வியாழன், 7 ஜனவரி, 2016

ஒரு ஆண் எப்போது பிறக்கிறான்?




அவளது தொப்புள் கொடியில்
இருந்து பிரித்தெடுக்கும் போதா?-அல்லது
முலைக்காம்பை பிடித்து
பால் அருந்த துவங்கிய பின்பா?
ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்?

விரல் சூப்பியபடி வழியும் எச்சிலோடு
திரியும் போது அவள் காக்கா கடி கடித்து
தரும் மிட்டாயை திங்கும் போதா?-அல்லது
’கல்லா மண்ணா விளையாடுவோமா’ என்னும் போது
அவள் ‘வேணாப்பா நொண்டி லாடுவோம்பா’ என்னும் போதா?
ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்?

‘எக்கா கவிதா இருக்கா?’
‘இல்ல தம்பி அவ அப்பா ஏசுவாங்க’ என நாசுக்காய் சொல்லி
படாரென்று கதவை சாத்தியவளிடம்.
‘ஏம்மா இப்படிச் சொன்ன?’ என கேட்கும் மகளிடம்
‘இரு எய்த்து பேசுர வாய கிழிச்சு உப்பு வைக்கிறேன்’ என்பது  
கதவிடுக்குகள் வழியே நம் செவிக்குள் நுழையும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

குருகுருவென ரோமங்கள் துளிர்விடும் போதா?
குரலுடைந்து நண்பர்களோடு
‘எல உனக்குமால?’- என வினவும் போதா?-அல்லது
‘இத்துணூண்டு கெடந்தவ நேத்து வயசுக்கு வந்துட்டாளாமே-ல?
என கிசுகிசு பேசும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

’எல அவ ஏன் ஆளு….
நீ மரியாதையா சோலியப் பாரு’ என மிரட்டும் போதா?-ஆல்லது
‘எப ஒம் பிரண்டு புரிஞ்சிக்க மாட்டாளா…
நா அவள எவ்ளோ லவ் பண்ணுரம்னு’
‘நீ வேற தேவையில்லாம ஏடகூடமா பேசாத…
அவ அந்த டைப் இல்ல…
இனும எங்கிட்ட இதுமாறி பேசாத..’என்றபடி
தோழி தன் கண்ணீரை மறைக்க முயன்று
தோற்றுப்போகும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

‘எம்மா… உனக்கு வேற வேலையே இல்லயா
எப்ப பாரு நொய்யி நொய்யின்னு..
மனுச(ன்) இருக்குற கடுப்பு புரியாம’ என்றபடி
அவள் தந்த சோற்று தட்டை விசிறி அடிக்கும் போதா?-அல்லது
‘என்னடீ உம்மவன் போக்கே சரியில்ல’- என தந்தை தாயிடம்
எச்சரிக்கும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

’ஏண்டா கல்யாணம் வேண்டாம் வேண்டாமுங்குற?
எவளையாவது லவ் கிவ்வு பண்ணி தொலைக்கிறியா?’
‘எல மாப்ள வீட்ல கல்யாணம் பண்ணிக்கோன்னு
ஒரே டார்ச்சர்-ல..’
‘ஏம் மாப்ள செல்பு எடுக்கலையா?’ என நண்பன்
கேலி செய்யும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

‘சார் எங்க வீட்ல அவளுக்கு ஆள் நாத்தமே ஆவ மாட்டைக்கு..
எங்கம்மாளும் புரிஞ்சிக்காம நைய்யி நைய்யின்னு வாராக
ரெண்டுக்கும் நடுவுல நான் கெடந்துகிட்டு லோல்படுறேன்’
என சகாவிடம் புலம்பும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

வீடு வாங்க கையில் கழுத்தில் கிடந்ததை
அடகு வைக்கும் போதா?-அல்லது
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க
கால்கடுக்க தவம் கிடக்கும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

சுருட்டி விட்டு அழகுபார்த்த மயிர்
மண்டையை சொட்டையாக்கி சென்ற பின்பா?-அல்லது
உருக்கு போன்று இருந்த உடலை கவனிக்க நேரமின்றி
வீங்கிப் பெருத்து தொந்திகள் தொங்கிய பின்பா?-அல்லது
மருத்துவர் வளைத்து வளைத்து எழுதிய மருந்துகள்
மூன்று வேளை உணவாய் மாறி
சர்க்கரையும், உப்பும் சமநிலை தவறி
விடியலின் பொழுதை
‘தஸ்ஸு புஸ்ஸென’ நடை பயிற்சியோடு
எதிர் கொள்ளும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

ஊராரிடம் சான்றிதழல் வாங்க…
கழுத்து முட்டும் கடனெடுத்து
தாம்தூமென திருமணமெடுத்து
பார்த்து பார்த்து வளர்த்த மகளை
கண்ணீர் வடிய பிரியும் கணத்திலா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

காலம் புணர்ந்து முதமை தரித்து
வெள்ளிக் கம்பிகள் கலைந்த பொழுதில்
‘இந்தாங்க இந்த மாத்துரைய சாப்பிடுங்க…
மொதல்ல அந்த கைய மொறையில இருந்து எடுங்க…
என்னத்த யோசிச்சுகிட்டு கெடக்கீங்க’ என்றவளிடம்
கரங்களைப் பற்றி….
அவள் முகத்தை வாஞ்சையோடு ஏறிடும்போது
அந்த மெல்லிய புன்னகையை
உதட்டின் ஓரம் ஒதுக்கிவிட்டு
‘இது என்ன…? புள்ள இல்லா வீட்ல கிழவன்
துள்ளி வெளாடுன கதையால்ல இருக்கு’ என
பொய்கோபம் கொள்ளும் போதா?
எப்போது ஒரு ஆண் பிறக்கின்றான்?

நிச்சயமாய் தெரியவில்லை… ஆனால்
ஒன்று மட்டும் நிச்சயம்!!
ஒரு ஆண் பிறக்கின்ற ஒவ்வொரு கணத்திலும்…
நிஜமாகவோ… நினைவாகவோ….
ஒரு பெண் அவனுக்குள் பிரவேசிக்கின்றாள்!!
ஒருபோதும் பெண்ணின் தயவின்றி ஆண் பிறப்பதில்லை!!
ஏனெனில் ஆணின் உள் வடிவம்
அவனுளிருக்கும் பெண்மையாலே கட்டப்பட்டுள்ளது !!!!







புதன், 4 நவம்பர், 2015

தாம்பத்தியம்



தனிமை என்பது இன்பம்தான் – அதனை

திருமணம் தகர்தெரியும் போது

பேரின்பம் பிறக்கின்றது…

ஆம்! பேரின்பம் தான்…


மலர் தூவிய ராஜபாட்டையில்

இனிய உளவாக சிறுமுட்கள்

இடரும் போது….

ஊடல் பேரின்பம்தான்!!!


அலுத்து ஓய்ந்த இரவில்

ஆறுதல் ஒத்தட மிடும்

உதடுகள் பேரின்பம்தான!!!


அடைகாத்த  சிறகுகளை

அடமானமாய் கேட்கும்போது

சிறகற்று விரியும்

புதுவானம் பேரின்பம்தான்!!!


இனியநினைவுக் கண்ணாடி முன்-

நின்று கொள்ளுங்கள்… தாம்பத்தியம்!!!

காலத்தை வென்ற செருக்கோடு

நிலைத்துப் போகும் பேரின்பங்கள்!!!

நினைவுகள்…



பறவை போல் இருக்கிறாய்
இரவெல்லாம் பறக்கிறாய்
நெருங்கினால் எரிகிறாய்- நீ யாரோ?

மேகக் கூட்டம்
புணரும் வானில் தரிக்கிறாய்
கரையில் மோதும்
கடலின் அலையில் எழுகிறாய்
மலையில் வீசும்
தென்றல் காற்றில் மலர்கிறாய் - நீ யாரோ?

என்னை துரத்தும் பொழுதிலே
உன்னை தொலைத்து விடுகிறாய்
எனக்குள் இருக்கும் உன்னை
வெளியில் தேட சொல்கிறாய்
காற்றின் கரங்கள் பற்றியிழுக்க
மறுந்து மீண்டும் இணைகிறாய்- நீ யாரோ?

மரணம் வீழ்த்தி பிறக்கிறாய்
மீண்டும் மீண்டும் வருகிறாய்
உறங்கும் போதும் வருகிறாய்
உறங்க விடாமல் தடுக்கிறாய்
விழித்துக் கொண்டால் மடிகிறாய்
மடிந்தும் மீண்டும் துளிர்கிறாய்- நீ யாரோ?

