புதன், 22 ஜூலை, 2009

எங்கள் போராட்டம்.....


”நவீன கொத்தடிமைகள்....” என்ற தலைப்பில் சென்ற மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் எங்கள் வங்கியில் (பாண்டியன் கிராம வங்கி) பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் நிலை குறித்தும்,அதன் பொருட்டு எங்கள் தொழிற்சங்கங்கள்(PGBEA-PGBOU) நடத்த இருந்த போராட்டங்கள் குறித்தும் எழுதியிருந்தேன்.

அக்கட்டுரை தோழர்.மாதவராஜின்(தீராத பக்கங்கள்) பரிந்துரையின் பேரில் BANK WORKERS UNITY என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டது.
அதேபோல் தோழர்.காமராஜ் (அடர் கருப்பு) அவர்களும் “அவுட் சோர்சிங்கிற்கு எதிரான ஒரு முன்னோடிப் போராட்டம்” என்ற தலைப்பில் அதில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.தற்போது அந்த கட்டுரைகளுக்காக எங்கள் இருவரையும் எமது வங்கி நிர்வாகம் 17.07.2009 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

எங்கள் தொழிற்சங்கத்தில் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) நான் செயற்குழு உறுப்பினராகவும்,தோழர்.காமராஜ் அவர்கள் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளோம்.ஆகவே எங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிவிடலாம் என்ற பகல் கனவோடும்,இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித கருத்துரிமையை பறிக்கும் விதமாகவும் வழங்கப்பட்ட இந்த இடைக்கால பணி நீக்க உத்தரவை இந்திய தொழிற்சங்களுக்கு எதிரான அதிகாரவர்கத்தின் அறைகூவலாக பார்த்த எங்கள் தொழிற்சங்கம் எங்கள் வங்கி நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை துவங்கியுள்ளது.

தோழர்களே!

எங்களை பொறுத்தவரை இந்த இடைகால பணி நீக்க உத்தரவை எங்கள் தொழிற்சங்க வாழ்விற்கான அங்கீகாரமாகவே பார்க்கிறோம்.எமது வட்டார மேலாளர் இந்த உத்திரவை எனது கிளையில் (பசுவந்தனை) வைத்து எனக்கு வழங்கும் போது எங்களது தொழற்சங்க தலைவர்கள் எனக்கு மாலை அணிவித்து பாராட்டு கோஷங்கள் எழுப்பியதை பார்த்த எங்கள் கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் ஏதோ எனக்கு ’பதவிஉயர்வு’ கிடைத்துள்ளது என நினைத்து விசாரித்தார்.அப்போது தோழர்கள் சுப்பிரமணியனும்,அருண் பிரகாஷ் சிங்கும் எனக்கு ’சஸ்பன்ஷன் ஆர்டர்’ வழங்கப்படுவதாக தெரிவித்தபோது விசாரித்தவர் மட்டுமல்லாமல் அருகிலிருந்த அத்துணை வாடிக்கையாளர்களும் அதிர்ந்தே போய்விட்டார்கள்.

ஒருவகையான பெருமிதமான மனநிலையில் தான் அங்கிருந்து விருதுநகரில் உள்ள எங்கள் தொழற்சங்க அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன்.தோழர்.காமராஜ் அவர்களையும் என்னையும் தோழர்கள் அனைவரும் கட்டித்தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.அதிலும் எங்கள் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கமும்,தோழர்.செல்வகுமார் திலகராஜ்(PGBOU-CHIEF ADVISER) அவர்களும் தங்களது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழிற்சங்க வாழ்வில் தங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் மூன்று ஆண்டு தொழிற்சங்க அனுபவம் மட்டுமே கொண்ட தொழிற்சங்க ஜீனியரான எனக்கு கிடைத்துவிட்டதாக சொல்லி என் உச்சிமுகர்ந்தது என் வாழ்வின் மிகப்பெருமையான தருணங்கள்.

பல்வேறு கிளைகளிலிருந்து அதிகம் பரீச்சயமில்லாத தோழர்கள் கூட தங்கள் ஆத்மார்த்தமான ஆதரவையும்,தோழமையையும் வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட உணர்வுகளை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை......

20.07.2009 அன்று மாலையில் விருதுநகரில் உள்ள எங்கள் வங்கி நிர்வாக அலுவலகத்தினுள் சேர்மேன் அறை முன்பாக அமைதியாக அமர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட தோழர்கள் எங்களது இடைகால பணி நீக்கம் ரத்தாகும்வரை அங்கிருந்து அகலப்போவதில்லை என உறுதிபட கூறி போராட்டத்தை துவக்கினார்கள். இதற்கிடையில் தகவல் கேள்விபட்டு விருதுநகரில் உள்ள சகோதர தொழிற்சங்கங்களான அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள்,விருதுநகர் மாவட்ட வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள்,BEFI தோழர்கள்,CITU,DYFI,தமுஎச,சாலைபணியாளர் துறை சங்கப் பிரதிநிதிகள்,சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் என பல தரப்பட்ட தோழர்களும் எங்களோடு தோள் கோர்க்க வந்துவிட்டார்கள்.

நிர்வாகம் போராட்டத்தை வலுவிழக்க வைக்க தன்னால் முடிந்த அத்துணை முயற்சிகளையும் மேற்கொண்டது.ஆனால் தோழர்களின் உறுதியை கண்டு நிலைகுலைந்தார்கள்.அதனை தொடர்ந்து காவல்துறையை வைத்து எங்களை அகற்றப்பார்த்தார்கள். ஆனால் காவல்துறையினர் எங்களது கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு எங்கள் தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகத் தரப்பினரோடு சமரச பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சித்தார்கள்.ஆனால் நிர்வாகம் தன் பிடியிலிருந்து இறங்குவதாயில்லை.போராட்டம் தொடர்ந்தது....

ஒருகட்டத்தில் மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் வரவழைக்கப்பட்டார்.அவர் சிவகாசி அருகில் ஒரு தீ விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் இங்கு வந்ததாகவும் அவர் அங்கு அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாகவும்,மேலும் வருகிற 23.07.2009 அன்று தனது முன்னிலையிலே நிர்வாகத் தரப்போடு தொழற்சங்க தலைவர்களை பேசவைத்து பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.அதனடிப்படையில் அவரது பணிச் சூழலை மனிதாபிமானத்தோடு பார்த்த தோழர்கள் அவரது வார்த்தைகளை நம்பி போராட்டத்தை ஒத்திவைக்க சம்மதம் தெரிவித்தார்கள்.

ஒரு உன்னதமான நோக்கத்திற்கான போராட்டத்தில் எதிரிகளின் ஆயுதங்களால் தாக்கப்படும் போது ஏற்படும் காயங்களே போராளிகளுக்கான நிஜமான பதக்கங்கள்.அந்த பதக்கங்கள் வழங்கப்படும் போது போராளிகளுக்கு ஏற்படுவது பெருமித உணர்வேயன்றி வலியல்ல...இந்த உணர்வோடு எங்கள் போராட்டப் பயணம் தொடரும்.......

” நமது போர்முழக்கம் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்,இன்னொரு கரம் நம் ஆயுதத்தை கையிலெடுக்க துணியுமானால்,மற்றவர்கள் நமது இறுதிச்சடங்குகளில் இயந்திரத் துப்பாக்கிகளோடு வந்து புதிய போர் முழக்கத்தை அறிவிப்பார்களேயானால்,மரணம் திடீரென வந்தால் கூட அதே வரவேற்கலாம்”-சே

7 கருத்துகள்:

பாரதி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பாரதி சொன்னது…

உங்கள் நியாமான போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

Unknown சொன்னது…

நன்றி பாரதி...

பாரதி சொன்னது…

உங்கள் போராட்டம் வெற்றி அறிந்து மகிழ்ச்சி அடைத்தேன்.

http://mathavaraj.blogspot.com/2009/07/blog-post_24.html

துபாய் ராஜா சொன்னது…

போராட்டம் வெற்றியடைந்ததை திரு.மாதவராஜ் பதிவு மூலம் அறிந்தோம்.

வாழ்த்துக்கள்.

காமராஜ் சொன்னது…

கனத்துக்கடந்த நான்கு நாட்கள்
சற்றும் கலக்கம் தெரியவிடாமல்
சூழ்ந்து கொண்டது நட்பின் காவல்.
அடுக்கடுக்காய்....

Unknown சொன்னது…

நன்றி பாரதி.. நன்றி துபாய் ராஜா...மாமா................வார்த்தைகளை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.