
ஓர் ஆண்டுக்கும்
மேலான அவர்களது நெடிய போராட்டப் பயணத்தின்
எதிர்கால திசையை அவர்கள் மிகச் சரியாக கனித்து இயங்க வேண்டிய காலகட்டமிது. சு.ப.உதயகுமார்…
என்னும் அந்த இளம் மனிதனின் மனித நேயமிக்க சமூக அக்கறையினாலும் அவரின் சளைக்காத வலிமையான
மக்கள் தொடர்பின் காரணமாகவும் இன்று மீனவ சமூகத்தின் பெரும்பான்மைக்கும் அதிகமான மக்கள்
அவரின் வழிகாட்டுதலின் பெயரில் ஓரணியில் திரண்டு கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டக்
களத்தில் இறங்கியுள்ளனர்.

மாபெரும் எதிரிகளை
மாபெரும் நோக்கத்திற்காக எதிர்க்கும் போது மாபெரும் திட்டமிடல் அவசியம். வெறும் உணர்ச்சிமிக்க
போராட்டங்களால் மட்டுமே வெற்றிகள் சாத்தியமாகிவிடாது. எதிரிகளின் பலத்தை முழுவதுமாய்
புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த தேசமெங்கும் பல்வேறு நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட,
நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் குறித்தும் அவைகளை இந்திய ஆட்சியாளர்கள் அணுகும்
முறை குறித்துமான ஒரு புரிதல் அவசியமாகும்.


இன்றும் டெல்லியில்
ஜந்தர் மந்திர் பகுதிக்கு போய் பார்த்தால் தெரியும் இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையில்
இருந்தும் தத்தமது பிரச்சனைகளை கடைவிரித்தபடி நம்பிக்கையோடு ஏராளமான மக்கள் போராடிக்
கொண்டிருப்பதை காணலாம்.
மக்களின் போராட்டங்களை
நீர்த்துப் போகச் செய்ய தன்னாலான அனைத்து அஸ்திரங்களையும் நமது ஆட்சியாளர்கள் பிரயோகிக்க
தயங்க மாட்டார்கள். இதில் கட்சி பேதமில்லை. இந்திய தேசத்தின் ஆட்சியை ஒரு கட்சி பிடிக்க
வேண்டுமென்றால் அவர்களுக்கு மூன்று தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். முதலாவதாக அது
ஏகாதிபத்திய நாடுகளின் ஏவல்களை சிரமேற் கொண்டு செய்வோராய் இருத்தல் அவசியம். இரண்டாவதாக
உள்நாட்டு, வெளிநாட்டு பெரும்முதலாளிகளின் நலன் பொருட்டு எந்தவித முடிவையும் தயக்கமின்றி
எடுப்போராய் இருத்தல் வேண்டும். அது வெகுஜன நலனுக்கு எதிராகவோ அல்லது அழிவிற்கு காரணமாகவோ
இருந்தாலும் பராவாயில்லை. மூன்றாவதாக மாஃபியாக்களை கண்டும் காணாமல் அனுசரித்து போவோராய்
இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக்கு
போராடும் மக்கள் தேசவிரோதிகளாகவும், அந்நிய சக்திகளாகவும் ஏன் தீவிரவாதிகளாகவுமே தெரிவார்கள்.
போராடும் மக்களை ஏனைய பொதுமக்களிடமிருந்து தனித்து போகச் செய்யவே இந்த தந்திரங்களை
அவர்கள் கையாள்கிறார்கள்.
பொதுமக்களிடமிருந்து
போராட்ட களத்தை துண்டாக்கி அதை கலவரபூமியாக காட்சி படுத்த போராட்டங்களின் கட்டுப்பாடுகளை
குழைக்க துவங்குவார்கள். அதற்கு போராளிகளின் உணர்வுகளை தூண்டிவிட்டு வன்முறையை நோக்கி
நகர்த்தி அவர்களால் பொதுச் சொத்துகளுக்கும், ஏனைய பகுதி மக்களுக்கும் இடையூறு என சித்தரித்து
தனது ஊடகங்களைக் கொண்டு ”நடுநிலைமை” என்னும் மாயையை பரவச் செய்து போராட்டங்களின் நோக்கத்தை
சிதைக்க துவங்குவார்கள்.

இதிலிருந்து மீண்டும்
இந்த போராட்டத்தை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டுமானால் மீனவ மக்கள் முதலில்
மேற்கொண்டு புதிய போராட்டங்களை அறிவிக்காமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மீனவ மக்களையும்
ஒருசேர ஓர் இடத்தில் ஒன்று கூடச் செய்து தங்களது போராட்ட இயக்கத்தை அரசியல் இயக்கமாக
மாற்ற வேண்டும். அப்பந்தலிலே அணுஉலைக்கு எதிரான தீர்மானம் உட்பட தங்களது ஏனைய பொதுப்பிரச்சனைகளையும்
சேர்த்து பொதுப்பட்டியலிட்டு இதனை ஒரு அரசியலியக்கமாக முன்னெடுப்பதே மிகச்சரியான முடிவாக
இருக்கும்.
அரசியல் இயக்கமாய்
மக்கள் மன்றத்தில் போய் நிற்பதனால் போராட்டங்களை ஒரு குறுகிய பகுதியில் முடக்காமல்
அதை நாடு முழுவதற்குமாய் பரவச் செய்வதற்கும், ஒத்த சிந்தனை உள்ளவர்களை ஓரணியில் ஒரு
மிகப்பெரும் நோக்கத்திற்கான மிக நீண்ட பயணத்தில் இணைக்கவும் அரசியல் இயக்கமே சரியானது.
முதலில் எதார்த்தங்களை
ஒரு போராளி புரிந்து கொள்ள வேண்டும். உடனடிச் சாத்தியங்கள் எவை? நீண்ட பயணத்திற்குப்
பின்பே சாத்தியமாகுபவை எவை? என்னும் புரிதலோடுதான் போராட்டப் பயணத்தை இலக்கை நோக்கி
நகர்த்திச் செல்ல முடியும். ஏனெனில் காத்திருக்க மறுப்பவன் ஜனநாயகத்தின் எதிரியாவான்.
இந்தியா போன்ற
ஒரு ஜனநாயக தேசத்தில் முதலில் அதிகாரத்தில் பங்கெடுப்பதே அதிக இழப்புகள் இன்றி ஒருகுறுகிய
காலத்தில் நம் இலக்குகளை வென்றெடுப்பதற்கான எளிய வழியாகும். ஆனால் அந்த ”எளிய வழியை”
அடைய ஆகப்பெரும் ஒழுக்கமும்,பொறுமையும் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக