புதன், 7 டிசம்பர், 2011

விழிப்பாய் தமிழா......




எனக்கு வியப்பாக இருக்கிறது…….!!! எங்கிருந்தோ புற்றீசல்களைப் போல விவசாய குடிகளின் இன்னல் போக்க துடிக்கும் இரட்சகர்களாக மாறிப்போயிருக்கிறார்கள் இங்கிருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளும், ’வாழ்க-ஒழிக’ குரலெழுப்பிகளும். ஊடகங்களின் சமீபத்திய பொம்பலாட்டதுக்கு இரையாகிக் கொண்டிருப்பது தமிழக-கேரள எல்லையோர அப்பாவிகள்.


முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க அளவில் இரு மாநில அரசுகளிடத்தே இருவேறு கருத்தாக்கம் எழுந்தவுடனே அதை “முல்லை பெரியாறு விவகாரம்” என விஷயத்தை விகாரப் படுத்தியது ஊடகங்கள் தான். தற்போது விவகாரமாகிப் போன விஷயத்தை செய்தியாக்கி கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான்.

இனி பரபரப்பான விற்பனையில் தமிழக கேரள மக்களின் உறவும்,சர்சைகளும் இருக்கும். நாம் இந்த தொடர் அரசியலை புரிந்து கொள்ளவில்லையெனில் வழக்கம் போல் விழியிருந்து குருடராய் வீழ்வதை தவிர வேறு வழியில்லை……


1979ல் கேரள அரசுக்கு அணையின் பாதுகாப்பு நிலை குறித்து எழுந்த ஐயத்தின் விளைவாக அப்போது 152 அடியில் சேகரிக்கப் பட்டு வந்த நீரின் அளவை 136அடியாக குறைத்தது. அப்போதைய தமிழக அரசு கேரள அரசின் ஐயத்தை போக்கும் பொருட்டு அணையை பலப்படுத்த சில நடவடிக்கைகளை செய்து நீரின் அளவை உயர்த்த கோரியது. ஆனால் கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்தவில்லை.


இருமாநில அரசுகளும் தத்தம் கருத்துகளில் உறுதியாக இருந்தபடியால் விஷயம் உச்சநீதி மன்றத்தில் வழக்கானது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்கவில்லை.

அதேசமயம் கேரள அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தரவும் மறுக்கவில்லை. கேரள அரசின் நிலைபாடானது முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டி முடித்து அதன் பின்னர் நீர் தேக்க அளவை உயர்த்தி கொடுக்கலாம் என்பதாகவே உள்ளது.

ஆனால் தமிழகத்தின் நிலைபாடு…. முல்லை பெரியாறு அணையே வலுவாக உள்ள போது ஏன் நீர் தேக்க அளவை உயர்த்த புதிய அணை கட்ட வேண்டும்? என்பதே.

ஒரே தேசத்தை சார்ந்த இருமாநில அரசுகளுக்கு இடையேயான கருத்து மாற்றத்தை இருவேறு தேசிய இனத்துக்கு இடையேயான பிரச்சனையாக உருமாறியது எப்போது?

எவர் ஊதினாலும் வீங்கவும்….. எவர் உதைத்தாலும் பறக்கவும் நாம் என்ன வெறும் காற்றடைத்த பலூனா?

நம்மிடையே உள்ள மிகப்பெரும் பலவீனம் எந்தவொரு பிரச்சனையையும் நாம் உணர்வுபூர்வமாகவே அணுகுவது தான். சக உயிர்களிடத்தே….. மனிதன் தன்னை உயர்திணையாக மாற்றிக் கொள்ள உதவியது அவனது பகுத்து ஆராயும் அறிவு தான். ஆனால் ஏனோ இது போன்ற நேரங்களில் நாம் எதையும் பகுத்து ஆராய்வதில்லை.

நிஜமாகவே விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் நமக்கு இத்துணை பற்று இருப்பது உண்மையானால் முல்லை பெரியாறு அல்ல நாம் கையில் எடுக்க வேண்டிய முதல் பிரச்சனை.

இனம்,மொழி பேதங்களற்று தம் உயிரையும், இளமையையும், நல்வாழ்க்கையையும் இழந்து நமக்காக நம் முந்தைய தலைமுறையினர் போராடிப் பெற்ற ஜனநாயக அரசியலை இன்று தம் சுயநலத்திற்காகவும், பதவிக்காகவும் பெருமுதலாளிகளிடத்தே அடகு வைத்துவிட்டு விவசாயிகளிடமிருந்து “பொருளாதார மண்டலங்கள்” என்னும் பெயரில் நிலத்தை பறிக்கும் கயவர்களை நோக்கி அல்லவா நாம் முதலில் பாய்ந்திருக்க வேண்டும்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே….. தமிழகத்தில் அப்போது மன்னராட்சியாக இருந்த போதும் கூட தம் குடிகளுக்காக அவர்கள் கட்டிய நீர் தேக்கங்களும், நீர் நிலைகளுமான கணக்கற்ற கண்மாய்களும், குளங்களும் கடும் வறட்சியிலும், கோடையிலும் தமிழனின் தாகம் தீர்த்து வந்ததே அவைகள் மக்களாட்சியாக மாறிப் போனபின் அதுவும் குறிப்பாக புதிய பொருளாதார கொள்கையை நாம் கடைபிடிக்க துவங்கியதும் அனைத்தும் பட்டா நிலங்களாக மாறிப்போனதே அப்போது எங்கே போயிருந்தது இந்த ரௌத்திரம்?

மலட்டு விதைகளையும், இரசாயனமிக்க உரத்தையும் விற்பனை செய்வதே பசுமை புரட்சியாக அறிவித்து விவசாய குடிகளை ஏமாற்றி அவர்களை கடனாளிகளாக்கி….. மண்ணை மலடாக்கி…. உணவை விஷமாக்கி நம் கண்களை விற்று சித்திரம் வாங்கச் செய்த போதல்லவா நாம் கிளர்ந்து எழுந்திருக்க வேண்டும்?

விஷத்திற்கு கூட இங்கு காப்பிரைட் உரிமை உண்டு. ஆனால் தான் விளைவித்த பொருளுக்கு விலை வைக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளை சுரண்டுப் பிழைக்கும் அட்டைப் பூச்சிகளுக்கு எதிராகவல்லவா நாம் கோஷம் எழுப்பியிருக்க வேண்டும்?

ஆனால் இதுவெல்லாம் நமக்கு பிரச்சனையாகவும் தெரியாது…….நாம் நம்மை தமிழனாகவும் உணர்வதில்லை. ஆனால் அதுவே நம் அண்டை மாநிலத்தானோடு ஒரு பிரச்சனையென்றால் உடனே நாம் தமிழனாகி விடுவோம்.

கொம்வு சீவப்பட்ட காளைகளாக கூட்டத்தில் பாய்வதில் தானே அத்துணை பெருமை நமக்கு. மறந்துவிட வேண்டாம்….. காளைகளின் வீரம் எத்தகையதாயினும் ஒருபோதும் காளைக்கு அது பயன் தரா மாறாக அது மேய்பானின் அடிமையே!!!

திங்கள், 10 அக்டோபர், 2011

அஜீ(ரணம்)



தன் வயிற்றைக் காயவைத்து......



தன் காலை சேற்றில் வைத்து......



என் தட்டில் சோற்றை வைத்தவன்



தற்கொலை செய்து கொண்டான்!!!!!



என்னும் செய்தியை



தொலைக்காட்சியில் பார்த்தபடியே



நான் சோற்றை



சுவைத்துக் கொண்டிருந்தேன் - நேற்று



என்பது ஞாபகம் வந்து



தொலைத்தது - இன்று



மருத்துவர் என்னை பரிசோதித்தபடியே



“எல்லாம் அஜீரணக்



கோளாரால் வந்தது....”என்று



சொல்லி மருந்து கொடுத்தபோது.






புதன், 21 செப்டம்பர், 2011

பிடுங்கப்பட்ட சுதந்திரம்……


குழந்தை பல்பத்தை தன்

எச்சிலால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது

நான் கோபமாக பல்பத்தை அதனிடமிருந்து

பிடுங்கி எறிந்தேன்

குழந்தை அழ ஆரம்பித்தது……..

நான் ஏதேதோ சமாதானம்

சொல்லிப் பார்த்தேன் ஆனால்

அது தன் அழுகையை நிறுத்துவதாயில்லை

வேறு வழியின்றி மீண்டும்

பல்பத்தை அதன் கையில் கொடுத்தேன்

இப்போது……..

பல்பத்தை வாங்கிய குழந்தை அதை

தரையில் வீசியெறிந்தது

அப்போது தான் எனக்கு உரைத்தது

நான் அதனிடமிருந்து பிடுங்கியது

பல்பத்தை அல்ல……..

அதன் சுதந்திரத்தை என்று!!!!!!

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஐரோம் ஷர்மிளா ஒரு போராளியின் காதல்...


இளவயதின் சலனங்களோ
மயக்கப் பொழுதுகளோ
உயிரியலின் இயல்பான தூண்டுதல்களோ கூட
மறுத்துக் கொண்ட வாழ்வு உனது

பேருந்துக்குக் காத்திருந்த
அப்பாவி மனிதர்களை
இராணுவ துப்பாக்கிச் சனியன்கள்
பலிவாங்கிப் பழி தீர்த்துக் கொண்ட நாளொன்றில்
பத்தாண்டுகளுக்குமுன் தொடங்கியது உனது போராட்டத் தவம்.

உனது நாக்குக்குப் பதில் சொல்ல முடியாத அரசு
மூக்கு வழியாக உணவளித்து
உனது பட்டினிப் போரை எதிர்கொண்டு தவிக்கிறது
சிறப்பு ஆள்தூக்கி இராணுவச் சட்டத்தை
உரித்தெறிய மறுபபோர்முன் நீயும்
உடைத்தெறிய மறுக்கிறாய் உனது தவத்தை

'அன்னா' விரதத்தின் பக்கமிருந்து நகர மறுத்த
ஊடக வலைப்பின்னல்கள்
உனது உண்ணாவிரதத்தைச் சொல்வதே இல்லை மக்களிடம்

"அமைதியின் நறுமணத்தில்" ***
கவிதைகளால் பேசியிருந்தாய்
உனது திட சித்தத்தை..

வாய் திறந்திருக்கிறாய் போராளியே
முதன்முறை உனது காதலைப் பற்றி
இனியேனும்
என் வழியே என் வாழ்வை நடத்தவிடு என்னும்
உனது குரலில் யாசகமில்லை
சிறப்புச் சட்டத்தை நீக்கவேண்டுமெனும்
நிபந்தனையின் மீது தான் நிற்கிறது
உனது காதல் தூரிகை

வெட்கமற்ற ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளட்டும்
போராளிகளுக்கும் காதல் உண்டென்பதை
அவர்களது முதல் காதல்
போராட்டக் கோரிக்கைகள் என்பதை -
அமைதி வாழ்க்கைக்கான வாசலை அடைத்திருக்கும்
இரும்புக் கதவுகள் உடைபடுமுன்
திறப்பது நல்லது என்பதை!
எஸ் வி வேணுகோபாலன்

*** (அமைதியின் நறுமணம்: ஐரோம் சர்மிளா அவர்களின் கவிதை தொகுப்பு. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது)
இந்தியாவைச் சார்ந்த பிரிட்டிஷ் குடிமகன் ஒருவரைத் தாம் காதலிப்பதாகவும், சிறப்பு இராணுவச் சட்டம் எடுக்கப்பட்டுவிடுமானால் தாம் அவரை மணந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவதாகவும் ஐரோம் சர்மிளா அண்மையில் பத்திரிகையாளர் ஒருவரிடம் சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

















வெள்ளி, 2 செப்டம்பர், 2011

அம்பேத்கர் பார்ட்டி


ஏப்ரல் 14ம் நாளாகிய இன்றிரவு மகாராஷ்டிர மாநிலத்தின் சேரிப்பகுதிகளில் ஒரு பார்ட்டி - கொண்டாட்டம் நடத்த இருக்கிறோம் நாங்கள். ஒரு பெரிய களியாட்டத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியுமோ அவை அத்தனையும் எங்கள் கொண்டாட்டத்தில் உண்டு. குத்துப் பாட்டுக்கள் முதற்கொண்டு லாவணிப் பாடல்களை வரை ரீ-மிக்சிங் செய்து இடையே இடையே ஆங்கில வரிகளையும் ஓடவிட்டு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் எங்கள் கலைஞர்கள் போடும் அட்டகாச நடன மெட்டுக்கள் கருத்த பெரிய ஒலிப் பெருக்கிகளிலிருந்து தெருக்களையே அதிரடித்துக் கொண்டிருக்கும்.

