சனி, 4 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை....11


இது ஒரு தொடர் பதிவு.............

சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்க்கை முழுவதும் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் அத்தகைய முடிவுகள் நம் சுயநலத்தின் வெளிப்பாடுகளே! ஆனால் நாம் அதை ஒப்புக்கொள்வதில்லை. என் தாய் அடிக்கடி சொல்வாள் ‘தப்பு செய்வதைவிட பெரும் பாவம் அதை நாம் ஒப்புக் கொள்ளாமல் நடிக்கும் போது நம்மை வந்து சேரும்’ என்று. கிறுத்துவ மதத்தில் ஒரு நடைமுறை உண்டு அதை ’பாவ சங்கீர்த்தனம்’ என்பார்கள். அதாவது நாம் செய்த தவறுகளை குற்றங்களை பாதிரியாரிடம் கூறி அதற்கு பாவ மன்னிப்பு கேட்பதற்கே அப்படி ஒரு பெயர்.

எனக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. கிறுத்துவ மதத்தின் மீதும் ஏராளமான விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் இந்த பாவ மன்னிப்பு கோரும் நடைமுறையில் எனக்கு மரியாதை உண்டு. ஏனென்றால் இல்லாத கடவுளுக்கு உண்மையாக இல்லாவிட்டாலும் வாழும் மனிதர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புவன் நான். மேலும் இது பாவங்களை குறைக்க உதவாமல் இருக்கலாம் ஆனால் நம் மன உறுத்தல்களுக்கு நிச்சயம் ஒரு வடிகாலாய் இருக்கும். அந்த நம்பிக்கையில் தான் நான் இந்த சரிதையை எழுத ஆரம்பித்தேன்……

எத்தனையோ முறை அவளை காயப்படுத்தி இருக்கிறேன். எத்தனையோ விஷயங்களில் அவளை அழச் செய்திருக்கிறேன். ஆனால் இவையாவும் அவள் என்னோடு இருக்கும் வரை எனக்கு புரியவில்லை. அவளது ஈடு இணையற்ற அந்த அன்பைக் கூட உணர முடியாத முடனாய்….. சுயநல பிண்டமாய் வாழ்ந்திருப்பதை எண்ணி எனக்கே என்மேல் அருவருப்பாய் இருக்கிறது. உலகில் எந்த ஒரு உறவும் பெற்ற அன்னைக்கு ஈடாக முடியாது என்ற எளிய யதார்த்தம் கூட உணராமல் வாழ்ந்தமைக்கு வெட்கி தலை குனிகிறேன்.

நான் உடைந்து விழும் ஒவ்வொரு முறையும் என்னை தேற்றி எழச்செய்தவள் என் அன்னை. என் வாழ்க்கை முழுவதற்குமான நம்பிக்கை ஊற்றாய் அவள் இருந்தாள்….. இருக்கிறாள். இந்த இடத்தில் அதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்பிகிறேன்……

நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பரீட்சை முடிவுக்காக காத்திருந்தேன். பரீட்சை முடிவுகளும் வந்தது. நான் பாஸாகி விட்டாலும் மிக குறைந்த மதிப்பென்களே பெற்று தேர்வாகி இருந்தேன். அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. நான் வீட்டில் உடைந்து போய் அழுது கொண்டிருந்தேன். என்னோடு படித்தவர்கள் எல்லாம் நல்ல மதிப்பென்கள் பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு உற்சாகமாக தயாராகி கொண்டிருந்தனர். நானோ வீட்டிலே முடங்கிக் கிடந்தேன். அப்போது என் தாய் தான் வந்து என்னை தேற்றி எழச்செய்தாள். அவள் அப்போது என் தோள்கள் தொட்டு உதிர்த்த வார்த்தைகள் என் வாழ்க்கை முழுவதற்குமானது……

“டேய் ஏண்டா அழுவுற இப்ப என்ன நடந்து போச்சு மார்க்கு குறைஞ்சு போச்சு அவ்வளவுதானே….. இதோட வாழ்க்கையே ஒண்ணும் முடிஞ்சு போயிடலியே….?

டாக்டர் ஆனாதான்….இன்ஜினியர் ஆனாதானா….. வாழ்க்கையில ஜெயிச்சதா அர்த்தம்ன்னு ஏன் நினைக்குற….?

நீ எந்த படிப்பு வேணா படி ஆனா படிக்கிறத விரும்பி படி….. நீ படிக்கிற துறையில நீ செஞ்சு காட்டுற சாதனை தான் நீ யாருன்னு சொல்லும். கக்கூஸ் கழுவுறது உன் தொழில் ஆனால் அதை உன்னை மாதிரி எவனும் செய்ய முடியாதுன்னு சொல்ல வைக்கனும் அதுக்கு பேருதான் வெற்றி!

செய்யுற தொழில்ல அசிங்கம்….. கேவலமானதுன்னு ஒண்ணும் கிடையாது. அடுத்தவன் காசுல அடிச்சு பிடுங்கி கோடிக்கோடியா சம்பாதிச்சு சேக்குறதுக்கு பேரு தான் கேவலம்…. கால் காசுனாக்கூட அதை கண்ணியமா உழைச்சு சம்பாதிச்சு சேக்குறது தான் நிலைக்கும். நான் இருவது வயசுல தோள்ள பையத் தூக்கிப் போட்டவ நாம இன்னைக்கு வாழ்ற வாழ்க்கை அதுல இருந்து தான் வந்திச்சு அதுக்காக நான் எவன் முன்னாடியும் பல் இழிச்சது இல்ல…..அன்னைக்கும் நான் நெருப்புதான் இன்னைக்கும் நான் நெருப்புதான்! நீ எம்மவண்டா….. நீ படிச்ச புள்ள புரிஞ்சுக்குவ….. அம்மா என்ன சொல்ல வர்றேன்னு…… கோடிக்கணக்கான விந்துக்கள்ல நீதாண்டா என் வயித்துல புள்ளைய ஜெனிச்சவன்…. உன்னால முடியும்டா….அம்மா இருக்கேன்……உங்கூட…..”

இந்த மந்திர வார்த்தைகள் தான் நான் ஒவ்வொரு முறை விழும் போதும் என்னை எழச்செய்து கொண்டிருப்பவை. என் வாழ்வில் வலியும் துயரும் மிகுந்தோடும் கணங்களில் நான் மீண்டும் மீண்டும் எனக்குள் நினைவூட்டிக்கொள்ளும் நம்பிக்கை வார்த்தைகள் இவை.

அவளிடம் நான் பார்த்து மலைத்த மற்றொரு விஷயம் அவளது அபாரமான தன்நம்பிக்கை. அந்த தன்நம்பிக்கை தான் அவளை இயக்கியது….

அவள் தன் நாற்பதாவது வயதில் இருசக்கர வாகனம் பழகப்போகிறேன் என்றபோது நான் உட்பட என் குடும்பத்தார் அனைவருமே அவளை கேலி செய்தோம். ஆனால் அவள் அதையெல்லாம் சட்டை செய்யாமல் எங்கள் உதவியும் இன்றி அவள் தனது பருத்த சரீரத்தை வைத்துக் கொண்டு முன்பின் சைக்கிள் ஓட்டிய அனுபவமும் இல்லாமல் தட்டுத் தடுமாறி அவளே வண்டியை ஓட்டிப் பழகிய போது உண்மையில் நாங்கள் அவளது உறுதிக்கு முன் சிறுத்துப் போனோம்.

அதேபோல் அவளுக்கு மார்பக புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை முடிந்து அவள் வீட்டில் ஓய்வில் இருந்த காலத்தில் அவள் கீ-போர்ட் வாசிக்க கற்றுக் கொண்டாள். இப்படி அவளால் ‘முடியாது’ என்று எதுவும் இல்லை என உறுதியாக நம்பினாள். அதுதான் உண்மையும் கூட. வாழ்க்கை முழுக்க ஏராளமான தோல்விகளை சந்தித்த சாதாரண மனுஷி தான் அவள். ஆனால் அந்த தோல்விகளால் அவள் ஒருபோதும் தேங்கி நின்றது இல்லை. மிக இயல்பாக அவளால் தன் தோல்விகளை கடந்து வரமுடிந்தது. அதுதான் அவள் வாழ்வின் வெற்றிக்கான ரகசியமும் கூட.

..............தொடரும்.

வெள்ளி, 3 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......10


இது ஒரு தொடர் பதிவு......

செப்டம்பர் 5ஆம் தேதி…..

விடியற்காலை ஆறு மணி போல் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அதிகாலையிலே என் வருகைக்காக மொத்த குடும்பமும் காத்திருந்தது. என் அம்மாவும் என்னை மலர்ச்சியோடு எதிர் கொண்டாள்.

“என்னடா இப்புடி மெலிஞ்சிட்ட….”

“எல்லாம் உங்கள பாக்காமத் தாம்மா…..” என்றபடி நான் அப்படியே நாற்காலியில் அமர்ந்திருந்தவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். அவள் வலியால் கத்திவிட்டாள். நான் பதறிக்கொண்டு விலகிய போது தான் புரிந்து கொண்டேன் நான் அவளது தோல்களை சற்று வலுவாக பற்றிக் கொண்டுவிட்டேன் என.

“அம்மா சாரிம்மா….தெரியாம பண்ணிட்டேன்……ரொம்ப வலிக்குதா….?” என நான் கேட்டுக்கொண்டிருக்கும் போதே என் அப்பாவும், பாட்டியும் அந்த அறைக்குள் பதறியடித்தபடி ஓடி வந்தார்கள்.

“என்னம்மா என்னாச்சு…?”-இது அப்பா.

“இவந்தான் மேல விழுந்து என்னய அமுக்கிட்டான்…” சிறு குழந்தையைப் போல் என்னைப் பற்றி புகார் கூறினாள்.

“ஒம்மவந்தானம்மா…..நீதான எம்மவன் எப்ப வருவான்…..எப்ப வருவான் கேட்டுட்டே இருந்த இப்ப என்ன….?”-அப்பா

“எனக்குத் தெரியும் நீங்க ஒண்ணும் எனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாம்……” என குழந்தை போல் குழைந்தாள்.

அப்பா சிரித்தபடியே என்னைப் பார்த்து “சரிப்பா நீ போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா….. நாம கிளம்பலாம்…” என்றார்.

“என்னப்பா எங்க கிளம்பச் சொல்றீங்க….? எங்க போறோம்…?”

“என்ன தெரியாத மாதிரி கேக்குற மதுரைக்கு தான்…..” அப்பாவை முந்திக்கொண்டு ஆச்சி பதிலளித்தாள்.

“மதுரைக்கா…..? எதுக்கு? என்னப்பா இப்பதான வந்து நிக்கிறேன் அதுக்குள்ள மறுபடியும் மதுரைக்கா….?”

“ஒண்ணுமில்ல மக்களே உங்கம்மாவுக்கு அங்க மீனாட்சி மிஷன்ல உள்ள இன் பேஷண்ட்ஸுக்கு எல்லாம் இன்னைக்கு

சாப்பாடு போடனும்கிறா….அதுவுமில்லாம மறுபடியும் ஒரு செக்கப்புக்கு அங்க டாக்டர் இன்னைக்கு வரச் சொல்லியிருக்காரு…..காருக்கும் சொல்லியாச்சு…..அதான் நீ வந்த

பிறகு உன்னையும் கூட்டிட்டு போகலாம்ன்னு இருந்தோம்” என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏனென்றால் ஊருக்கு வருவதற்கு முன்னால் நான் என் காதலியிடம் அன்று

அவளை சந்திக்க வருவதாய் உறுதி கூறியிருந்தேன். மேலும் அவளது தந்தையும், தாயும் அன்று வெளியூருக்கு போகவிருந்ததால் அன்றைய பொழுதை முழுவதுமாக என்னோடு கழிக்கவும் அவள் சம்மதித்து இருந்தாள்……

இப்படி பல கனவுகளோடு வந்தவனுக்கு எனது தந்தையின் இந்த திடீர் பயண ஏற்பாடு அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது. ஆனாலும் மதுரைக்கு வரவே முடியாது என சொல்லவும் மனம் சம்மதிக்க வில்லை. என்ன செய்வதென்று புரியாமல் நான் என் காதலிக்கு போன் செய்தேன். அவள் என்னை கடிந்து கொண்டு என் அம்மாவுடன் சென்று வர பணித்தாள். எனக்கும் ஏதோ தெளிவு பிறந்தது போல் தோன்றியது. மேலும் அன்று மாலையே திரும்பி விடலாம் என உறுதி கொடுக்கப்பட்டதால் மதுரைக்கு கிளம்பினேன்.

காலை 8.30 மணி அளவில் நான் முன் இருக்கையில் ஓட்டுனருடன் அமர அப்பாவும், அம்மாவும்,ஆச்சியும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் அந்த அம்பாசிடர் காரில் மதுரையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்……..

அதுதான் என் தாயுடனான எங்களது கடைசிப் பயணம் என்று அறியாமல்.

மிகவும் சந்தோஷமாக உரையாடிக் கொண்டே பயணித்தோம். பின்னால் அமர்ந்திருந்த என் அம்மாவோ என்னை திரும்பச் சொல்லி அடிக்கடி என் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்.

அப்பா “ என்னம்மா உம் பையனுக்கு ஒரே முத்த மழையா இருக்கு…?”

அம்மா “ஆங்….இது எம்மவன் அதான்…” என்றபடி என்னை மீண்டும் முத்தமிட்டாள்.

அப்பா “அப்ப வீட்ல இருக்குறவன்….”

அம்மா “ அது உங்க பிள்ளை…… இவந்தான் எம்மவன்…..நான் இன்னக்கு அவனையுந்தான் கூப்பிட்டேன் வந்திச்சா அந்த குட்டி நாயி….எம்புள்ள தான் வந்திருக்கான் எங்கூட…இவன் என் சீமந்தர புத்திரன் இல்லையா…..அதான்”

ஆச்சி “ரொம்பத்தான் மவன கொஞ்சுவா….” என அவளும் கேலி பேசினாள். இப்படியே என்னை கொஞ்சயபடியே உற்சாகமாக பேசிக் கொண்டே வந்தவள். அருப்புக்கோட்டையில் காரை நிறுத்தச் சொல்லி கேசரி வாங்கிக் கேட்டாள். இப்படியெல்லாம் வழக்கத்தில் கேட்பவள் அல்ல. ஆனால் அவள் அன்று ஒரு குழந்தையைப் போல் மாறிப்போயிருந்தாள். என் அப்பாவும் அவளது ஆசைகளை நிறைவேற்றியபடி அவள் கேட்பதையெல்லாம் வழி நெடுகே வாங்கிக் கொடுத்தபடி வந்தார். இடையிடேயே கொஞ்சம் கண்ணயர்ந்து கொண்டும்…..பேசிக்கொண்டும் மதுரை வந்து சேர்ந்தோம்.

அங்கே சென்றதும் அவள் விருப்பப்படியே அங்கே இருக்கும் உள் நோயாளிகளுக்கு அன்றைய மதிய உணவிற்கான கட்டணத்தை ரிசப்ஷனில் சொல்லி கட்டிவிட்டு. மருத்துவரை பார்க்க விண்ணப்பித்தோம். அவரிடம் நாங்கள் வந்திருப்பதாய் தெரிவிக்க பட்டவுடன் எங்களை அதிகம் காத்திருக்க வைக்காமல் அவரது அறைக்குள் அழைத்துக் கொண்டார். என் அம்மாவை

பரிசோதித்தவர் அன்று அங்கே ஒருநாள் அட்மிட் ஆக சொல்லிவிட்டார்.

வேறு வழியின்றி அம்மாவை அங்கு அட்மிட் செய்தோம்.

அன்று தான் மீனாட்சி மிஷனில் நவீன வசதிகள் அடங்கிய அந்த அறை புதிதாக திறக்கப்பட்டிருந்தது. ஒரு நட்சத்திர விடுதி அறைக்கு ஒப்பான வசதிகளோடு கட்டப்பட்டிருந்தது அந்த அறை. அந்த அறைக்குள் நுழைந்ததும் மருத்துவமனைக்குள் இருப்பதற்கான எண்ணமே மறைந்து போனது. அத்துணை நேர்த்தியாக அந்த அறை இருந்தது. நான் அந்த அறைக்குள் சென்றவுடனே என் அம்மாவை கேலி செய்ய ஆரம்பித்தேன்.

“இப்பதானேம்மா தெரியுது நீங்க எதுக்கு அடிக்கடி மீனாட்சி மிஷனுக்கு வாரீங்கன்னு….? இப்படி ரூம் கிடைச்சா நானெல்லான் காலம் பூரா இங்கன நோயாளியா கெடப்பேனே…”

“நான் படுறபாடு உனக்கு கிண்டலா தெரியுது என்ன?” என கோபமாகவே என்னை கடிந்து கொண்டாள்

“என்னம்மா ஒம்மவன் உன்னைய கிண்டல் பண்றான் இதுக்கு போயி கோபப்படுறியே”-ஆச்சி

“உங்களுக்கெல்லாம் என்னப் பார்த்தா கிண்டலாத்தான் தெரியும்….”என ஆச்சியிடமும் கோபத்தை கக்கினாள். ஏன் இப்படி காரணமே இன்றி கோபம் கொள்கிறாள் என எங்களுக்கு புரியவில்லை.

“என்ன ஜெயம்மா இப்படி கோபப்படுற….? அம்மா ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருத்தா….” என்றபடி ஆச்சி மௌனித்தாள்.

அம்மாவும் மறுமொழி பேச விரும்பாதவளாய் அமைதி காத்தாள். இதற்கிடையில் கீழே மருந்துக்கள் வாங்க சென்ற அப்பாவும் வந்துவிட்டார்.

அவருக்கு இங்கு நடந்த களோபரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆதலால் இயல்பாக ஆரம்பித்தார்…”யத்த…..இவுரு இங்க நின்னது நிக்க நம்மள தங்க சொல்லிட்டாரு நாமளும் எதுவும் எடுத்துட்டு வரல அதனால இப்ப நீங்க நாம வந்த காரிலே திரும்ப ஊருக்கு போயி தேவையான ஜாமான்களை எடுத்துட்டு வாரீங்களா…?” எனக்கேட்டார்.

“அது இல்லய்யா நான் இங்க இருந்தாத்தான் அவளுக்கு எல்லாத்துக்கும் சரியா இருக்கும். அதனால நீங்க பேரப்புள்ளைய போயே எடுத்துட்டு வரச் சொல்லுங்க…..”

” என்னப்பா நீங்க பேசுறீங்க அம்மா இங்க இருக்கட்டும்……அவனோ நீங்களோ போயிட்டு வாங்க….” என்றாள் அம்மா.

நானே முந்திக்கொண்டு “யப்பா நானே போறேன். எனக்கும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கனும் போல இருக்கு. துணிமணிகளையும் வேற தேவையான ஜாமானையும் யாரு கிட்டேயாவது கொடுத்து அனுப்புறேன்….”

“யாருகிட்டேயாவதுன்னா யாருகிட்ட கொடுத்து அனுப்புவ…?”-அப்பா.

“தாத்தாகிட்ட வேணுன்னா கொடுத்து அனுப்பு”-ஆச்சி.

“யத்த நீங்க வேற…? மாமாவ அலையவச்சிக்கிட்டு….. அதெல்லாம் வேண்டாம். மக்களே நீ ஜாமான்களை எடுத்து வேலைக்கார அக்காகிட்ட கொடுத்து அனுப்பு….” என யோசனை சொன்னார்.

இப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மருத்துவர் பார்வையிட அறைக்கு வந்தார்.

“என்ன….? அக்கா என்ன சொல்றாங்க……?” என உரிமையாக கேட்டபடி அறைக்குள் நுழைந்தார்.

“நீங்கதான் சொல்லனும் நான் எப்படி இருக்கேன்னு….”-அம்மா.

“உங்களுக்கென்ன ஜம்முன்னு இருக்கீங்க…. பையன் வேற பக்கத்துல இருக்காப்பல வேற என்ன வேணும் உங்களுக்கு…? ரூம்மெல்லாம் எப்படி இருக்கு….? ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறீங்க….?”-மருத்துவர்.

“ரூம்மெல்லாம் நல்லாயிருக்கு டாக்டர்….. எனக்குத்தான் இன்னிக்கு கொஞ்சம் ஞாபக மறதியாவே இருக்குற மாதிரி இருக்கு….” என சொன்னாள்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க எல்லாம் சரியாப் போகும். இன்னைக்கு ஒரு எக்ஸ்ரேவும்……பிளெட் டிஸ்டும் எடுத்திடுவோம். நான் மத்ததை சாயிங்காலம் வந்து பாக்கிறேன்…..” என்றபடி யாரும் கவனிக்காத வண்ணம் எனக்கு ஏதோ ஜாடை சொல்லியவாறு அறையைவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதும் நான் கேண்டின் சென்று வருவதாய் சொல்லிவிட்டு அவரை பின் தொடர்ந்தேன். சற்று நிதானித்தவரை நெருங்கினேன் “டாக்டர் அம்மா இப்ப திடீரென்னு ஏதோ ஞாபக மறதி வர்றதா சொல்றாங்களே…..அதனால ஏதும் பிரச்சனையா…?”

“she is at her last days…….அந்த கேன்சர் செல்ஸோட தாக்கம் இப்ப

அவங்க மூளை பகுதிக்கு பரவ ஆரம்பிச்சிடுச்சு…..at any moment the system may collapse…..sorryப்பா…” என்றபடி என் தோள் தட்டி என்னை கடந்து சென்றுவிட்டார். இது போன்ற வார்த்தைகளுக்கு நான் பழக்கப்பட்டிருந்தாலும் எனக்குள் ஒரு தாங்கொண்ணா வலி அப்போது ஏற்பட்டது. இது ஒருவகையான சித்திரவதையாக எனக்கு இருந்தது. ஒவ்வொரு நாளையும் தாயின் மரண தேதியாகவே எண்ணி எதிர் கொள்ளவது துயரத்தின் உச்சம்.

நான் நொறுங்கி போய் அறைக்குள் நுழைந்தேன். யாருடனும் எதுவும் அப்போது பேசத் தோன்றவில்லை. நான் ஊருக்கு கிளம்புவதாய் மட்டும் அப்போது அவர்களிடம் சொன்னேன்.

“அம்மாவை விட்டிட்டு போறியா….யாரையாவது ஜாமான்களை எடுத்திட்டு வரச் சொல்லு நீ அம்மா கூட இருடா…..நீ இருந்தா நான் கொஞ்சம் தைரியமா இருப்பேன்…..” என தன் கடைசி ஆசையை என்னிடம் சொன்னாள்.

ஏதோ ஒரு பிடிவாதத்தோடு அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்……

...........தொடரும்.

புதன், 1 ஜூன், 2011

என் தேவதையின் சரிதை......9


இது ஒரு தொடர் பதிவு....


விடுமுறைகள் முடிந்து கல்லூரி துவங்கும் நாளும் வந்தது…..எனக்கோ என் அம்மாவை விட்டு பிரிய மனமில்லை. நான் எடுத்த முடிவுகளை சொல்லவும் தைரியமில்லை. அப்போது அவள் தான் என்னைத் தேற்றி மீண்டும் கல்லூரிக்குச் செல்ல வைத்தாள். தாயின் காவலுக்கு காலனை அமர்த்திவிட்டு

கல்லூரிக்குச் சென்றேன்.

கண்களில் கனவுகளை தேக்கி வைத்தபடி ஆசையும், படபடப்புமாய் நான் கால் பதித்த அதே கல்லூரிச்சாலை இப்போது எனக்கு சிறைச்சாலையாக காட்சியளித்தது. என் தாயின் கடைசி நாட்களில் கூட அவளுடன் இருக்க முடியாமல் போகிறதே என்ற எண்ணம் என்னை மேலும் வதைத்தது. என் உடல்தான் அங்கு சிறைபட்டு கிடந்ததே ஒழிய என் மனமோ என் தாயை தான் சுற்றிக்கொண்டே இருந்தது. வீட்டிலிருந்து போன் வரும் ஒவ்வொரு முறையும் நான் செத்து செத்தே பிழைத்தேன்.

