புதன், 29 ஜூலை, 2009

போராட்டம் வென்றது


இது ஒரு தொடர் பதிவு.”எங்கள் போராட்டம்” என்ற தலைப்பில் நான் எழுதிய முந்தைய பதிவின் தொடர்சியே இது.

தோழர்களே!

எங்கள் போராட்டம் வென்றது.தோழர்.காமராஜும், நானும் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளோம்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமைக்கு எதிரானது எங்கள் தற்காலிகப் பணி நீக்கம் என்ற முறையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள பென்சிலும் வழக்கு தொடர்ந்திருந்தோம்.சொல்லி வைத்தாற் போல் சரியாக நாங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்த இருந்த 23.07.2009 அன்று எங்கள் தற்காலிகப் பணி நீக்கத்தை ரத்து செய்யச் சொல்லி நீதிமன்றம் STAYORDER வழங்கியது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

எனவே மிகுந்த நம்பிக்கையோடும்,உற்சாகத்தோடும் இரு சங்க தலைவர்களும் (PGBEA-PGBOU), BEFI-யின் மூத்த தலைவரும்,IOB STAFF ASSOCIATION-னின் பொதுச்செயலாளருமான தோழர்.G.பாலச்சந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்ட DSP-யின் முன்னிலையில் எங்கள் நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது எங்கள் நிர்வாகமும் தனது இறுக்கமான சூழலில் இருந்து வெளிவரத் தயாராக இருந்தது ஒரு சாதகமான அம்சம். நிர்வாகத்தின் மனநிலையை புரிந்து கொண்ட சங்கத்தலைவர்களும் வெற்றி ஆர்பரிப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தைக்கு வழிசெய்தார்கள்.பல மட்டங்களில் ஏற்பட்ட புரிதல் கோளாரே இத்தகைய இறுக்கமான சூழலுக்கு காரணம் என்றும் வங்கி வளர்ச்சியே அனைவருக்கும் பொதுவானது என்ற வகையிலும் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் சாத்யமான வழிகளை ஆராய்வதாக உறுதியளித்தது.இறுதியாக எங்கள் தற்காலிக பணி நீக்கத்தை நீதிமன்றத்தின் ஆணைபடி உடனடியாக ரத்து செய்யவும் நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

அதனடிப்படையில் நாங்கள் இருவரும் 24.07.2009 முதல் எங்கள் பணிக்கு திரும்பியுள்ளோம்.

எங்களுக்காக தங்களது அன்றாட பணிகளைப் பற்றியோ குடும்பச் சூழலைப் பற்றியோ சிறிதும் யோசிக்காமல் நாங்கள் வேலைக்குச் செல்லும் வரை தாங்களும் வேலைக்கு செல்வதில்லை என்ற முடிவோடும் உறுதியோடும் சங்க அலுவலகத்தில் வந்து தங்கி எங்களுக்காக போராடி நாங்கள் மீண்டும் பணிக்கு சேர்ந்த பின்பே வேலைக்கு சென்ற தோழர்களின் உறுதிக்கு கிடைத்த வெற்றியிது.

தனது குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு செல்வதை ரத்து செய்து விட்டு எங்களுக்காக சங்க அலுவலகத்தில் பலியாக கிடந்து எங்களுக்கு தன் சொந்த காசில் காரோட்டியாக இருந்த ”முதலாளி” சங்கரசீனி போன்றோரின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியிது.

“மாப்பள நீ வேலக்கி போற வர நான் வேலக்கி போக மாட்டேன்....” என்று சொன்ன பழைய பேட்டை மணி மாமா,

“என்னய சஸ்பெண்ட் பண்றத விட உன்ன சஸ்பெண்ட் பண்ணினா எனக்கு அதிகம் வலிக்கும்ன்னு நிர்வாகத்திற்கு தெரிஞ்சிருக்கு...”என்று கரகரத்த சங்கரலிங்கம் மாமா,

”ஏண்டா! உனக்கு எதாவது எழுதனும்னு தோணினா டைரில எழுது அதவிட்டுட்டு பளாக்குல எழுதுன வொயிட்டுல எழுதுனன்னு தெரிஞ்சா அப்புறம் இருக்கு உனக்கு....”என்ற உரிமையோடு என்னை கேலி பேசிய மாப்பிள்ளை அருண்,அண்ணன் சங்கர்,

“டேய்! நாங்க இருக்கோம்டா தம்பி..”என்று நம்பிக்கையூட்டிய அண்ணன்கள்,

“இந்த சின்ன வயசிலே உங்களுக்கு இந்த அனுபவம்லாம் கிடைச்சது ரொம்ப நல்லது....”என்று போனில் மட்டுமே என்னிடம் இதுவரை பேசிய தோழர்.வேணுகோபால் போன்றவர்களின் ஆதரவிற்கும்,உறுதுணைக்கும் கிடைத்த வெற்றியிது.

“எங்களுக்காக பேசப் போய்தான உங்களூக்கு இந்த நெலம....எங்களால தான உங்களுக்கு வேல போயிடுச்சாம்.....”என போனில் பரிதவித்த எத்தனையோ தற்காலிக ஊழியர்களான எமது சகோதர,சகோதரிகளின் அன்பிற்கு கிடைத்த வெற்றியிது.

”ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது.ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிறு தோல்வியானாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.”-சே

கருத்துகள் இல்லை: