சனி, 25 செப்டம்பர், 2010

அயோத்தியா யாருக்கு சொந்தம்..?



’அயோத்தியா’ என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு “வெற்றி கொள்ள முடியாத பகுதி” எனப் பொருளாகும். இப்போது நம் தேசத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி ‘அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதியை வெற்றி கொள்ளப்போவது யார்?’என்பதே.

மிக நீண்ட வரலாறு கொண்ட இந்த கேள்விக்கு பதிலாக பல நூறு ஆண்டுகளாக பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் பதிலற்று நிற்கிறோம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் அயோத்தி. இதை இந்துக்கள் ராமர் பிறந்த பூமி என நம்புவதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள். முஸ்லிம்களோ 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி என்பதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள்.

இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகந் ராமசந்திர தாஸ்பரமஹன்ஸ் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் தீர்பு தான் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

’சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி’என்றொரு சொலவடை உண்டு. இந்தப் பிரச்சனையில் நமது அரசாங்கங்களின் பங்கு அந்த ஆண்டியை போலத்தான். ஆங்கிலேயே ஆட்சியில் கூட அண்ணன் தம்பிகளாக ஒரே இடத்தில் வழிபாடு நடத்திவந்தவர்களை அங்காளி பங்காளியாக்கி அலங்கோலப்படுத்தியது இந்திய ஆட்சியாளர்கள் தான். இப்போது ‘கலவரம்,கலவரம்’ என கூப்பாடு போடுபவர்களும் அவர்கள் தான்.

அதேபோல் இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கிய அடுத்த பெரியபங்கு ஊடகத்துறைக்கே சாரும். அவர்கள் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க இந்தப் பிரச்சனையை முடிந்த அளவுக்கு அரசியலாக்கி ஆதாயம் பார்த்தாகிவிட்டது.அடுத்து மத விற்பன்னர்கள்....சொல்லவே வேண்டாம் இந்தப் பிரச்சனையின் மூலமும் அவர்களே முடிவும் அவர்களே!

இப்போது வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கலவரங்களில் இறந்து போன அப்பாவி பொதுஜனங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை...அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை.... நாம் தொலைத்து விட்டு நிற்கும் சகோதிரத்துவத்திற்கும் தீர்வு பிறக்க போவதில்லை... இதையெல்லாம் இழந்துவிட்ட பிறகு கிடைக்கும் அந்த நிலத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம்? மீண்டும் ஒரு பாபர் மசூதியா? அல்லது ராமர் கோயிலா?

லட்சகணக்கான உயிர்களின் தன்னலமற்ற போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சுதந்திரத்தை...இந்த ஜனநாயகத்தை....பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக சொல்லப்படும்...நம்பப்படும் மன்னர்களுக்கு சொந்தமானது எனச் சொல்லி சண்டையிட்டு கொள்வது எத்தனை அபத்தமானது? இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையும் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே சொந்தமானது என்பதை நாம் எப்போது உணர்வோம்?

ஆரியர்கள் வந்தார்கள் இந்துக்களோனோம்... முகலாயர்கள் வந்தார்கள் முஸ்லிம்களானோம்... ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறுத்தவர்களானோம்... சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?

8 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

மாப்ளே ....
சொல்லும் பொருளும்
செட் சேர்ந்துவிட்டது.
உன் எழுத்து கைவந்துவிட்டது.
தொடர்ந்து எழுது.
புள்ளிவிபரங்கள்
நல்லாச்சொல்றே.
ஊடகங்கள் குறித்த
உனது வார்த்தை 1000 சதம் உண்மை.

nathan10 சொன்னது…

சுவிஸ்சிலான்தில் கத்தோலிக்க ஆலயமும் இஸ்லாமிய பள்ளிவாசலும் ஒன்றி கட்டுப்பட இருக்கின்றது. இது சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியமாகும். இராம்பிரான் ஆலயமும் நபிகள்நாயகம் பள்ளிவாசலும் இருவரும் மானிட அவதாரமுடைய தெய்வாம்சமுடையவரகள். உள்ளே செல்லும் வாசல் ஒன்றாக இருக்கவேண்டும். எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டுடன் வாழ்வார்கள்

Unknown சொன்னது…

தோழன் நாதன் அவர்களுக்கு,

நீங்கள் சுவிஸ் வரை போக வேண்டாம்.அயோத்தியில் தற்போது சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடத்திலே இரு மத வழிபாடுகளும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. அதனால் இதை ஒரு நிரந்த தீர்வாக நாம் வாதிக்க முடியாது.

மேலும் இந்த சமூகத்தில் வாழும் மத சார்புடையவர்கள் எல்லாம் உங்களைப் போல் எம்மதமும் சம்மதம் என ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக தேசத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கோ அல்லது இனகூட்டத்திற்கோ சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ தீர்ப்புகள் தந்து விட முடியாது. இங்கே நீதி என்பது சமூக புற சூழல்களை கணிக்கில் கொண்டு வழங்கப்படும் ஒரு தற்காலிக முடிவு அவ்வளவே.

நாம் இப்போது மதங்களின் ஒற்றுமையை காக்க கை கோர்ப்பதைவிட நம் தேசத்தின் இறையாண்மைக்காக கைகோர்பதே முக்கியமாக நான் பார்க்கிறேன்.

இங்கே இறையாண்மை என்பது இனம்,மொழி,மதம்,ஜாதி ஆகிய வேற்றுமைகளை கடந்தும் நம்மை ஒன்றிணைத்து வரும் ”நாம் இந்தியர்” என்னும் அந்த ஒற்றை அடையாளம் தான்.

என்பார்வையில் நான் தீர்வாக நினைப்பது தற்போதைய சர்ச்சைக்குரிய பகுதியில் பாரத அன்னைக்கான ஒரு தேசிய கோயில் எழுப்பபட வேண்டும் என்பதே. மதம்,இனம்,மொழி என்னும் வேற்றுமைகள் மறந்து தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைத் தந்த அந்த போராளிகளின் நினைவுச் சின்னங்கள் அங்கே வழிபாட்டு கூடங்களாக நிறுவப்பட வேண்டும்.

ராமரும்,பாபரும் நமக்கு சுதந்திரம் அளிக்கவில்லை ஆனால் நாம் அவர்களுக்கு கோயில் கட்ட வேண்டும் என்கிறோம். ஆனால் இன்று இப்படி வேறு குறிக்கோள்களே இன்றி சுதந்திரமாக சண்டை போட அன்று விடுதலை வேள்வியில் தங்கள் உயிர் ஊற்றிய அந்த உன்னத மனித தெய்வங்களுக்காக நாம் இப்போது என்ன செய்துவிட்டோம்?

hariharan சொன்னது…

//ஆரியர்கள் வந்தார்கள் இந்துக்களோனோம்... முகலாயர்கள் வந்தார்கள் முஸ்லிம்களானோம்... ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறுத்தவர்களானோம்... சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?//

ஒரு திருத்தம் எப்போது மனிதர்களாவோம்? மதம் என்று ஒன்று இல்லாவிட்டால் இந்தியப்பிரிவினை இல்லை, வெள்ளையர்களின் ஆதிக்கம் நான்கு நூற்றாண்டுகள் வரை நீடித்திருக்காது.. இன்றாவது அது ஒழிந்தால் மக்கள் அதன் பெயராலாவது சண்டையிடாமல் இருப்பார்கள்.

நீதிபதிகளே என்ன தீர்ப்பு வழங்குவது என்று யோசிக்கும் அளவிற்கு இவ்வளவு தாமதம், அந்த இடத்தை இரு தரப்பாருக்கும் இல்லாமல் செய்ய தீர்ப்பு வந்தால் atleast மதத்தின் பேரால் கலவர்த்தை தவிற்க்கலாம்.

SurveySan சொன்னது…

me likey.

//இந்த மிகச் சிறிய உலகத்தில் புரையோடி போயிருக்கும் மனித விரோத செயல்களுக்கு மரணசாசனம் எழுத போகும் மனித கூட்டத்தில் நானும் ஒருவன்.........//

mrknaughty சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

யார்வந்தால் மனிதன் ஆவோம்.ஏதாவது மந்திரம் இருந்தால் சொல்லுங்கண்ணே.
நிறைய,நிறையவேமிஸ் பண்ணுகிறோம்.
நிறையநிறையவே இழக்கிறோம்

tamilan சொன்னது…

சுட்டியை சொடுக்கி படிக்கவும்

சுட்டியை சொடுக்கி படிக்கவும்

===> 1. இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்


===> 2. ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள்.

..