எங்கள் பெண்கள் தமது உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டும், முகங்களில் பவுடர் அப்பிக் கொண்டும், கூந்தலில் மலர்களை அள்ளிச் சூடிக் கொண்டும் டிரங்க் பெட்டிகளிலிருந்து தேடி எடுத்த இருப்பதிலேயே உயர்ந்த ஆடைகளை அணிந்த வண்ணம் தோன்றுவார்கள். உங்கள் கண்களுக்கு அவர்கள் மிக மட்டமாகத் தோன்றினால், நீங்கள் சரியாய்த் தான் கவனித்திருக்கிறீர்கள் என்று பொருள். கழித்துக் கட்டப்பட்ட, குறைபாடுகள் உள்ள துணிமணிகளைத் தள்ளுபடி விலையில் விற்கும் மலிவு விலைக் கடைகளில் இருந்து தான் இந்த அலங்காரப் பொருள்களையும், ஆடை வகைகளையும் அவர்கள் வாங்கி வைத்திருக்கின்றனர். இந்தத் திருநாளில் அணிவதற்கென்றே எத்தனையோ நாட்கள் தமது ஆசைகளை அடக்கிக் கொண்டு தொடாமல் பத்திரப்படுத்தி வைத்துக் காத்திருந்தனர்.

எங்கள் குழந்தைகளுக்கோ இதைவிடவும் மட்டமான ஃபிரில் வைத்த செயற்கை இழை ஆடைகளை அணிவித்திருக்கின்றனர். கருத்த அவர்களின் முகங்களில் முகப் பூச்சு பளிச்சென்று எடுப்பாய்த் தெரிகிறது. எங்கள் ஆடவர்களோ, மூச்சில் தெறிக்கும் மட்ட ரக சாராயத்தின் நெடியோடு எப்போது எல்லாம் மறந்து வெறித்தனமாக ஓர் ஆட்டம் போடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். முரட்டுத் தனமிக்க எங்கள் இளவட்டங்களோ எந்தக் காலத்திலும் ஒழுங்காக நடந்து கொண்டதாக சரித்திரமில்லை. இன்றைக்கோ எல்லா எச்சரிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு, குமரிப் பெண்கள் ஒதுங்கி நின்று வெட்கத்தோடு தங்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதைக் கவனித்தபடி கோமாளிகள் போல் குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலான எங்கள் வீடுகளில் மாட்டுக் கறி வெந்து கொண்டிருக்கும்; ஆட்டுக் கறியை விடவும், கோழிக் கறியை விடவும் அதுதான் மிகவும் விலை மலிவு என்பதால் உங்களது மத உணர்வுகள் குறித்தெல்லாம் நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்க முடியாது. எங்களது இந்தக் கொண்டாட்டத்தின் எல்லா அம்சங்களும் மலிவு விலையில் திரட்டப்பட்டதாக நீங்கள் கவனித்தால், அப்படியே கோடி டாலர் மதிக்கத் தக்க இன்றைய எங்களது முக மலர்ச்சியையும் நினைவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி என்னதான் இன்று விசேஷம் என்கிறீர்களா? ஏப்ரல் 14 : இன்றைக்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் நங்கள்.

எனக்குத் தெரியும், எங்களையும், எங்களது செயல்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் வெறுப்பது. ஆனால், இந்த நாள் எங்களது நாள். எங்களை நீங்கள் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். சகித்துக் கொண்டால் தான் என்ன என்று கேட்கிறேன்...கால காலமாக நீங்கள் செய்து கொண்டிருப்பதையும் , ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துத் தானே வருகிறோம். எனவே அப்படி ஒரு மாதிரி எங்களைப் பார்ப்பதை இன்றைக்காவது கை விடுங்கள்.

எங்கள் சேரிகளின் வழியே நடக்க நேரும்போது துர்நாற்றம் தாளாமல் உங்கள் அழகு மூக்குகளைப் பொத்திக் கொள்கிறீர்களே, உங்களது சுத்தமான வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றும் மலத்தைச் சுமந்து ஓடும் சாக்கடைகளின் அருகே நாங்கள் குடியிருப்பதால் தான் எங்கள் குடியிருப்புகளில் இத்தனை துர்நாற்றம் வீசுகிறது என்று எப்போதாவது உங்களுக்கு உறைத்ததுண்டா ? நாகரீகம் என்று நீங்கள் வரையறை செய்திருக்கும் எல்லாக் கட்டு திட்டங்களையும் உடைத்தெறிந்து, சுதந்திரமாக ஆடிக் கொண்டிருக்கிறோம், இன்றைய இரவில். நாகரீகம் பற்றிய உங்களது கோட்பாடுகள் போலித்தனமானவை என்று எங்களுக்குத் தெரியும்; உங்கள் இல்லங்களில் மவுனமாக வேலை பார்த்தபடி உங்களது எல்லா அசுத்தங்களையும் கவனிப்பவர்கள் நாங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்றைய இரவில் நாங்கள் ஆடுகிறோம், எங்களையும் மனிதப் பிறவிகள் என்று எங்களுக்கு உணர்த்திய ஒரு மனிதனின் பிறந்த நாள் இன்று என்பதால்! அவர் வெறுமனே உங்களது குற்ற உணர்ச்சிகளை வருடிக் கொடுத்து இதம் செய்வதற்காக ஒன்றும் எங்களுக்கு வேறு பெயர் சூட்டவில்லை. நாங்களும் மனிதர்கள், எங்களுக்கும் கனவு காணவும், மகிழ்ச்சியாக வாழவும் உரிமை உண்டு என்று சொல்லிக் கொடுத்தார் அவர்.

எங்களுக்குத் தெரியும் உங்களுக்கு நாங்கள் அழுக்கானவர்களாகவும், அவலட்சணமானவர்களாகவும் அறியாமையில் உழல்பவர்களாகவும், இழிவானவர்களாகவும் காட்சி அளிப்பது. ஏன் அப்படி தோன்றுகிறது என்று அவர் எங்களை உணரச் செய்தார். எமது உடைகளையும், தண்ணீரையும் நீங்கள் பறித்துக் கொண்டுவிட்டதால் நாங்கள் அழுக்காக இருக்கிறோம். எமது உணவுகளைப் பறித்துக் கொண்டு அழகிப் போனவற்றைத் தின்னுமாறு நீங்கள் செய்துவிட்டதால் நாங்கள் அவலட்சணமாகவும், வளர்ச்சி குன்றியவர்களாகவும் ஆகிப் போனோம். எங்களுக்குத் தெரியாத மொழிகளிலேயே நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதாலும், எங்களைக் கல்வி கற்க நீங்கள் அனுமதிக்க மறுப்பதாலும் நாங்கள் அறியாமையில் வீழ்ந்தோம். அடிமைகள் வேறெப்படி இருக்க முடியும், நாங்கள் இழிவாய் தான் காட்சி அளிக்கிறோம்.

அம்பேத்கர் எங்களுக்குக் கற்பிக்கத் தொடங்கியபிறகு, நாங்கள் இனி அழுக்காகவும், அவலட்சணமாகவும், அறியாதவர்களாகவும், இழிவாகவும் தோற்றமளிப்பதை முடிவுக்கு கொண்டு வர வழிவகைகளைச் சிந்திக்கத் தொடங்கினோம். இருந்த போதிலும், இன்னும் எங்களில் பெரும்பாலானோர் அப்படியே தான் இருக்கின்றனர் - அதற்குக் காரணம் இந்தக் கொடுமைகளை நீங்கள் சில நூற்றாண்டுகளாகச் சுமத்தி வந்திருக்கிறீர்கள். இப்போதும் கூட எங்களைத் தடுத்து நிறுத்தவும், ஏன், எங்களில் சிலரை விலை கொடுத்தே வாங்கவும் கூட உங்களுக்குள்ள அத்தனை செல்வாக்கையும் நீங்கள் பயன்படுத்துவீர்கள்.

எங்களுக்குத் தெரியத் தான் செய்கிறது - நாங்கள் நட்ட நடு வீதியில் நடனம் ஆடி வருகிறோம். உங்கள் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ சாலையே உங்களுக்குத் தான் பட்டா போட்டுக் கொடுத்திருப்பது மாதிரி இரைச்சல் எழுப்பாதீர்கள்! சாலை முழுவதும் ஓட்டு மொத்தமாக உங்களுக்கே சொந்தம் போல உங்களுக்குத் தோன்றக் காரணம் என்ன? எப்படி அப்படி இருக்க முடியும்? கண்ணாடியால் அரவணைக்கப்பட்ட பெரிய கட்டிடங்களில் இருந்து உங்கள் வீட்டை நோக்கி வண்டியில் போய்க் கொண்டிருப்பதாலா ?

என்றைக்காவது ஒரு நாள் சுற்றிலும் ஒரு நோட்டம் விடுங்கள். நீங்கள் இயக்கும் ஒவ்வொரு காருக்காகவும், பல பேர் சாலையோரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது, பேருந்துகளில் எங்களைத் திணித்துக் கொள்ளவோ, ஆட்டோவில் பகிர்ந்து கொண்டோ பயணம் செய்யவேண்டியிருக்கிறது. சொல்லப் போனால், உங்கள் கார் வழுக்கிச் செல்ல வசதியான சாலையை அமைக்கத் தோண்டிக் கொண்டிருத்த போதும், எங்கள் தோலைப் போலவே கருத்த தார் மொண்டு எடுத்துப் பூசிக் கொண்டிருந்த போதும் சூரிய வெப்பத்திலும், நள்ளிரவைக் கடந்த நேரத்திலும் இந்த நாட்டில் எல்லாமே மோசம் என்று உங்களது மேற்கத்திய பாணி இழிவுப் பேச்சுக்களைக் கேட்டபடி உழைத்தது நாங்கள் தான்.

இந்தச் சாலை உங்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பது அற்ப விஷயம். நாங்கள் இந்தச் சாலைக்குச் சொந்தக்காரர்கள் எனதே பெரிய உண்மை! எங்களில் எத்தனை பேர் இந்தச் சாலைகளிலேயே பிறந்தவர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? இங்கேயே பிறந்து, உண்டு, உறங்கி, குடும்பம் நடத்திப், பிள்ளைகளைப் பெற்று எங்கள் வாழ்வு மொத்தத்தையும் இங்கேயே வாழ்ந்து முடிப்பவர்கள் எத்தனை பேர் என்பதாவது தெரியுமா முதலில்? அப்படி இருக்க, உங்களுக்கு இங்கே வழி விட வேண்டும் என்று உரிமை பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்!

நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, போதை ஏறியபடி கன்னா பின்னா என்று நாங்கள் இன்று ஆட்டம் போடவே செய்வோம். உங்களது செல்லப் பிள்ளைகள் குடித்துக் கும்மாளம் போடும் இடங்களுக்குள் நாங்கள் எந்த நாளும் நுழைய முடியாது, விடுவார்களா? நீங்கள் டிப்ஸ் என்று செலவழிக்கும் பணத்தின் அளவில் எங்களது ஒரு முழு நாளுக்கான உணவையும் நாங்கள் முடித்துக் கொள்வோம். அப்படியே உங்களது வாரிசுகள் தங்களது கட்டிழந்து குதியாட்டம் போடும் இடங்களுக்குள் நாங்கள் எதற்காக அனுமதிக்கப் படுவோம் என்றால், அதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். கழிப்பறைகளைச் சுத்தம் செய்யக் காத்திருக்கத் தான்.

எனவே இன்றைய எங்கள் ஆட்டம் சாலையில் தான். இன்னொன்றும் யோசித்துப் பாருங்கள், சாலையில் குடித்துவிட்டு நாங்கள் ஆட்டம் போடும் போது, உங்கள் கார் செல்லும் பாதையைக் கொஞ்சம் மறிக்க மட்டுமே செய்கிறோம். ஆனால், நீங்கள் குடித்துக் கும்மாளம் போட்டபடி கார்களில் பவனி வரும்போது, வெறித் தனமாக உங்கள் கார்களை எங்கள் மீது ஏற்றிச் சாலையோரம் நசுக்கித் தள்ளிவிட்டுப் போகிறீர்கள். குடித்திருக்கும்போது நம்மில் யார் அதிகம் ஆபத்தானவர்கள் என்பது பற்றிய புரிதலை முதலில் ஏற்படுத்திக் கொள்வோம்.

என்னதான் நாளை மீண்டும் -நீங்கள் கொடுக்கும் குறைந்த கூலிக்காக உங்களது வசைச் சொற்கள்-இழி சொற்கள் எல்லாம் கேட்டுக் கொண்டும், உலகமே உங்கள் தோள்களில் என்பது போல் பாவித்துக் கொண்டு நீங்கள் நடந்து கொள்வதை சகித்துக் கொண்டும் - உங்களுக்காக உழைக்க வந்து நிற்போம் என்றாலும், இந்த இரவில் எங்கள் கொண்டாட்டத்தை நடத்துகிறோம். உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, உங்களது வாகனங்களில் அமர்ந்தபடி எங்களைச் சபித்துக் கொண்டிருங்கள். அல்லது, பேசாமல் எங்கள் களியாட்டத்தில் நீங்களும் கலந்து விடுங்கள்.


கட்டுரையாளர் சித்தார்த்திய ஸ்வபன் ராய் அவர்களின் மின்னஞ்சல்: siddharthyaroy@gmail.com

நன்றி: தி ஹிண்டு: ஏப்ரல் 24, 2011

தமிழில்: எஸ் வி வேணுகோபாலன்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

உரிஞ்சப்படும் உவரி……





கடந்த இரு தினங்களுக்கு முன்னால் நண்பர்களுடன் உவரி சென்றிருந்தேன். நான்கு வருடங்களுக்கு பின் மீண்டும் செல்வதால் நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் பழைய நினைவுகளை அசைபோட்டபடி சென்றோம். ஊருக்குள் நுழைகையிலேயே எங்களுக்கு வழி மறுத்தபடி ஒரு மணல் லாரி தன் பெருத்த சரீரம் குலங்க குலங்க முன்னால் சென்று கொண்டிருந்தது. அது மண்ணை எங்கள் மீது வாரி இறைத்தபடியே எங்களை ஊருக்குள் அழைத்து சென்றது.

தாயை பிரிந்த கன்றினைப் போல் காரை விட்டு இறங்கியதும் நேரே கடலை நோக்கி விரைந்தோம். அங்கே எங்கள் கடலன்னை மடி அறுக்கப்பட்டு இரத்தச்சகதியாய் ஓலமிட்டு கொண்டிருந்தாள். தலைமுறை தலைமுறையாய் எங்களை சீராட்டி தாலாட்டி வளர்த்து வரும் எங்கள் கடலன்னையின் அவல நிலையை கண்ட போது நாங்கள் நிலைகுலைந்து போனோம். பணவெறி பிடித்த ஓநாய்களின் கோரப்பசியால் பலலட்சம் வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாய் தன் ஓயாத பயணத்தின் மூலமாக அவள் சேர்த்து வைத்திருந்த வளமான மண்ணையும் இழந்து கரைகளும் துண்டிக்கப்பட்டு சிவந்திருந்தாள்.


இந்தப் படங்கள் நான்கு வருடங்களுக்கு முன் அதாவது 08/08/2008 அன்று எடுத்தது. இப்படி இருந்த இடம் தான் இப்போது……….

இப்படி இருக்கிறது.....

உவரியின் புகழ்பெற்ற ”செல்வமாதா” கோயிலின் நான்கு வருடங்களுக்கு முந்தைய புகைப்படம் இது. இதில் என் நண்பர்கள் உற்சாகமாக ஆடிக்கொண்டிருக்கும் தார்ச்சாலையின் இன்றைய நிலை…….

ஆம்! அந்த தார்ச்சாலைதான் இப்படி அரிக்கப்பட்டு கடல் மேலும் ஊருக்குள் வந்துள்ளது. செல்வமாதா கோயிலில் இருந்து அந்தோணியார் கோயிலுக்கு முன்பு கடற்கரையோரமாக நடந்தே சென்று விடலாம் ஆனால் இன்றோ……..

இது தான் நிலை. கரைகள் ஒடுக்கப்பட்டு…… வீடுகள் அரிக்கப்பட்டு மிதப்பதற்கு தயாரான நிலையில் உவரி!!!!! மண்ணை சுரண்டுபவர்களுக்கு மனிதர்களைப் பற்றி என்ன கவலை? அவர்களது கண்ணெல்லாம் மண்ணாய் போய்விட்டது.

தான் வலைவீசும் கடல் பகுதியில் பக்கத்து ஊர்க்காரன் வலைவிரிதாலே தலையறுக்க துணியும் கடலோடிகளும் இன்று சுரனை அற்றுப் போய் பெற்ற அன்னைக்கும் மேலான கடலன்னையையே மாற்றானுக்கு காவு கொடுக்க துணிந்து விட்ட பேடித்தனத்தை நினைத்து வெட்கி தலைகுனிவதா? அல்லது தாங்கள் சுரண்டப்படுவதையே உணரமுடியமால் சுயசிந்தனை அற்றுப் போய் பாமரராய் வாழும் என்மக்களின் இழிநிலையை எண்ணி வருந்துவதா? என்றே புரியவில்லை.

கடலறுத்து எடுக்கப்பட்ட மண்ணிற்கு வேலியிட்டு காவல் காக்கும் வல்லூறுகள்.

தம் பிள்ளைகள் தத்தளிப்பதை கண்டு இரத்தம் சொறியும் கடல் அன்னை. இத்தனை கொடுமைகளையும் சுரண்டல்களையும் அந்த அரசாங்கத்தோடு சேர்ந்து மௌனமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள் உவரி காவல் தெய்வமான அந்தோனியாரும், கடலாடிகளின் தாயுமான செல்வமாதவும்!!!!!!!!!

சனி, 9 ஜூலை, 2011

இருக்கிறதா சமூகம் இன்னும்?


புத்தகப் பையைக் களவாடிக் கொண்டு
யார் எடுத்துச் சுமத்தியது
உன் தோள்களில் அந்த மண்வெட்டியை ?
கழுத்து சுற்றிப் புரளும் அந்தக் கைத்துண்டு
வேலையிடத்தின் ஐ டி அட்டையா?

காய்ப்பேறத் தயாராகும்
அந்தப் பிஞ்சுக் கரங்களில்
சேகரிக்கப் போவது
அடுத்த தலைமுறைக்கான வறுமையையா...

ஆர்வமோ, அச்சமோ, ஏக்கமோ
இன்னதென்று அறியமாட்டாதபடி
அப்பாவியாகவே உற்றுப் பார்க்கும்
அந்த ஒரு ஜோடி கண்கள்
இன்னும் கொல்லவில்லையா இந்த சமூகத்தை?


- எஸ் வி வேணுகோபாலன்

வியாழன், 9 ஜூன், 2011

விடைபெறுகிறான் ஒரு கலைஞன்....



உடலின் பயணத்தில்
முதுமையின் ஒரு மைல் கல்லில்
நின்றது அந்த மூச்சு..

தூரிகையின் மொழி நிரந்தரமாக்குகிறது
ஓர் ஆளுமையின் இருப்பை..
வண்ணங்களில் தோய்த்தெடுக்கும் கலவையின்
பொது நிறமாய் மின்னும் அந்த
வெள்ளைத்தாடியே ஒரு பேசும் தூரிகைதான்..

மரபணுக்குள் பொதிந்திருக்கும்
ஆதிக்க உணர்வுகளின் உசுப்புதலில்
அடியாள் படையின் காவிக் கரங்களில்
துருத்திய கட்டாரிகளைவிடவும்
வலுத்துத் தெரிந்தது
மண்டியிட மறுத்த அந்த எளிய ஓவிய இறகு....

ஓவியக் கூடங்களில் கிழிபட்டது
ஓவியங்கள் அல்ல
தேசத்தின் சகிப்புத்தன்மையும், கலையின் விமர்சனமும்.

புனிதங்களின் போர்வையில் ஒலித்த
பழமைவாதத்தின் குரூர விரல் சொடுக்கில்
வெளியேறத் தலைப்பட்டது
அந்தக் கலைஞனின் உருவம் மட்டும்....
எண்ணங்களும், ஈர்ப்பும்,
படைப்பின் உயிர்க்கனவும் கலையின் ஆன்மாவும்
தாய்மண்ணில் ஊறியிருக்க
அனுமதிக்குக் காத்திருப்பதில்லை

விடை பெறுகிறான் ஒரு பேசப்படும் கலைஞன்
சொந்தவூர் திரும்பும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்து
மைல்களைக் கடந்த ஓர் அயல் நாட்டிலிருந்தபடி!

நினைவில் இருக்கட்டும்
சாபம் அவனுக்கு விதிக்கப்பட்டதன்று
அவன் மரணத்தோடு அது கழியப் போவதும் அன்று....




எஸ் வி வேணுகோபாலன்

.

புதன், 8 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......14


இது ஒரு தொடர் பதிவு....


நாங்கள் விடிகாலை 4.00 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தோம். வீடு மரணக் கோலம் பூண்டது. கொஞ்சம் கொஞ்சமாய் என் தாயின் மரணச்செய்தி ஊருக்குள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், சுற்றத்தார்கும் பரப்பப்பட்டது. எங்கள் வீடின் சுவர்கள் மனித ஓலத்தை எதிர் ஓலித்துக் கொண்டு கதற துவங்கியது. எங்கள் வீட்டின் வரவேற்பரையில் அவளது உயிரற்ற உடலை ஏந்த எங்கள் அறையில் கிடந்த இரும்புக் கட்டில் எடுத்துப் போடப்பட்டது. அவள் உழைப்பில் வாங்கிய மெத்தை அக்கட்டிலில் இருந்து அகற்றப்பட்டு…..பழைய ஈச்சம் பாய் விரிக்கப்பட்டது.

சொந்தவீடு…..

எல்லா மனிதர்களையும் போல் என் அன்னைக்கும் அது மிகப்பெரும் கனவாக இருந்த காலமது. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்…. ஒருநாள் மாலை நானும் என் தம்பியும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாலையில் என் அம்மாவும், அப்பாவும் எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தாங்கள் வாங்கிய அந்த புதிய காலிமனையை காண்பிக்க அழைத்து சென்றார்கள். அப்போது அந்த தெருவில் ஓரிரு வீடுகளே இருந்தது. எங்கள் இடத்தில் கருவேலஞ் செடிகளும், காய்ந்து போன புதர்களும் மண்டிக் கிடந்தன. அதனை விலக்கியபடி எங்களை அழைத்துச் சென்று அதன் எல்லைகளை காண்பித்தார்கள். அந்த இடம் மொத்தம் பத்து செண்ட் என குறிப்பிட்டார்கள். நாங்கள் ஏன் ஏக்கர் கணக்கில் வாங்கவில்லை என கேட்ட போது என் அம்மா சிரித்தபடி” நீங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சு அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஏக்கர் கணக்குல வாங்கி கொடுங்கடா….” என்றாள். எங்களுக்கு அப்போது அது ஏமாற்றமாக இருந்தாலும் அவர்களது உற்சாகத்தில் அது வீடு வந்து சேரும் போது மறைந்து போனது.

அன்றிலிருந்து நாங்கள் அந்த வீடு கட்டி குடிவந்த நாள் வரையிலான ஒருவருடத்திற்கும் மேலான காலத்தின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அவளுக்கு அந்த வீடு பற்றிய எண்ணத்தோடும்,கனவுகளோடுமே கழிந்தது. எங்கள் வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவள் தனது ரசனைக்கேற்ப செதுக்கி வந்தாள். வீட்டை எப்படி அமைத்தால் வெளிச்சம் அதிகம் இருக்கும்….? என்ன கற்களை தரைக்கு பயன்படுத்தினால் உஷ்ணம் குறைவாக இருக்கும்…..? என்ன வண்ணத்தை ஒவ்வொரு அறைக்கும் அடிக்க வேண்டும்…? என்பது முதல் படுக்கை அறையினுள்ளே குளியலறையும், கழிப்பறையும் இருந்தால் எனக்கும் ,தம்பிக்கும் திருமணமாகி வரப்போகும் மருமகள்களுக்கு வசதியாக இருக்கும் என்பது வரை அவள் யோசித்து யோசித்து கட்டிய வீடு அது.

அப்படி அவள் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு தன் எஜமானியை முதலும் கடைசியுமாக வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தது……

அதிகாலை 7.00 மணியளவில் என் அப்பாவும், பாட்டியும், வேலைக்கார அக்காவும் என் அம்மாவுடன் ஆம்புலன்சில் வந்திறங்கினார்கள்.

என் தாய் வெள்ளைத்துணிகளால் சுற்றிப்பட்ட ஒரு மனிதப் பொட்டலமாய் வீட்டிற்குள் எடுத்துவரப்பட்டாள். மரண ஓலங்களோடு அவள் அந்த கட்டிலில் கிடத்தப்பட்டாள். என் தாயின் சடலத்தின் மீது விழுந்து அழுதுக்கொண்டிருந்தவர்களை விலக்கி நான் அவள் முகத்தின் மீது போர்த்தியிருந்த துணியை விலக்கினேன்…… வாடிய மலரைப் போன்று அவளது முகம் காய்ந்து போயிருந்தது. அவள் எப்படி எப்போதும் நித்திரையில் அரைக்கண்கள் திறந்தபடி தூங்குவாளோ அப்படியே அப்போதும் அவளது கண்களும் பாதி திறந்தபடியே இருந்தது. அவள் உதடுகள் என்னிடம் ஏதோ சொல்ல துடுத்தது போல் பிளந்து காணப்பட்டது. அதில் அவளது இடைப்பல்லும் கொஞ்சம் தெரிந்தது. நான் அவளது கன்னங்களை என் கைகளால் பற்றி அள்ளியபோது அவளது நாசியிலிருந்த இரத்தம் என் கைகளை நனைத்தது. என் கைகள் எங்கும் என் தாயின் குருதி பரவியது……

அதுவரை எனக்குள் சிறைப்பட்டு கிடந்த நான் என்னையும் மீறி வாய்விட்டு ”அம்மாஆஆஆஆஆஆஅ…….”எனக் கதறினேன். நான் சின்னதாக முனங்கினாலே பதறி துடிப்பவள் என் கதறல்களை கேட்டும் அமைதியாகவே இருந்தாள்………….

அன்று மாலையில் அவளுக்கு அந்தோனியார் கோயிலில் வைத்து இரங்கல் பூசை நடந்தது.எழு பாதிரிமார்கள் அந்த பூசையை வைத்தார்கள். அப்போது அந்த பூசையில் செய்யப்பட்ட பிரசங்கத்தில் ஒரு பாதிரியார் இப்படி குறிப்பிட்டார்…..

“மலர்கள் செடிகளில் முளைத்தாலும் அவைகள் அனைத்துமே அந்த தோட்டத்தின் எஜமானனுக்கே சொந்தம்…. அந்த தோட்டத்தின் எஜமானனுக்கு தன் மலர்களை எப்போது கொய்ய வேண்டும் என நன்றாக தெரியும். அவன் தனக்கு உகந்தமான நேரத்தில் அந்த மலரை கொய்துவிடுவான். மலரினை செடியிழந்தாலும் அது உரியவனிடமே சென்றிருப்பதை அவைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்…. தேவன் தனக்கு உகந்தமான மகளை தன்னிடத்தே அழைத்து கொண்டுவிட்டார்…..”என்றார்.

நாம் உணர்வுகளற்ற மரமோ….. செடியோ…. அல்லது உயிர் தழைத்தலும், இனப்பெருக்கமும் மட்டுமே கொண்ட ஆஃறிணைகளோ அல்ல. நாம் தான்தோன்றிகளும் அல்ல.

நாம் மாறாத அன்பும், வற்றாத காதலும், பிரியாத நேசமும் மிக்க மனிதசமூகமல்லவா…..?.

நாம் நமது உயிர் தழைக்க வேண்டும் என மட்டுமே வாழ்பவர்கள் அல்ல…. மாறாக தியாகமும், விட்டுக்கொடுத்தலும், பகிர்தலும் நிரம்பிய வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் அல்லவா….?

அப்படியிருக்கும் போது நாம் காதலோடு நேசித்த உறவுகள் நமக்கு சொந்தமானவையல்லவா…..? நமக்கு சொந்தமானதை “மரணம்” பிடுங்கிக் கொள்ளும் போது நமக்கு வலிக்காதா….?

”மரணம்” இயற்கையின் நிலையான விதியாக இருக்கலாம்……ஆனால் அழியாத நம் நினைவுகளிடத்தே மரணமும், இயற்கையும் தோற்ற போகின்றது!!!

என் தாயின் உடலை மண்ணில் புதைக்கும் முன் அவள் பெட்டியின் அருகே மண்டியிட்டு நான் அவள்: காதுகளில்…..

”அம்மா…..

நான் உன்னை இன்று

இங்கு புதைக்கவில்லை……

என்னுள் உன்னை விதைக்கிறேன்….”எனச் சொல்லி என் தாயின் நெற்றியில் இட்டேன் என் கடைசி முத்தத்தை………..!!!!!!!!!!!!!


முடிந்தது.......!!!!!


என் தேவதையின் சரிதை.....13


இது ஒரு தொடர் பதிவு......

வயிறு நிறைய இரையை நிரப்பிக் கொண்டு குந்தானிக் குலுங்க குண்டியை ஆட்டியபடி நகரும் பன்னிக் குட்டியை போல் பேருந்து நகர முடியாமல் நகர துவங்கியது. மனித நெருக்கம் ஒரு அடர்த்தியான வெக்கையை பேருந்துக்குள் பாய்ச்சி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பேருந்து வேகமெடுக்க எடுக்க…. அந்த வெக்கை குறைந்து காற்றின் கரங்கள் தீண்ட ஆரம்பித்தன.

எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. என்னை ஒருவித மனச்சோர்வு அழுத்திக் கொண்டிருந்தது. அம்மாவை பற்றிய ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. இடையிடையே என் காதலியும் வந்து போனாள். ஆனால் அப்படி எண்ணங்கள் சிதறும் போதெல்லாம் நான் என்னையே எனக்குள் கடிந்து கொண்டு என் மன ஓட்டத்தை என் அம்மாவை மையப்படுத்தியே இருக்குமாறு மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு சொல்ல முடியாத ஒரு குழப்பமான போராட்டம் எனக்குள் அரங்கேறிக் கொண்டிருந்தது.

என் வாழ்வில் அப்படி ஒரு நிம்மதி இழந்த…. குழப்பமான நாளை நான் அதுவரை எதிர் கொண்டதேயில்லை. அலைகழிப்பில் இருந்த என் மனதில் இதுதான் என் தாயின் கடைசி நாளாக இருக்குமோ என என்னுள் ஒரு எண்ணம் தோன்றியது. அது ……அப்படி…. நிச்சயம் இருக்க கூடாது என எனக்குள் விகாரமாக சொல்லி நானே மறுத்துக் கொண்டேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்த எண்ணம் தோன்றவே செய்தது. அது எனக்கு மிக கொடூரமான மனச் சித்ரவதையை அளித்தது. இப்படியே குழம்பிக் கொண்டிருந்தவாறே என்னையும் அறியாமல் தூங்கிப் போனேன்.

பேருந்து மேலக்கரந்தையில் ஒரு மோட்டலில் நிறுத்தப்பட்ட போதே விழிப்பு தட்டியது. என் காதருகே ஒருவன் பேருந்துக்கு கீழே நின்றபடி…..”வண்டி ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிஷம் நிக்கும்… காபி….டீ…..டிபன் சாப்புடுறவுங்க சாப்பிடலாம்…..” என கறைந்து கொண்டிருந்தான்.

நானோ கீழே இறங்க விருப்பமற்றவனாக என் இருக்கையிலே அமர்ந்திருந்தேன்……பேருந்தே காலியாகி இருந்தது தன்னை ஆசுவாசப் படுத்துக் கொள்ள. மாமாவும், தம்பியும் கீழே இறங்கியபடி என்னை டீ குடிக்க அழைத்தார்கள். நான் வர மறுத்ததும். அவர்கள் சென்றார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் தம்பியை தேநீர் வாங்க சொல்லிவிட்டு மாமா அங்கிருந்த வாடகை தொலைப்பேசி கூண்டிற்குள் நுழைந்தார்…… ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும் மாமாவின் அழுகுரல் என் ஜன்னலோரம் கேட்டது. என் தம்பியும் அவர் பக்கத்தில் நின்று கொண்டு விசும்பிக் கொண்டிருந்தான்.

அவர் என்னை பார்த்து,” டேய் அம்மா….. நம்மள அநாதையா விட்டிட்டு போயிட்டாடா…..” என அலறிய போது….

நான் பாய்ந்தோடி கீழி இறங்கி அவர் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு “யார்கிட்ட என்ன பேசுற…..? இதையே வேற எவனாவது சொல்லியிருப்பான்னா… அவன் தலை இந்நேரம் தரையில கிடக்கும்…..” என கிட்டத்தட்ட ஒரு மிருகமாகவே மாறி கத்தியபடி நான் அவரை ஏறத்தாழ அடிக்கவே பாய்ந்தேன்.

மிகப்பெரும் மனப்போராட்டத்தோடும், குற்றவுணர்வோடும் தவித்துக் கொண்டிருந்த என்னிடம் அவர் அப்படி சொன்னபோது…..என் மனசாட்சியின் குரலாகவே அவரது குரல் எனக்கு ஒலித்தது. நான் என் மீதான கோபத்தையே அவர்மீது வெளிப்படுத்தி நின்றேன்.

அங்கிருந்த அத்தனை பேரும் என்னமோ ஏதோவென்று எங்களை நெருங்கிய சமயம்……

“அப்பா…. இப்பதாண்டா போன்ல சொன்னாங்க…..” என அவரும் பெருங்குரலெடுத்தார். எனக்கு எதுவும் புரியாமல் செயலற்று அவர் சட்டையை பற்றியவாறே நின்று கொண்டிருந்தேன். அவர் என்னை அணைத்துக் கொண்டார். நிச்சயம் நான் அப்போது அழவில்லை. எனக்குள் கோபமும்…. ஒருவகையான மரத்துப் போன நிலையுமே மேலோங்கியது. என் தம்பியும் என் மாமாவை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

நான் என்னை அவரிடம் இருந்து விடுவித்துக் கொண்டு…..” அப்ப நாங்க அநாதையாயிட்டோமா….?” என்று கேட்டேன்.

அவர் எங்களை அணைத்துக் கொண்டு ”அப்படி சொல்லாதடா…..அப்படி சொல்லாத….”என மீண்டும் அழ ஆரம்பித்தார். எங்களை சுற்றி நின்றவர்கள் ஒருவாறு எங்களை தேற்றி ஆசுவாசப்படுத்த முயற்சித்தனர்.

என் மாமா தான் முதலில் சுதாகரித்து கொண்டார். என் தம்பி விசும்பிக் கொண்டே இருந்தான். நான் ஒரு பிணத்தைப் போல் அவர்கள் பின் சென்றேன்.

“இனிமேல் நாம மதுரைக்கு போக வேண்டாம்….. நம்ம ஊருக்கே போயிருவோம்….. அப்பா அப்படித்தான் சொன்னாங்க…..” என்றபடி அங்கே தூத்துக்குடிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த பேருந்தில் எங்களை ஏற்றினார்.

என் அம்மாவிற்கு “மரணம்” என்ற வார்த்தையே பிடிக்காது. அவள் பொதுவாக இறந்தவர்கள் வீட்டிற்கு கூட செல்ல விரும்பமாட்டாள். ஆம்! மரணம் அவளுக்கு ஒருவித பயமும் தான்.

ஏனென்றால் அவள் வாழ்வை அப்படி நேசித்தாள். பொதுவாகவே அவளுக்கு ”பிறந்தாள்” என்பதை ஒரு கொண்டாட்டமான நாளாகவே பார்க்கும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு வருடமும் அவள் தனது பிறந்தநாளையும், எங்களது பிறந்தநாள்களையும் கொண்டாடும் வழக்கத்தை எங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தி இருந்தாள். ”பிறப்பு” என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட வரம் என்பாள். அப்படியொரு வரம் அருளப்பட்ட நாளை கொண்டாடுவது அவசியம் என்பது அவளது திண்ணமான கருத்து.

எங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மெழுகுவர்த்தி ஏற்றி அதை ஊதி அணைப்பதும், கேக் வெட்டுவதும் முக்கியமான சடங்காக இருந்தது. நான் அப்படியொரு எனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் என் அம்மாவிடம் எனது அந்த கேள்வியை கேட்டேன்………

’ஏன் கேக்கை மட்டும் வெட்டிக் கொடுக்காமல்…. அதில் தேவையில்லாமல் மெழுகுவர்த்தியை ஏற்றி அதை ஊதி அணைக்க வேண்டும்?’ என்று.

அதற்கு அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்து சொன்னாள் “நீ பிறக்குறதுக்கு முன்னாடி இருண்டு போயிருந்த எங்க வாழ்க்கைக்கு வெளக்கோட வெளிச்சம் அந்த இருளை விரட்டுறதுக்கு தேவப்பட்டுச்சு…..ஆனா நீ பிறந்த பின்னால எங்களுக்கு வெளக்கோட வெளிச்சம் தேவையில்லாம போச்சு…..ஏன்னா நீதான் எங்க வாழ்க்கைக்கான வெளிச்சம். இதுக்குத்தான் உன்னோட ஒவ்வொரு பிறந்தநாள் அன்ணைக்கும் இந்த மெழுவர்த்தி ஏத்தி ஊதி அணைக்கிறோம்….” என்றாள்.

அந்த அளவிற்கு வாழ்வை அர்த்தப்படுத்தி வாழ விரும்பியவள் என் அன்னை. அப்படி அணுவணுவாய் வாழ்வை யாசித்தவளை….. மரணம் பற்றிக் கொண்டது. எங்கள் குடும்பத்தின் வெளிச்சத்தை இருள் வென்றுவிட்டது. இனி எத்தனை கோடி விளக்கேற்றினாலும் அவளது ஓளிக்கு ஈடாகுமா…? நாங்கள் நிலையான இருளுக்குள் தள்ளப்பட்டோம். மரணம்! நிச்சயம் துயரத்தின் உச்சம் தான். ஆனால் மரணித்தவருக்கு அல்ல….. மரணித்தவரை நேசித்தவர்களுக்கு!

இலைகள் சருகாவது

இயற்கைதான்…..ஆனால்

மரங்கள் அவைகளை

பாரமாய் நினைப்பதில்லை-இருந்தபோதும்

காற்று அதனை அனுமதிப்பதில்லை.


........தொடரும்.