வியாழன், 14 மே, 2015

வானமாகிப் போனவள்...

என் சிறகுகளின் வண்ணங்களால்
அறியப்பட்டவன் – நான்!
என் சிறகுகளின் வண்ணங்களால்
கவரப்பட்டவள்- அவள்!
நான் அவளுக்குரியவன் ஆனேன்…
அவள் என் இறகுகள் ஒவ்வொன்றாய்
கேட்கத் துவங்கினாள்….
நானும் பரிசளிக்கத் துவங்கினேன்.
என் இறகுகள் எல்லாம் உதிர்ந்து விட்டன….
அவள் என் வானமாகிப் போனாள்!!!!

ஒரு புத்தக வெளியீடும் சில அனுபவங்களும்....

"பதினாறாம் காம்பவுண்ட் "என்ற பெயரில் நான் எனது முதல் நாவலை எழுதி வெளியீட்டும் உள்ளேன். இங்கு நாவல் எழுதுவதை விட சவால் நிறைந்ததும், சோதனை மிகுந்ததுமாய் இருப்பது நாம் நமது படைப்பை பொது வெளிக்கு கொண்டுவருவதே ஆகும். நான் இந்த நாவலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்தேன். எதை எப்படி புத்தகமாக வெளியிடுவது? அதற்கு யாரை அணுக வேண்டும்? என பல கேள்விகளுடன் நான் கூகுளில் பதிப்பகத்தார் சிலரின் தொடர்பு எண்களையும், முகவரியையும் தேடி குறித்துக் கொண்டு ஒவ்வொன்றாய் தொடர்பு கொண்டேன். ஆசை யாரை விட்டது.... நான் தீவிர புத்தக வாசகனாதலால் சில பதிப்பகங்கள் மீது எனக்கு அளப்பெரிய மரியாதை இருந்தது... அந்த தினுசில் முதலில் ஒரு பிரபலமான பதிப்பகத்தை தொடர்பு கொண்டேன், அவர்களும் மிக மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும் என் படைப்பை பற்றி சில கேள்விகள் கேட்டு விட்டு அதன் தட்டச்சு பிரதி ஒன்றை அவர்களது முகவரிக்கு அனுப்பி வைக்க சொன்னார்கள். அப்படி அனுப்பிய பின் ஒரு மாதம் கழித்தே என்னை தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.
அந்த ஒரு மாதம் என் வாழ்நாளில் மறக்க முடியாது சில பல நாள், வார இதழ்களுக்கு நான் அளிக்க வேண்டிய பேட்டிகளுக்கு என்னை தயார் படுத்தி கொண்ட காலமது.இருக்காதா பின்னே! எத்தனை பெரிய பதிப்பகம் நம் படைப்பை அங்கீகரிக்க இருக்கிறது. நாமும் லேசுப்பட்டவரா தமிழ் இலக்கிய உலகை நெம்புகோலிட்டு தூக்கிவிடும் படைப்பையல்லவா வழங்கி இருக்கிறோம் என மிதமிதப்பில் திரிந்த காலமது. சரி! ஒருவழியாய் ஒரு மாதகாலம் ஒருண்டோடியது. நானும் பதிப்பகத்தாரை மீண்டும் தொடர்பு கொண்டேன். அவர்கள் மேலும் சில வாரங்கள் அவகாசம் கேட்டார்கள். நான் மீண்டும் காத்திருக்க துவங்கினேன்... ஆனால் இப்போது அவர்கள் மீது கொஞ்சம் எரிச்சல் அதிகரிக்க துவங்கியது. சில வாரங்கள் கழித்து தொடர்பு கொண்ட போது மேலும் சில காரணங்களை சொல்லி சில தினங்கள் கேட்டார்கள்... நான் கொஞ்ச கொஞ்சமாய் நம்பிக்கை இழக்க துவங்கினேன்... ஒருவழியாய் என் படைப்பு பிரசூரிக்க தகுதியற்றது என திருப்பி அனுப்பி வைத்தார்கள். நொந்து வெந்து அவலாய் போனேன் என்பார்களே! அப்படி ஆகிப்போனேன்.
அதிலிருந்து மீண்டு வர சில தினங்கள் பிடித்தது... மீண்டும் என் நண்பன் ஜெபாவின் வற்புறுத்தலால் வேறு சில பதிப்பகங்களை தொடர்பு கொள்ள துவங்கினேன். இம்முறை நான் பெரிய பதிப்பகங்களை அணுகாமல் சின்ன புதிய பதிப்பகங்களை அணுக துவங்கினேன்.சிலர் படைப்பை பற்றி எல்லாம் கேட்காமல் நேரடியாய் டீலில் இறங்கினார்கள். இருபதாயிரம், இருபத்தி ஐந்தாயிரம், முப்பதாயிரம் என அந்தக் குரல்கள் ஒலித்தது எனக்கு சபலம் தட்டினாலும் எனது நிதி நிலைமை ”பிம்பிலிக்கி பிலாபியாக....” இருந்தது.
காலம் கடந்தது காத்திருந்தேன், இந்த இடைப்பட்ட காலங்களில் முகநூலில் பதிப்பகத்தார் ஒவ்வொருவருக்காய் நட்பு கோரிக்கை வைத்து என் நண்பர்கள் வட்டத்துக்குள் உள் இழுத்துக் கொண்டேன். மெல்ல சாட்டிங்கை ஆன் செய்து விட்டு அவர்களது வருகைக்காக கொக்கைபோல் காத்திருந்தேன். ஒருநாள் ஒரு பெரிய பதிப்பகத்தின் உரிமையாளரும், கவிஞருமாய் இருப்பவரிடம் சாட்டிங்கை துவங்கினேன். அவரும் நல்ல மூடில் இருந்திருப்பார் போல நல்ல பேசிக் கொண்டு வந்தார்... நான் மெல்ல இப்படி ஒரு நாவல் எழுதியுள்ளேன் அதை தங்கள் பதிப்பகம் மூலம் பதிப்பிக்க என்ன செய்ய வேண்டும்? என கேட்டதும் தான் தாமதம் அவர் பதிலளிப்பதை நிறுத்திக் கொண்டார்.
வேறு ஒருவரை இப்படி தொடர்பு கொண்ட போது நான் பல விஷயங்கள் எழுத வேண்டி உள்ளது தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார்.நானும் எனது படைப்பை கெடப்பில் போட்டு விட்டு என் வேலைகளை பார்க்க துவங்கினேன். வங்கியில் பதவி உயர்வு அளித்து இராமநாதபுரம் அனுப்பி வைத்தார்கள்.... அடர் தனிமை வாசிப்பும் எழுத்துமாய் இருந்த போது எனது இந்த படைப்பினை மீண்டும் எழுத துவங்கினேன்.பெரிய மாற்றங்கள் என்று இல்லாமல் சின்ன சின்ன சேர்ப்புகள் செய்தேன்.
அதன் பிறகு எழுத்தாள நண்பர்கள் சிலருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அதில் தோழர்.மூர்த்தி மட்டும் படித்து விட்டு ”தோழா நல்லா வந்திருக்கு....” என்றார்.அவரது உதவியோடு வம்சி பதிப்பகத்தாரை தொடர்பு கொண்டேன்.... ஒரு அற்புதமான குடும்பம் எனக்கு கிடைத்தது...! என் புத்தகத்தை அவர்கள் அச்சிலேற்றியதை விட எனக்கு இன்பம் தருவித்தது தோழர்.ஷைலஜா அவர்கள் என் படைப்பு குறித்து சிலாகித்ததே!!! நிச்சயமாய் அவர்களுக்கு நன்றி மட்டும் சொல்லமாட்டேன்...ஏனெனில் அந்த ஒற்றைச் சொல்லால் நான் எதிர்வினை ஆற்ற விரும்பவில்லை, அதற்கு ஈடாய் வாழ்நாளுக்குமான எனது நட்பு.....!
சரி! புத்தகம் தான் வந்துவிட்டதே வெளியீடு எதற்கு என்ற மனநிலையில் தான் இருந்தேன். ஆனால் தோழர். ஷைலஜா அவர்கள் தான் டிசம்பர் மாதம் வெயிடலாம், சனவரியில் வெளியிடலாம் என ஒவ்வொன்றாய் சொல்லி வந்தார். ஒருகட்டத்தில் எனக்கும் அப்படி நடத்த வேண்டும் என ஆசை வந்தது.ஒருவழியாய் பிப்ரவிரி 22 நடத்திவிடலாம் என முடிவு செய்தோம். த.மு.எ.க.ச தோழர்கள் கேட்டு கொண்டதால் அந்த தேதியையும் மாற்றினோம். மார்ச்1 என முடிவானது. ஆனால் தோழர்.ஷைலஜா அவர்கள் தவிர்க்கவே முடியாத காரணங்களால் வர இயலாமல் போனது. இந்த நேரங்களில் எல்லாம் அண்ணன் மாதவராஜின் அரவணைப்பும், ஊக்கமும் ஆறுதலாய் இருந்தது. ஒருவழியாய் புத்தகம் வெளியிட பட்டது...உச்சி முகர்தலும், சின்னச் சின்ன விமர்சனங்களுமாய் என் காயங்களுக்கு மருந்தாகிக் கொண்டிருக்கிறது.... இந்த கனத்தில் வள்ளுவனின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது...” தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்...”என்று!!!!

இந்திய கோயில்கள் விற்பனைக்கு!

கிராம வங்கிகள் என்னும் ”ஆபரணத்தை” தனியார்களுக்கு சூட்டி அழகு பார்க்க முடிவு செய்து விட்டது இந்திய அரசாங்கம். ஆம்! கால் நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக நம் தேசமெங்கும் உள்ள கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டில் பெரும்பங்காற்றி வரும் கிராம வங்கிகளின் பங்குகளை ”மறுமுதலீடு” என்னும் பெயரில் தனியார்கள் வசமாகிறது.
1975-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கம் ஒரு சிறப்பு சட்டத்தின் மூலம் கிராம பொருளாதார மேம்பாட்டிற்காக தேசமெங்கும் கிராம வங்கிகள் துவங்க முடிவு செய்தது. “இந்தியா பெரு நகரங்களில் வாழவில்லை… மாறாக அது கிராமங்களில் தான் வாழ்கிறது” என்றுரைத்த அண்ணல் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2, 1976-ல் முதன்முதலாக ஐந்து கிராம வங்கிகள் தேசமெங்கும் துவங்கப்பட்டது.
அதுவரை வங்கிகள் பெரும் நகரங்களில் மாத்திரம் இயங்கி வந்த சூழலில் எளிய கிராம மக்களுக்கும் வங்கிச்சேவை சென்றடைந்தது. புளிச் சட்டிகளில் சுருட்டி பதுக்கி பாதுக்காக்கப் பட்டு வந்த அந்த எளிய மனிதர்களின் வேர்வை மிச்சங்களை பாதுகாப்பாய் சேமிக்க வழி செய்து அவைகளை வட்டி போட்டு பெருக்கி அந்த எளிய மனிதர்களுக்கென்று ஒரு நிதி ஆதாரத்தை அமைத்து கொடுத்தது கிராம வங்கிகள். கந்துவட்டிக்கு கடன் பட்டு மீளாதுயரில் தவித்த விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுத்து விவசாயத்தை மாத்திரமல்ல அவர்களது மரியாதையையும் மீட்டெடுத்து கொடுத்தது கிராம வங்கிகள். இப்படியாக லாப நோக்கோடு மாத்திரம் நின்றுவிடாமல் ஒரு சமூகப் பார்வையோடும் கிராம வங்கிகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது மொத்தம் 56 கிராம வங்கிகள், ஏறத்தாழ 19000 கிளைகளோடு 27 மாநிலங்களில் உள்ள 639 மாவட்டங்களில் தேசமெங்கும் இயங்கி வருகிறது. இதில் 18000 கிளைகள் வரை கிராமங்களில் மாத்திரம் இயங்கி வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பாண்டியன் கிராம வங்கி 272 கிளைகளோடும், வட மாவட்டங்களில் பல்லவன் கிராம வங்கி 150-க்கும் மேற்பட்ட கிளைகளோடும் இயங்கி வருகிறது. இன்று வரை சுமார் 15.5 கோடி மக்கள் வரை கிராம வங்கிகளின் சேவையால் பயனடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் கோடிகள் வரை வைப்பு நிதியாக திரட்டப்பட்டுள்ளது அதில் ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய்கள் வரை ஏழை எளிய மக்களுக்கு கடனாக வழங்கிப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான வங்கிச் சேவைக்குப் பின்னால் வெறும் 196 கோடி ரூபாய்கள் தான் அரசாங்க பங்கு முதலீடாக இதுவரை உள்ளது. கிராம வங்கிகளின் மூலம் இதுவரை திரட்டப்பட்ட லாப இருப்பானது பதினைந்தாயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளது. இப்படி லாபகரமாய் இயங்கி வரும் அரசு நிறுவனத்தை தான் “மறுமுதலீட்டு தேவை” என்னும் காரணத்தை சொல்லி தனியார்களிடம் கொடுக்க துடிக்கிறது மோடி அரசாங்கம்.
இதுவரை கிராம வங்கிகளின் பங்குகள் 50% மத்திய அரசிடமும், 35% ஸ்பான்ஸர் (தாய்) வங்கியிடமும், 15% மாநில அரசிடமும் இருந்து வந்தது. தற்போது இதில் மூன்று முக்கிய சட்டதிருத்தங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது, இதுவரை கிராம வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி மூலதனத்தை 2000 கோடியாக உயர்த்தியுள்ளார்கள். அப்படி உயர்த்துவதற்கு தற்போது உள்ள பங்குகளில் 51% பங்குகளை மாத்திரம் இவர்கள் வைத்துக் கொண்டு மீதம் 49% பங்குகளை தனியார்களுக்கு கொடுக்க வசதியாக சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக குழுமத்தில் அதிகப்பட்சமாய் மூன்று இயக்குனர்கள் வரை தனியார் பங்குதாரர்கள் நியமித்து கொள்ளும் வகையிலும் வழிவகை செய்துள்ளார்கள்.
இதற்கு மோடி அரசு சொல்லும் காரணம் இன்னும் தினுசானது. அதாவது கிராம வங்கிகள் லாபகரமாய் இயங்கி வருகிறதாம். அவைகளை மேலும் சிறப்பாய் இயங்கச் செய்ய வேண்டுமானால் தனியார்கள் தான் முதலீடு செய்ய வேண்டுமாம். அரசாங்கத்திடம் இப்படி லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனத்தில் ”மறுமுதலீடு” செய்ய பணம் இல்லையாம். ஆகவே, லட்சக்கணக்கான கோடிகளின் வர்த்தகத்தை சில ஆயிரம் கோடிகளுக்கு அடகு வைக்க போகிறார்களாம்!
கிராம வங்கிகளின் இந்த அசூர வளர்ச்சிக்கு பின்னால் இருப்பது 80000 கிராம வங்கி ஊழியர்களின் கால் நூற்றாண்டுக்கும் மேலான உறிஞ்சப்பட்ட அவலம் நிறைந்த வாழ்வும், ”அப்பாவித்தனமான” கிராம மக்களின் அரசாங்கத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் தான்! உலகமெங்கும் உள்ள தனியார் பெரும் வங்கிகள் 2008-ஆம் ஆண்டில் துவங்கிய மாபெரும் பொருளாதார வீழ்ச்சியில் தரைமட்டமான போது இந்திய பொதுத்துறை வங்கிகள் மாத்திரம் சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் கம்பீரமாய் உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் பொதுத்துறையாய் நாம் நீடிப்பதாலே இந்திய வங்கிகள் பாதுகாக்கப்பட்டது என மார்தட்டிக் கொண்டாலும், அவர்களே தேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதிலே முன்னோடிகள்! ஆட்சிகள் மாறினாலும் நம் தேசத்தில் இந்த தனியார் மோக அவலக் காட்சிகள் மட்டும் மாறவில்லை.
ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்றதினால் தான் அங்கு கார்ப்பரேட்களுக்கு அதிக கடன் கொடுக்கப்பட்டு அவைகள் வராக்கடன்களாக முடங்கியுள்ளது. அந்த நிலையை கிராம வங்கிகளுக்கும் தொடர அனுமதிப்பது எப்படி நியாயமாகும்? கிராம மக்களின் சேமிப்பையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும்? இந்த அவலங்களுக்கு எதிராக கிராம வங்கி ஊழியர்கள் தேசமெங்கும் தங்களது ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலை உரத்து எழுப்பி வருகிறார்கள்.
”பொதுத்துறை நிறுவனங்களை இந்திய ஜனநாயக நாட்டின் கோயில்கள்” என முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு வர்ணித்தார். இன்றைய பாரத பிரதமருக்கோ அக்கோயில்களில் அம்பானிகளையும், அதானிகளையும் கொலுவேற்றி பார்ப்பதே பெருங்கடமையாகிப் போனது