சனி, 13 மார்ச், 2010

எனது பார்வை...


தோழர்களே! நான் தோழர்.தமிழச்செல்வனின் (தமிழ்வீதி) ”மகளிர் தினமும் இரண்டு கதைகளும் என்னும்” என்ற பதிவையும் வெண்ணிற இரவுகளின் ”நீதிக்கு தண்டனை” என்னும் பதிவையும் நேற்று படித்தேன். அவர்களிருவரும் சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்பு ஒன்றை பற்றி மிக கடுமையான விமர்சனம் வைத்திருந்தார்கள். அந்த விமர்சனத்தின் எனது முரண்பாடை நான் தோழர்.தமிழ்செல்வனுக்கு பின்னூட்டமாக எழுதிவிட்டு அதை முடித்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் தற்போது எனது ’அன்புமாமா’ காமராஜ் (அடர் கருப்பு) போன்றவர்களும் மேற்கூறிய அதே விமர்சனத்தையே கொண்டுள்ளார்கள் என்பதால் நான் எனது இந்தப் பதிவை அதன் தொடர் பதிவாக இடுகிறேன்.....இது எனது சொந்த கருத்துக்கள்.....இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக மட்டுமே பார்க்கப்படும் எனவும் நம்புகிறேன்....

முதலில் அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்வோம்......’சுஷ்மா’ இவள் உத்திரபிரதேச மாநிலத்தவள்.தற்போது மும்பையில் வசிக்கும் 25 வயது இளம் யுவதி. பிராமண சாதியம் பூசிக்கொண்ட குடும்பத்தவள். இவள் கேரளத்தின் ’கீழ்சாதியான’ ஈழவ சமூகத்தை சார்ந்த பிரபு என்கிற இளைஞனை காதலித்து இருக்கிறாள். அவர்களது அந்த அழகான காதல் கல்யாணமாகவும் மலர்ந்திருக்கிறது. இல்லறத்தை துவக்கிய அந்த இளம் பிஞ்சுகளின் வாழ்வை சாதியவெறி அழித்தொழித்திருக்கிறது. ஆம்! சுஷ்மாவின் அண்ணன் திலீப் திவாரி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபுவின் வீட்டிற்கு செல்கிறான். அந்த நேரத்தில் கெட்டதிலும் ஒரு சிறு நல்லதாக கர்ப்பிணியான சுஷ்மா வெளியே சென்றிருந்திருக்கிறாள். அப்போது அந்த கொலைவெறி கும்பல் பிரபுவையும்...அவனது தந்தையையும், அங்கு விளையாடி கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்று குவித்து தங்களது சாதியவெறிக்கு இரையாக்கி இருக்கிறது.

அப்போது சுஷ்மா அந்த கொலையாளிகளை எதிர்த்து மும்பை கோர்ட்....மராட்டிய உயர்நீதி மன்றம்....என போராடி அவளது அண்ணனுக்கு தூக்கு தண்டனை பெற்று தந்திருக்கிறாள். அவன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறான். உச்சநீதி மன்றமுமோ அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கிறது. மேலும் தனது தீர்புக்கு வலு சேர்க்கும் விதமாக கீழ்கண்ட வற்றை காரணமாகவும் கூறுகிறது. அது......

The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “

”ஒரு குடும்பத்தில் ஒரு இளைய சகோதிரி வழக்கத்திற்கு மாறான ஒரு செய்கையில் ஈடுபட்டால்...அதாவது சாதிய மறுப்பு திருமணத்திலோ,அல்லது மதமறுப்பு திருமணத்திலோ அல்லது ரகசிய காதல் திருமணத்திலோ என்றால் இந்த சமூகம் அவளது மூத்த சகோதரனையே அத்தகைய செய்கையை தடுத்து நிறுத்தாதற்கான பொறுப்பாளியாக கருதும்.”

மேலும்:”அதாவது அவனே தனது செயல்களுக்கு முழுமுதற் பொறுப்பாளி என்றாலும் இந்த வழக்கை பொறுத்தவரை மரண தண்டனை என்பது சற்று அதிகபட்சமானது தான்....ஏனென்றால் சாதியம்,இனம்,மதம், போன்றவகளின் பிடிப்பு நியாயப்படுத்த முடியாத ஒன்றானாலும் அதன் தாக்கங்கள் தற்போதைய யதார்தமே...”என்கிறது.

இப்போது இந்த மேற்கண்ட தீர்பே பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இது உயர் சாதிய மனோபாவத்திற்கு துணை போகும் தீர்ப்பு என்றும் பெண்ணியத்திற்கு எதிரானதாகவும் விமர்சிக்க பட்டு வறுகிறது. மேலும் சுஷ்மா இந்த தீர்ப்பை எதிர்த்து போராடி வருகிறார். அதற்கு வலுசேர்க்கும் விதமான பதிவுகளே இங்கு பதியப்பட்டு வருகிறது.

தோழர்களே!

இங்கு ஒரு சில விஷயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. நீதி என்பது தனிமனிதனை போல் உணர்ச்சிவசப்பட்டு செயல்பட கூடிய அமைப்பாக மாறிவிட கூடாது. அது தான் ஆபத்தானது. இங்கு சுஷ்மா வேண்டுவது என்ன? தன் கணவனையும்,அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்ற தன் அண்ணனுக்கு மரண தண்டனை வேண்டுமென்பதே.

இதில் உச்சநீதிமன்றத்தின் பார்வை மிகச்சரியான ஒன்றுதான். அது திலீபின் மரண தண்டனையை 25ஆண்டுகள் சிறைதண்டனையாக மாற்றித்தான் தீர்ப்பளித்திருக்கிறது. அவனை நிரபராதி எனக் கூறி விடுதலை செய்யவோ அல்ல அவனது கொலைகளை நியாயப்படுத்தவோ செய்யவில்லை.ஆனால் அவனது செய்கைக்கான காரணிகளை சமூக யதார்த்தத்தோடு முன்வைத்து அலசியிருக்கிறது. எந்த ஒரு கொலைக்கும் கொலையாளியை விட அதற்கான காரணிகள் தான் முக்கியமானதாக கருதப்பட வேண்டும். இங்கும் அதைத்தான் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.... இப்படி ஒரு சாதிய கட்டமைப்பில் உருவாகும் இளைஞர்கள் வேறு எப்படி செயல்படுவார்கள்? என்ற கேள்வியையும் இந்த கொலைகளுக்கான காரணிகளாக சாதிய கட்டமைப்பையும் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது. ஆகவே நாம் ரௌத்திரம் கொள்ள வேண்டியது இந்த சாதிய கட்டமைப்புகளுக்கு எதிராகத்தானேயொழிய இது போன்ற தனிநபர்களுக்கு எதிராக அல்ல.

ஒரு பேச்சுக்கு அப்படியே மரண தண்டனை வழங்கப்பட்டு விட்டால் இனிமேல் இது போன்ற திலீப்களை இந்த சாதிய சமூகம் உருவாக்காமல் விட்டு விடுமா? இதுதான் இது போன்ற கொலைகளுக்கு தீர்வா? கொலைக்கு கொலை தீர்வாகுமா? மரணம் என்பது ஒரு தண்டனையா?

பொதுவாக தண்டனைகள் என்பது தனிமனிதர்கள் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள இந்த சமூகம் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைய வேண்டும். அது தனிமனித வன்மத்தின் வடிகால்களாக அமைந்து விடக்கூடாது.

மரணதண்டனைகள் நம் சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னும் அது தொடர்வது கொடுமையானது. ஆனால் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதே தவிற குறைந்து விடவில்லை. இதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது மரணதண்டனையின் மூலம் எந்த தாக்கத்தையும் இந்த சமூகத்தில் ஏற்படுத்தி குற்றங்களை குறைத்து விடமுடியாது என்பதே!

அதனால் நாகரிகமான ஒரு மனித சமூகத்தில் ’மரணம்’ என்பது ஒரு தண்டனையாக தொடர்வதை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சரி! இது போன்ற நிகழ்வுகளுக்கு என்னதான் தீர்வு?

தனிமனிதர்களால் உருவானதே சமூகம். அதனால் தனிமனித மாற்றங்களால் தான் இதை சரி செய்ய முடியும்.ஆம்! நாம் நமது அடுத்த தலைமுறையையாவது சாதிய அடையாளத்திலிருந்து விடுவிக்க வேண்டும். நமது சாதிய அடையாளங்கள் நம்மோடு ஒழிந்து போட செய்ய வேண்டும்.

சரி இந்த இடத்தில் சில கேள்விகள் எழலாம்....சாதிய அடையாளங்களை தொலைத்து விட்டால் நமது குழந்தைகள் பொதுப் பிரிவில் அல்லவா சேர்க்கப்படுவார்கள்? அப்படியென்றால் இடஒதுக்கீட்டு சலுகைகளை நம் குழந்தைகள் இழந்து விடுவார்களே?

ஆம்! உண்மைதான்.... பல நூறு ஆண்டுகளின் கழிவை சிறு சிறாய்ப்புகள் கூட இல்லாமல் இங்கு சரி செய்ய முடியாது. பல லட்சம் பேர் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் செய்த தியாகத்தின் விளைவுதான் இன்றைய நமது சுதந்திர சுவாசம்.

வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்... சாதிய அடையாளத்தை துடைத்து எறிவோருக்கு என்று புதிய....ஏன் எந்தப் பிரிவினருக்கும் இல்லாத அதிக சலுகைகளை கோரி இயக்கங்கள் நடத்தலாம். இதை முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் சார்ந்த சாராத அமைப்புகள் ஒருங்கிணைத்து போராடலாம்.ஆனால் இதுவெல்லாம் ஒரே இரவில் நடைபெறக் கூடிய ஒன்றல்ல......என்பது யதார்த்தம்.

ஆனால் அதேநேரத்தில் இங்கு நடைமுறையில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் மாபெரும் போராட்டங்களின் விளைவாகவே உருவாக்கப்பட்டவை (உதாரணம்: தொழிற் தாவா சட்டங்கள்).....என்பது சரித்திரம்.

நாம் ஒன்றிணைவோமா.....? புரிந்து கொள்வோமா....?

வியாழன், 11 மார்ச், 2010

தோழர் ஆனேன்...6

இது ஒரு தொடர் பதிவு.....

புத்தருக்கு ஞானம் தந்த போதிமரத்தின் வேர்கள் பாய்ந்த மண்ணிற்கு பயணிக்கிறோம் என்ற நினைப்பே பெரும் ஆவலை எங்களுக்குள் தூண்டுவதாய் இருந்தது. பயணக் களைப்பையும் மீறி ஒருவித ஆர்வத்தோடு பயணித்தோம். நாங்கள் பயணித்த பாதையின் இருபுறங்களிலும் பச்சைபசேல் என இருந்த வயல்வெளிகள் அந்த மக்களின் உழைப்பை எங்களுக்கு சொல்லியது. ஆனால் அத்தகைய அளப்பெரிய உழைப்பிற்கு சொந்தகாரர்களான மக்களின் வாழ்நிலையோ சூன்யம் நிறைந்து இருப்பதை எங்களால் காண முடிந்தது.

