புதன், 30 அக்டோபர், 2013

தாயுமானவர்

அவருக்கும் எனக்கும் எந்த இரத்த உறவுமில்லை. அவர் என் பால்ய கால சிநேகிதனும் இல்லை. ஆனால் என் தாயின் மரணத்திற்கு நிகரான வலியை அவரது பணி நிறைவு எனக்கு கொடுக்கிறது… இதில் எள்ளளவும் மிகையில்லை!

“தொழிற்சங்கம்” என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவனாய் என் தாயின் மறைவிற்கு பிறகு கருணை அடிப்படையில் வங்கிப் பணிக்கு சேர்ந்த அன்றே அந்த கருத்த மெலிந்த உருவம் சங்க உறுப்பினர் படிவத்துடன் தலைமை அலுவலகத்தில் என்னை எதிர் கொண்டது. நான் தயங்கினாலும் மிக எளிதாய் என் கையொப்பத்தை அவரால் வாங்க முடிந்தது.

அவர்தான் அண்ணன்.சோலைமாணிக்கம். அவரை நான் ”அண்ணன்” என்று அழைத்தாலும் அவர் என் தாயுமானவர்!

இளம் வயதில் பெற்ற தாயை பறிகொடுப்பதே தனிமனித சோகத்தின் உச்சம் என எண்ணிக் கொண்டிருந்தவனை, என் விரல் பற்றி என் சின்னச்சிறிய உலகில் இருந்து என்னை விடுவித்தார். இந்த பரந்த உலகில் அன்றாட விதிகளாக திணிக்கப்பட்ட சமூக அவலங்களை, சமூக அநீதிகளை எனக்கு காட்சிப் படுத்தினார். ஒரு தனிமனிதனால் அசாத்தியங்களை சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தார்.

அது 2007-என நினைக்கிறேன்… புதுதில்லியில் உள்ள ஜந்தர்மந்திர் என்னும் இடத்திற்கு என்னையும், என் தோழன்.அருணையும் அழைத்து சென்றார். அங்கே நமது அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாய் ஒருநாள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றோம். அங்கு தேசமெங்கும் இருந்து பல்வேறு கோரிக்கைகளோடு மக்கள் பந்தலிட்டு நாட்கணக்காய்…. மாதக்கணக்காய்… ஏன் வருடக்கணக்காய் போராடிக் கொண்டிருப்பதை காண்பித்தார்.காஷ்மீர் பிரச்சனை முதல் திபெத் தனிநாடு கோரிக்கை வரை ஒவ்வொருவரும் மிக நீண்ட வரலாறுகள் கொண்ட கோரிக்கைகளோடு போராடிக் கொண்டிருப்பதை கண்டோம்.
ஒரு பக்கம் நகரவே முடியாமல் பரபரத்த தலைநகரமாய் காட்சியளித்த புதுதில்லி மறுபக்கம் நம்பிக்கையோடு நகராமல் காத்திருந்து போராடுவதுமாய் எங்களுக்கு அங்கு இருவேறு இந்தியா காட்சியானது.
இப்படியாக அவர் எனது பிரமைகளை அத்தனை இயல்பாய் தகர்த்து வந்தார்.என் தயக்கங்களை அவர் அனுமதித்ததே இல்லை… ஆம்! ஒரு பெருவெள்ளத்தைப் போல் என்னை அவர் திசையில் அடித்துச் செல்ல துவங்கினார். அவர் ஒருபோதும் என் முன் அமர்ந்து தொழிற்சங்க பாடங்களை ஒப்புவித்ததில்லை…. அப்படி அவருக்கு செய்யவும் தெரியாது. ஆனால் தனது சுயநலமற்ற,ஆளுமை நிறைந்த செயல்பாடுகளால் மெல்லமெல்ல பெரும் தாக்கத்தோடு என்னுள் ஊடுருவ துவங்கினார்.

ஒரு மத்தியதர தொழிற்சங்கத்தை தலைமையேற்று பெரும்பான்மையோடு நடத்துவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதனையும் அத்தனை சமூக பார்வையோடும், தீவரத்தோடும் முன்னெடுப்பது என்பது பறக்கும் கொக்கின் தலையில் இருக்கும் வெண்ணையை குறிபார்த்து அடிப்பதற்கு ஒப்பானது.

மிகப்பெரும் ஆளுமையும், சுவாரஸ்யமான பேச்சாற்றலும் அவருக்கு இயல்பாய் அமைந்த குணாம்சங்கள். எவரிடத்தில், எந்நேரத்தில் என்ன தொனியில் பேச வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர். பலமுறை அவரோடு நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற அனுபவங்கள் எனக்கு உண்டு. பிரதான கோரிக்கைகளை அவர் எடுத்தவுடன் பேசிவிட மாட்டார். நிர்வாகத்திற்கு நாங்கள் எது குறித்து பேச வந்துள்ளோம் என தெரிந்தும் அமைதியாக எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அனுமதித்து அதற்கான பதில்களோடு காத்திருப்பார்கள், இவர் சம்பந்தமேயில்லாமல் வேறு ஒரு இடத்தில், சமயங்களில் நிர்வாகிகள் அணிந்திருக்கும் உடையின் விலையை கேட்டு என அவர்களது இறுக்கத்தை உடைத்து இயல்பாய் வேறுபல விஷயங்களைப் பற்றி உரையாடத் துவங்குவார். சகஜமாய் அவர்கள் உரையாடத் துவங்கும் போது கோரிக்கைகளை கடைவிரிப்பார். அவர்கள் தயாரிப்புகள் எல்லாம் தகர்ந்து போய் இவரது தாளத்திற்கு தலையசைக்க ஆரம்பித்திருப்பர்.

இப்படித்தான் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அறுதியிட்டு அவர் ஒருநடைமுறையை கடைபிடித்தது கிடையாது. ஆனால் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஒருவிதமாகவும்,வெற்றிகரமான இயக்கங்களுக்கு பிறகான காலக்கட்டங்களில் ஒருவிதமாகவும், என பலவிதங்களில் காலசூழலுக்கு ஏற்ப அவர் நடத்தியக் காட்டிய பேச்சுவார்த்தைகள் என்னளவில் எந்த பல்கலைகழகத்தில் கற்றுப் பெற முடியாத அற்புத அனுபவப் பாடங்கள்.

வெகுஜன இயக்கங்களில் எதிரிகளை அடையாளம் கண்டு கொள்வது அத்தனை முக்கியமானது. நாம் நம் எதிரிகளை அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை எனில் நாம் எத்தனை உன்னதமான நோக்கத்திற்காகவும் சமரசமற்று போராடியும் பயனற்று போகும்! இன்றைய சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பறிக்கும் எதிரிகளாக அதிகாரவர்க்கங்கள் மட்டும் இருப்பதில்லை பல சந்தர்பங்களில் அடிமை மனோபாவத்தின் எச்சங்களாக சில ஞமிலிகளும் இருப்பார்கள்! நாம் அவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டே நாம் நமது இயக்கங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும்.அப்படி நபர்களை எடைபோடுவதில் தோழர்.சோலைமாணிக்கம் வல்லவர். ஒவ்வொரு நபரையும் அவரது இயல்புகளோடு அறிந்து வைத்திருப்பார். ஆகவே அவரால் எதிரிகளை எளிதில் அடையாளப் படுத்த முடியும். ஆகவே முன் கூட்டியே சில விஷயங்களை அனுமானித்துக் கொண்டு அவர் இயக்கங்களை தடையின்றி முன்னெடுப்பதையும் நான் ஆச்சர்யத்தோடு வியந்து பார்த்திருக்கிறேன்.

அதேபோல் பாண்டியன் கிராம வங்கியின் ஒவ்வொரு ஊழியருக்கும் மாத்திரமல்ல அவர்தம் குடும்பத்தினருக்கும் மிகவும் பரிச்சயமான நபர் அவர்! அவருக்கு ஆயிரம் காதுகளும், ஆயிரம் கண்களும் உண்டோ என பலமுறை நான் வியந்துள்ளேன். ஏனெனில் வங்கியில் எந்தக் கிளையில் எந்தப் பிரச்சனை நடந்தாலும் அது நிர்வாகத்தின் காதுகளுக்கு செல்லும் முன் அவரது கவனத்திற்கு வந்துவிடும். அப்படிப்பட்ட நேரங்களில் முடிந்தவரையில் தானே சென்று அப்பிரச்சனைகளில் தலையிட்டு ஊழியர்கள் பாதிக்கப்படா வண்ணமும், வங்கியின் பெயர் களங்கப்படா விதத்திலும் பார்த்துக்கொள்வார்.

அவருக்கான ஆளுமைக்கும் செல்வாக்கிற்கும் அவர் நினைத்திருந்தால் எப்போதோ பதவி உயர்வுகள் பெற்று அதிகாரத்தின் உயர்ந்த பதவிகளில் வீற்றிருக்கலாம். ஆனால் அவர் எல்லாவற்றையும் ஊழியர்கள் நலனுக்காகவும், தொழிற்சங்கத்தை கட்டுவதற்குமே பயன்படுத்தினாரே ஒழிய சிறு கணமேனும் அவரது சுயதேவைக்காகவோ நலனுக்காகவோ பயன்படுத்திக் கொண்டதில்லை. அவர் தன் இழப்புகளை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரை வெகுஜனத் தலைவராக வலம்வரச் செய்தது.

தான் ஒரு பொதுச்செயலாளர், அகில இந்திய தலைவர்களில் ஒருவர் என்று அவர் ஒருபோதும் தன்னை எங்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியதில்லை. எங்கள் சங்க அலுவலகத்தில் தாகம் என்று எங்கள் கைகள் நீண்டால் தண்ணீர் கொண்டு வரம் கரங்கள் அவருடையதாகவே இருக்கும், அவர் ஒருபோதும் வயது பாராட்டி பழகியதில்லை. இப்படியாக சக தோழனாய் மிகவும் இயல்போடு பழகி தொழிற்சங்க உணர்வுகளை எங்களுக்குள் செலுத்தி சமூக மனிதர்களாக எங்களை உருவாக்கவும் அவர் தவறவில்லை!
“என்னுடைய துப்பாக்கியை வேரொறுவர் எடுத்து அநீதிக்கு எதிராக போராடுவார்கள் என்றால் நான் கொல்லப்படுவதை பற்றி கவனம் செலுத்த மாட்டேன்”- என்றான் சேகுவேரா. அதுபோலவே மிகப்பெரும் நம்பிக்கையோடு தோழர். சோலைமாணிக்கத்தின் கரங்களும் எங்களை நோக்கி நகர்ந்தே வந்துள்ளது. நிச்சயம் அவர் கரங்கள் ஏமாற்றத்தோடு விடைபெறாது!!!

ஒரு சமரசமற்ற போராளியாக, நரம்பு புடைக்க வீதியில் நின்று அநீதிகளுக்கு எதிராக கோஷமிடும் கலகக்காரனாக, என்றளவில் மாத்திரம் நான் இதுவரை எழுதியதை வைத்து அவரது சித்திரத்தை குறுக்கி விடாதீர்கள்! ஏனெனில் நக்கலும், நைய்யாண்டியும் நிறைந்த குசும்புக்கார குழந்தையும் கூட அவர்!
அவருக்கு தேசமெங்கும் நண்பர்கள் உண்டு. அதற்கு அவர் தேசிய அளவில் அறிமுகமிக்க முதிர்ந்த தொழிற்சங்கவாதி என்பதை தாண்டியும் இருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று அவருக்கு மட்டுமே தெரிந்த அந்த…. சிறப்பு பாஷை!!

“எக்கல மோன மோன…கிக்லி பிக்காலே பக்கலபக்க கிக்லிப் பப்பா…”-இதற்கான அர்தத்தை ஆய்வு செய்யாமல் இங்கு ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்…

நான், சோலை அண்ணன், தோழர்கள். அருண், சங்கர் ஆகியோர் இரயிலில் ராஜஸ்தான்- “சிக்கார் மாநாட்டிற்கு” பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் நால்வரோடு இரண்டு ஆயுதமேந்திய இராணுவ வீரர்களும் எங்கள் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் வடநாட்டு வீரர்கள்!!! இரண்டு நாள் பயணமாதலால் இயல்பாக இரயில் சிநேகம் மலர்ந்தது.அவர்களுக்கு ஆங்கிலமும் அவ்வளவாக தெரியவில்லை, எங்கள் நால்வருக்கும் ஹிந்தியை தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதினால் மாத்திரமே அது ஹிந்தி என புரியும்.

ஆனாலும் அச்சா, பச்சா, பாணி நை… என சென்று கொண்டிருந்தோம்.அவர்கள் இருவரும் தாங்கள் விழித்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் துணி சுற்றிய துப்பாக்கிகளை கையிலே வைத்துக் கொண்டு பயணித்தார்கள். சோலை அண்ணன் அவ்வப்போது எங்களிடம் திரும்பி”இவனுங்க இத ஏன்பா கைல வச்சுக்கிட்டே வர்றானுவ…? குண்டு லோட் பண்ணியிருப்பாய்ங்ளோ?வெட்டிப் பயலுவ..” என ஏதாவது கேட்டுக் கொண்டே இருந்தார். நான் “ஏண்ண நீங்களே அத கேட்டாத்தான் என்ன?” என தெரியத்தனமாய் சொல்லிவிட்டேன்.
சோலை அண்ணன் எங்களை பார்த்து திரும்பி “இப்ப நான் என்ன செஞ்சாலும் சிரிக்க கூடாது..” என உத்திரவிட்டார். நாங்க கலவரமாகிக் கொண்டிருக்கையிலே அவர் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். “கண்.. நைஸ் கண்…” என்றவர் அவர்கள் புன்சிரிப்போடு தலையை ஆட்டியதும் “இக்கில பிக்காலே… கிக்கில..இக்கல பிக்கா…கேல மோன மோன…” என தன் பாஷையை ஏதோ அத்தனை சீரியஸாக பேச தொடங்கிவிட்டார், அவர்களும் பெரியவர் ஏதோ தன் மொழியில் அவர்களுக்கு அறிவுரை தான் வழங்குகிறார் என நினைத்து தலையாட்ட துவங்கினர்.

எங்களாலோ சிரிப்பை அடக்க முடியவில்லை. அருண் என் தொடையை கிள்ள…சங்கரோ ”வம்பா உண்ம தெரிஞ்சு நாம பலியாக போகிறோம்…” என வாயை பொத்திக் கொண்டு இடத்தை காலி செய்து ஓடிவிட்டார். அந்தப் பயணத்தில் தான் ’நித்திய கண்டம் பூரண ஆயிசு…’ என்ற முதுமொழியின் அர்த்தமே எங்களுக்கு முழுமையாக விளங்கிற்று.

இப்படித்தான் அவர் எப்போதும்…. பஸ்ஸில் பயணம் செய்கையில்,ஓட்டலில் சாப்பிடுகையில் என முன்பின் தெரியாத ஒருவரிடம் அத்தனை இயல்பாய் நெடு நாளைய உறவினர் போல் சிரிக்காமல் பேசத் துவங்கிவிடுவார். தோற்றத்தில் மரியாதைக்குரிய முதியவராய் இருப்பதால் யாரும் குழம்பவே செய்வார்களே ஒழிய கோபம் கொள்ள மாட்டார்கள்…. இவரும் நோகாமல் நைய்யாண்டி செய்த வண்ணமே இருப்பார், ஆனால் அவருடன் இருக்கும் நமக்குத் தான் நமது அடிவயிற்றின் ஓசை அவ்வப்போது கேட்கும்!
ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் வைப்பது, மற்றவர்களைப் போல் நடித்து காண்பிப்பது, என எப்போதும் துறுதுறுவென்று ஏதோ ஒன்று செய்து காட்டிக்கொண்டிருக்கும் உற்சாக மனிதர் அவர்!

பயணங்கள் அவருக்கு ஒருபோதும் சலித்ததில்லை. சின்னஞ்சிறு வசதிகளைக் கூட எதிர்பார்க்காமல் அத்தனை துடிப்போடு பயணித்துக் கொண்டே இருப்பார். அவரது கால்கள் ஓய்ந்து அமர்ந்து நான் பார்த்ததில்லை. அவர் தன் வாழ்நாளில் வீட்டில் கழித்த இரவுகளைவிட பயணத்தில் கழித்த இரவுகள் தான் அதிகமாயிருக்கும்! ஒரு தேடல் நிறைந்த தொழிற்சங்கவாதி ஓய்வறியாமல் பயணிப்பதில் வியப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அந்தப் பயணங்களை சாத்தியமாக்கியதற்கு பின்னால் அவர்தன் சொந்த வாழ்வில் எத்தனை முக்கியமான தருணங்களை இழந்திருப்பார்? இவர் போன்ற வெளிச்சமிடப்படாத எளிய மனிதர்களின் உன்னதமான தியாகங்களில் தான் நம் தேசத்தின் இறையான்மைகள் இன்னும் இறவாமல் துஞ்சுகிறது!

