வியாழன், 9 ஜூன், 2011

விடைபெறுகிறான் ஒரு கலைஞன்....



உடலின் பயணத்தில்
முதுமையின் ஒரு மைல் கல்லில்
நின்றது அந்த மூச்சு..

தூரிகையின் மொழி நிரந்தரமாக்குகிறது
ஓர் ஆளுமையின் இருப்பை..
வண்ணங்களில் தோய்த்தெடுக்கும் கலவையின்
பொது நிறமாய் மின்னும் அந்த
வெள்ளைத்தாடியே ஒரு பேசும் தூரிகைதான்..

மரபணுக்குள் பொதிந்திருக்கும்
ஆதிக்க உணர்வுகளின் உசுப்புதலில்
அடியாள் படையின் காவிக் கரங்களில்
துருத்திய கட்டாரிகளைவிடவும்
வலுத்துத் தெரிந்தது
மண்டியிட மறுத்த அந்த எளிய ஓவிய இறகு....

ஓவியக் கூடங்களில் கிழிபட்டது
ஓவியங்கள் அல்ல
தேசத்தின் சகிப்புத்தன்மையும், கலையின் விமர்சனமும்.

புனிதங்களின் போர்வையில் ஒலித்த
பழமைவாதத்தின் குரூர விரல் சொடுக்கில்
வெளியேறத் தலைப்பட்டது
அந்தக் கலைஞனின் உருவம் மட்டும்....
எண்ணங்களும், ஈர்ப்பும்,
படைப்பின் உயிர்க்கனவும் கலையின் ஆன்மாவும்
தாய்மண்ணில் ஊறியிருக்க
அனுமதிக்குக் காத்திருப்பதில்லை

விடை பெறுகிறான் ஒரு பேசப்படும் கலைஞன்
சொந்தவூர் திரும்பும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்து
மைல்களைக் கடந்த ஓர் அயல் நாட்டிலிருந்தபடி!

நினைவில் இருக்கட்டும்
சாபம் அவனுக்கு விதிக்கப்பட்டதன்று
அவன் மரணத்தோடு அது கழியப் போவதும் அன்று....




எஸ் வி வேணுகோபாலன்

.

புதன், 8 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......14


இது ஒரு தொடர் பதிவு....


நாங்கள் விடிகாலை 4.00 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தோம். வீடு மரணக் கோலம் பூண்டது. கொஞ்சம் கொஞ்சமாய் என் தாயின் மரணச்செய்தி ஊருக்குள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், சுற்றத்தார்கும் பரப்பப்பட்டது. எங்கள் வீடின் சுவர்கள் மனித ஓலத்தை எதிர் ஓலித்துக் கொண்டு கதற துவங்கியது. எங்கள் வீட்டின் வரவேற்பரையில் அவளது உயிரற்ற உடலை ஏந்த எங்கள் அறையில் கிடந்த இரும்புக் கட்டில் எடுத்துப் போடப்பட்டது. அவள் உழைப்பில் வாங்கிய மெத்தை அக்கட்டிலில் இருந்து அகற்றப்பட்டு…..பழைய ஈச்சம் பாய் விரிக்கப்பட்டது.

சொந்தவீடு…..

எல்லா மனிதர்களையும் போல் என் அன்னைக்கும் அது மிகப்பெரும் கனவாக இருந்த காலமது. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்…. ஒருநாள் மாலை நானும் என் தம்பியும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாலையில் என் அம்மாவும், அப்பாவும் எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தாங்கள் வாங்கிய அந்த புதிய காலிமனையை காண்பிக்க அழைத்து சென்றார்கள். அப்போது அந்த தெருவில் ஓரிரு வீடுகளே இருந்தது. எங்கள் இடத்தில் கருவேலஞ் செடிகளும், காய்ந்து போன புதர்களும் மண்டிக் கிடந்தன. அதனை விலக்கியபடி எங்களை அழைத்துச் சென்று அதன் எல்லைகளை காண்பித்தார்கள். அந்த இடம் மொத்தம் பத்து செண்ட் என குறிப்பிட்டார்கள். நாங்கள் ஏன் ஏக்கர் கணக்கில் வாங்கவில்லை என கேட்ட போது என் அம்மா சிரித்தபடி” நீங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சு அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஏக்கர் கணக்குல வாங்கி கொடுங்கடா….” என்றாள். எங்களுக்கு அப்போது அது ஏமாற்றமாக இருந்தாலும் அவர்களது உற்சாகத்தில் அது வீடு வந்து சேரும் போது மறைந்து போனது.