கட்டுகட்டாய் கடைவிரிக்கப்பட்டிருந்த பற்துலக்கும் குச்சிகளும்.....ஐந்து ரூபாய் கூலிக்கு மைல் கணக்காய் கை ரிக்‌ஷா இழுக்க முண்டியடித்த மனிதர்களும்....மின்சாரக் கம்பிகளின் நிழல்களை கூட கண்டிராத தெருக்களும்.....களிமண்ணை தவிற வேறு எதையும் கொண்டிராத குடிசை சுவர்களும்....என நாங்கள் பார்த்ததெல்லாம் நவீன நாகரீகத்திற்கு குறைந்தது ஒரு அரை நூற்றாண்டு காலம் பின் தங்கிய அவலக் கோலமே!

நாங்கள் மாநாட்டு பந்தலுக்கு சென்று இறங்கிய போது எங்களது உற்சாகமும்,ஆவலும் வடிந்து விட்டிருந்தது. அந்த மக்களின் வாழ்நிலை குறித்த ஆதங்கம் மட்டுமே எங்களிடையே அப்போது பேசு பொருளாய் இருந்தது. மாநாட்டு பந்தலருகே புதிதாய் கட்டப்பட்டிருந்த ஒரு பௌத்த மடாலயத்தில் தான் எங்களுக்கான தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அது ஒரு கல்லூரி விடுதியை போல் இருந்தது. அங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்த வந்திருந்த தோழர்களுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு அறையில் குறைந்தது இருபது பேர் தங்கும் அளவிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. நாங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கவைக்கப்பட்டோம்.

மாநாட்டிற்கு முந்தைய நாளே சென்றுவிட்டோம் என்பதால் கொஞ்ச நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.....

புத்தகயாவிற்கு இருவித தோற்றங்கள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. அது போதி மரத்தை காண வரும் வெளிநாட்டினருக்கும்....வெளிமாநிலத்தவருக்கும்... சகலவித வசதிகளும் கொண்ட ஒரு சுற்றுலா தளமாக இயங்கிய அதேவேளையில் சொந்த மக்களை அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வஞ்சிக்கவும் செய்வதாய் இருந்தது. உழைக்கும் வர்கத்து பிரதிநிதிகளாக சென்றிருந்த நாங்களும் வழக்கம் போல் புலம்பியபடி ஊர் சுற்றலானோம்.

ஆசையே அழிவிற்கு காரணம் என்ற ஞானத்தை புத்தருக்கு தந்த போதியின் ஒரு இலையாவது கிடைக்காதா என ஆசையோடு போதியை சுற்றி அலைந்தோம். போதியை சுற்றவரும் மக்களை சுற்றி வியாபாரம் செய்தபடி ஒரு பெருங்கூட்டம் அலைந்தது. இப்படி அலையும் எல்லாவற்றையும் மௌனப் புன்னையோடு புத்தரும் பார்த்துக்கொண்டிருந்தார்.(பாவம்! அவரால் வேறு என்ன செய்ய முடியும்?!)

புத்தகயாவில் இருந்து....ராஜ்கிர்...நாலந்தா என எங்கள் சுற்றுலா தொடர்ந்தது. ராஜ்கிரில் அழகான மலை மீது கட்டப்பட்ட பௌத்த ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்திற்கு ரோப் காரில் தான் செல்ல வேண்டி இருந்தது. மிகவும் விறுவிறுப்பான பயணம் அது. ராஜ்கிரில் சுற்றி அலைந்து விட்டு நாலந்தா சென்றோம்.....

நாலந்தா பல்கலைகழகம் 1500 ஆண்டுகளுக்கு மேலான பழமையும்,பெருமையும் கொண்டது. அங்கு ஒரே சமயத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்திருக்கிறார்கள்..... இரண்டாயிரத்திற்கும் மேலான ஆசிரியர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள்....கணிதம், வானசாஸ்திரம்,இலக்கணம்,தத்துவம்,வேத சாஸ்திரங்கள் என பல பாடப்பிரிவுகள் இருந்துள்ளன.குப்த அரசர்கள் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அந்த பல்கலைகழகம் கி.பி.1200களின் போது கில்ஜி அரசர்களின் படையெடுப்பினால் அழிவை சந்தித்துள்ளது. அங்கிருந்த மாபெரும் நூலகங்களையும் தீக்கிரையாக்கி உள்ளனர். இடிந்து போன அந்த பல்கலைகழகத்தின் எச்சங்களை காணும் போதே அதன் கட்டுமானத்தின் பிரம்மாண்டம் தெரிந்தது.

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் கில்ஜி அரசர்களின் வாரிசுகளைப் போல் இன்றும் பீகாரின் அதிகார வர்க்கம் செயல்படுவது கண்கூடாய் தெரிந்தது. ஏனென்றால் புத்தகயாவிலிருந்து நாங்கள் பயணித்த நாலந்தா வரை கல்விக்கூடத்திற்கான சுவடுகளே எங்கள் கண்ணில் படவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மண்வெறியாலும்,அதிகார வெறியாலும் தரைமட்டமாக்கப்பட்ட மக்களின் கல்விக்கு இன்று வரையிலும் அங்கு தீர்வு காணப்பட்டதாய் தெரியவில்லை.மொத்ததில் போதியை அனுமதித்த ஆளும் வர்க்கம் மக்களிடையே ஞானத்தை மட்டுமே வளர அனுமதிக்கவில்லை என புரிந்தது.

அப்படியே நேரம் காலம் மறந்து சுற்றி கொண்டிருந்த எங்களை மாலை 5.00மணி நெருங்கியவுடன் எங்களது இடத்திற்கு கிளம்ப சொல்லி வேன் டிரைவர் படபடத்தார். அவரை கொஞ்சம் நிதானப்படுத்தி விசாரித்த போது அவர் கூறிய விஷயம் எங்களுக்கு படபடப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது.

அதற்கு காரணம்......

மாலை 6.00மணிக்கு மேல் அங்கு உலவுவது பாதுகாப்பானது இல்லை என்றும்....எந்த நேரத்திலும் எந்த முனையில் இருந்தும் தாக்குதலுக்கான ஆபத்து இருப்பதாக சொல்வதாய் எங்கள் அனைவருக்கும் இருந்த இந்தி புலமையை வைத்து புரிந்து கொண்டோம்.. ஆதனால் எதற்கு வம்பு என வண்டியில் ஏறி தவ்வி எங்கள் இருப்பிடத்திற்கு விரைந்தோம்.

அது ஒரு மூன்று நாள் மாநாடு. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் எங்களது அகில இந்திய சங்கத்தின் கிராம வங்கி ஊழியர்கள் பிரதிநிதிகளாகவும், பார்வையாளர்களாகவும் வந்திருந்தார்கள். அப்படி ஒரு மாபெரும் மனித சங்கமத்தை நான் அதுவரை கண்டதில்லை.

ஆனால் அத்தனை பெரிய மகாசமுத்திரமே ஒரு ஒற்றை மனிதனின் விரலசைவுக்கு கட்டுபட்டது. அப்படியொரு கம்பீரமும்,மிடுக்கும் அவரிடம் மிளிர்ந்தது....எழுபதை கடந்த வயது ஆனால் தோல்களின் சுருக்கத்தையும் மீறி வசீகரித்தார்.....எப்போதும் சுறுசுறுப்புடனும்,பரபரப்பாகவும் காணப்பட்டார். அவர் பார்த்தவைகளில் எல்லாம் அவரால் திருத்தங்கள் சொல்ல முடிந்தது. அதேநேரத்தில் அதை உறுதி கலந்த கனிவுடன் கூறி நடைமுறை படுத்துவதையும் காண முடிந்தது.

தயவு தாட்சண்யம் இல்லாமல் அவரால் விமர்சனங்கள் செய்ய முடிந்தது. அதேநேரம் யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு அதை இயல்பாக கடந்து செல்லவும் முடிந்தது. அவரை அங்கு கூடியிருந்தவர்கள் எல்லாம் ”தாதா...தாதா...”என அன்போடு அழைக்க கண்டேன். இதையெல்லாம் பார்த்த நான் அப்போது எனக்கிருந்த உலக ஞானத்தை கொண்டு அவரை ஏதோ பீகாரின் ’வேலுநாயக்கர்’ என நினைத்துக் கொண்டு இருக்கையில்... என்னை அவரிடம் கூட்டிச்சென்று அறிமுகம் செய்துவைத்தார்கள். அப்போது தான் தெரிந்தது அவர்தான் எங்களது அகில இந்திய பொதுச்செயலாளர்... திலிப்குமார் முகர்ஜிஎன்று.



முதல் நாள் பெண்கள் மாநாட்டுடன் எங்களது 10ஆவது முப்பெரும் அகில இந்திய மாநாடு கோலாகலமாய் துவங்கியது.இரண்டாம் நாள் பிரிதிநிதிகளின் மாநாடு....அதன் பின்பு பொதுச்செயலாளர் அறிக்கை....அதன் மீதான காரசார விவாதங்கள் என பகல் பொழுதில் அனல் பறந்த மாநாட்டு பந்தல் இரவுகளில் கலைநிகழ்ச்சிகளால் களைகட்டி கலகலப்பானது. மூன்றாம் நாள் பொதுச்செயலாளரின் பதில்களும்...தீர்மானங்களும்.....அதனை தொடர்ந்து புதிய அகில இந்திய செயற்குழுவும்,பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒரு பிரம்மாண்டமான கனைவைப் போல் இருந்தது அந்த மாநாடு.

வெவ்வேறு மாநிலங்கள்....வெவ்வேறு மொழிகள்...வெவ்வேறு கலாசாரம் என வேறுபாடுகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் AIRRBEA.....என்றவுடன் எல்லோரும் ஒருமித்த உணர்வுடன் ஒரே குரலாய் ஜிந்தா...ஆஆஆஆபாத்.....!!!! என ஆர்பரித்த போது தான் எனக்கு புரிந்தது உழைக்கும் வர்கத்திற்கு ஜாதியில்லை....மதமில்லை...மொழியில்லை....என்று.

அந்த மாநாடும் அதற்கான பயணமும் என்னை வெகுவாக மாற்றியிருந்தது. அந்த மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. அத்தனை காலமாய் நான் ஒரு சிறு கூட்டிற்குள் என்னை சிறைவைத்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோ உலகத்திலே அதிகமான சுமைகளுக்கு நான் தான் சொந்தக்காரன் என்ற எனது எண்ணம் எவ்வளவு அபத்தமானது எனவும் புரிந்து கொள்ள துவங்கியிருந்தேன். அந்த பயணம் மற்றுமல்ல சில விலைமதிக்க முடியாத உறவுகளையும் எனக்கு பெற்று தந்தது.

அது.....

----தொடரும்.......

செவ்வாய், 9 மார்ச், 2010

தோழர் ஆனேன்....5


இது ஒரு தொடர் பதிவு......

எங்களது அகில இந்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அப்போது பீகாரில் உள்ள புத்தகயா என்னும் ஊரில் வைத்து நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள எங்கள் சங்கத்தலைமையிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் மிகுந்த உற்சாகத்தோடு அதில் கலந்து கொள்ள என் விருப்பத்தை தெரிவித்தேன். அதுதான் எனது முதல் வட இந்திய பயணம். அதனால் மிகுந்த ஆவலோடு பயணத்திற்காக காத்திருந்தேன்.....அந்த நாளும் வந்தது....

தூத்துக்குடியிலிருந்து நானும், தோழர்.அருள்ராஜும் பயணமானோம்.....தூத்துக்குடி....சாத்தூர்....மதுரை என ஒவ்வொரு நிறுத்தங்களிலும் எங்கள் தோழர்கள் வந்திருந்து எங்களை வழியனுப்பி வைத்த அந்த நிமிடங்கள் நான் அதுவரை வாழ்வில் பார்த்திராதது. மிகவும் பெருமிதமான உணர்வோடு எனது அந்த பயணம் துவங்கியது.ஒவ்வொரு நிறுத்தங்களிலும் எங்களது சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவராய் எங்களோடு இணைந்து பயணிக்க ஆரம்பித்தார்கள்.

முற்றிலும் புதிய மனிதர்கள்....புதிய சூழல்....என எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தனிமை படர துவங்கியது. என்னோடு பயணித்தவர்களுக்கும் எனக்கும் ஒரு தலைமுறை இடைவெளி இருந்தது. எனக்கு அவர்களிடம் என்ன பேசுவது என்று கூட அப்போது தெரியவில்லை. ஆனால் எனக்குள் எழுந்த அந்த தயக்கத்தை அவர்கள் கொஞ்ச நேரம் கூட நீடிக்க விடவில்லை. ஒவ்வொருவராய் வந்து என்னிடம் தங்களைப் பற்றியும், எனது அம்மாவை பற்றியும் அவர்களது கடந்த கால நினைவுகளை பற்றியும் பகிர்ந்தபடி என்னிடம் நெருக்கம் கொள்ள ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நானும் சகஜமானேன்.

மறுநாள் காலை 9.30 மணியளவில் இரண்டு மணி நேர தாமதத்தோடு சென்னை எழும்பூர் சென்று சேர்ந்தோம். எங்களுக்கோ காலை 10.00 மணிக்கு சென்னை செண்ட்ரலில் இருந்து கிளம்பும் கோரமண்டல் ரயிலை பிடிக்க வேண்டிய நிர்பந்தம். அதாவது வெறும் அரை மணி நேர கால அவகாசமே இருந்தது. அவசர அவசரமாக அங்கிருந்து ஆட்டோ பிடித்து சென்னை நெரிசலில் மிதந்து செண்ட்ரல் சேரவும் ரயில் கிளம்பவும் மிகச் சரியாய் இருந்தது. எங்களது பெட்டி படுக்கைகளோடு சென்னை செண்ட்ரலில் நாங்கள் ஓடிய காட்சி தமிழ் சினிமாக்களின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல.

ஒருவழியாக ஆளுக்கு ஒரு பெட்டியில் ஏறி விழுந்து ஒருங்கிணைந்தோம். ஆனால் இதிலெல்லாம் எந்த சலனமும் இல்லாமல் ரயிலோ தனது வழக்கமான தடதடப்புடன் பயணித்து கொண்டிருந்தது.....

பொதுவாக பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அதிலும் இது போன்ற அசாத்திய சூழலும் இணையும் போது அதன் சுவாரஸ்யம் இரட்டிப்பாகத்தான் செய்கிறது. எனது முந்தய நாளின் தயக்கங்கள் முழுவதுமாக வடிந்துவிட்டிருந்தது.

நாங்கள் ரயிலேறிய விதத்தை சிலாகித்தபடி ஆரம்பித்த எங்கள் உரையாடல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடு பயணித்த தோழர்களின் அதற்கு முந்தைய இது போன்ற பயண அனூபங்கள்....முந்தைய அகில இந்திய மாநாட்டு அனூபவங்கள்....என கிளை விட துவங்கியிருந்தது. அவர்களுக்கு என்னிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும்....வரலாறுகளும் மீதம் இருந்தது. எனக்கோ அவர்கள் பேசிய ஒவ்வொன்றும் புதிதாகவும்,ஆவலை தூண்டுவதாகவும் இருந்தது.

நிறைய பேசினார்கள்....என்னையும் பேச வைத்தார்கள்.....தோழமை என்னும் அந்த வீரியமிக்க உணர்வை எனக்குள் செலுத்தி தலைமுறை இடைவெளியையும் தகர்த்தெரிந்தார்கள். தனது குடும்பம்...தனது வேலை...தனது தேவைகள்....என எல்லாவற்றையும் விடுத்து அவர்களிடம் பொதுவான பேசு பொருளாய் இருந்தது...தொழிற்சங்கம். அவர்கள் சிலாகிக்க....நெஞ்சம் விறைத்து பெருமிதம் கொள்ள....ஒருவரை ஒருவர் சீண்ட என எல்லாவற்றிற்கும் அவர்களுக்கு அந்த மந்திர சொல் வழிவகை செய்திருந்தது.

மேலாளர்..எழுத்தர்...கடைநிலை ஊழியர்....என எல்லா பதங்களும் மருவி தோழர் என்ற ஒற்றை சொல்லாய் அவர்களிடம் நிலை பெற்றிருந்தது. அது எனக்கு அவர்கள் மீதும்....எங்கள் தொழிற்சங்கத்தின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்த ரயில் பயணத்தை ஏதோ தங்களது இளமை காலத்தை நோக்கிய பயணமாய் அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். சீட்டு கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது....உற்சாக பானம் தந்த துணையோடு அவர்கள் அடித்த கொட்டம் அவர்களது நரைத்த மயிரை கூட கருக்க செய்வதாய் இருந்தது. கேலியும்,கிண்டலுமாய் தொடர்ந்த பயணம் மறுநாள் காலை புவனேஸ்வரில் இறங்கி வேறு ரயில் மாறிய பின்பும் கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்தது.

ஒருவழியாக நாங்கள் பீகார் ரயில் நிலையம் சென்று சேர்ந்த போது அதிகாலை 4.00மணி இருக்கும். அங்கு எங்களை வரவேற்க பீகார் மாநிலத்தின் கிராம வங்கி தோழர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தார்கள்.

பீகார் ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த நிமிடங்களிலிருந்து நாங்கள் பார்த்த ஒவ்வொரு காட்சியும் அந்த மாநிலத்தின் நிலையையும்,அந்த மக்களின் அவல நிலையையும் எடுத்துச் சொல்வதாய் இருந்தது.....

எங்களை ரயில் நிலையத்தின் அருகே ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அமரச் சொன்னார்கள். அந்த ரயில் நிலையத்திலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு அரைமணி நேர பயணமாவது ஆகும் என்றும் அதற்கு விடிந்த பின்பே பயணிப்பது பாதுகாப்பானது என்றும் எங்களை வரவேற்க வந்த தோழர்கள் கூறினார்கள். நாங்களும் அந்த மூத்திர நெடி சூழந்த கட்டிடத்திற்குள் ஒரு இரண்டு மணி நேரம் முடங்கிக்கொண்டோம். ஒருவழியாக 6.00மணி அளவில் இரண்டு வேன்களில் எங்களை புத்தகயாவிற்கு அழைத்து சென்றார்கள்.

---தொடரும்....

திங்கள், 8 மார்ச், 2010

தோழர் ஆனேன்....4

இது ஒரு தொடர் பதிவு.....

நாட்கள் சென்றன....நான் இரெகுநாதபுரத்திலிருந்து ஓட்டப்பிடாரம் கிளைக்கு எமது சங்கத்தின் பரிந்துரையின் பேரில் பணி மாறுதல் செய்யப்பட்டேன். ஓட்டப்பிடாரம்....இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரம் செறிந்த போராட்டங்களின் விளைநிலமாக விளங்கிய வீரபூமி. பரங்கியர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய வ.உ.சி அவதரித்த புண்ணிய பூமி. ஆனால் அதுவெல்லாம் அப்போது எனக்கு பெரிதாய் தெரியவில்லை.

எனக்குள் அந்த கிளை சம்பந்தமான ஆர்வத்தை தூண்டிய ஒரே விஷயம் அது என் தாய் மேலாளராக பணிபுரிந்த கிளை என்பதே! எத்தனை பிள்ளைகளுக்கு இந்த பாக்கியம் வாய்க்கும் என தெரியவில்லை.ஆனால் எனக்கு கிட்டியது. அவள் அமர்ந்த இருக்கைகளில் நான் அமரப்போகிறேன்..... அவள் பார்த்து பழகிய மனிதர்களிடம் நானும் பழகப்போகிறேன்...... என்பன போன்ற பல எண்ணங்கள் எனக்குள் ஆர்வத்தை தூண்டி இருந்தது.

அங்கு நான் பணிபுரிந்தது இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் அவை. என்னை பொறுத்தவரை அது வெறும் அலுவலகம் அல்ல. நான் புடம் போடப்பட்ட பட்டறை அது. அப்போது அங்கு ஜோசப் ரூபன் விக்டோரியா என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு எங்கள் வங்கியில் கறார் பேர்வழி எனப் பெயர். யாருக்காகவும், எதற்காகவும் வளைந்து கொடுத்து போகத் தெரியாதவர்.

அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டேன்.ஆனால் நானோ எனக்கு அறிவுரை சொல்லியவர்களிடம் நானா? அவரா? என பார்த்து விடுவேன் என சூளுரைத்து வந்திருந்தேன். ஓரிரு நாட்கள் இயல்பாக சென்றது. ஒரு நாள் அவசர விடுப்பொன்று எடுத்தேன். எனது அந்த விடுப்பையும் என் வீட்டில் வேலை செய்த அக்காவின் மூலம் மேலாளரிடம் சொல்ல சொல்லிவிட்டு வெளியூருக்கு பயணமானேன்.

மறுநாள் நான் பணிக்கு திரும்பியவுடன் அவர் எனது முறையற்ற தகவல் பரிமாற்றத்திற்காக என்னை கடிந்து கொண்டார். நான் செய்தது தவறு எனப் புரிந்தாலும் அவரை எப்படியாவது வேறு வழியில் பழிவாங்க வேண்டும் என முடிவு செய்து சந்தர்பத்திற்காக காத்திருந்தேன். ஆனால் எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காத வண்ணம் அவர் நடந்து கொண்டதோடு என்னை மெல்ல மெல்ல வாஞ்சையான வார்த்தைகளால் நெருங்கவும் செய்தார்.

கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் இருந்த வன்மம் குறைந்து நான் அவரை புரிந்து கொள்ள துவங்கினேன்....

எந்த தொழிற்சங்கத்திலும் உறுப்பினராய் இல்லாதவர். ஆனால் ஆழமான தொழிற்சங்க பார்வையும்,சமூகத்தின் மேலான அக்கறையும் அவரிடம் நான் கண்டதுண்டு. தனக்கு சரி என்று பட்டால் தயங்காமல் பாராட்டவும், தனக்கு தவறு எனப்பட்டதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டிக்காட்டுவார். அதேசமயம் மிகவும் மென்மையான மறுபக்கம் கொண்டவர். இசையின் மேல் அளப்பறிய காதலும் ,ஞானமும் அவருக்கு உண்டு. அது அவரிடம் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நான் அவரிடம் பல விஷயங்கள் குறித்து கருத்தாடி இருக்கிறேன். அவரும் சளைக்காமல் எனக்கு பதிலளித்து கொண்டு இருப்பார். எங்கள் சர்வீஸ் ஏரியாவில் உள்ள கிராமங்களில் நடைபெறும் குழு கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்ல ஆரம்பித்தார். இந்த சமூகத்தின் கடைகோடி மக்களையும் அவர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ள இது போன்ற கூட்டங்கள் எனக்கு பெரிதும் உதவியது. வங்கி அதிகாரிகள் என்பதால் அவர்கள் எங்களிடம் காட்டிய மரியாதையை பார்த்த போது என் பணிமீதான காதலும்,கர்வமும் எனக்குள் அதிகரித்தது.

வங்கித்துறை குறித்த தெளிவான பார்வை அவருக்கு உண்டு. எந்த ஒரு வேலையையும் அதன் அர்த்தம் புரிந்து செய்திட வேண்டுமென்பார். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்....சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால் மேலாளர்--எழுத்தர் என்பதையும் தாண்டி ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவே எங்களுக்குள் இருந்ததாய்.....இருப்பதாய்....உணர்கிறேன்.

இப்படியாக சென்று கொண்டிருந்த எனது அன்றாட வாழ்க்கையில் என் வாழ்வை திசைமாற்றிய அந்த பயணத்திற்கான அழைப்பு எங்கள் சங்கத்திலிருந்து வந்தது.......
தொடரும்..........

ஞாயிறு, 7 மார்ச், 2010

நான் பேசுகிறேன்...


சமீபத்தில் நடந்தேறிய ஒரு மூன்று சம்பவங்களும் அதன் விளைவாக இந்த சமூகத்தில் ஏற்பட்ட சில அதிர்வுகளும் நிச்சயம் விவாதிக்கபட வேண்டியது. விவாதங்களும் பெரும் அளவில் நடைபெற்றுள்ளது. ஆனால் பெரும்பான்மையான விவாதங்களில் நடுநிலைத் தன்மை என்பது காவு வாங்கப்பட்டு தனிமனித அரசியலும்,மூடத்தனங்களும் மேலோங்கி இருப்பதாய் எனக்கு படுவதால் நான் இந்த பதிவை இடுகிறேன்.....

முதலில் அந்த சம்பவங்கள்.....

1.உத்திரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர்.சீனிவாச ராமச்சந்திரா சிராஸ் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக “புகார்” கூறி அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

2.தோழர்.டபிள்யு.ஆர்.வரதராஜனின் மரணம்.

3.நித்தியானந்த சாமிகளின் ”லீலைகள்”.

முதலாவது சம்பவம் ‘வாய்ஸ் ஆஃப் நேஷன்’ (VNI) என்னும் இந்தி சேனலின் நிருபர்கள் குழு ஒன்று ரகசிய கேமிரா மூலம் பேராசிரியரின் படுக்கை அறையை பதிவு செய்து அவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வெளியிட்டு உள்ளார்கள். இந்த மாபெரும் ”சமூக சேவை”யின்
விளைவு....பேராசிரியர் குற்றவாளி கூண்டில் நிறுத்தபடுகிறார்....சஸ்பெண்ட் செய்யபடுகிறார்....ஓரின சேர்க்கை தேசிய குற்றமாக மலினபடுத்த பட்டு விவாதங்கள் அரங்கேறுகிறது.

ஆனால் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக களமிறங்கிய கயவர்கள் சமூக ஆர்வலர்களாக மாறிப் போகிறார்கள்....ரகசிய பதிவுகள் ஒளிபரப்பப்பட்டு வர்த்தகமாக்கப்படுகிறது.

இதில் எது குற்றம்? ஓரினச் சேர்க்கையா? அல்லது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான வர்த்தக அராஜகமா?

ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்ப்பது பாசிச பார்வையே ஆகும். இயற்கையை ஏற்க மறுக்கும் மூடத்தனம். நாம் அணிதிரள வேண்டியது இந்த வர்த்தக அராஜகத்திற்கு எதிராகத்தான்.பத்திரிகை சுதந்திரம்...எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித அந்தரங்கங்களை படமாக்கும் அபத்தக்களுக்கு எதிராகத்தான்.

இரண்டாவது சம்பவம்...

தோழர்.டபிள்யு.ஆர். வரதராஜனின் மரணம். அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு எதிராக ஏந்திய கடைசி ஆயுதம் “மரணம்”.ஆனால் நாம் அதையும் சர்ச்சையாக்கி அரசியல் ஆதயம் தேடும் தொடர் முயற்சியில் இறங்கி இருப்பது கொடுமையிலும் கொடுமை. உழைக்கும் வர்க்கத்திற்காக தனது வாழ்க்கையை அர்பணித்த அந்த அற்புத தோழர் தனது மரணத்தை தன் தரப்பு நியாயங்களுக்காக அர்பணித்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? பெண் ஒருவருக்கு ‘தகாத குறுந்தகவல்கள்’ அனுப்பினார் என்பதே. அவர் அப்படி அனுப்பியதாய் வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு என்று எனக்கு புரியவே இல்லை. வன்புணர்ச்சி குற்றம்...தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதுமா குற்றம்?

அந்தந்த காலகட்டத்தின் தனிமனித ஒழுக்கங்களாய் ஒரு சமூகம் கொண்ட வரையறைகளை மீறியவர் என்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட இந்த சமூகமும் அவர் சார்ந்த கட்சியும் வரையறுத்த ஒழுக்க நெறிகளை மீறியவர் என்றும் குற்றம் சாட்டலாமா? இப்படி எந்த விரலை நீட்டி குற்றம் சாட்ட முயற்சித்தாலும் தன் எண்ணங்களை வெளிப்படுத்த அவர் முயற்சித்ததை குற்றமாக எப்படி பாவிக்க முடியும்? குற்றம் எவர் செய்தாலும் குற்றமே! என்று கண்ணை மூடிக்கொண்டு தீர்பளித்து விட்டோம். இனி சிதறியவை மாணிக்க பரல்கள் எனத் தெரிந்தால் என்ன செய்யலாம்?”யானோ அரசன்?யானே கள்வன்?”என உயிர்(பதவி) துறந்திடுவோமா? நிச்சயம் மாட்டோம்.

பொதுவாக மரணத்திற்கு மௌனத்தை அஞ்சலியாக செலுத்துவது நமது மரபு.ஆனால் அதை கூட நாம் அந்த அற்புத தோழனுக்கு தர மறுப்பது எந்த வகையில் நியாயம்?

மூன்றாவது சம்பவம்.....

காவி துறந்து காமம் தழுவிய ‘சாமியாரின்’ கதை. இதில் எனக்கு நித்தியானந்தரின் மேல் எந்த கோபமும் இல்லை. அவர் நிச்சயம் புத்திசாலிதான். சொல்பவன் பேச்சை கேட்டு கேட்பவன் மதியை இழந்தால் குற்றவாளி சொல்பவனா? கேட்பவனா? இந்த நேரத்தில் எனக்கு ஒரு சர்தார்ஜி ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது....

சர்தார்ஜி: நான் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு என் பக்கத்து வீட்டுகாரரிடம் பந்தயம் கட்டி இரண்டாயிரம் ரூபாய் இழந்துவிட்டேன்.

நண்பர்: யாராவது ஒரு மேட்சிற்கு இரண்டாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுவார்களா?

சர்தார்ஜி: நான் என்ன முட்டாளா? நான் ஆயிரம் ரூபாய்தான் ஒரு மேட்சிற்கு பந்தயம் கட்டினேன்.

நண்பர்: பின்பு எப்படி இரண்டாயிரம் இழந்தீர்கள்?

சர்தார்ஜி: நான் நேற்று முன்தினம் நடைபெற்ற மேட்சிற்கு ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினேன். மறுநாள் மேட்சில் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு நேற்று ஹைலைட்சிலாவது ஜெயிப்பார்கள் என நம்பி மீண்டும் பந்தயம் கட்டி இந்தியாவை நம்பி மோசம் போனேன்....என புலம்பினானாம்.

இப்படித்தான் இருக்கிறது நம்மவர்களின் கதைகள். எத்தனை தடவை பட்டாலும் நமக்கு உறைக்காது. முதலாவது சம்பவத்தை போலவே செய்திதாள்களும், டி.வி சேனல்களும் இதை பரபரப்பாக்கி விற்பனை செய்வதே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. எந்தவித சமூக சிந்தனையும் இவர்களுக்கு கிடையாது. வியாபாரம் ஒன்றே தான் இவர்களது குறிக்கோள். நாமும் தொடர்ந்து இவர்களது வியாபார தந்திரந்திற்கு பலியாகி வருகிறோம். நாம் நியாயப்படி கோபப்பட வேண்டியது இவர்களைப் போன்ற வியாபாரிகளை பார்த்தும்....நமது முட்டாள்தனத்தை நினைத்தும் தான்.

தோழர்களே!

மேலே நான் குறிப்பிட்ட மூன்று சம்பவங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது காமம் குறித்து இந்த சமூகத்தின் புரிதல்களே ஆகும். காமம் ஒரு இயற்கையான உணர்வு. பாலின பேதம் காமத்திற்கு இல்லை. அது ஒரு உயிரின உணர்வு. அதற்கான வடிகால்களும் இயல்பானதே! எந்த ஒரு உயிரையும் வன்புணர்ச்சி செய்வதே இயற்கைக்கு மாறானது. அதுதான் கண்டனத்திற்கு உரியது. எல்லா உயிரினமும் தனக்கான உணவை தானே தேடிக்கொள்கிறது. காமமும் அது போலத்தான். தனக்கான இணையை தானே முடிவு செய்வது தனிமனித சுதந்திரம். காமத்திற்கான பொதுவிதிகளை வரையறுக்க இங்கு தனிமனிதருக்கோ அல்லது ஒரு சமூக அமைப்பிற்கோ உரிமை கிடையாது. ஆனால் நாம் அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்.

விவிலியத்தில் ஒரு சம்பவம் உண்டு விபச்சாரம் செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை கல்லால் அடிக்க முற்படுவர். அப்போது இயேசுநாதர் அவர்களை தடுத்து,”உங்களில் எவன் குற்றமற்றவனோ அவனே முதல் கல்லை எறியட்டும்” என்பார் உடனே தங்கள் கைகளில் உள்ள கற்களை வீசியெறிந்து விட்டு அனைவரும் கலைந்து செல்வதாய் ஒரு கதையுண்டு.

இதைத்தான் நாமும் இங்கே சொல்ல விரும்புவது மேலே சேற்றை வாரி இறைக்கவும்....நீதி சொல்லவும்.....சேதப்படுத்தவும் செய்வோரெல்லாம் யோக்கியர்கள் தானா? இல்லை குற்றமற்ற மகாத்மாக்களா?

தவறுகள் தான் மனிதன்.அதனால் தண்டனைகள் தந்து தலையறுப்பதை விட. மன்னித்து அரவணைப்பதே மனித செயல். நாம் மனிதர்களாக மாறுவோமா?