வரலாறு என்பது மண்வெறி பிடித்த மன்னர்களின் பிறப்பு, இறப்புகளை நினைவில் கொள்வதோ அல்லது அவர்களது தயவால் யுத்தங்களில் சிந்தப்பட்ட இரத்தங்களின் காரணிகளை ஆராய்வதோ அல்ல. சாமான்ய எளிய மனிதர்களின் வாழ்வும், அவர்கள் சார்ந்து வாழும் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளும் சமரசமற்று பதிவு செய்யப்படுமாயின் அது தான் வரலாறு!!!

அந்த வகையில் இது ஒரு சமரசமற்ற தொழிற்சங்கவாதியின் தன்னலமற்ற,போராட்டங்கள் செறிந்த வாழ்க்கை இங்கு வரலாறாகிறது. அந்த உன்னத போராளியின் வாழ்க்கை குறிப்பை வரைவதில் எனது பேனாவின் மையும் இணைகிறது என்ற பெருமையோடு… மாற்றங்கள் தரும் வலிகளையும், விழிகளில் வழியும் நீரோடு ஏற்றுக்கொள்கிறேன்.

புதன், 4 செப்டம்பர், 2013

ஆல்டர் பாய்ஸ்



மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அவனை கடந்த ஞாயிற்று கிழமை பனிமய மாதா கோயில் வாசலில் வைத்து சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டு பிடித்தவனாக ஒருவித பரபரப்போடு என்னை அணுகினான்.

“மாப்ள… எப்புடி இருக்க…? பாத்து எவ்வளவு நாளாச்சு… என்னல பண்ணுற…? இது ஒம் மவனும் மவளுமா?” என தொடர் கேள்விகளை தொடுத்தவன் என் பதில்களுக்கு கூட காத்திராமல் என் மனைவியிடம் திரும்பி “நல்லா… இருக்கீங்களா…?” என அவளிடன் வெகு நாள் பழகியவனைப் போல அத்தனை சிநேகமாய் நலம் விசாரித்தான். உண்மையில் அவனை என் கல்யாணத்திற்கு கூட நான் அழைத்திருக்கவில்லை. அந்தக் குற்றவுணர்வு அந்தக் கணம் மேலோங்கினாலும் நான் அதை மறைத்தபடியே என்னை இயல்பாக காட்டிக் கொண்டு ,” என்னடா எப்படி இருக்க? அன்னைக்கு பாத்த மாறியே இருக்கியேடே…”

“நான் இருக்குறது இருக்கட்டும்… நீ என்னல இப்படி ஊதிட்ட… எனக்கே உன்ன முதல்ல பாத்த ஒடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியல  பாத்துக்க… ஆளே மாறிட்டேயே டே… அதுவும் மாதா கோயிலுக்குலாம் வாறே… தங்கச்சி மாத்திட்டாளோ?”

“நல்லா மாறுனாப்ளயே நீங்க வேறன்ணே எட்டு மணிக்கு கோயில் வாசல்ல எங்கள எறக்கிவிட்டிட்டு போறவுகதான்…. பூச முடிஞ்சு நான் போன் பண்ண பொறவுதான்… எங்கள கூப்பிடயே வருவாப்ல…இதெல்லாம் மாறத ஜென்மங்க..” என அவனிடம் என் மனைவி தன் ஆதங்கத்தை சமயம் பார்த்து இறக்கி வைத்தாள்.

“ நீ வேறம்மா இவன் அப்பவே பெரிய அங்ஞானி…. அதான் எங்க பய திருந்திட்டானோன்னு எனக்கே ஆச்சர்யமா போச்சு…” என்றபடி என்னைப் பார்த்து “ எல நீ இன்னும் திருந்தவே இல்லயா?” என்றான்.

“ஆம…ல நான் நாலு கொல, அஞ்சு வழிபறி, அப்பப்ப வீடு பூந்து கொள்ளன்னு அடிச்சிட்டு திரியிறம்பாரு திருந்துறத்துக்கு… அவதான் சொல்லுறான்னா இவனும் வக்காலத்து வாங்கிட்டு…”

“இப்படித்தாண்ணே நாம ஒண்ணு சொன்னா குண்டக்க மண்டக்க ஏதாவது குதற்க்கமா பேசி நம்ம வாய அடச்சிருவாப்ல…”

“நீ விடும்மா… இப்ப இவ்வளவு பேசுறானே….  ஒரு நேரத்துல பூசக்கி உடுப்பு போடுறதுக்கு எவ்வளவு சண்ட போட்டிருக்கான் தெரியுமா…? தொடர்ந்து மூணு பூசக்கெல்லாம் இவனும் நானும் முந்தி ஆல்டர் பாய்ஸா உடுப்பு போடிருக்கோம்… ஒரு பெரிய வெள்ளிகெழமைக்கு சாமிக்கு முன்னால சிலுவையெல்லாம் இவன் புடிச்சிட்டு போயிருக்கான் அந்தக் கதையெல்லாம் உங்கிட்ட சொல்லி இருக்கானா…?” என ஏதேதோ பேசியவன் பழைய நினைவுகளை எனக்குள் மீட்டத்துவங்கினான். ஒருவாறு அவனிடம் பேசி முடித்து அலைப்பேசி எண்களை சம்பிரதாயமாக மாற்றிக் கொண்டு விடைபெற்று வீட்டிற்கு வந்த பின்பும் அவன் கிளறிய அந்த பசுமையான நாட்களுக்குள் என் நினைவுகள் செல்லத் துவங்கியது.

அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தோணியார் கோயிலுக்கு அதிகாலை ஆறு மணி பூசைக்கு என்னை அழைத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் கிறுத்துவ வாழ்வை பழக்கப் படுத்த என் அம்மாச்சி பிரயாசை பட்டுக் கொண்டிருந்தாள். அவளோடு அப்படி பூசைக்கு செல்லும் போதெல்லாம் என் வயதொத்த சிறுவர்கள் பூசையில் சாமியாருக்கு உதவியாக அவரோடு பீடத்தில் அவரைப்போன்று அங்கியும், இடுப்பில் வண்ண வண்ண பட்டைகளும் அணிந்து கொண்டு கம்பீரமாக வலம் வருவது எனக்கும் ஆசையை தூண்டியது. நானும் அவர்களில் ஒருவனாக மாற ஆசைப்பட்டேன்.
என் ஆசையை ஒருநாள் என் அம்மாச்சியிடம் சொன்னபோது அவள் பேருவகையோடு என்னை அழைத்துச் சென்று பங்குச் சாமியாரிடம் ஒப்படைத்தாள். என்னைப்போலவே ஆல்டர் பாயாக மாற ஆசைப்பட்டபடியே ஜூடும் ஆவலாக காத்துக்கொண்டிருந்தான். அப்போது தான் அவன் எனக்கு அறிமுகமானான். ஆனால் நாங்கள் நினைத்தது போல் ஆல்டர் பாயாக மாறுவது அத்தனை சுலபமானதாக இல்லை. எங்களைவிட ஓரிரு வயது மூத்தவர்களே அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. சீசப்பிள்ளையாக இருபத்தி ஐந்து வயது மதிக்க தக்க ஒருவர் இருந்தார். அவரே ஒவ்வொரு பூசைக்கும் யார் யார் உடுப்பு போடுவது என தீர்மானிப்பவராக இருந்தார். அவர் கொடுக்கும் சின்னச்சின்ன வேலைகளையும் சிரமேற் கொண்டு செய்தும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது ஏன் என்று எங்களுக்கு முதலில் பிடிபடவேயில்லை. 

நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் அங்கிருக்கும் ”உள் அரசியல்” எங்களுக்கு விளங்க துவங்கியது. அதாவது ஒரே பங்கைச் சேர்ந்தவர்களாய் நாங்கள் இருந்தபோதும் அங்கிருந்த பசங்களுக்கிடையே ”தெரு அரசியல்” மேலோங்கி இருந்தது. ஏழாம், எட்டாம் வகுப்பு பசங்கள் அதிகம் இருந்த அந்தோனியார் கோயிலை ஒட்டிய தெரு பசங்களின் ராஜ்ஜியமே அப்போது அங்கு கோலோச்சி இருந்தது. மற்ற தெரு பசங்கள் எல்லாம் அடக்கியே வாசித்தனர்.

இந்த உட்கலகம் எனக்கு பிடிபட்ட உடனே ஏனைய தெரு பசங்களிடம் வயது பாராட்டாமல் பழகத் துவங்கினேன். மெல்லமெல்ல கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் அந்தோனியார் கோயில் தெரு பசங்களின் அட்டகாசங்கள் குறித்தும் அவர்களது ஆதிக்கம் குறித்தும் பேசத்துவங்கினேன். அவர்களும் தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தோனியார் கோயில் பசங்கள், ஏனைய தெரு பசங்கள் என பிரிந்து அமரத் துவங்கினோம். ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறும் மறைக்கல்வி வகுப்புகளில் இதனை விவாதப் பொருளாய் கிசுகிசுக்க துவங்கினோம். ஒருநாள் என் வயதொத்த ஒரு சிறுவனிடம் நானும், ஜூடும் சேர்ந்து வழக்கம் போல் எங்கள் புலம்பல்களை பகிர்ந்து கொள்ள துவங்கினோம் அவனை மாற்று தெரு பையன் என நினைத்து. ஆனால் எங்களுக்கு அப்போது தெரியாது அவனும் அந்தோனியார் கோயில் தெருக்காரனென்று.

எங்கள் புலம்பல்களை அமைதியாய் கேட்டுக் கொண்டவன் எங்களைப் பற்றி அத்தெரு பசங்களிடம் போட்டுக் கொடுத்துவிட்டான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவனுக்கு என் பெயர் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஜூடை சரியாக குறிப்பிட்டவன் எனது அடையாளங்களை மட்டும் குத்து மதிப்பாக சொல்லிவிட்டிருந்தான். மறுநாள் பூசை முடிந்ததும், ஜூடையும், ஏறத்தாழ என்னைப் போல் இருக்கும் மற்றொருவனையும் பிடித்து அந்தோனியார் கோயில் தெரு பசங்கள் அடி பின்னி எடுத்துவிட்டனர். இந்த சம்பவம் கேள்வி பட்டு நான் பயத்தால் ஓரிரு நாள் கோயில் பக்கமே செல்லவில்லை.

தினமும் அதிகாலை உற்சாகமாய் கோயில் செல்லும் பிள்ளை ஏன் வீட்டிலே முடங்கியுள்ளான் என என் வீட்டில் உள்ளவர்கள் துளைத்து எடுத்த போது நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். என் ஆச்சி என்னை நேராக பங்குச் சாமியாரிடம் அழைத்து சென்று அனைத்து விபரங்களையும் ஒப்புவித்தாள்.

பங்குச்சாமியாரும் “ஓஹோ அப்படியா இந்தக் கூத்தெல்லாம் நடக்குதா… நாளக்கி நீ காலைல பூசக்கிவா நான் ஒன்ன உடுப்பு போட வக்கிதம்… எந்தப் படுக்காலி சண்டக்கி வருதாம்னு பாக்கம்…”என உற்சாகப் படுத்தி அனுப்பினார். அன்றிறவு முழுக்க தூக்கமெல்லாம் தொலைத்துவிட்டு வண்ண கனவுகளில் மிதக்க துவங்கினேன்.

மறுநாள் விடிந்ததும்… விடியாததுமாய் எழுந்து உற்சாகமாய் கிளம்பி கோயிலுக்கு சென்றால் பங்குச்சாமியார் என் நினைவே அற்றவறாக பூசைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். நான் அவர் முன்னால் அங்கேயும்,இங்கேயுமாய் நின்ற போதும் அவர் என்னை சட்டை செய்யவேயில்லை. வழக்கம்போல் அந்தோணியார் கோயில் தெரு பசங்களே உடுப்புகளை அணிந்தபடி மிடுக்காய் தயாராகிக் கொண்டிருந்தனர். நான் நொந்து போய் ஒரு ஓரமாய் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்தவனாய் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஜூடுதான் என்னை சமாதானப் படுத்த அதிக முயற்சிகள் எடுத்துக் கொண்டான். ஆனால் அவன் பேசப்பேச எவ்வளவு அடக்கியும் தாளாமல் என் விழிகளில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

அழுது கொண்டே பூசை முடியும் வரை காத்திருந்தேன். பூசை முடிந்ததும் நானும், ஜூடும் கோயிலை விட்டு கிளம்பிய போது அந்தோணியார் கோயில் தெருப் பையன் ஒருவன் எங்களைவிட இரண்டு வயது மூத்தவன் எங்களை நெருங்கி “அன்னைக்கி ஒனக்கு விழவேண்டிய அடி தப்பிச்சுட்ட… இருக்குடி உனக்கு ஒருநா பூச…” என மிரட்டும் தொனியில் என்னை அணுகி ஏளனம் செய்தான். ஒருகட்டத்தில் என்னையே கட்டுப்படுத்த முடியாதவனாய் கோயில் வாசல் என்றும் பாராமல் அவன் மேல் பாய்ந்து விழுந்து அவனை அடிக்க துவங்கினேன். சற்றும் எதிர்பாராத என் தாக்குதலால் அவன் நிலைகுழைந்து விழுந்தான். நான் அவன் மேல் ஏறி அமர்ந்து அவனை கண்மண் தெரியாமல் அடிக்க துவங்கினேன்.

ஜூடு செய்வதறியாமல் என்னை பிடித்து இழுத்தபடியே கத்த துவங்கினான். அவன் போட்ட கூச்சலில் ஒரு சிறு கூட்டம் அங்கே கூடி என்னை அவன் மேலிருந்து தூக்கி விலக்கியது. அந்தோணியார் கோயில் தெரு பசங்கள் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தனர். பங்குச்சாமியாரும் அந்நேரம் பார்த்து வெளியே வந்தார். என்னைப்பற்றி அவரிடம் புகார்கள் வாசிக்கப்பட்டன. என்னிடம் அடிபட்டவன் என் நகக்கீறல்களால் முகம் வீங்கி நின்று அழுது கொண்டிருந்தான்.
அவன் முகத்தை ஏறெடுத்து பார்த்தவாறே பங்குச்சாமி ”நல்ல பலமாத்தாம்ல அடிபட்டிருக்கு… நல்ல புள்ளையளா பூசையில நின்னிட்டு இப்படி வெளில நின்னு சல்லித்தனம் பண்ணா வெளங்கும்ல, நல்லா சாத்தான் குட்டிகளா நிக்கிறத பாருங்களேன்…. எதுக்குடே இப்படி கட்டிப் பொறண்டிக…? கோயிலுக்கு போயிட்டு புள்ளைக வரும்னு அங்க உங்க அப்பாஅம்மாமாரு நிம்மதியா இருப்பாக இப்படி மூஞ்சி வீங்கிப் போன சாமி கோயில்ல பூச வச்சாரா இல்ல குஸ்தி கத்துக் குடுத்தாறன்னுதான கேப்பாக… போங்க போங்க வீட்ட பாத்து போங்கடே பொறவு அங்கிட்டு நின்னு சண்ட போட்டேம் இங்கிட்டு நின்னு சண்ட போட்டேம்னு எவனாவது சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் பாத்துக்குங்க…” என்றபடி எங்களை கடந்து வேகமாய் போய்விட்டார்.

ஏதோ மிகப்பெரும் சாதனை செய்துவிட்டதைப் போல் என் மனம் அப்போது துள்ளி குதித்தது. என் மனத்துயரெல்லாம் கறைந்தோடி என்னைப் பற்றி நானே பெருமிதம் அடைந்து கொண்டேன். என்னை சுற்றி ஒரு அரணைப் போல மற்ற தெரு பசங்களெல்லாம் நின்றபடி அவரவர்க்கு தெரிந்த வார்த்தைகளில் என்னை தேற்றியும், பாராட்டியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்தோணியார் கோயில் தெரு பயல்கள் என்னை முறைத்து பார்த்தபடி அவனை அழைத்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவன் இப்படி பேசியது என் காதுகளில் தெளிவாய் கேட்டது ”எல நீ வருத்தப்படாத எங்க போவான்… நாம யாருன்னு அவனுக்கு சீக்கிரமே காட்டுவோம்ல…”

இப்படி ஏராளமான சாகசங்களுக்கும், மிரட்டல்களுக்கும் பிறகே எனக்கும், ஜூடுக்கும் ஒரு ஞாயிற்றுகிழமை பூசையில் உடுப்பு போடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாள் முழுவதும் ஓரிரு அடிகள் தரைக்கு மேலே தான் நாங்கள் நடந்து திரிந்தோம். ஏதோ நாங்களே அன்றைய பூசையை நடத்தியதை போல் அத்தனை பெருமைப்பட்டு போனோம். அப்பருவத்தில் பெரும் பகைகள் கூட கானல் நீரை போலத்தானே, அந்தோணியார் கோயில் தெரு பசங்களுக்கும் எங்களுக்குமான இடைவெளியும் கால ஓட்டத்தில் கரைந்து போய் எல்லோரும் நண்பர்களாகிப் போனோம்.
இனிய பழைய நினைவுகளை மீட்ட ஒரு சொல்லோ, ஒரு புன்சிரிப்போ கூட போதுமானதாய் இருக்கிறது.