வியாழன், 26 மே, 2011

நான் யார்....?


நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?

சாதி என்னும் அரக்கனின்

கொடூரப் பசிக்கு தினம்தினம் எம்

சனங்களின் உரிமைகளும் உயிர்களும்

இரையாகிக் கொண்டிருந்தாலும்

”அதற்கென்ன செய்யமுடியும்?”என்று

இருக்கும் கூட்டத்தில்- நான் யார்…?



ஊழலும், லஞ்சமுமாய் புரையோடிப்

போன அதிகாரவர்க்கத்தையும்,

அரசியல் விற்பன்னர்களையும்

காறி உமிழ்ந்தபடி- தன்

காரியம் சாதிக்க கையூட்டு கொடுக்கும்

கண்னியவான்களில் – நான் யார்…?


வணிகமும் வர்த்தகமும்

வாழ்வின் தேவைகளை சார்ந்திராமல்

ஆசைகளையும், நுகரும் வெறியையும்

அடிப்படையாக்கி சந்தைகள் மலிந்துபோய்

மனிதம் விலையாகிக் கொண்டிருக்கும்

வர்த்தகமயமான உலகில் - நான் யார்…?


எம் கைகெட்டும் தூரத்தில்

தம் உரிமைகளுக்காக போராடிய

எம் சகோதிர சகோதிரிகளை

இனவெறி அரசு அழித்து ஒடுக்கியபோதும்

இதயங்கள் மரத்துபோய்

துயரங்களைக் கூட செய்திகளாக

பார்க்கப் பழகிப்போன சமூகத்தில்- நான் யார்…..?


எம் தேசத்து வளங்களை

அந்நிய பெரும் முதலாளிகளுக்கு

தாரை வார்ப்பதையே ராஜ விசுவாசமாய்!

நினைத்துக் கொண்டு போட்டிப் போடும்

அரசியல் ’அடியாட்களின்’ அடாவடித்தனத்தை

சகித்துக் கொண்டு வாழப் பழகிய

கூட்டத்தில்- நான் யார்…?


கண்களை இறுக மூடிக்கொண்டும்

’கடவுளே! கடவுளே!’- என

கூப்பாடு போட்டுக் கொண்டும்

காசுக்காக ”கடவுளை” ஏலம் போடும்

கயவர்களின் பேச்சை நம்பிக் கொண்டும்

‘விதைக்காமல் விளைச்சலுக்காக ‘

கடவுளை அழைத்துக் கொண்டும்

காத்திருக்கும் கூட்டத்தில்- நான் யார்….?


மனிதத்தை மறந்து மதவெறி பிடித்து

சகமனிதர்களை வதைக்கும் மதங்களின்

அடையாளங்களை சுமந்து திரியும்

மடமைக் கூட்டத்தில்- நான் யார்….?


அக்கிரமங்களையும் அநியாயங்களையும்

கண்டு ஆத்திரம் கொள்ளாமல்

சுயநலமாய் சகித்து வாழ பழகிப்போன

சுயநலவாதிகளில்- நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?!!!!!!!!

கருத்துகள் இல்லை: