சனி, 8 செப்டம்பர், 2012

கோல்கேட்டும்,கோட்னானியும்.....


இந்தியர்கள் உண்மையாகவே ‘பெருமை’ப்படலாம்!

குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய அகராதியில் சேர்பதற்கு மொழியியல் ஆய்வாளர்கள் கூடி முடிவெடுப்பார்கள். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகள் அடுத்த ஆண்டிலிருந்து அகராதியில் இடம்பெறும். பாலிவுட்,கோலிவுட் போன்ற வார்த்தைகள் செல்லமாக இப்படித்தான் இடம் பிடித்தன. அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் வெள்ளைமாளிகையிலிருந்து கொண்டே ரகசிய டேப் மூலம் வாட்டர் கேட் வளாகத்தில் உள்ள DNC கூட்டத்தை ஒற்றறிந்ததால் அவமானப்பட்டு ஜனாதிபதி பதவியிலிருந்து 1974ல் விலக வேண்டி வந்தது. அதிலிருந்து ‘வாட்டர்கேட்’ என்றாலே ஊழல் என்றாகிவிட்டது. அந்த வார்த்தை அகராதியிலும் இடம்பிடித்தது.

அதேபாணியில் “கோல்கேட்” (COALGATE) என்றால் ‘நிலக்கரி ஊழலுக்கு’ செல்லப்பெயர். கோல்கேட் என்றவுடன் கூடவே ‘கனிம ஊழல்’, இந்தியா, மன்மோகன்சிங் என்ற இணைப்பான்களையும் கணினியும், கணினி மூலம் சேகரமான அகராதிகளும் காட்டும். மன்மோகன் ‘வரலாற்று நாயகராகப்’ பதிவு செய்யப்பட்டு விடுவார்!

இந்தியாவின் அனைத்து கார்டூனிஸ்ட்டுகளுக்கும் ‘தீனி’ கிடைத்து விட்டது! இந்தியப் பிரதமர் பற்றிப் போடாத கார்டூன்படமில்லை ஆனாலும் டாக்டர் மன்மோகன் சிங் அசரவில்லையே!.....வழக்கம்போல். ஆனால் இது சிரிக்க வேண்டிய விஷயமில்லை. கவலைப்படவேண்டிய ஆழமான விஷயம்.
மாநில அரசுகளுக்கும் தனியார் முதலைகளுக்கும் மத்திய அரசின் நிலக்கரி ஒதுக்கீட்டில் ஜூலை 2004 முதல் வெளிப்படையாக தெரிவிக்கப்படாதது புதைக்கப்பட்டு கிடக்கும் மர்மங்கள் இந்திய கண்ட்ரோலர்/ஆடிட்டர் ஜெனரலையே ஆட வைத்து விட்டது! 142 நிலக்கரி ப்ளாக்குகள் ஒதுக்கீட்டில் தனியார் அடித்த கொள்ளை லாபத்தைக் கேட்டால் தலைசுற்றும். அதாவது,ரூ.1.86 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு! விவரங்கள் வெளிப்படையாகவும் இல்லை;நியாயமாகவும் இல்லை. ஏலப்போட்டி முறையாக நடத்தப்படாததே இந்த முறைகேட்டுக்குக் காரணம். அதற்கான வழிகாட்டுதல்களும் இல்லை. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்தான் நிலக்கரித் துறைக்குப் பொறுப்பு என்னும்போது இன்னும் திடுக்கிட வைக்கிறது.

கனிமவளத்தைக் கொள்ளை அடிக்கும் தனியார் நிறுவனங்கள் பற்றி பகிரங்கமாக பாராளுமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறும்போது பாரதீய ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தில் இதை விசாரிக்க இடம்கொடுக்காமல் ரகளை செய்து வெளிநடப்பு செய்கின்றனர். விசாரணை வந்தால் பா.ஜ.க காலத்திலிருந்தே விசாரிக்க வேண்டி வருவதால் இதை மழுப்ப அவர்கள் வெளிநடப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மெகா ஊழல்கள் உட்கட்சிப் பூசலில் முடிந்து முடைநாற்றமடிக்கிறது.
வங்கி ஊழியர்களோ இதிர தொழிலாளர்களோ வேலை நிறுத்தம் செய்ய துவங்கினால் அரசு மீடியாக்களும்,கார்பரேட் நிறுவனங்களும்,சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்புகளும் இதனால் அரசுக்கு ஏற்படும் ‘தேசிய இழப்பு’ பற்றியும், வாடிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் ‘அநியாயத்தை’ பற்றியும் முதலைக் கண்ணீர் வடித்து தங்கள் கருத்தை இதர பிரிவு மக்களின் மீது திணித்து மூளைச்சலவை செய்வார்கள்.

2ஜி ஊழல் ரூ.1.76 லட்சம் கோடி என்றால்,அதைவிடவும் கூடுதல் இழப்பை தேசம் நிலக்கரி ஊழல் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தை மாற்ற இயலாது ‘புறக்கடைவழியாக’ நிலக்கரித் துறையையும் தனியார்மயமாக்க நினைக்கும் மத்திய அரசின் வஞ்சத்தனம் இதில் வெளிப்படுகிறது. பொதுமக்கள் அக்கறையுடன் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அரசியல் கூடாது என்று பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்பரேட் நிறுவனங்களும் போதிப்பதன் ரகசியம் இதுதான். அதாவது இந்த “ஊழல் அரசியல்” குட்டு வெளிப்பட்டு விடும் என்ற ‘போபியாதான்’!

“அண்ணன் எப்போது சாவான்….திண்ணை எப்போது காலியாகும்” என்ற பழமொழியைப் பெரிதும் நம்பியிருந்த பா.ஜ.க.வுக்குப் பலத்த அடி!
”அடுத்த பிரதமர் நரேந்திர மோடிதான்,பாருங்கள் இந்தியாவிலேயே மாடல் அரசு இதுதான்.” என்று விளம்பரம் செய்து வந்த குஜராத் மாநில அரசு பற்றிய ‘யோக்கியதை’ அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

2002 கோத்ரா சம்பவத்தை காரணமாக்கி குஜராத்-அகமதாபாத்-நரோதாபாடியாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரம் நடத்தப்பட்டது. இப்படியாக இனக்கலவரத்தைத் தூண்டி கூலிப்படையை வைத்து 97 பேரைக் கொலை செய்து பிணங்களை கிணற்றில் அள்ளிப்போட்டதில் முன்னணிப் பாத்திரம் வகித்தது யார் யார் என்று உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி சிறப்பு புலனாய்வுப் படை விசாரித்தது; அதன் அடிப்படையில் குஜாராத் சிறப்பு நீதிமன்றம் திருமதி.மாயாபென் கோட்னானி (28 ஆண்டுகள் சிறை) உட்பட 32 பேருக்குத் தண்டனை விதித்துள்ளது.

கலவரம் நடத்தி படுகொலை செய்த கோட்னானி எம்.எல்.ஏ 2004-ல் அமைச்சரானார்! அதுவும் மகளிர்/குழந்தைகள் நலத்துறை பொறுப்பு! குழந்தைகளையும்,பெண்களையும் கொல்லத் தலைமை ஏற்றிருந்த கோட்னானி பார்த்துக் கொண்டிருந்த தொழில் மகளிர் உடல்நல மருத்துவர்!... விசுவாசிக்குப் ‘பொருத்தமான பரிசளித்தவர்’ முதல்வர் நரேந்திர மோடி! கோட்னானியுடன் தண்டனை அடைந்தவர்களில் பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்கப்பரிவார அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்.


பத்தாண்டுகள் தாமதமானாலும் கூட, சோர்வடையாது போராடி இத்தீர்ப்பு வெளியாவதற்கு இடதுசாரிக் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்களான டீஸ்டா செடல்வத் (பெஸ்ட் பேக்கிரி விஷயத்தை வெளிக் கொண்டு வந்தவர்) ஹர்ஷ் மந்தர் உள்ளிட்டோர்,”பைனல் சொலூஷன்” (இந்த ஆவணப் படம்தான் குஜராத் 2002 இனக்கலவரம் நடந்த பின் உடனடியாக, பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்க் கதைகளைப் பதிவு செய்தது. பா.ஜ.க. தலைமை வகித்த மத்திய அரசு இப்படத்துக்குத் தடை விதித்தது. ஆனால், சளைக்காது இயக்குனர் ராகேஷ் ஷர்மா இதை உலகத் திரைப்பட விழாக்களில் திரையிட்டு உண்மையை உணர்த்தியதால் சங்கப்பரிவார் அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்து வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டது.
UPA அரசு தடையை விலக்கி இப்படத்துக்கு ஜனாதிபதி விருது வழங்கியது.)

ஆவணப்பட இயக்குனர் ராகேஷ் ஷர்மா போன்றோர் காரணமாக அமைந்தனர். குஜராத் கலவரங்கள் விசாரணை மூலம் எவ்வாறெல்லாம் வன்முறை காலத்தில் அதுவரை சமூகத்தில் பாச நேசத்துடன் பழகிவந்த சிறுபான்மை மக்கள், திடீரென ‘இதரர்களாகப்’ பாவிக்கப்பட்டு பிரித்தொழிக்கப்படுவார்கள் என்ற படிப்பினைகளை நாம் பெற முடியும்.(காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே வேண்டுமென்றே தன் கையில் “இப்ராஹீம்” எனப் பச்சை குத்தியிருந்தான்! அவன் நினைத்தவாறே புணே, மும்பையில் உடனடியாக கலவரங்கள் நிகழத் துவங்கின! நேரு அரசு நல்லவேளையாக உடனடியாகத் தலையிட்டு கலவரத்தைக் கட்டுப்படுத்தியது.) எல்லாக் காலங்களிலும் சமூக நல்லிணக்கம் பேணுவது நமது தலையாய கடமை.

(நன்றி : BANK WORKERS UNITY/SEP’12 ISSUE)