அன்றிலிருந்து நாங்கள் அந்த வீடு கட்டி குடிவந்த நாள் வரையிலான ஒருவருடத்திற்கும் மேலான காலத்தின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அவளுக்கு அந்த வீடு பற்றிய எண்ணத்தோடும்,கனவுகளோடுமே கழிந்தது. எங்கள் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவள் தனது ரசனைக்கேற்ப செதுக்கி வந்தாள். வீட்டை எப்படி அமைத்தால் வெளிச்சம் அதிகம் இருக்கும்….? என்ன கற்களை தரைக்கு பயன்படுத்தினால் உஷ்ணம் குறைவாக இருக்கும்…..? என்ன வண்ணத்தை ஒவ்வொரு அறைக்கும் அடிக்க வேண்டும்…? என்பது முதல் படுக்கை அறையினுள்ளே குளியலறையும், கழிப்பறையும் இருந்தால் எனக்கும் ,தம்பிக்கும் திருமணமாகி வரப்போகும் மருமகள்களுக்கு வசதியாக இருக்கும் என்பது வரை அவள் யோசித்து யோசித்து கட்டிய வீடு அது.

அப்படி அவள் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு தன் எஜமானியை முதலும் கடைசியுமாக வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தது……

அதிகாலை 7.00 மணியளவில் என் அப்பாவும், பாட்டியும், வேலைக்கார அக்காவும் என் அம்மாவுடன் ஆம்புலன்சில் வந்திறங்கினார்கள்.

என் தாய் வெள்ளைத்துணிகளால் சுற்றிப்பட்ட ஒரு மனிதப் பொட்டலமாய் வீட்டிற்குள் எடுத்துவரப்பட்டாள். மரண ஓலங்களோடு அவள் அந்த கட்டிலில் கிடத்தப்பட்டாள். என் தாயின் சடலத்தின் மீது விழுந்து அழுதுக்கொண்டிருந்தவர்களை விலக்கி நான் அவள் முகத்தின் மீது போர்த்தியிருந்த துணியை விலக்கினேன்…… வாடிய மலரைப் போன்று அவளது முகம் காய்ந்து போயிருந்தது. அவள் எப்படி எப்போதும் நித்திரையில் அரைக்கண்கள் திறந்தபடி தூங்குவாளோ அப்படியே அப்போதும் அவளது கண்களும் பாதி திறந்தபடியே இருந்தது. அவள் உதடுகள் என்னிடம் ஏதோ சொல்ல துடுத்தது போல் பிளந்து காணப்பட்டது. அதில் அவளது இடைப்பல்லும் கொஞ்சம் தெரிந்தது. நான் அவளது கன்னங்களை என் கைகளால் பற்றி அள்ளியபோது அவளது நாசியிலிருந்த இரத்தம் என் கைகளை நனைத்தது. என் கைகள் எங்கும் என் தாயின் குருதி பரவியது……

அதுவரை எனக்குள் சிறைப்பட்டு கிடந்த நான் என்னையும் மீறி வாய்விட்டு ”அம்மாஆஆஆஆஆஆஅ…….”எனக் கதறினேன். நான் சின்னதாக முனங்கினாலே பதறி துடிப்பவள் என் கதறல்களை கேட்டும் அமைதியாகவே இருந்தாள்………….

அன்று மாலையில் அவளுக்கு அந்தோனியார் கோயிலில் வைத்து இரங்கல் பூசை நடந்தது.எழு பாதிரிமார்கள் அந்த பூசையை வைத்தார்கள். அப்போது அந்த பூசையில் செய்யப்பட்ட பிரசங்கத்தில் ஒரு பாதிரியார் இப்படி குறிப்பிட்டார்…..

“மலர்கள் செடிகளில் முளைத்தாலும் அவைகள் அனைத்துமே அந்த தோட்டத்தின் எஜமானனுக்கே சொந்தம்…. அந்த தோட்டத்தின் எஜமானனுக்கு தன் மலர்களை எப்போது கொய்ய வேண்டும் என நன்றாக தெரியும். அவன் தனக்கு உகந்தமான நேரத்தில் அந்த மலரை கொய்துவிடுவான். மலரினை செடியிழந்தாலும் அது உரியவனிடமே சென்றிருப்பதை அவைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்…. தேவன் தனக்கு உகந்தமான மகளை தன்னிடத்தே அழைத்து கொண்டுவிட்டார்…..”என்றார்.

நாம் உணர்வுகளற்ற மரமோ….. செடியோ…. அல்லது உயிர் தழைத்தலும், இனப்பெருக்கமும் மட்டுமே கொண்ட ஆஃறிணைகளோ அல்ல. நாம் தான்தோன்றிகளும் அல்ல.

நாம் மாறாத அன்பும், வற்றாத காதலும், பிரியாத நேசமும் மிக்க மனிதசமூகமல்லவா…..?.

நாம் நமது உயிர் தழைக்க வேண்டும் என மட்டுமே வாழ்பவர்கள் அல்ல…. மாறாக தியாகமும், விட்டுக்கொடுத்தலும், பகிர்தலும் நிரம்பிய வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் அல்லவா….?

அப்படியிருக்கும் போது நாம் காதலோடு நேசித்த உறவுகள் நமக்கு சொந்தமானவையல்லவா…..? நமக்கு சொந்தமானதை “மரணம்” பிடுங்கிக் கொள்ளும் போது நமக்கு வலிக்காதா….?

”மரணம்” இயற்கையின் நிலையான விதியாக இருக்கலாம்……ஆனால் அழியாத நம் நினைவுகளிடத்தே மரணமும், இயற்கையும் தோற்ற போகின்றது!!!

என் தாயின் உடலை மண்ணில் புதைக்கும் முன் அவள் பெட்டியின் அருகே மண்டியிட்டு நான் அவள்: காதுகளில்…..

”அம்மா…..

நான் உன்னை இன்று

இங்கு புதைக்கவில்லை……

என்னுள் உன்னை விதைக்கிறேன்….”எனச் சொல்லி என் தாயின் நெற்றியில் இட்டேன் என் கடைசி முத்தத்தை………..!!!!!!!!!!!!!


முடிந்தது.......!!!!!


என் தேவதையின் சரிதை.....13


இது ஒரு தொடர் பதிவு......

வயிறு நிறைய இரையை நிரப்பிக் கொண்டு குந்தானிக் குலுங்க குண்டியை ஆட்டியபடி நகரும் பன்னிக் குட்டியை போல் பேருந்து நகர முடியாமல் நகர துவங்கியது. மனித நெருக்கம் ஒரு அடர்த்தியான வெக்கையை பேருந்துக்குள் பாய்ச்சி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பேருந்து வேகமெடுக்க எடுக்க…. அந்த வெக்கை குறைந்து காற்றின் கரங்கள் தீண்ட ஆரம்பித்தன.

எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. என்னை ஒருவித மனச்சோர்வு அழுத்திக் கொண்டிருந்தது. அம்மாவை பற்றிய ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. இடையிடையே என் காதலியும் வந்து போனாள். ஆனால் அப்படி எண்ணங்கள் சிதறும் போதெல்லாம் நான் என்னையே எனக்குள் கடிந்து கொண்டு என் மன ஓட்டத்தை என் அம்மாவை மையப்படுத்தியே இருக்குமாறு மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு சொல்ல முடியாத ஒரு குழப்பமான போராட்டம் எனக்குள் அரங்கேறிக் கொண்டிருந்தது.

என் வாழ்வில் அப்படி ஒரு நிம்மதி இழந்த…. குழப்பமான நாளை நான் அதுவரை எதிர் கொண்டதேயில்லை. அலைகழிப்பில் இருந்த என் மனதில் இதுதான் என் தாயின் கடைசி நாளாக இருக்குமோ என என்னுள் ஒரு எண்ணம் தோன்றியது. அது ……அப்படி…. நிச்சயம் இருக்க கூடாது என எனக்குள் விகாரமாக சொல்லி நானே மறுத்துக் கொண்டேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் தோன்றவே செய்தது. அது எனக்கு மிக கொடூரமான மனச் சித்ரவதையை அளித்தது. இப்படியே குழம்பிக் கொண்டிருந்தவாறே என்னையும் அறியாமல் தூங்கிப் போனேன்.

பேருந்து மேலக்கரந்தையில் ஒரு மோட்டலில் நிறுத்தப்பட்ட போதே விழிப்பு தட்டியது. என் காதருகே ஒருவன் பேருந்துக்கு கீழே நின்றபடி…..”வண்டி ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிஷம் நிக்கும்… காபி….டீ…..டிபன் சாப்புடுறவுங்க சாப்பிடலாம்…..” என கறைந்து கொண்டிருந்தான்.

நானோ கீழே இறங்க விருப்பமற்றவனாக என் இருக்கையிலே அமர்ந்திருந்தேன்……பேருந்தே காலியாகி இருந்தது தன்னை ஆசுவாசப் படுத்துக் கொள்ள. மாமாவும், தம்பியும் கீழே இறங்கியபடி என்னை டீ குடிக்க அழைத்தார்கள். நான் வர மறுத்ததும். அவர்கள் சென்றார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் தம்பியை தேநீர் வாங்க சொல்லிவிட்டு மாமா அங்கிருந்த வாடகை தொலைப்பேசி கூண்டிற்குள் நுழைந்தார்…… ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும் மாமாவின் அழுகுரல் என் ஜன்னலோரம் கேட்டது. என் தம்பியும் அவர் பக்கத்தில் நின்று கொண்டு விசும்பிக் கொண்டிருந்தான்.

அவர் என்னை பார்த்து,” டேய் அம்மா….. நம்மள அநாதையா விட்டிட்டு போயிட்டாடா…..” என அலறிய போது….

நான் பாய்ந்தோடி கீழி இறங்கி அவர் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு “யார்கிட்ட என்ன பேசுற…..? இதையே வேற எவனாவது சொல்லியிருப்பான்னா… அவன் தலை இந்நேரம் தரையில கிடக்கும்…..” என கிட்டத்தட்ட ஒரு மிருகமாகவே மாறி கத்தியபடி நான் அவரை ஏறத்தாழ அடிக்கவே பாய்ந்தேன்.

மிகப்பெரும் மனப்போராட்டத்தோடும், குற்றவுணர்வோடும் தவித்துக் கொண்டிருந்த என்னிடம் அவர் அப்படி சொன்னபோது…..என் மனசாட்சியின் குரலாகவே அவரது குரல் எனக்கு ஒலித்தது. நான் என் மீதான கோபத்தையே அவர்மீது வெளிப்படுத்தி நின்றேன்.

அங்கிருந்த அத்தனை பேரும் என்னமோ ஏதோவென்று எங்களை நெருங்கிய சமயம்……

“அப்பா…. இப்பதாண்டா போன்ல சொன்னாங்க…..” என அவரும் பெருங்குரலெடுத்தார். எனக்கு எதுவும் புரியாமல் செயலற்று அவர் சட்டையை பற்றியவாறே நின்று கொண்டிருந்தேன். அவர் என்னை அணைத்துக் கொண்டார். நிச்சயம் நான் அப்போது அழவில்லை. எனக்குள் கோபமும்…. ஒருவகையான மரத்துப் போன நிலையுமே மேலோங்கியது. என் தம்பியும் என் மாமாவை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

நான் என்னை அவரிடம் இருந்து விடுவித்துக் கொண்டு…..” அப்ப நாங்க அநாதையாயிட்டோமா….?” என்று கேட்டேன்.

அவர் எங்களை அணைத்துக் கொண்டு ”அப்படி சொல்லாதடா…..அப்படி சொல்லாத….”என மீண்டும் அழ ஆரம்பித்தார். எங்களை சுற்றி நின்றவர்கள் ஒருவாறு எங்களை தேற்றி ஆசுவாசப்படுத்த முயற்சித்தனர்.

என் மாமா தான் முதலில் சுதாகரித்து கொண்டார். என் தம்பி விசும்பிக் கொண்டே இருந்தான். நான் ஒரு பிணத்தைப் போல் அவர்கள் பின் சென்றேன்.

“இனிமேல் நாம மதுரைக்கு போக வேண்டாம்….. நம்ம ஊருக்கே போயிருவோம்….. அப்பா அப்படித்தான் சொன்னாங்க…..” என்றபடி அங்கே தூத்துக்குடிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த பேருந்தில் எங்களை ஏற்றினார்.

என் அம்மாவிற்கு “மரணம்” என்ற வார்த்தையே பிடிக்காது. அவள் பொதுவாக இறந்தவர்கள் வீட்டிற்கு கூட செல்ல விரும்பமாட்டாள். ஆம்! மரணம் அவளுக்கு ஒருவித பயமும் தான்.

ஏனென்றால் அவள் வாழ்வை அப்படி நேசித்தாள். பொதுவாகவே அவளுக்கு ”பிறந்தாள்” என்பதை ஒரு கொண்டாட்டமான நாளாகவே பார்க்கும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு வருடமும் அவள் தனது பிறந்தநாளையும், எங்களது பிறந்தநாள்களையும் கொண்டாடும் வழக்கத்தை எங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தி இருந்தாள். ”பிறப்பு” என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட வரம் என்பாள். அப்படியொரு வரம் அருளப்பட்ட நாளை கொண்டாடுவது அவசியம் என்பது அவளது திண்ணமான கருத்து.

எங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மெழுகுவர்த்தி ஏற்றி அதை ஊதி அணைப்பதும், கேக் வெட்டுவதும் முக்கியமான சடங்காக இருந்தது. நான் அப்படியொரு எனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் என் அம்மாவிடம் எனது அந்த கேள்வியை கேட்டேன்………

’ஏன் கேக்கை மட்டும் வெட்டிக் கொடுக்காமல்…. அதில் தேவையில்லாமல் மெழுகுவர்த்தியை ஏற்றி அதை ஊதி அணைக்க வேண்டும்?’ என்று.

அதற்கு அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்து சொன்னாள் “நீ பிறக்குறதுக்கு முன்னாடி இருண்டு போயிருந்த எங்க வாழ்க்கைக்கு வெளக்கோட வெளிச்சம் அந்த இருளை விரட்டுறதுக்கு தேவப்பட்டுச்சு…..ஆனா நீ பிறந்த பின்னால எங்களுக்கு வெளக்கோட வெளிச்சம் தேவையில்லாம போச்சு…..ஏன்னா நீதான் எங்க வாழ்க்கைக்கான வெளிச்சம். இதுக்குத்தான் உன்னோட ஒவ்வொரு பிறந்தநாள் அன்ணைக்கும் இந்த மெழுவர்த்தி ஏத்தி ஊதி அணைக்கிறோம்….” என்றாள்.

அந்த அளவிற்கு வாழ்வை அர்த்தப்படுத்தி வாழ விரும்பியவள் என் அன்னை. அப்படி அணுவணுவாய் வாழ்வை யாசித்தவளை….. மரணம் பற்றிக் கொண்டது. எங்கள் குடும்பத்தின் வெளிச்சத்தை இருள் வென்றுவிட்டது. இனி எத்தனை கோடி விளக்கேற்றினாலும் அவளது ஓளிக்கு ஈடாகுமா…? நாங்கள் நிலையான இருளுக்குள் தள்ளப்பட்டோம். மரணம்! நிச்சயம் துயரத்தின் உச்சம் தான். ஆனால் மரணித்தவருக்கு அல்ல….. மரணித்தவரை நேசித்தவர்களுக்கு!

இலைகள் சருகாவது

இயற்கைதான்…..ஆனால்

மரங்கள் அவைகளை

பாரமாய் நினைப்பதில்லை-இருந்தபோதும்

காற்று அதனை அனுமதிப்பதில்லை.


........தொடரும்.

திங்கள், 6 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை.......12


இது ஒரு தொடர் பதிவு.....

நான் வீட்டிற்கு வந்து சேர மாலை 4.00 மணிக்கு மேல் ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்ததும் வேலைக்கார அக்காவிடம் அம்மாவை அட்மிட் செய்த விஷயத்தை சொல்லிவிட்டு அவள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் விபரங்களையும் எடுத்துக் கூறி அவளை கிளம்பச் செய்தேன்.

இரண்டொரு நாளில் என் அம்மாவின் சித்தி மகனுக்கு கல்யாணம் நடக்கவிருந்ததால் என் மாமா, தாத்தா, அத்தை, தம்பி, என எல்லோரும் அந்தக் கல்யாண வீட்டிற்கு சென்றிருந்தார்கள். என் அக்கா பிரவீணா (பெரியப்பா மகள்) மட்டும் வீட்டில் இருந்தாள். நான் அவளிடம் என் நண்பர்களை காணச் செல்வதாய் பொய் சொல்லிவிட்டு என் காதலியை பார்க்க கிளம்பிச் சென்றேன். ஆம்! அவளுக்கு நான் அவளது கல்லூரித் தோழியை காதலிப்பதை பிடிக்கவில்லை. என்னை பலமுறை எச்சரித்து விட்டிருந்தாள். நான் கேட்காதபடியால் என் காதலியுடனான நட்பையும் முறித்துக் கொண்டாள். அதனால் தான் அவளிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றேன்.

என் காதலியின் வீடோ முத்தையாபுரத்தில் அமைந்திருந்த HWP-(HEAVY WATER PLANT) குடியிருப்பில் இருந்தது. அவளது தந்தைக்கு அங்குதான் வேலை. அவர்கள் ”பிரம்மணின்” நெற்றியில் இருந்து முளைத்தவர்கள் என நம்பிக்கை கொண்டவர்கள். அத்தனை ஆச்சாரமான குடும்பம். அவளுக்கு ஒரு அக்காவும் உண்டு அவள் திருமணமாகி லண்டனில் செட்டில் ஆகியிருந்தாள்.

நான் எப்போதும் அவள் வீட்டிற்கு செல்லும் முன் அவளது வீட்டிற்கு அருகில் இருக்கும் தொலைப்பேசியில் அவளை தொடர்பு கொண்டு வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்துவிட்டு செல்வது தான் வழக்கம். அன்றும் அப்படி அவளுக்கு போன் செய்தேன். ஆனால் எடுத்ததோ அவளது அப்பா. அவரிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லாததால் லைனை துண்டித்தேன். மீண்டும் ஒரு பத்து நிமிடம் கழித்து அடித்தவுடன் அவள் எடுத்து அவள் தன் தோழியிடம் பேசுவது போல் பேசி அவளது அம்மாவும், அப்பாவும் கிளம்புவதற்கு நேரமாகும் என தகவல் சொன்னாள். ரகசிய மொழியில் என்னை காத்திருக்கவும் பணித்தாள். நான் காத்திருக்க துவங்கினேன்……

அவர்கள் செல்வதற்கு பதிலாய் நேரம் தான் சென்று கொண்டிருந்தது. மாலையை விரட்டிக் கொண்டு இருள் பரவத் துவங்கியது அவர்களும் கிளம்புவதாய் தெரியவில்லை. என் அம்மாவை அப்படி சுயநலத்தோடு விட்டுவிட்டு இங்கு என் காதலிக்காக காத்திருப்பதை எண்ணிப்பார்த்த போது ஏனோ காதலிக்கு பரிசளிக்க தாயின் இருதயத்தை எடுத்துச் சென்ற மகனின் கதை அப்போது என்னோடு ஒத்திருப்பதாய் தோன்றி என்னை என் மனம் இம்சித்தது.

நான் என் பொறுமையை இழந்து மீண்டும் அவளுக்கு தொடர்பு கொண்டேன். இம்முறை அவள் அம்மாதான் போனை எடுத்தாள் நான் கடுப்பில் மீண்டும் போனை துண்டித்துவிட்டேன். என் மனதோடு மிகப்பெரும் தர்மயுத்தமே நடத்த துவங்கியிருந்தேன். தர்மயுத்தங்களில் எப்போதுமே சுயநலமே வெல்லும் போல….என் மனம் எழுப்பிய குற்றவுணர்வுகளை குழி தோண்டி புதைத்து விட்டு மீண்டும் காத்திருக்க துவங்கினேன். மேலும் ஒரு பத்து பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் மீண்டும் அவளுக்கு போன் செய்தேன். ஒரு இரண்டு மூன்று அழைப்புகளில் அவளே எடுத்தாள்.

“சாரிப்பா….…இப்பதான்….just now…. அவா ரெண்டு பேரும் கெளம்பி போறா…..ரொம்ப நேரம் உன்ன காக்க வச்சுட்டேனா…..?....”.என அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே…..

எனக்கு எரிச்சலும், கோபம் தலைக்கேறியது….

“ஆமா நான் உன் வீட்டு நாய் பாரு நீ வா…ன்னா வரனும்…. போ….ன்னா போகனும்….. அங்க எங்கம்மாவ விட்டிட்டு ஒண்ணப் பாக்கனுன்னு தெருநாய் மாதிரி வந்து நிக்கேன் பாரு……எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்……”என்றபடி அவளது பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் பண்ணிவிட்டு என் வீட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டேன்.

நிச்சயம் அவளுக்கு நான் நடந்து கொண்டவிதம் கஷ்டமாக தான் இருந்திருக்கும். எனக்கும் அது தெரியும். அதேசமயத்தில் அவளுக்கும் இது புதிதல்ல……என்னையும் என் கோபத்தையும் சேர்த்து நேசிப்பவளாயிற்றே!

தவறுகளை செய்துவிட்டு வருந்துவது என் வாடிக்கைகளில் ஒன்றுதான். அவளை அப்படி கடிந்திருக்க கூடாது என்று தோன்றினாலும் அவளை அப்படி கடிந்து கொண்டது அப்போது எனக்குள் ஒரு மனநிறைவை அளித்தது. ஏதோ என் மனசாட்சியிடம் நான் குற்றமற்றவனைப் போல் நிருபித்த திருப்தி அப்போது எனக்குள் மேலோங்கியது.

.நான் வீட்டிற்கு சென்றபோது ஏறத்தாழ இரவு மணி 8.00ற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அங்கே எனக்காக என் அக்காவும், தாத்தாவும், தம்பியும் பதைபதைப்போடு காத்துக் கொண்டிருந்தார்கள். என் அம்மாவிற்கு திடீரென்று உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாகவும் அதனால் அவளை ICU-வில் வைத்திருப்பதாகவும் சொல்லி நான் காலதாமதமாய் சென்றமைக்காக என்னை கோபித்தும் கொண்டார்கள். என்னையும், தம்பியையும் உடனே அம்மா பார்க்க விரும்புவதாகவும் அதனால் நாங்கள் உடனே மதுரைக்கு செல்ல வேண்டும் எனவும் அக்கா சொன்னாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் மறுநாள் காலையில் வந்துவிடுவதாக சொன்னார்களே…..? அம்மாவும் ஓரளவுக்கு தெளிவாக இருந்தாளே…. ? எனக் குழப்பமாய் இருந்தது. அத்தோடு அப்போது இருந்த மனநிலையில் எனக்கு பிரயாணம் செய்ய விருப்பம் இருக்கவில்லை. அதனால் நான் அவர்களோடு வழக்காடாமல் என் அறைக்கு சென்று கட்டிலில் படுத்துக் கொண்டேன். என் அக்காவும்,தம்பியும் என் படுக்கை அறைக்குள் வந்தார்கள். நான் படுத்திருப்பதை எரிச்சலோடு பார்த்தவர்கள்…..

“ஏய்! நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை….. அங்க சித்தி சீரியஸா இருக்காங்கன்னு சொல்றேன்….. நீ என்னடான்னா இங்க வந்து உம்பாட்ல படுத்துக் கெடக்க….. நீயும் தம்பியும் கிளம்புங்க முதல்ல….” என சற்று கோபமாகவே என் மீது வார்த்தைகளை அள்ளித்தெளித்தாள் அக்கா.

”எனக்கு தெரியும்….. என்னால இப்ப போக முடியாது….. அவ்வளவுதான்….. வேணும்னா நீ அவன கூட்டிட்டு போயிட்டு வா…” என படுத்திருந்தபடியே அவள் மீது முட்டாள்தனமாய் கோபப்பட்டேன்.

“நீ சரிப்பட மாட்ட நான் மாமாவுக்கு போன் பண்ணிக்கிறேன்….” என்றபடி என் பதிலுக்கு கூட காத்திராமல் என் அறையை விட்டு அவளும், தம்பியும் வெளியேறினார்கள்.

ஆனால் எனக்கு நித்திரை பிடிக்கவில்லை. மனம் சோர்ந்து போயிருந்தது. ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டிருந்தது……அம்மாவை ICU-வில் வைத்திருப்பதாக சொன்ன பிறகும் நான் அங்கு செல்ல விருப்பமற்று இருந்தது எனக்கே குழப்பமாக இருந்தது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் ஒருவித சோம்பேறித்தனத்தாலும்….. சுயநலத்தாலும் நான் என்னை சுருக்கிக் கொண்டிருந்தேன்.

மனம் என்னும் ‘ராட்ஷசன்’ மிகப்பெரும் நீதிமானைப் போல என்னை தன் விமர்சனக் கூண்டிலேற்றி வதைத்துக் கொண்டிருந்தான். என்னால் அப்போது படுத்திருக்கவும் முடியாவில்லை. எழுந்து அமர்ந்து கொண்டேன். அறையின் ஒரு மூலையில் ஏதேதோ சிந்தனைகளோடு வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தேன் என்றே தெரியவில்லை……

திடீரென்று அப்போது என் தோள் தட்டி உசுப்பியது அந்த முரட்டுக் கரங்கள்…..

நான் எந்த திடுக்கிடலும் இல்லாமல் என் நிலை மறந்து அந்த கரங்களுக்கு சொந்தமான உருவத்தை தன்னிச்சையாக திரும்பி பார்த்தேன். மெல்ல உறைத்தது நின்று கொண்டிருப்பது என் தாய்மாமாவென்று.

“என்னடா நான் வந்தது கூட தெரியாம ஏதோ யோசிச்சுகிட்டு இருக்க….. அங்க அம்மா உன்னையும், தம்பியையும் வரச்சொல்லிக்கிட்டு இருக்கா….. நீ என்னடான்னா இப்படி உட்கார்ந்திருக்க…… எந்திரி வா நான் மாமாவும் உங்ககூட வாரேன்….கிளம்பு போவோம்……”

“மாமா…. இல்ல மாமா…. நான் வரல….. எனக்கு முடியல…..அதான் அவுங்க நாளைக்கு வந்திருவாங்கல்ல….?” எனக்கே உடன்பாடில்லாத அந்த பதிலை என் உதடுகள் உதிர்த்தன.

“என்னடா பேசுற நீ…… அவளே அங்க முடியாம கெடக்கா…. அவளுக்கு இப்ப உடனே உங்கள பாக்கனுங்குறா….. நீ என்னடான்னா இல்ல மாமா…. நொள்ள மாமாண்ட்டு கெடக்குற….என்ன புள்ளடா நீ….? சரி…சரி… கெளம்பு போவோம்….”

அவர் எப்போதும் இப்படித்தான். அவருக்கு தன் அக்கா சொல்வதெல்லாம் வேத வாக்குதான். என் அம்மா மீது அத்தனை பிரியம் அவருக்கு. அவளை அக்காவாக மட்டும் அல்ல…. ஒரு அன்னையாகவும் அவர் பாவித்ததே அதற்கு காரணம். அவருக்கு கல்யாணம் ஆன பின்பும் என் அம்மாவை கலந்து ஆலோசனை பெறாமல் எந்த ஒரு சிறு முடிவையும் தனிச்சையாக எடுத்ததே இல்லை. ஒரு தாய்மாமனுக்கான சர்வ இலக்கணங்களையும் பூர்த்தி செய்யும் என் தாயின் மறு பிரதி அவர். என்னளவில் என் தந்தையைவிட என்னை அதிகம் பாதித்த ஆண் அவர்தான். என் தாய்மீதான அவரது அன்பும், எங்கள் மீதான தனிப்பாசமும் அவர் மீது எனக்கு மரியாதையை அதிகரித்து இருந்தது. பொதுவாக நான் அவர் பேச்சை தட்டியதே இல்லை.

அதனால் வேறு வழியின்றி ஒருவித எரிச்சலோடு நானும் கிளம்பினேன். நானும்,என் தம்பியும், மாமாவும் எங்கள் ஊரின் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும் போது மணி ஏறத்தாழ இரவு11.30க்கு மேல் ஆகியிருந்தது. நாங்கள் ஒரு அரைமணி நேரம் அங்கு மதுரை பேருந்திற்காக காத்திருந்தோம். அப்போது என் மாமா நாங்கள் கிளம்பிய தகவலைச் சொல்ல மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அங்கிருந்த வாடகை தொலைப்பேசி ஒன்றின் மூலம் தொடர்பு கொண்டார். போனை வைத்துவிட்டு வரும் போது அவரது முகம் கருத்திருந்தது.

நான் “ மாமா….. அப்பா என்ன சொன்னாங்க….?”

“அம்மாவுக்கு ரொம்ப முடியலையாம்….. அதான் அப்பா ரொம்ப பயமா இருக்குன்னு சொல்றாங்க….. அம்மா….. உங்க ரெண்டு பேரையும் தான் ரொம்ப தேடுறாளாம்…..” என சொல்லியபடி தழுதழுத்தார்.

என் தம்பிக்கு ஏதும் சொல்ல முடியாதபடி விக்கித்து நின்று கொண்டிருந்தான். அவன் அப்போது பதினோராம் வகுப்பு படித்து கொண்டிருந்தாலும் அவன் ஒரு குழந்தையாகவே இருந்தான். அவன் அப்போது வீட்டின் நிலைமையை உணர்ந்திருக்கவில்லை. ஆனால் நிச்சயம் ஏதோ விபரீதம் இருப்பதாக உணர்ந்திருந்தான். அதனால் ஒருவித கலவரத்தோடு அவன் காணப்பட்டான்.

இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மதுரைக்கான பேருந்து ஒன்று வந்தது. அந்தப் பேருந்தில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. நாங்களும்…. எங்களோடு காத்துக் கொண்டிருந்த மற்ற பிரயாணிகளும் இருக்கைகள் பிடிப்பதற்காக விரைந்து ஓடினோம். கூட்டத்தின் நெரிச்சலை சமாளித்தப் படி ஒரு வழியாக பேருந்துக்குள் எங்களை திணித்துக் கொண்டோம்….. இருக்கைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டோம்.

பொதுவாகவே கூட்ட நெரிசலில் பேருந்தில் இடம் பிடிப்பது என்பது ஜீவமரண போராட்டத்தைப் போன்றது. அதில் வலிமைக்கும், இரக்கமற்ற சுயநலவாதிகளுக்குமே இருக்கைகள் கிடைக்கும். மனிதநேயம் முற்றிலும் மடிந்துபோன ஒரு போர்க் கோலக் காட்சியை அது ஒத்திருக்கும்.

மாமாவும்,தம்பியும் எனக்கு இரு இருக்கைகளுக்கு முந்தி அமர்ந்து கொண்டார்கள். எனக்கோ கடைசியில் உள்ள இருவர் அமரும் இருக்கையே கிடைத்தது. அதில் நான் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டேன்….. என் அருகில் உள்ள நடத்துனர் இடத்தை ஆக்கிரமிக்காமல். ஒரு பத்து பதினைந்து நிமிடத்தில் நடத்துனரும், ஓட்டுனரும் சாயாவும், சிகிரெட்டும் அடித்துவிட்டு வந்த பிறகு பேருந்து கிளம்பியது. அப்போது இரவு மணி 12.30 ஆகியிருந்தது.

அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி பிறந்துவிட்டிருந்தது…..


...............தொடரும்.