என்னால் எதிலும் அப்போது கவனம் செலுத்த முடியவில்லை. என் நிலையறிந்த நண்பர்களும் என்னை முடிந்தவரை தேற்றவே செய்தனர். ஆனாலும் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. வாரத்தின் இறுதி நாட்களுக்காக வாரம் முழுக்க காத்திருக்க துவங்கினேன்…..

அப்படித்தான் ஒரு வாரத்தின் இறுதிநாளில் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்றேன். மீண்டும் கல்லூரிக்கு திரும்புவதில்லை என்னும் உறுதியுடன். எதையாவது சொல்லி வீட்டிலே இருந்துவிட வேண்டும் என வீட்டிற்குச் சென்றேன். ஆனால் அங்கோ நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையே இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது.

ஆம்! என் தாய் மிகவும் பலகீனமாய் மாறியிருந்தாள். அவளை வீட்டில் வைத்து கவனிக்க முடியாத அளவுக்கு அவளது உடல் நிலை மாறியிருந்தது. அவளை மதுரைக்கு அலைய வைக்க வேண்டாம் என மருத்துவர் கூறியதால் எங்கள் ஊரில் உள்ள கிருத்தவ கன்னிமார்களின் சேவையில் நடைபெற்று வரும் மருத்துவமனை ஒன்றில் அவளை அட்மிட் செய்தோம். அங்கிருந்த கன்னிமார்களுக்கும் என் அன்னைக்கும் ஏற்கனவே நல்ல சினேகம் உண்டு. அவளின்பால் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனிக் கருணை உண்டு. அதுமட்டுமின்றி என் அம்மாவிற்கு மருத்துவ ஆலோசனைகள் சொல்லி வந்த டாக்டர் சரவணன் அவர்களும் மதுரையிலிருந்து வாரமொருமுறை எங்கள் ஊருக்கே வந்து என் அம்மாவை பார்த்துச் செல்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

என் அம்மாவிற்கு கால்களில் நீர்கோர்க்க ஆரம்பித்தது. கால்கள் வீங்கியதால் எழுந்து நிற்கவே அவளுக்கு முடியாமல் போனது. கழிவறையில் கூட ஒருவர் துணைக்கு நிற்க வேண்டிய அவலத்திற்கு ஆளானாள். படுக்கையிலேயே கிடந்ததால் BED SOAR எனச் சொல்லப்படும் முதுகுப் புண்களும் வந்து அவளை வதைத்தது. படுக்கவும் முடியாமல்….எழுந்து நடக்கவும் முடியாமல் அவள் அனுபவத்தை வாதைகள் துயரத்தின் உச்சம். நானும் என் பாட்டியும் தான் அவளுக்கான துணைகளாக இருந்தோம். ஒருவர் மாற்றி ஒருவராக அவளைப் பார்த்துக்கொண்டு மருத்துவமனையும் வீடுமாக எங்கள் வாழ்க்கை பயணம் மாறிப்போனது.

அப்படி ஒரு கடுமையான சூழலையும் என் தாய் மிகத் தைரியமாகவே எதிர்கொண்டாள். அவள் ஒருபோதும் அதை தன் வாழ்வின் கடைசி நாட்களாக எண்ணியதேயில்லை. தான் எப்படியும் குணமாகி மீண்டும் வேலைக்கு செல்வோம் என அவள் உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கைக்கு காரணம் அவளது தீவிர கடவுள் பக்தியே ஆகும். ஆம்! அவள் தன்னைவிட அதிகமாக கிருத்துவ மதத்தையும் அதன் கடவுளரையும் உளமார நம்பினாள். தன் வாதைகளிலிருந்து தன்னை இயேசு கிறுஸ்து விடுவிப்பார் என உறுதியாய் இருந்தாள். அவளது அந்த ஆழமான நம்பிக்கையை வைத்து ஆதாயம் தேட ஒரு கூட்டமும் அடிக்கடி அவளை பார்க்க வந்து போனது. செபம் என்ற பெயரில் அவர்கள் அடித்த கொட்டமும் ஒவ்வொரு முறையும் என்னை இரத்தம் கொதிக்க வைத்தது. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் என்பது போல் இருந்தது அவர்களது செயல்பாடுகள். ஆனால் நான் என் தாயின் பொருட்டு அதை சகித்துக் கொண்டேன்.

என் தாயின் நிலையும், எனது இயலாமையும் ஒரு சேர என்னை மனச்சிதைவுக்குள்ளாக்கியது. என்னால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் இயல்பாக நடமாட முடியவில்லை. அதனால் நான் மீண்டும் கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

நான் கல்லூரிக்கு செல்வதாய் என் அம்மாவிடம் சொல்லிய போது அவளால் என்னை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை, வழி அனுப்பவும் அவளுக்கு மனமில்லை. ஆனாலும் நான் பிடிவாதமாக கல்லூரிக்கு கிளம்பிச் சென்றேன். கல்லூரிக்கு வந்து விட்டாலும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. பெரும்பாலும் ஏதாவது உடல் உபாதையை காரணம் காட்டி விடுதியிலேயே தங்க ஆரம்பித்தேன். அப்படி விடுதியில் தனிமையில் இருக்கும் நாட்களில் பெரும்பாலும் மதுவிலும், சிகரெட்டிலுமே என் பொழுதுகளை கழிக்க துவங்கினேன். என் நிலையறிந்து என் நண்பர்களும் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். படிப்பில் நாட்டம் இன்றி சுற்றத் துவங்கினேன்.

ஒருநாள் காலையில் திடீரென்று என் வீட்டிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் பதறியடித்தபடி போனால் அங்கு என் அம்மாவின் குரல்….

“என்னடா எப்படி இருக்க…?”

“அம்மா…..எப்படிம்மா இருக்கீங்க…?”

“நீ நல்லாயிருக்கியாப்பா…. ?எனக்கென்னடா இயேசப்பா கிருபையில நான் நல்லா ஆயிட்டேன் தெரியுமா? இப்ப எனக்கு எந்த நோயும் இல்ல….” அவள் நம்பிக்கையோடு பேசிக்கொண்டே போனாள். என்னால் என் காதுகளை நம்பவே முடியவில்லை. அத்தனை உற்சாகமான அவளது குரலைக் கேட்டு பலநாட்கள் ஆகியிருந்ததால் நான் மகிழ்ச்சியில் உறைந்தே போனேன்.

“என்னடா சத்தத்தையே காணோம்…?”

எப்பம்மா ஆஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தீங்க….?”

“நான் நேத்து சாயிங்காலமே டிஸ்சார்ஜ் அயிட்டேண்டா….நீதான் வரவே மாட்டைக்க….உனக்கு அம்மாவ பாக்கணும்ன்னு தோணலையா….?”

அந்தக் கேள்வியால் நான் உடைந்து விட்டேன். என்னையும் மீறி என் கண்களில் நீர் வழியத்துவங்கியது. நான் அதை அவள் அறியாத வண்ணம் என் குரலை திடப்படுத்திக் கொண்டு….”எம்மா வர்ற செப்டம்பர் 5ஆம் தேதியில இருந்து எனக்கு ஓனம் ஹாலிடேஸ் விடுறாங்க நான் அப்ப வாரேன்மா….”

“சரிப்பா….கைல செலவுக்கு காசு வச்சிருக்கியா இல்ல போட்டுவிடவா….?”

“வேண்டாம்மா…..என்கிட்ட இருக்கு. நான் வந்திருவேன்ம்மா….”

“சரிடா….உடம்ப பாத்துக்கோ பத்திரமா வா….” அவள் போனை துண்டித்தாலும் எனக்குள் சொல்லொன்னா உற்சாகம் தொற்றிக் கொண்டது. எனது அத்துணை கவலைகளையும் அவளது குரல் துடைத்து விட்டிருந்தது. உற்சாகமாக செப்டம்பர் 5ஆம் தேதிக்காக காத்திருக்க துவங்கினேன்.

...........தொடரும்.