திங்கள், 10 ஆகஸ்ட், 2009

என்னை தேடும் நான்...


உள்ளம் குமைந்து கொண்டிருக்கிறது
ஆசைக்கும் யதார்ததிற்குமான இடைவெளியில்.......

விண்ணில் பறக்க வானவில் உதவுமா?-என
சோளி போட்டு சோதிடம் பார்க்கிறேன்

கண்ணீர் துடைக்க கைகள் வேண்டி
கல்லறைச் சுவர்களில் கறைந்து போகிறேன்

வாழ்வை காண வெளிச்சம் வேண்டி
இரவல் விடியல் கேட்கிறேன்

செய்து முடித்த தவறுகளை திருத்த
கடந்து போன காலம் வேண்டுகிறேன்

மறந்து போன பாதை தேடி
பயணம் செய்ய பார்க்கிறேன்

சொல்லி முடித்த சொற்களை அள்ளி
சொப்பனமாய் மாறச் சொல்கிறேன்

மண்ணில் விழுந்த மழைதுளியை-மீண்டும்
ஒருமுறை நனைக்க நினைக்கிறேன்

காலம் கடந்த ஞானம் கண்டும்
முடிவின் முடிவில் -ஒரு
தொடக்கம் தேடுகிறேன்.....

சனி, 8 ஆகஸ்ட், 2009

ஒரு தங்கப்பெட்டியும்...ஆயிரம் முத்தங்களும்...


தனது எட்டு வயது மகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மரத்தை ஜோடனை செய்ய தான் வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட தங்கத்தாள்களை கிழித்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு கோபம் வந்தது.அவர் எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் கிழித்தும்,அதை வைத்து விளையாடிக் கொண்டும் இருந்ததை கண்டு குழந்தையை சரமாரியாக அடித்து திட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.வெகு நேரம் கழித்து அவர் வீட்டுக்கு திரும்பி வருகையில் அவரது மகள் தூங்கிவிட்டிருந்தாள்.

அழுது வீங்கியிருந்த குழந்தையின் முகத்தை கண்டவுடன் தனது தவறையுணர்ந்து அதை வாஞ்சையுடன் தடவி கொடுத்தபடி அவரும் தூங்கிவிட்டார்.

அதிகாலையில் ஏதோ பிஞ்சு விரல்கள் தன்னை வருடுவதாக உணர்ந்தவர் விழித்து பார்க்கையில் அவரது மகள் கையில் அழகான ஒரு சிறு தங்கப்பெட்டியுடன் அவரது பிறந்த நாளைக்கு வாழ்த்து சொல்லி அந்த தங்கப்பெட்டியை பரிசளித்தது.தனக்கு பரிசளிப்பதற்காக தான் அந்த தங்கத்தாள்களை நேற்று தனது மகள் கிழித்து கொண்டிருந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவர் கண்கள் பனிக்க தனது மகளை வாஞ்சையுடன் அனைத்து கொண்டு மன்னிப்பு கேட்டார்.

அந்தப் பெட்டிக்குள் தான் மிக விலையுயர்ந்த பரிசுப்பொருள் ஒன்றை வைத்திருப்பதாக அவரது மகள் சொன்னவுடன் ஆசையோடு அந்தப்பெட்டியை திறந்து பார்த்தவருக்கு அதில் ஒண்ணும் இல்லாததை கண்டவுடன் ஏமற்றம் ஏற்பட்டது.தனது மகள் தன்னை ஏமாற்றி விட்டதாக கோபப்பட்டவரிடம் அழுது கொண்டே அவரது மகள்,”அப்பா!உங்களுக்காக அதில் நான் ஆயிரம் முத்தங்களை வைத்திருந்தேனே அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...”என்றது.

இப்போது அந்தப் தங்கப்பெட்டிக்குள் இருக்கும் முத்தங்களை அவரால் நன்றாக பார்க்க முடிந்தது.ஆனால் காலனின் கொடுங்கரங்கள் அந்தப் பிஞ்சு மொட்டினை பறித்துவிட்டிருந்தது.பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவருக்குள் அவரது குழந்தையின் குரலே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க... கண்களில் நீர் உருண்டோட அவரது மகளின் நினைவிடத்தில் நின்றபடி இருந்தவருக்கு அந்தப் பெட்டிக்குள் இருக்கும் முத்தங்கள் தான் இப்போது ஆறுதலாய்.....

எப்போதோ படித்தது இந்த ஆங்கிலச் சிறுகதை.

நாம் எப்போதும் இப்படித்தான்....

நம்மை சுற்றியுள்ள அற்புதங்கள் நமது கண்களுக்கு தெரிவதேயில்லை அதை நாம் தொலைக்கும் வரை.பிரியும் கணங்களில் தான்
உறவின் ஆழம் உணர்கிறோம்.உண்மை உணர்கையில் யாருமற்று தனித்து விடப்படுகிறோம்.

ஆதலால் காதல் செய்வோம்.... நம்மையும் நமது வாழ்வின் அற்புதங்களான நம்மை சுற்றியுள்ள அனைத்து உயிர்களையும்.....

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

அந்த ஒரு நாள்....



”ஏ.....ய்! தேவுடியா.....ஆ பயலே...இன்னொரு தடவ இந்த பக்கோம் வந்த அறுத்துருவேன் அறுத்து....”என சீறி முடித்து காரித் துப்பியவள்..
“ஒனக்கு என்ன வேணும்....ஏன் இப்புடி நிக்க...”என்று சினந்தாள்.
“ஒண்ணுமில்ல வின்சென்ட் அண்ணந்தான்......போன் பண்ணிருப்பாரே.....”
“ஆங்...ஆள் எங்க...?”
“கீழ கடைல நிக்காப்ல.வரச் சொல்லவா? பையன் புதுசு பெரிய எடோம் வேற...”
“எதுவும் வம்பு தும்பு ஆயிராதே..?”
“இல்லக்கா அதெல்லாம் ஒண்ணூ ஆவாது நம்ம கஸ்டமர்...அந்த வெள்ள ஜிப்பாகாரர் சொல்லித்தா..ன்.....வந்திருக்காப்ல”
“சரி வரச் சொல்லு...ஆங் எல்லாத்தையும் சொல்லி அனுப்பு...”

கீழிறங்கி வந்தவன் நேரே என்னிடம் வந்து,”சார். மேல மூணாவது ரூம்மு... எல்லாமே பேசியாச்சு....வேற ஏதாவது...?”என்று தலையை சொறிந்தவனிடம் இருநூறு ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு,”வேற ஒண்ணும் பிரச்சனையாயிராதே...?”எனக் கேட்டேன்.

“சார்,இது நம்ம ஏரியா நீங்க பாட்டுக்கு போங்க நா இங்க தான் இருப்ப(ன்) என்ன வேணும்னாலும் என் செல்லுக்கு கூப்பிடுங்க ஓடியாந்திர்ரேன்...”என்று சிரித்தவனிடம் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மாடியேறினேன்.

ஒ! நான் யார்...?ஏன் இங்க வந்தேன் சொல்ல..ல இல்லையா?

நானும் திவ்யாவும் ஏழு வருஷம் ”உயிருக்கு உயிரா” காதலிச்சோம்.எனக்கு ஒண்ணுனா அவ பதறிடுவா.எம்மேல் அவ அவ்வளவு பொசசிவ்வா இருந்தா....ஆமா! இதெல்லாம் போன மாசம் வரைக்கும்.

இப்போ..... அவளுக்கு நாளைக்கு கல்யாணம். எவனோ ஒரு ”இளிச்சவாயன்” அவளுக்கு மறுபடியும் சிக்கியிருக்கான்.....என்னப் பொறுத்த வரைக்கும் காதல்ங்கிறது ஒரு ”நம்பிக்க” ஆனா அவ அதக் கெடுத்துட்டா அதுக்காக தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழையும் இல்ல.....அவள கொலை பண்ணுற அளவுக்கு கெட்டவனும் இல்ல...அதுக்காக அவள பழிவாங்காம என்னால சும்மா இருக்கவும் முடியல....அதனாலதான் இங்கவந்தேன்....பொம்பள அவளுக்கு நாளைக்கு ஒரு ராத்திரிக்கு சாந்தி முகூர்த்தம்னா ஆம்பள எனக்கு ஒவ்வொரு ராத்திரியும் சாந்தி முகூர்த்தம்தான்.

எங் கத கிடக்கட்டும்....இப்போது மாடியில் உள்ள மூன்றாவது அறை முன் நின்று கொண்டிருந்தேன்.

கதவு பூட்டப்படாமல் சாத்தி வைக்க பட்டிருந்தது.மெல்ல கதவை திறந்தேன். குண்டு பல்பு ஒளியில் அறை மங்கலாக இருந்தது.டி.வியில் ஏதோ ஒரு லோக்கல் சேனலின் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டிலும் அதன் மேல் உள்ள மெத்தையில் இருதலையணைகளும் திசைக்கு ஒன்றாய் கிடந்தது. நான் அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கையிலே பாத்ரூம் கதவை திறந்து கொண்டு முகத்தில் அப்பியிருந்த ஈரத்தை துடைத்த படி அவள் வெளிப்பட்டாள்.

ஆள் மாநிறம் கொஞ்சம் பெருத்த சரீரம் நைட்டி அணிந்திருந்ததால் மற்றவைகளை சிறப்பாக எடுத்துக் கூற முடியவில்லை.இருபத்தி ஐந்து வயதிலிருந்து முப்பது வயது வரை இருக்கும் என அவளது முகப்பொலிவு சொன்னது.

“என்னப் பார்த்துகிட்டு அப்படியே நிக்கிறீங்க வாங்க......”என ஆரம்பித்தாள்.

எனக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
“இல்ல யாரும் இல்லயோன்னு பார்த்தேன்.....அதான்.....”என்று இழுத்தேன்.

”என்ன இதான் முத தடவையா.....?”இந்த கேள்வி என்னை ஆச்சர்யப்படுத்தியதைவிட அவளது அனுபவத்தை உணர்த்தியது.

“இல்..ஆமா முத தடவ தான் ஏன்..?எப்புடி கண்டுபிடிச்ச... ?”

“யாரும் வந்து சொல்ல வேற செய்யணுமா...அதான் பார்தாலே தெரியுதே...” என்றபடி கட்டிலில் அமர்ந்தாள்.

“ஏன் தேவயில்லாம பேசிக்கிட்டு அதான் காசு கொடுத்தாச்சுல...”

“சாருக்கு ரொம்பத்தான் அவசரம்...”என்றபடி என்னைப் பார்த்து சிரித்தாள்.

“வேணும்னா பாத்ரூம் போய்ட்டு வாங்க...”

எனக்கும் அது தேவைபட்டதால் முகத்தை அலம்பிக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வந்தேன்..அவள் அதற்குள் அறையை சாத்திவிட்டிருந்தாள்.இப்போது டி.வியில் சன்னமான சத்தத்தில் பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது.இப்போது சற்று தைரியம் வந்திருந்ததால் அவள் அருகில் போய் அமர்ந்தேன்.

“என்ன ஆள முழுங்குற மாதிரி பாக்குறீக....”

“இல்ல நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்த....”வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம எதோ கேட்டுத் தொலைத்தேன்.

“இப்ப என்ன ஏன் கதைய கேக்குறதுக்கா இங்க வந்தீக....சீக்கரம்.....”என்றாள்.

அதற்கு மேல் நானும் பேச்சை வளர்க்க விரும்பாமல் வந்த வேலையில் கவனமானேன் அவளது ஒத்துழைப்புடன்......இருள் சூழந்தது.....

“தம்பீ...! வாயை துறங்க...ஆ..... சொல்லுங்க....”ஏதோ ஒளி என் கண்ணில் படர்கிறது.என் தாயின் அழுகுரல் சன்னமாக என் காதுகளில் ஒலிக்கிறது.என் கால்கள் அசைவில்லாமல் நான் படுக்கையில் இப்போதும்.....

ஒருவருடத்திற்கு முன் நான் திவ்யாவை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு செய்த வினைகளுக்கு இப்போது எதிர்வினையாக பால்வினை நோய்களோடு படுக்கையில்..... நாட்கள் நரகத்தில் நகர்வதாக உணர்கிறேன். நிலையற்ற கோபத்தால் தடுமாறி.... என் வாழ்க்கை தடம்மாறி.... மரணத்தை யாசித்துக் கொண்டிருக்கிறேன்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

கடனாய் ஒரு கல்வி...


நேற்று எங்கள் வங்கிக் கி்ளைக்கு ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார்.அவர் தனது மகனை ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்திருப்பதாகவும் அதற்கு கல்விக்கடன் வேண்டும் எனவும் கேட்டார். நாங்கள் அவரது தொழில் குறித்தும் அவரது வருமானம்,இருப்பிடம் குறித்தும் விசாரித்தபடியே கல்விக்கடன் வழங்குவதில் ஏற்படும் நடைமுறை தாமதங்கள் குறித்தும் விளக்கினோம்.

அதனால் முதல் ஆண்டுக்கான கல்லூரிக்கட்டணத்தை அவரை முதலில் செலுத்தும் படியும்.பின்பு எங்களுக்கு கடன் வழங்க அனுமதி கிடைத்த பின்பு அவர் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தை கல்லூரியின் பெயருக்கே நாங்கள் வரைவோலையாக(DEMAND DRAFT) தந்துவிடுவோம் என்றும் அதை கல்லூரியில் கொடுத்து அவர் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்தினோம்.

ஆனால் வந்திருந்தவரோ ஒரு ஏழை விவசாயி.அவரால் அந்த நடைமுறை யதார்தங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.அவர் தனக்கு வசதியில்லாததனால் தான் வங்கியை நாடி வந்திருப்பதாகவும் முதல் ஆண்டுக்கான கட்டணத்தையும் நாங்கள் கடனாக வழங்கிய பின்பே அவரால் கட்ட முடியும் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார்.

மேலும் மத்திய அமைச்சரே உத்தரவிட்ட ஒரு விஷயத்திற்கு வங்கி அதிகாரிகளாகிய நாங்கள் அதையும் இதையும் சொல்லி கடன் வழங்குவதில் தாமதப்படுத்துவதாகவும் அவரது புலம்பல்கள் தொடர்ந்தன.அவரது இந்த புரிந்து கொள்ளாத தன்மை எங்களுக்கு எரிச்சலை உண்டாக்கினாலும் அவரது தோற்றமும் தவிப்பும் அவர் மேல் பரிதாபத்தை உண்டாக்கியது.

அகவே மேற்கொண்டு ஏதும் விவாதிக்காமல் அவரது நிலை எங்களுக்கு நன்றாக புரிகிறது என்றும் அதனால் எங்களால் முடிந்த அளவு எவ்வளவு விரைவாக முடிகிறதோ அவ்வளவு விரைவாக முடித்து தருவதாக உறுதியளித்து அவரை சமாதனப்படுத்தி அனுப்பிவைத்தோம்.

தோழர்களே!

ஒரு வங்கியாளனாக மட்டுமே இருந்து இதை வெறும் சம்பவமாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.ஏனென்றால் அந்த ஏழை விவசாயியின் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும் இது ஒரு ஜனநாயக வன்முறை என்று.ஆம்! கல்வி என்பது ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படையான கடமை.

ஆனால் இங்கு நடப்பது என்ன?

கல்வி கற்பதற்கான விஷயமாக இல்லாமல் அது விற்பதற்கான விஷயமாக மாற்றப்பட்டுள்ளது.அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயக பாரம்பரியம் கொண்ட நமது நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரின் கல்விக் கொள்கை என்ன தெரியுமா?
கல்வி வேண்டுமா..? காசு கொடு..! காசு இல்லையா...?கடனை எடு..!

இங்கு கல்விக்கான கட்டணத்தை குறைப்பதற்கு எந்த அரசுக்கும் வக்கில்லை.ஆனால் வங்கி அதிகாரிகளை கல்விக்கடன் வழங்கச் சொல்லி மட்டும் நிர்பந்திப்பார்கள்.இது என்ன நியாயம்?

ஒரு வங்கியின் பணம் என்பது அதன் வாடிக்கையாளர்களின் அதாவது பொதுசனங்களின் சேமிப்பேயாகும்.பொதுமக்கள் தங்களது வயிற்றை கட்டி வாயை கட்டி தங்களது உழைப்பின் ஒரு பகுதியை நாளைய தேவைக்காக அரசாங்கத்தை நம்பி அரசுடைமை வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அந்தப் பணத்தை என்ன செய்கிறது? எவனோ ஒரு கல்வி வியாபாரி தின்று கொழுப்பதற்கு பொதுமக்களை கடன்காரர்களாக்கி கல்வி வியாபாரத்திற்கு துணை போகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் இப்படி கடனெடுத்து நான்கு ஆண்டுகள் படித்து வரும் இளைஞர்கள் பட்டதாரிகள் ஆகிறார்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் இந்த ஆட்சியாளர்களின் தயவால் பல லட்சங்களுக்கு கடன்காரர்கள் ஆவார்கள்.குடியானவர்களை கடன்காரர்களாக்கி வாங்கிய கடனுக்காக அவர்களை அடிமப்படுத்தினார்கள் அன்றைய ஜமீன்களும்,ஆண்டைகளும். அதேபோல் இன்று குடிமக்களை கடன்காரர்களாக்கி கல்வி விற்பன்னர்களையும்,பெரும் முதலாளிகளையும் கொழிக்க செய்கிறார்கள் இன்றைய அரசியல்வா(வியா)திகள்.

இதைவிட பெருங்கொடுமை என்னவென்றால் பொதுமக்களோ இவை எதையும் புரிந்து கொள்ள முடியாமல் சாமி வரம் கொடுத்தும் பூசாரி தர மறுத்த கதையாக இருக்கிறதே என்று வங்கியாளர்களின் மீது கோபம் கொள்வது தான்.

அதிகாரவர்கத்தின் இது போன்ற திட்டங்கள் முழுக்கமுழுக்க முதலாளித்துவ நாடுகளின் வழிகாட்டுதலின் பெயரிலே அமல்படுத்தப்படுகிறது.இந்த சூட்சமங்கள் ஏதும் புரியாமல் பொதுமக்களோ அரசியல்வாதிகள் விரிக்கும் மாயவலையில் சிக்குண்டு கொள்கிறார்கள்.

இனியும் இது போன்று ஏமாறாமல் இருக்க வேண்டுமாயின் ஜனநாயகத்தின் மாண்புகளை மக்கள் உணர வேண்டும்.ஓட்டுப் போடுவது மட்டுமே ஜனநாயக கடமை என்றும் அதன் பின்பு ஆட்சியமைத்தவர்கள் அடிக்கும் கூத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கும் பார்வையாளராகவே இருக்கும் தன்மையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

விடியல் காண வேண்டுமாயின் விழத்திருப்பது அவசியம்.

பட்டுக்கோட்டையார் தனது பாடல் ஒன்றில் சொன்னது போல்....
“சூழ்ச்சியில் சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச் சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா..........

தெரிந்து நடந்து கொள்ளடா....” என்ற யதார்த்த வரிகள் காலம் கடந்து இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.....

புதன், 29 ஜூலை, 2009

போராட்டம் வென்றது


இது ஒரு தொடர் பதிவு.”எங்கள் போராட்டம்” என்ற தலைப்பில் நான் எழுதிய முந்தைய பதிவின் தொடர்சியே இது.

தோழர்களே!

எங்கள் போராட்டம் வென்றது.தோழர்.காமராஜும், நானும் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளோம்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமைக்கு எதிரானது எங்கள் தற்காலிகப் பணி நீக்கம் என்ற முறையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள பென்சிலும் வழக்கு தொடர்ந்திருந்தோம்.சொல்லி வைத்தாற் போல் சரியாக நாங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்த இருந்த 23.07.2009 அன்று எங்கள் தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்யச் சொல்லி நீதிமன்றம் STAYORDER வழங்கியது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

எனவே மிகுந்த நம்பிக்கையோடும்,உற்சாகத்தோடும் இரு சங்க தலைவர்களும் (PGBEA-PGBOU), BEFI-யின் மூத்த தலைவரும்,IOB STAFF ASSOCIATION-னின் பொதுச்செயலாளருமான தோழர்.G.பாலச்சந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்ட DSP-யின் முன்னிலையில் எங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது எங்கள் நிர்வாகமும் தனது இறுக்கமான சூழலில் இருந்து வெளிவரத் தயாராக இருந்தது ஒரு சாதகமான அம்சம். நிர்வாகத்தின் மனநிலையை புரிந்து கொண்ட சங்கத்தலைவர்களும் வெற்றி ஆர்பரிப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தைக்கு வழிசெய்தார்கள்.பல மட்டங்களில் ஏற்பட்ட புரிதல் கோளாரே இத்தகைய இறுக்கமான சூழலுக்கு காரணம் என்றும் வங்கி வளர்ச்சியே அனைவருக்கும் பொதுவானது என்ற வகையிலும் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் சாத்யமான வழிகளை ஆராய்வதாக உறுதியளித்தது.இறுதியாக எங்கள் தற்காலிக பணி நீக்கத்தை நீதிமன்றத்தின் ஆணைபடி உடனடியாக ரத்து செய்யவும் நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

அதனடிப்படையில் நாங்கள் இருவரும் 24.07.2009 முதல் எங்கள் பணிக்கு திரும்பியுள்ளோம்.

எங்களுக்காக தங்களது அன்றாட பணிகளைப் பற்றியோ குடும்பச் சூழலைப் பற்றியோ சிறிதும் யோசிக்காமல் நாங்கள் வேலைக்குச் செல்லும் வரை தாங்களும் வேலைக்கு செல்வதில்லை என்ற முடிவோடும் உறுதியோடும் சங்க அலுவலகத்தில் வந்து தங்கி எங்களுக்காக போராடி நாங்கள் மீண்டும் பணிக்கு சேர்ந்த பின்பே வேலைக்கு சென்ற தோழர்களின் உறுதிக்கு கிடைத்த வெற்றியிது.

தனது குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு செல்வதை ரத்து செய்து விட்டு எங்களுக்காக சங்க அலுவலகத்தில் பலியாக கிடந்து எங்களுக்கு தன் சொந்த காசில் காரோட்டியாக இருந்த ”முதலாளி” சங்கரசீனி போன்றோரின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியிது.

“மாப்பள நீ வேலக்கி போற வர நான் வேலக்கி போக மாட்டேன்....” என்று சொன்ன பழைய பேட்டை மணி மாமா,

“என்னய சஸ்பெண்ட் பண்றத விட உன்ன சஸ்பெண்ட் பண்ணினா எனக்கு அதிகம் வலிக்கும்ன்னு நிர்வாகத்திற்கு தெரிஞ்சிருக்கு...”என்று கரகரத்த சங்கரலிங்கம் மாமா,

”ஏண்டா! உனக்கு எதாவது எழுதனும்னு தோணினா டைரில எழுது அதவிட்டுட்டு பளாக்குல எழுதுன வொயிட்டுல எழுதுனன்னு தெரிஞ்சா அப்புறம் இருக்கு உனக்கு....”என்ற உரிமையோடு என்னை கேலி பேசிய மாப்பிள்ளை அருண்,அண்ணன் சங்கர்,

“டேய்! நாங்க இருக்கோம்டா தம்பி..”என்று நம்பிக்கையூட்டிய அண்ணன்கள்,

“இந்த சின்ன வயசிலே உங்களுக்கு இந்த அனுபவம்லாம் கிடைச்சது ரொம்ப நல்லது....”என்று போனில் மட்டுமே என்னிடம் இதுவரை பேசிய தோழர்.வேணுகோபால் போன்றவர்களின் ஆதரவிற்கும்,உறுதுணைக்கும் கிடைத்த வெற்றியிது.

“எங்களுக்காக பேசப் போய்தான உங்களூக்கு இந்த நெலம....எங்களால தான உங்களுக்கு வேல போயிடுச்சாம்.....”என போனில் பரிதவித்த எத்தனையோ தற்காலிக ஊழியர்களான எமது சகோதர,சகோதரிகளின் அன்பிற்கு கிடைத்த வெற்றியிது.

”ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது.ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிறு தோல்வியானாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.”-சே

புதன், 22 ஜூலை, 2009

எங்கள் போராட்டம்.....


”நவீன கொத்தடிமைகள்....” என்ற தலைப்பில் சென்ற மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் எங்கள் வங்கியில் (பாண்டியன் கிராம வங்கி) பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் நிலை குறித்தும்,அதன் பொருட்டு எங்கள் தொழிற்சங்கங்கள்(PGBEA-PGBOU) நடத்த இருந்த போராட்டங்கள் குறித்தும் எழுதியிருந்தேன்.

அக்கட்டுரை தோழர்.மாதவராஜின்(தீராத பக்கங்கள்) பரிந்துரையின் பேரில் BANK WORKERS UNITY என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டது.
அதேபோல் தோழர்.காமராஜ் (அடர் கருப்பு) அவர்களும் “அவுட் சோர்சிங்கிற்கு எதிரான ஒரு முன்னோடிப் போராட்டம்” என்ற தலைப்பில் அதில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.தற்போது அந்த கட்டுரைகளுக்காக எங்கள் இருவரையும் எமது வங்கி நிர்வாகம் 17.07.2009 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

எங்கள் தொழிற்சங்கத்தில் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) நான் செயற்குழு உறுப்பினராகவும்,தோழர்.காமராஜ் அவர்கள் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளோம்.ஆகவே எங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிவிடலாம் என்ற பகல் கனவோடும்,இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமையை பறிக்கும் விதமாகவும் வழங்கப்பட்ட இந்த இடைக்கால பணி நீக்க உத்தரவை இந்திய தொழிற்சங்களுக்கு எதிரான அதிகாரவர்கத்தின் அறைகூவலாக பார்த்த எங்கள் தொழிற்சங்கம் எங்கள் வங்கி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை துவங்கியுள்ளது.

தோழர்களே!

எங்களை பொறுத்தவரை இந்த இடைகால பணி நீக்க உத்தரவை எங்கள் தொழிற்சங்க வாழ்விற்கான அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.எமது வட்டார மேலாளர் இந்த உத்திரவை எனது கிளையில் (பசுவந்தனை) வைத்து எனக்கு வழங்கும் போது எங்களது தொழற்சங்க தலைவர்கள் எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.

ஒருவகையான பெருமிதமான மனநிலையில் தான் அங்கிருந்து விருதுநகரில் உள்ள எங்கள் தொழற்சங்க அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன்.தோழர்.காமராஜ் அவர்களையும் என்னையும் தோழர்கள் அனைவரும் கட்டித்தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.அதிலும் எங்கள் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கமும்,தோழர்.செல்வகுமார் திலகராஜ்(PGBOU-CHIEF ADVISER) அவர்களும் தங்களது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழிற்சங்க வாழ்வில் தங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் மூன்று ஆண்டு தொழிற்சங்க அனுபவம் மட்டுமே கொண்ட தொழிற்சங்க ஜீனியரான எனக்கு கிடைத்துவிட்டதாக சொல்லி என் உச்சிமுகர்ந்தது என் வாழ்வின் மிகப்பெருமையான தருணங்கள்.

பல்வேறு கிளைகளிலிருந்து அதிகம் பரீச்சயமில்லாத தோழர்கள் கூட தங்கள் ஆத்மார்த்தமான ஆதரவையும்,தோழமையையும் வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட உணர்வுகளை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை......

20.07.2009 அன்று மாலையில் விருதுநகரில் உள்ள எங்கள் வங்கி நிர்வாக அலுவலகத்தினுள் சேர்மேன் அறை முன்பாக அமைதியாக அமர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட தோழர்கள் எங்களது இடைகால பணி நீக்கம் ரத்தாகும்வரை அங்கிருந்து அகலப்போவதில்லை என உறுதிபட கூறி போராட்டத்தை துவக்கினார்கள். இதற்கிடையில் தகவல் கேள்விபட்டு விருதுநகரில் உள்ள சகோதர தொழிற்சங்கங்களான அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள்,விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள்,BEFI தோழர்கள்,CITU,DYFI,தமுஎச,சாலைபணியாளர் துறை சங்கப் பிரதிநிதிகள்,சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் என பல தரப்பட்ட தோழர்களும் எங்களோடு தோள் கோர்க்க வந்துவிட்டார்கள்.

நிர்வாகம் போராட்டத்தை வலுவிழக்க வைக்க தன்னால் முடிந்த அத்துணை முயற்சிகளையும் மேற்கொண்டது.ஆனால் தோழர்களின் உறுதியை கண்டு நிலைகுலைந்தார்கள்.அதனை தொடர்ந்து காவல்துறையை வைத்து எங்களை அகற்றப்பார்த்தார்கள். ஆனால் காவல்துறையினர் எங்களது கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு எங்கள் தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகத் தரப்பினரோடு சமரச பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சித்தார்கள்.ஆனால் நிர்வாகம் தன் பிடியிலிருந்து இறங்குவதாயில்லை.போராட்டம் தொடர்ந்தது....

ஒருகட்டத்தில் மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் வரவழைக்கப்பட்டார்.அவர் சிவகாசி அருகில் ஒரு தீ விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் இங்கு வந்ததாகவும் அவர் அங்கு அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாகவும்,மேலும் வருகிற 23.07.2009 அன்று தனது முன்னிலையிலே நிர்வாகத் தரப்போடு தொழற்சங்க தலைவர்களை பேசவைத்து பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.அதனடிப்படையில் அவரது பணிச் சூழலை மனிதாபிமானத்தோடு பார்த்த தோழர்கள் அவரது வார்த்தைகளை நம்பி போராட்டத்தை ஒத்திவைக்க சம்மதம் தெரிவித்தார்கள்.

ஒரு உன்னதமான நோக்கத்திற்கான போராட்டத்தில் எதிரிகளின் ஆயுதங்களால் தாக்கப்படும் போது ஏற்படும் காயங்களே போராளிகளுக்கான நிஜமான பதக்கங்கள்.அந்த பதக்கங்கள் வழங்கப்படும் போது போராளிகளுக்கு ஏற்படுவது பெருமித உணர்வேயன்றி வலியல்ல...இந்த உணர்வோடு எங்கள் போராட்டப் பயணம் தொடரும்.......

” நமது போர்முழக்கம் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்,இன்னொரு கரம் நம் ஆயுதத்தை கையிலெடுக்க துணியுமானால்,மற்றவர்கள் நமது இறுதிச்சடங்குகளில் இயந்திரத் துப்பாக்கிகளோடு வந்து புதிய போர் முழக்கத்தை அறிவிப்பார்களேயானால்,மரணம் திடீரென வந்தால் கூட அதே வரவேற்கலாம்”-சே

சனி, 18 ஜூலை, 2009

தாய்மண்


பரணில் தூசி அதிகமாக இருந்தது. கண்ட கண்ட பொருள் எல்லாம் கையில் தட்டுப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் நான் தேடுவது மட்டும் என் கண்னில் சிக்கவே இல்லை.
எப்பவோ நான் தேடிய பொருள்களெல்லாம் இப்போது தேவையற்ற நேரத்தில் கையில் சிக்குகிறது.
ஆனால் இவைகள் தேவைபட்ட நேரத்தில் நான் வீட்டை இரண்டாக்கிய போதும் இவைகள் எனக்கு கிடைக்கவில்லை.

தூசி கிளம்பி விடும் என்பதால் மின் விசிறியை வேறு போடமுடியவில்லை. அதனால் புழுக்கத்தால் உடலில் வேர்வை கசகச வென்றிருந்தது.இவ்வளவு அவஸ்தையிலும் அது எப்படியாவது கண்ணில் தட்டிவிட வேண்டும் என மனம் மட்டும் ஏங்கி கொண்டிருந்தது.

அவரை நேற்று மீட்டிங்கில் சந்தித்திராவிட்டால் இந்த அவஸ்தையே எனக்கு கிடையாது.இத்தனைக்கும் நேற்றுதான் அவரை முதன்முதலாக சந்தித்தேன்.
வெறும் பரஸ்பர புன்னகை பரிமாற்றத்தோடு கூட எங்களது அந்த சந்திப்பு முடிந்து போயிருக்கும், என்னை அவருக்கு அறிமுகப்படுத்திய என் நண்பர் நான் யாருடைய மகன் என்று சொல்லாமல் விட்டிருந்தால்....

ஆனால் நான் இன்னாரின் மகன் என்று என் தாயின் பெயரை சொன்னவுடன் அவர் வாஞ்சையுடன் என் கைகளை பற்றிக்கொள்வதாக நினைத்து கொண்டு மோதிரத்தோடு என் விரல்களை நசிக்கியபடியே என் தாயின் மறைவிற்கு தன் இரங்கலை தெரிவித்தார்.

நான் எந்த வலியால் நெளிகிறேன் என்று கூட புரியாமல் என்னைப் பற்றிய விசாரிப்பு முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்.ஒருவழியாக பேச்சினூடே சமாளித்தவாறு என் கைகளை விடுவித்து கொண்ட போது என் விரல்களுக்கு நடுவே மோதிரத்தடம் பதிந்து வலித்தது.
இப்படி வலிக்க வலிக்க ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவர்... திடீரன்று என்ன நினைத்தாரோ என் குடும்ப சூழல்குறித்தும் தற்போதைய எங்கள் வீட்டின் வசதிவாய்ப்பு குறித்தும் கேட்க தொடங்கினார்.

வாய்க் கொழுப்பு சீலையில் வடியுங்கிற கதையாக நானும், என் தாயின் மறைவிற்கு பின் ஏற்பட்ட கடன் தொல்லையால் எங்கள் சொந்த வீட்டை விற்ற கதையையும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதையும் குறிப்பிட்ட போது,’கடம்பூர் பக்கத்தில் உள்ள நிலத்தையும் விற்று விட்டீர்களா?’ எனக் கேட்டார்.

”கடம்பூர் பக்கத்தில் எங்களுக்கு நிலமெல்லாம் இல்லையே...” என்று அப்பாவியாக கூறிய என்னை விடாமல்
“என்ன தம்பி இப்படி சொல்றீங்க அங்க உங்கம்மா நிலமுடிச்சது எனக்கு நல்லா தெரியுமே...”என்றவாறே தொடர்ந்து “ உங்க அப்பாகிட்ட கேட்டு நல்லா தேடிப் பாருங்க... பத்திரம் உங்க வீட்ல எங்கையாவது தான் இருக்கும். இப்ப அது பல லட்சம் தேறும்” என்று வேறு ஆசையை தூண்டி விட்டு விட்டு சென்றார்.

இரவு வீட்டுக்கு வந்து என் அப்பாவிடம் கேட்ட போது,”அப்படியெல்லாம் ஒன்னும் முடிக்கலியெப்பா....எனக்கு ஒன்னும் ஞாபகமில்லையே..”என்று இரண்டும் கெட்ட மனநிலையில் இழுத்தவர்....சற்று நேரத் தாமதத்திற்கு பின்,”உங்கம்மா! எல்லாத்தையும் அவ இஷ்டத்திற்கு தான் செய்வா எங்கிட்ட எதையும் சொல்ல மாட்டா...அவளுக்கு எல்லாமே அவ அம்மாவும்,தம்பியும் தானே.... போயி உம் மாமன்கிட்டயும்,பாட்டிக்காரிகிட்டயும் கேளு....”என்று புலம்பியவாறே அவரது அறைக்குள் போய் மீதம் வைத்த சரக்கை பொரிகடலையை சவைத்தவாறே அடிக்க ஆரம்பித்தார்.

“ஆமா! இப்படி என் நேரமும் குடி குடின்னு குடிச்சிக்கிட்டே இருக்குற ஆள நம்பி எந்தப் பொண்டாட்டி தான் சொத்து வாங்குன விஷயத்தை சொல்லுவா....பைத்தியக்காரி கூட சொல்ல மாட்டா..”என நான் படபடக்க அவர் அதற்கு பதிலுரைக்க என கொஞ்ச நேரத்தில் குருஷேத்திரமானது என் வீடு.ஒரு வழியாக என் மனைவி தலையிட்டு ’கீதா உபதேசம்’ செய்த பிறகே இருவரும் ஓய்ந்தோம்.சமாதானம் ஆனாலும் கொஞ்சம் புலம்பியபடியே தன் அறைக்குள் சென்று அப்பா படுத்துக்கொண்டார்.

ஆனாலும் மழை விட்டு தூவானம் ஓயாத கதையாக என்னிடம் மெல்ல“எப்ப பார்த்தாலும் உங்களுக்கு இப்படித்தான் சின்ன விஷயத்தையும் பெரிசாக்கி சண்ட போடாட்டி நிம்மதியா இருக்கமுடியாதே....ஏன் மாமா கூட இப்படி வார்த்தைக்கு வார்த்தை மோதுறீங்க...பேசாம படுங்க எல்லாம் காலையில பார்த்துக்கலாம்.....”என்றவளிடம்

“ஆங்! நா லூசு அதனாலதான் இப்படி பேசுறன்...வந்துட்டா எல்லா...ஆங் தெரிஞ்ச மாதிரி.”என்று சலம்பியபடியே படுக்கப்போனன்.
“எதயும் ஒத்துக்குற மாட்டீங்களே....”என்றவாறே விளக்கை அணைத்து விட்டு அவளும் படுத்தாள்.அறை இருண்டது. இரவில் சமரச ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது தானே இந்திய வரலாறு........

காலையில் எழுந்து பார்த்தால் என் அப்பா தன் அறையில் உள்ள அலமாரியில் அந்தப் பத்திரத்தை தேடிக் கொண்டிருந்தார்.என் மனைவி சிரித்தபடியே,” நீங்களும் மாமா கூட சேர்ந்து தேடுங்க...”என்றாள்.

அப்பா,”ஏம்மா!இங்க என் அலமாரியல இல்ல... அவன உங்க அத்தயோட சின்ன இரும்பு பெட்டி ஒண்ணு உண்டு அத தேடச் சொல்லு...அதுல இருக்கான்னு பாப்போம்... ”

அன்று ஆபிஸுக்கு விடுப்பு சொல்லி விட்டு அதை வீடு முழுவதும் தேடினோம்... கடைசியில் அதை தேடவே இப்போது பரண்மீது ஏறி நிற்கிறேன்.பல மணி நேரத் தேடலுக்கு பின் அந்தப் பெட்டி கிடைத்தது.ஆனால் அதனுள்ளே பத்திரம் எதுவும் இல்லை.தேடி அலுத்து ஒய்ந்த பின்பு....என் அப்பா,”டேய்!ஓங்கிட்ட சொன்ன ஆளுக்கு போன் போட்டு எந்த பத்திர ஆபிசில் எப்ப முடிச்சதுன்னு கேளு நாம மேக்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு பாப்போம்”என்றார்.

எனக்கும் அது சரியாக படவே அவருடைய நம்பரை என் நண்பனிடம் வாங்கி போன் செய்தேன்.என்னை அவருக்கு மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு சம்பரதாய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு.....

“சார் நேத்து நீங்க சொன்னீங்க இல்லையா எங்கம்மா கடம்பூர் பக்கத்துல நிலம் வாங்குனாங்கன்னு அது எந்த வருஷம்...?எந்த பத்திர ஆபிசுலன்னு ஞாபகமிருக்கா..? ஏன்னா வீடு முழுக்க தேடிப் பார்த்துட்டோம் பத்திரத்த எங்கயும் காணல அதான்...”

“தம்பி நான் என்ன சொன்னன்னு நீங்க சரியா புரிஞ்சிக்கலியா....உங்கம்மா அங்க நிலம் வாங்கப் போறத என்கிட்ட சொன்னாங்க அவங்க வாங்குனாங்களா இல்லையான்னு எனக்கு தெரியலையே....”என்று அவர் ஏதேதோ பேசிக் கொண்டே போக இப்போது நிஜமாகவே என் காலடியில் உள்ள நிலம் பின் வாங்குவது போல் ஆனது......