வெள்ளி, 3 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......10


இது ஒரு தொடர் பதிவு......

செப்டம்பர் 5ஆம் தேதி…..

விடியற்காலை ஆறு மணி போல் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அதிகாலையிலே என் வருகைக்காக மொத்த குடும்பமும் காத்திருந்தது. என் அம்மாவும் என்னை மலர்ச்சியோடு எதிர் கொண்டாள்.

“என்னடா இப்புடி மெலிஞ்சிட்ட….”

“எல்லாம் உங்கள பாக்காமத் தாம்மா…..” என்றபடி நான் அப்படியே நாற்காலியில் அமர்ந்திருந்தவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். அவள் வலியால் கத்திவிட்டாள். நான் பதறிக்கொண்டு விலகிய போது தான் புரிந்து கொண்டேன் நான் அவளது தோல்களை சற்று வலுவாக பற்றிக் கொண்டுவிட்டேன் என.

“அம்மா சாரிம்மா….தெரியாம பண்ணிட்டேன்……ரொம்ப வலிக்குதா….?” என நான் கேட்டுக்கொண்டிருக்கும் போதே என் அப்பாவும், பாட்டியும் அந்த அறைக்குள் பதறியடித்தபடி ஓடி வந்தார்கள்.

“என்னம்மா என்னாச்சு…?”-இது அப்பா.

“இவந்தான் மேல விழுந்து என்னய அமுக்கிட்டான்…” சிறு குழந்தையைப் போல் என்னைப் பற்றி புகார் கூறினாள்.

“ஒம்மவந்தானம்மா…..நீதான எம்மவன் எப்ப வருவான்…..எப்ப வருவான் கேட்டுட்டே இருந்த இப்ப என்ன….?”-அப்பா

“எனக்குத் தெரியும் நீங்க ஒண்ணும் எனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாம்……” என குழந்தை போல் குழைந்தாள்.

அப்பா சிரித்தபடியே என்னைப் பார்த்து “சரிப்பா நீ போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா….. நாம கிளம்பலாம்…” என்றார்.

“என்னப்பா எங்க கிளம்பச் சொல்றீங்க….? எங்க போறோம்…?”

“என்ன தெரியாத மாதிரி கேக்குற மதுரைக்கு தான்…..” அப்பாவை முந்திக்கொண்டு ஆச்சி பதிலளித்தாள்.

“மதுரைக்கா…..? எதுக்கு? என்னப்பா இப்பதான வந்து நிக்கிறேன் அதுக்குள்ள மறுபடியும் மதுரைக்கா….?”

“ஒண்ணுமில்ல மக்களே உங்கம்மாவுக்கு அங்க மீனாட்சி மிஷன்ல உள்ள இன் பேஷண்ட்ஸுக்கு எல்லாம் இன்னைக்கு

சாப்பாடு போடனும்கிறா….அதுவுமில்லாம மறுபடியும் ஒரு செக்கப்புக்கு அங்க டாக்டர் இன்னைக்கு வரச் சொல்லியிருக்காரு…..காருக்கும் சொல்லியாச்சு…..அதான் நீ வந்த

பிறகு உன்னையும் கூட்டிட்டு போகலாம்ன்னு இருந்தோம்” என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏனென்றால் ஊருக்கு வருவதற்கு முன்னால் நான் என் காதலியிடம் அன்று

அவளை சந்திக்க வருவதாய் உறுதி கூறியிருந்தேன். மேலும் அவளது தந்தையும், தாயும் அன்று வெளியூருக்கு போகவிருந்ததால் அன்றைய பொழுதை முழுவதுமாக என்னோடு கழிக்கவும் அவள் சம்மதித்து இருந்தாள்……

இப்படி பல கனவுகளோடு வந்தவனுக்கு எனது தந்தையின் இந்த திடீர் பயண ஏற்பாடு அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது. ஆனாலும் மதுரைக்கு வரவே முடியாது என சொல்லவும் மனம் சம்மதிக்க வில்லை. என்ன செய்வதென்று புரியாமல் நான் என் காதலிக்கு போன் செய்தேன். அவள் என்னை கடிந்து கொண்டு என் அம்மாவுடன் சென்று வர பணித்தாள். எனக்கும் ஏதோ தெளிவு பிறந்தது போல் தோன்றியது. மேலும் அன்று மாலையே திரும்பி விடலாம் என உறுதி கொடுக்கப்பட்டதால் மதுரைக்கு கிளம்பினேன்.

காலை 8.30 மணி அளவில் நான் முன் இருக்கையில் ஓட்டுனருடன் அமர அப்பாவும், அம்மாவும்,ஆச்சியும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் அந்த அம்பாசிடர் காரில் மதுரையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்……..

அதுதான் என் தாயுடனான எங்களது கடைசிப் பயணம் என்று அறியாமல்.

மிகவும் சந்தோஷமாக உரையாடிக் கொண்டே பயணித்தோம். பின்னால் அமர்ந்திருந்த என் அம்மாவோ என்னை திரும்பச் சொல்லி அடிக்கடி என் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்.

அப்பா “ என்னம்மா உம் பையனுக்கு ஒரே முத்த மழையா இருக்கு…?”

அம்மா “ஆங்….இது எம்மவன் அதான்…” என்றபடி என்னை மீண்டும் முத்தமிட்டாள்.

அப்பா “அப்ப வீட்ல இருக்குறவன்….”

அம்மா “ அது உங்க பிள்ளை…… இவந்தான் எம்மவன்…..நான் இன்னக்கு அவனையுந்தான் கூப்பிட்டேன் வந்திச்சா அந்த குட்டி நாயி….எம்புள்ள தான் வந்திருக்கான் எங்கூட…இவன் என் சீமந்தர புத்திரன் இல்லையா…..அதான்”

ஆச்சி “ரொம்பத்தான் மவன கொஞ்சுவா….” என அவளும் கேலி பேசினாள். இப்படியே என்னை கொஞ்சயபடியே உற்சாகமாக பேசிக் கொண்டே வந்தவள். அருப்புக்கோட்டையில் காரை நிறுத்தச் சொல்லி கேசரி வாங்கிக் கேட்டாள். இப்படியெல்லாம் வழக்கத்தில் கேட்பவள் அல்ல. ஆனால் அவள் அன்று ஒரு குழந்தையைப் போல் மாறிப்போயிருந்தாள். என் அப்பாவும் அவளது ஆசைகளை நிறைவேற்றியபடி அவள் கேட்பதையெல்லாம் வழி நெடுகே வாங்கிக் கொடுத்தபடி வந்தார். இடையிடேயே கொஞ்சம் கண்ணயர்ந்து கொண்டும்…..பேசிக்கொண்டும் மதுரை வந்து சேர்ந்தோம்.

அங்கே சென்றதும் அவள் விருப்பப்படியே அங்கே இருக்கும் உள் நோயாளிகளுக்கு அன்றைய மதிய உணவிற்கான கட்டணத்தை ரிசப்ஷனில் சொல்லி கட்டிவிட்டு. மருத்துவரை பார்க்க விண்ணப்பித்தோம். அவரிடம் நாங்கள் வந்திருப்பதாய் தெரிவிக்க பட்டவுடன் எங்களை அதிகம் காத்திருக்க வைக்காமல் அவரது அறைக்குள் அழைத்துக் கொண்டார். என் அம்மாவை

பரிசோதித்தவர் அன்று அங்கே ஒருநாள் அட்மிட் ஆக சொல்லிவிட்டார்.

வேறு வழியின்றி அம்மாவை அங்கு அட்மிட் செய்தோம்.

அன்று தான் மீனாட்சி மிஷனில் நவீன வசதிகள் அடங்கிய அந்த அறை புதிதாக திறக்கப்பட்டிருந்தது. ஒரு நட்சத்திர விடுதி அறைக்கு ஒப்பான வசதிகளோடு கட்டப்பட்டிருந்தது அந்த அறை. அந்த அறைக்குள் நுழைந்ததும் மருத்துவமனைக்குள் இருப்பதற்கான எண்ணமே மறைந்து போனது. அத்துணை நேர்த்தியாக அந்த அறை இருந்தது. நான் அந்த அறைக்குள் சென்றவுடனே என் அம்மாவை கேலி செய்ய ஆரம்பித்தேன்.

“இப்பதானேம்மா தெரியுது நீங்க எதுக்கு அடிக்கடி மீனாட்சி மிஷனுக்கு வாரீங்கன்னு….? இப்படி ரூம் கிடைச்சா நானெல்லான் காலம் பூரா இங்கன நோயாளியா கெடப்பேனே…”

“நான் படுறபாடு உனக்கு கிண்டலா தெரியுது என்ன?” என கோபமாகவே என்னை கடிந்து கொண்டாள்

“என்னம்மா ஒம்மவன் உன்னைய கிண்டல் பண்றான் இதுக்கு போயி கோபப்படுறியே”-ஆச்சி

“உங்களுக்கெல்லாம் என்னப் பார்த்தா கிண்டலாத்தான் தெரியும்….”என ஆச்சியிடமும் கோபத்தை கக்கினாள். ஏன் இப்படி காரணமே இன்றி கோபம் கொள்கிறாள் என எங்களுக்கு புரியவில்லை.

“என்ன ஜெயம்மா இப்படி கோபப்படுற….? அம்மா ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருத்தா….” என்றபடி ஆச்சி மௌனித்தாள்.

அம்மாவும் மறுமொழி பேச விரும்பாதவளாய் அமைதி காத்தாள். இதற்கிடையில் கீழே மருந்துக்கள் வாங்க சென்ற அப்பாவும் வந்துவிட்டார்.

அவருக்கு இங்கு நடந்த களோபரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆதலால் இயல்பாக ஆரம்பித்தார்…”யத்த…..இவுரு இங்க நின்னது நிக்க நம்மள தங்க சொல்லிட்டாரு நாமளும் எதுவும் எடுத்துட்டு வரல அதனால இப்ப நீங்க நாம வந்த காரிலே திரும்ப ஊருக்கு போயி தேவையான ஜாமான்களை எடுத்துட்டு வாரீங்களா…?” எனக்கேட்டார்.

“அது இல்லய்யா நான் இங்க இருந்தாத்தான் அவளுக்கு எல்லாத்துக்கும் சரியா இருக்கும். அதனால நீங்க பேரப்புள்ளைய போயே எடுத்துட்டு வரச் சொல்லுங்க…..”

” என்னப்பா நீங்க பேசுறீங்க அம்மா இங்க இருக்கட்டும்……அவனோ நீங்களோ போயிட்டு வாங்க….” என்றாள் அம்மா.

நானே முந்திக்கொண்டு “யப்பா நானே போறேன். எனக்கும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கனும் போல இருக்கு. துணிமணிகளையும் வேற தேவையான ஜாமானையும் யாரு கிட்டேயாவது கொடுத்து அனுப்புறேன்….”

“யாருகிட்டேயாவதுன்னா யாருகிட்ட கொடுத்து அனுப்புவ…?”-அப்பா.

“தாத்தாகிட்ட வேணுன்னா கொடுத்து அனுப்பு”-ஆச்சி.

“யத்த நீங்க வேற…? மாமாவ அலையவச்சிக்கிட்டு….. அதெல்லாம் வேண்டாம். மக்களே நீ ஜாமான்களை எடுத்து வேலைக்கார அக்காகிட்ட கொடுத்து அனுப்பு….” என யோசனை சொன்னார்.

இப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மருத்துவர் பார்வையிட அறைக்கு வந்தார்.

“என்ன….? அக்கா என்ன சொல்றாங்க……?” என உரிமையாக கேட்டபடி அறைக்குள் நுழைந்தார்.

“நீங்கதான் சொல்லனும் நான் எப்படி இருக்கேன்னு….”-அம்மா.

“உங்களுக்கென்ன ஜம்முன்னு இருக்கீங்க…. பையன் வேற பக்கத்துல இருக்காப்பல வேற என்ன வேணும் உங்களுக்கு…? ரூம்மெல்லாம் எப்படி இருக்கு….? ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறீங்க….?”-மருத்துவர்.

“ரூம்மெல்லாம் நல்லாயிருக்கு டாக்டர்….. எனக்குத்தான் இன்னிக்கு கொஞ்சம் ஞாபக மறதியாவே இருக்குற மாதிரி இருக்கு….” என சொன்னாள்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க எல்லாம் சரியாப் போகும். இன்னைக்கு ஒரு எக்ஸ்ரேவும்……பிளெட் டிஸ்டும் எடுத்திடுவோம். நான் மத்ததை சாயிங்காலம் வந்து பாக்கிறேன்…..” என்றபடி யாரும் கவனிக்காத வண்ணம் எனக்கு ஏதோ ஜாடை சொல்லியவாறு அறையைவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதும் நான் கேண்டின் சென்று வருவதாய் சொல்லிவிட்டு அவரை பின் தொடர்ந்தேன். சற்று நிதானித்தவரை நெருங்கினேன் “டாக்டர் அம்மா இப்ப திடீரென்னு ஏதோ ஞாபக மறதி வர்றதா சொல்றாங்களே…..அதனால ஏதும் பிரச்சனையா…?”

“she is at her last days…….அந்த கேன்சர் செல்ஸோட தாக்கம் இப்ப

அவங்க மூளை பகுதிக்கு பரவ ஆரம்பிச்சிடுச்சு…..at any moment the system may collapse…..sorryப்பா…” என்றபடி என் தோள் தட்டி என்னை கடந்து சென்றுவிட்டார். இது போன்ற வார்த்தைகளுக்கு நான் பழக்கப்பட்டிருந்தாலும் எனக்குள் ஒரு தாங்கொண்ணா வலி அப்போது ஏற்பட்டது. இது ஒருவகையான சித்திரவதையாக எனக்கு இருந்தது. ஒவ்வொரு நாளையும் தாயின் மரண தேதியாகவே எண்ணி எதிர் கொள்ளவது துயரத்தின் உச்சம்.

நான் நொறுங்கி போய் அறைக்குள் நுழைந்தேன். யாருடனும் எதுவும் அப்போது பேசத் தோன்றவில்லை. நான் ஊருக்கு கிளம்புவதாய் மட்டும் அப்போது அவர்களிடம் சொன்னேன்.

“அம்மாவை விட்டிட்டு போறியா….யாரையாவது ஜாமான்களை எடுத்திட்டு வரச் சொல்லு நீ அம்மா கூட இருடா…..நீ இருந்தா நான் கொஞ்சம் தைரியமா இருப்பேன்…..” என தன் கடைசி ஆசையை என்னிடம் சொன்னாள்.

ஏதோ ஒரு பிடிவாதத்தோடு அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்……

...........தொடரும்.

கருத்துகள் இல்லை: