனுமதி இல்லை என்றார்.தொழிற்சங்கம் தான் தனது பிரதிநிதிகளை முடிவு செய்யும்.அதுவே மரபு.ஆனால் இந்த சேர்மேனோ அதையெல்லாம் தெரிந்திருந்த போதும் வேண்டுமென்றே அப்படி சொன்னார்.

பொறுமையிழந்த எங்கள் தலைவர்களில் இருவர்(தோழர்.சோலைமாணிக்கம் மற்றும் தோழர்.செல்வகுமார் திலகராஜ்) அங்கேயே காலவரையற்ற பட்டினி போராட்டம் அறிவித்தார்கள்.காவல்துறை வருவிக்கப்பட்டது.நாங்கள் எங்கள் நிலையை எடுத்துச் சொன்னோம்.எங்கள் தரப்பு நியாயங்களை புரிந்து கொண்ட காவல்துறை நிர்வாகத்தோடு எங்களுக்காக பேசியது.வேறு வழியின்றி காவல்துறை ஆய்வாளர் முன்னிலையிலே பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார் இந்த சேர்மேன்.

தோழர்.முத்துவிஜயன் தலைமையில் தலைவர்கள் சேர்மேனோடு பேச்சுவார்த்தை நடத்த சென்றார்கள்.ஆனால் பேச்சுவார்த்தையையே அவமதித்தார் சேர்மேன்.கோபமாக தொழிற்சங்க தலைவர்கள் வெளியேறினர்.தோழர்கள்.சோலைமாணிக்கமும்,செல்வகுமார் திலகராஜும் தங்களது பட்டினிப் போரை தொடர்ந்தார்கள்.இதற்கிடையில் தகவல் கேள்விப்பட்டு விருதுநகர் மாவட்டத்து எங்கள் வங்கித் தோழர்கள் எங்கள் தலைமை அலுவலகம் முன்பு குவியத் துவங்கினார்கள்.

எங்கள் சேர்மேனோ அதிகார செறுக்கோடு பட்டிப்போர் இருந்த தலைவர்களை கைது செய்யச் சொல்லி காவல்துறையை கேட்டுக்கொண்டார்.வேறு வழியின்றி காவல்துறையும் எங்கள் தலைவர்களை தங்கள் வண்டியில் ஏற்றினார்கள்.இதைப் பார்த்த எங்கள் தோழர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.காவல்துறை முன்னேறியது.அவசரக் கூட்டம் எங்கள் தொழிற்சங்க அலுவலகத்தில் கூட்டப்பட்டது.

நிர்வாகத்தின் இந்த தொழிற்சங்கத்திற்கு எதிரான காவல்துறை ஏவலை கண்டித்தும்,தொழிற்சங்க தலைவர்களின் கைதுக்கு மறுமொழி கொடுக்கும் விதமாகவும் மறுநாளே oneday lightening strike-ஐ அங்கு கூடிய கூட்டுச் செயற்குழு உறிப்பினர்கள் அறிவித்தார்கள்.அப்போது மணி சுமார் இரவு 8.00மணி இருக்கும்.

எங்களுக்கு வெறும் பனிரெண்டு மணி நேர அவகாசமே இருந்தது.எங்கள் வங்கிக்கு ஏறத்தாழ 200கிளைகள் ஒன்பதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவிக்கிடக்கிறது.விருதுநகரில் இருந்தபடியே அங்கு கூடியிருந்த சொற்ப ஊழியர்களின் துணையோடு வேலைநிறுத்த அறிவிப்பை ஊழியர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தோம்.அந்த இரவு மகத்தானது.மாபெரும் சரித்திரத்திற்கான விடியலை நோக்கி அந்த இரவின் நாழிகைகள் கடக்க ஆரம்பித்தது.

விடிந்தது டிசம்பர் 10....

தொழிற்சங்க பாரம்பரியம் மிக்க அக்கினிக் குஞ்சுகள் தங்கள் தலைவர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை தங்களுக்கு ஏற்பட்டதே என்றுணர்ந்தார்கள்.கொதித்தெழுந்தார்கள்.ஏறத்தாழ 125-கிளைகளின் கதவுகளுக்கு பூட்டுக்களே பகலிலும் காவல் காத்தது.விருதுநகரின் வெப்பம் அன்று வழக்கத்திற்கும் அதிகமானது..

ஆங்கிலேய படையெடுப்பின் போது இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இரவோடு இரவாக எழுந்து நின்றதை கண்டு மிரண்டு போன பரங்கியர் கூட்டத்தைப் போல் எங்கள் நிர்வாகம் எங்கள் தொழிற்சங்கத்தின் எழுச்சியை கண்டு மிரண்டது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள் எங்கள் சங்க அலுவலகத்தில் குவிந்தார்கள்.அங்கு முந்தைய தினம் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப் பட்டிருந்த தலைவர்களை கண்ட பிறகே கொஞ்சம் தணிந்தார்கள்.

பிறகு எங்கள் தொழிற்சங்க அலுவலகத்திலிருந்து பேரணியாக எங்கள் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே தோழர்கள் ராணுவ மிடுக்கோடு நடைபோட்டது வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது.மாபெரும் எழுச்சியை கண்டு பயந்த எங்கள் நிர்வாகம் எங்கள் நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்டது.

தோழர்கள் மிகவும் நாகரீகத்தோடு தங்கள் எதிர்பை அந்த பூட்டிடப்பட்ட வாயலில் நின்றே உரக்க கர்ஜனை செய்தார்கள்.ஆம்! இந்திய தொழிற்சங்க வரலாற்றின் அசாத்தியமான விடியலை அன்று எங்கள் தோழர்கள் நிகழ்த்தி காட்டினார்கள்.அதிகாரவர்க்கங்களும்,அடிவருடி சங்கங்களும் அந்த விடியலின் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஓரிரு நாள் செய்வதறியாது திகைத்த எங்கள் நிர்வாகம் தனது கடைசி அஸ்திரமாக இதுவரை 51ஆபிஸர்களை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது.அதோடு நில்லாமல் நூற்றிற்கும் மேற்பட்ட எழுத்தர் மற்றும் மெஸஞ்சர் தோழர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கிவருகிறது.எரிமலைகளை நோக்கி கையில் உள்ள கூலாங்கற்களை எறிந்துவிட்டு காத்திருக்கிறது எங்கள் நிர்வாகம்.

எங்கள் தோழர்களோ இடைக்கால பணிநீக்க உத்தரவை தங்களது தொழிற்சங்க வாழ்வின் அங்கீகாரமாய் பார்க்கிறார்கள்.இத்தனை சஸ்பென்ஷன்கள்,குற்றப்பத்திரிகைகள் அதுவும் தொழிற்சங்க நடவடிக்கைக்காக கொடுக்கப்பட்டது சமீபகால இந்திய பொதுத்துறை வங்கிவரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

தோழர்களே!

வருகிற 11ஆம் தேதி விருதுநகரில் வைத்து எங்கள் நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும்,தொழிற்சங்க விரோத போக்கையும் கண்டித்து பொதுமக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறோம்.

இது ஏதோ எங்கள் நிர்வாகத்திற்கும்,எங்கள் வங்கி தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை அல்ல.இது அதிகாரவர்க்கத்தின்,தொழிற்சங்க ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே ஆகும். தனியார்மயம் தழைத்தோங்கி வளர முதலாளித்துவ சிந்தனையாளர்களின் முதல் எதிரியாய் தொழிற்சங்கங்கள் மாறிபோயிருக்கும் காலமிது.அதிகாரவர்கத்தின் துணையோடு முதலாளித்துவம் செழித்தோங்க அஸ்திவாரங்கள் ஆழமாக பதியமிடப்பட்டு வரும் இந்த சூழலில் இது போன்ற போராட்டங்கள் அவசியமாகிறது.அடுத்த தலைமுறையினருக்கு தொழிற்சங்க வாடையே இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆளும் வர்க்கங்கள் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறது.

இவைகளை எதிர்த்து தொழிற்சங்கங்களின் அவசியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் கடமையாகும்.அதனடிப்படையில் முற்போக்கு சிந்தனையுள்ள அத்துணை வெகுஜன அமைப்புகளும் எங்களோடு தோளோடு தோள் சேர்ந்து விருதுநகர் வீதியில் வருகிற 11ஆம் தேதி அதிகாரவர்கத்திற்கு எதிரான தொழிற்சங்க அரைகூவலை ஒரே குரலாய் ஒலிக்க அணிதிரண்டு வாருங்கள்!

”ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது.ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிறு தோல்வியானாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.”-சே