வியாழன், 14 மே, 2015

நொருங்காது இந்திய குடி அரசு:


தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் சமீபத்திய தீர்ப்பு அவருக்கும், அவரது சகாக்களுக்கும் சாதகமாக நீதிபதி.குமாரசாமியால் வழங்கப்பட்டதும், அது குறித்தான ஏராளமான விமர்சனங்களும், விவாதங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே!

இந்திய தேசத்தின் இறையாண்மையே அதன் ஜனநாயகம் தான்! ஒரு மாபெரும் ஜனநாயக தேசத்தில் உச்சபட்ச அதிகாரம் கொண்டதும் மக்களின் ஏகோபித்திய நம்பிக்கைக்குரிய கடைசி இடமுமாக இருக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொலுவேற்றியிருக்கும் பாராளுமன்றமே ஆகும்! ஆனால் பெருக்கெடுத்துப் போன ஊழல்களாலும், தவறான பொருளாதார கோட்பாடுகளாலும், ஆட்சியாளர்களின் சுயநல அதிகார துஷ்பிரயோகங்களாலும் அதன் மாட்சிமை பெரும் விமர்சனத்துக்கும், கேலிகளுக்கும் உள்ளாகி மக்களின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக மாறிவிட்டதாக கற்பிதம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அதேசமயம் சாமான்யர்களுக்கு நீதிமன்றமே கடைசி புகலிடம் என்னும் ஒரு நம்பிக்கையும் தொடர்ந்து இதே காலங்களில் விதைக்கப்பட்டும் வந்துள்ளது. நீதிமன்றங்கள் வரையறுக்கப்பட்ட சட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு அதிகார அமைப்பு. சட்டங்களும் அதன் சடங்குகளுக்கு கட்டுப்பட்ட நீதியும் நிலையற்றது. ஆகவே தான் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் மேல்மூறையீட்டுக்கான வசதிகளோடு கட்டமைக்கப்பட்டது. இங்கு “வழங்கப்பட்ட நீதிகள்” மாற்றப்படுவதும், மறுதலித்து ஏற்றுக்கொள்ளப் படுவதும் ஒன்றும் விந்தையல்ல. ஆக ”நீதி” என்பது சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அது வழங்கும் நபர்கள் சார்ந்தே இருந்து வருகிறது என்பதே யதார்த்தம். எனவே நீதிமன்றங்கள் என்பது பூர்ஷுவா தனமான ஒரு கட்டமைப்பு முறையே ஆகும்.

அந்த வகையில் பார்க்கப் போனால் இந்த வழக்கும் ஒரு முரண் நகையே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி அம்மக்களின் நம்பிக்கைக்கு விசுவாசமாக இல்லாமல் அதிகார துஷ்பிரயோகத்தால் தம் ஆட்சிகாலத்தில் வரம்புக்கு மீறி சொத்து குவித்ததாக ஒரு வழக்கு. சாமான்யர்களை உடனே தீண்டும் நீதி ஆட்சியாளர்கள் குற்றம் சுமத்தப்பட்டால் மட்டும் சிறப்பு நீதிமன்றமே அமைத்தாலும் மெல்ல ஊர்ந்தே நகரும் விந்தை. ஒருவழியாய் ஆண்டுகள் பல தேய்ந்த பின்பு காலம் கடந்து ஒரு “நீதி” வழங்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதி பதவி இழக்கிறார். குற்றம் நிருபிக்கப்பட்டாலும் அதனை ஏற்க மறுத்து ஒரு கும்பல் கோயில்களை கூடாரமாக்குகிறது. தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்கிறார்கள். வழங்கப்பட்ட நீதி இங்கு கூட்டி கழித்து மாற்றப்படுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் இருக்கிறது…. குற்றம் சாட்டப்பட்டு மாறி மாறி நீதி வழங்கப்பட்டதோ தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு! வழக்கு நடைபெற்றதோ கர்நாடகத்தில்! ஏற்கனவே இரு மாநிலங்களுக்கு இடையில் நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக முரண்பாடு. கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கூட தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தமிழகத்தின் நீர்வரத்தை வதைக்கும் திட்டமான மேகதாது அணைக்கட்டுமானத்திற்கு எதிராக மத்தியில் போய் கர்நாடகா சட்டசபை தீர்மானத்திற்கு எதிராய் முறையிட்டு வந்தார். இங்கோ ஒருபோதும் தமிழக விவசாயிகள் குறித்து சிந்திக்காதவர்கள் கூட தமிழின சாயம் பூசி இனவெறி மூட்டினார்கள். கர்நாடகத்திலும் தமிழர்களுக்கு எதிரான இந்த வெறியாட்டம் பலகாலமாக திட்டமிடப்பட்டு இனவெறியர்களால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு சூழலில் தான் தமிழகத்தின் முன்னால் முதல்வர் குற்றமற்றவர் என கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழர்கள் எதிர்கிறார்கள்! நீதியை மறு ஆய்வு செய்யக் கோரி கர்நாடக சட்ட அமைச்சருக்கு தமிழக கட்சி தலைவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். நீருக்காக கர்நாடகத்தாரை விமர்சித்த தமிழக வெகுஜன ஊடகங்கள் நீதிக்காக கரம் நீட்டுகிறார்கள்! இந்த முரண்பாடுகளுக்கு இடையே தான் ஒளிந்திருக்கிறது எம் தேசத்தின் சமன்பாடுகளும்! இங்கு பார்க்கப்பட வேண்டியதும் உரத்து பேசப்பட வேண்டியதும் நீதி சாமான்யர்களுக்கு ஒன்று ஆட்சியாளர்களுக்கு ஒன்று என்பதை பற்றியல்ல மாறாக இந்திய ஜனநாயக தேசத்தில் ஆட்சியாளர்கள், அதிகாரமிக்கவர்கள், பெருமுதலாளிகள் எவர் குற்றம் செய்தாலும் இந்திய மக்களாகிய நாம் நம் மொழி, இன, மத உணர்வுகளை கடந்து அநீதிக்கு எதிராய் ஒன்றுபடுவோம் என்பதேயாகும்.

தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
 
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்- வழக்குரை காதை(சிலப்பதிகாரம்)

கருத்துகள் இல்லை: