வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

அந்த ஒரு நாள்....



”ஏ.....ய்! தேவுடியா.....ஆ பயலே...இன்னொரு தடவ இந்த பக்கோம் வந்த அறுத்துருவேன் அறுத்து....”என சீறி முடித்து காரித் துப்பியவள்..
“ஒனக்கு என்ன வேணும்....ஏன் இப்புடி நிக்க...”என்று சினந்தாள்.
“ஒண்ணுமில்ல வின்சென்ட் அண்ணந்தான்......போன் பண்ணிருப்பாரே.....”
“ஆங்...ஆள் எங்க...?”
“கீழ கடைல நிக்காப்ல.வரச் சொல்லவா? பையன் புதுசு பெரிய எடோம் வேற...”
“எதுவும் வம்பு தும்பு ஆயிராதே..?”
“இல்லக்கா அதெல்லாம் ஒண்ணூ ஆவாது நம்ம கஸ்டமர்...அந்த வெள்ள ஜிப்பாகாரர் சொல்லித்தா..ன்.....வந்திருக்காப்ல”
“சரி வரச் சொல்லு...ஆங் எல்லாத்தையும் சொல்லி அனுப்பு...”

கீழிறங்கி வந்தவன் நேரே என்னிடம் வந்து,”சார். மேல மூணாவது ரூம்மு... எல்லாமே பேசியாச்சு....வேற ஏதாவது...?”என்று தலையை சொறிந்தவனிடம் இருநூறு ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு,”வேற ஒண்ணும் பிரச்சனையாயிராதே...?”எனக் கேட்டேன்.

“சார்,இது நம்ம ஏரியா நீங்க பாட்டுக்கு போங்க நா இங்க தான் இருப்ப(ன்) என்ன வேணும்னாலும் என் செல்லுக்கு கூப்பிடுங்க ஓடியாந்திர்ரேன்...”என்று சிரித்தவனிடம் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மாடியேறினேன்.

ஒ! நான் யார்...?ஏன் இங்க வந்தேன் சொல்ல..ல இல்லையா?

நானும் திவ்யாவும் ஏழு வருஷம் ”உயிருக்கு உயிரா” காதலிச்சோம்.எனக்கு ஒண்ணுனா அவ பதறிடுவா.எம்மேல் அவ அவ்வளவு பொசசிவ்வா இருந்தா....ஆமா! இதெல்லாம் போன மாசம் வரைக்கும்.

இப்போ..... அவளுக்கு நாளைக்கு கல்யாணம். எவனோ ஒரு ”இளிச்சவாயன்” அவளுக்கு மறுபடியும் சிக்கியிருக்கான்.....என்னப் பொறுத்த வரைக்கும் காதல்ங்கிறது ஒரு ”நம்பிக்க” ஆனா அவ அதக் கெடுத்துட்டா அதுக்காக தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழையும் இல்ல.....அவள கொலை பண்ணுற அளவுக்கு கெட்டவனும் இல்ல...அதுக்காக அவள பழிவாங்காம என்னால சும்மா இருக்கவும் முடியல....அதனாலதான் இங்கவந்தேன்....பொம்பள அவளுக்கு நாளைக்கு ஒரு ராத்திரிக்கு சாந்தி முகூர்த்தம்னா ஆம்பள எனக்கு ஒவ்வொரு ராத்திரியும் சாந்தி முகூர்த்தம்தான்.

எங் கத கிடக்கட்டும்....இப்போது மாடியில் உள்ள மூன்றாவது அறை முன் நின்று கொண்டிருந்தேன்.

கதவு பூட்டப்படாமல் சாத்தி வைக்க பட்டிருந்தது.மெல்ல கதவை திறந்தேன். குண்டு பல்பு ஒளியில் அறை மங்கலாக இருந்தது.டி.வியில் ஏதோ ஒரு லோக்கல் சேனலின் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டிலும் அதன் மேல் உள்ள மெத்தையில் இருதலையணைகளும் திசைக்கு ஒன்றாய் கிடந்தது. நான் அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கையிலே பாத்ரூம் கதவை திறந்து கொண்டு முகத்தில் அப்பியிருந்த ஈரத்தை துடைத்த படி அவள் வெளிப்பட்டாள்.

ஆள் மாநிறம் கொஞ்சம் பெருத்த சரீரம் நைட்டி அணிந்திருந்ததால் மற்றவைகளை சிறப்பாக எடுத்துக் கூற முடியவில்லை.இருபத்தி ஐந்து வயதிலிருந்து முப்பது வயது வரை இருக்கும் என அவளது முகப்பொலிவு சொன்னது.

“என்னப் பார்த்துகிட்டு அப்படியே நிக்கிறீங்க வாங்க......”என ஆரம்பித்தாள்.

எனக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.
“இல்ல யாரும் இல்லயோன்னு பார்த்தேன்.....அதான்.....”என்று இழுத்தேன்.

”என்ன இதான் முத தடவையா.....?”இந்த கேள்வி என்னை ஆச்சர்யப்படுத்தியதைவிட அவளது அனுபவத்தை உணர்த்தியது.

“இல்..ஆமா முத தடவ தான் ஏன்..?எப்புடி கண்டுபிடிச்ச... ?”

“யாரும் வந்து சொல்ல வேற செய்யணுமா...அதான் பார்தாலே தெரியுதே...” என்றபடி கட்டிலில் அமர்ந்தாள்.

“ஏன் தேவயில்லாம பேசிக்கிட்டு அதான் காசு கொடுத்தாச்சுல...”

“சாருக்கு ரொம்பத்தான் அவசரம்...”என்றபடி என்னைப் பார்த்து சிரித்தாள்.

“வேணும்னா பாத்ரூம் போய்ட்டு வாங்க...”

எனக்கும் அது தேவைபட்டதால் முகத்தை அலம்பிக் கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வந்தேன்..அவள் அதற்குள் அறையை சாத்திவிட்டிருந்தாள்.இப்போது டி.வியில் சன்னமான சத்தத்தில் பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது.இப்போது சற்று தைரியம் வந்திருந்ததால் அவள் அருகில் போய் அமர்ந்தேன்.

“என்ன ஆள முழுங்குற மாதிரி பாக்குறீக....”

“இல்ல நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்த....”வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம எதோ கேட்டுத் தொலைத்தேன்.

“இப்ப என்ன ஏன் கதைய கேக்குறதுக்கா இங்க வந்தீக....சீக்கரம்.....”என்றாள்.

அதற்கு மேல் நானும் பேச்சை வளர்க்க விரும்பாமல் வந்த வேலையில் கவனமானேன் அவளது ஒத்துழைப்புடன்......இருள் சூழந்தது.....

“தம்பீ...! வாயை துறங்க...ஆ..... சொல்லுங்க....”ஏதோ ஒளி என் கண்ணில் படர்கிறது.என் தாயின் அழுகுரல் சன்னமாக என் காதுகளில் ஒலிக்கிறது.என் கால்கள் அசைவில்லாமல் நான் படுக்கையில் இப்போதும்.....

ஒருவருடத்திற்கு முன் நான் திவ்யாவை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு செய்த வினைகளுக்கு இப்போது எதிர்வினையாக பால்வினை நோய்களோடு படுக்கையில்..... நாட்கள் நரகத்தில் நகர்வதாக உணர்கிறேன். நிலையற்ற கோபத்தால் தடுமாறி.... என் வாழ்க்கை தடம்மாறி.... மரணத்தை யாசித்துக் கொண்டிருக்கிறேன்.

4 கருத்துகள்:

சரவணன் சொன்னது…

கதை நன்றாக இருந்தது .

Unknown சொன்னது…

நன்றி சரவணன்.

நிலாமதி சொன்னது…

தொட்டால் தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று ........நல்ல படிப்பினையான கதை பாராட்டுக்கள்.நட்புடன் நிலாமதி

Unknown சொன்னது…

நன்றி நிலாமதி...