வியாழன், 9 செப்டம்பர், 2010

ஒரு பட்டுப்பூச்சியின் மரணம்...


அவள் என் நண்பனின் மகள். வண்ண வண்ண கனவுகளுக்கும், மனம் மலரும் ஆசைகளுக்கும் சொந்தக்காரி. ஆறு வயது கிழவி அவள்.ஆம்! அத்தனை முதிர்ச்சியாக வாயாடுவாள். ஏதோ கேள்விகளின் அரசி போல் அத்தனை கேள்விகள் அவளிடம் உண்டு. சமாளிப்பாக நாம் எதுவும் சொல்லிவிட முடியாது. குடைந்து எடுத்துவிடுவாள். அதனாலே அவளிடமிருந்து வரும் கேள்விகளை நான் மிகவும் கவனமாகவே எதிர் கொண்டு பதிலளிப்பேன். எப்போதும் சுறுசுறுப்பாகவும்,சிறு குறும்பு பார்வையுடனும் உலா வரும் அவள் அன்று அவள் வீட்டிற்கு சென்றபோது அமைதியே உருவாக அமர்திருந்தாள்.

நான் அவள் அருகே சென்று அமர்ந்தேன். சோகமே உருவாக கன்னத்தில் கை வைத்து அம்ர்திருந்தவளை என் பக்கம் திருப்பினேன்.

‘என்னடா செல்லம் ஏன் கோவமா இருக்கீங்க..?’என்றவுடன்.

’டாடியும், மம்மியும் ஏசிட்டாங்க..’என்றது.

‘என் தங்கத்தயா திட்டுனான்....டேய்!ஏண்டா புள்ளய திட்டுனே...’அவளுக்காக நண்பனிடம் பொய் கோபம் காட்டினேன்.

‘நீ உன் செல்லத்துக்கிட்டேயே கேளு...வர வர கழுதக்கு அடம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..’என்று அவனும் விரைத்தான்.

நான் அவனை முறைத்துவிட்டு எனக்கு தேநீர் கொடுக்க வந்த அவன் மனைவியிடம் ‘ஏம்மா இந்தப் பய சும்மா இருக்க மாட்டானா? நீயும் ஏன் அவன் கூட சேந்துகிட்டு புள்ளய திட்டுற...’

‘அண்ணே! உங்களுக்கு தெரியாது வரவர இவளுக்கு எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் தான்...எது நாளும் புடிச்ச புடில வேணும்...’என்று அவளும் சேர்ந்து கொண்டாள்.

‘பக்கத்து விட்டு பொண்ணுக்கு இன்னக்கி பொறந்த நாளு அவ முட்டாய் கொடுக்க இங்க வந்தா...அவள பாத்திட்டு அவ போட்டிருந்த மாதிரியே இவளுக்கும் பட்டுப்பாவாடை வேணுமாம்..சரி! உனக்கு பர்த்டே வரும் போது வாங்கித் தாரேன் இவுங்க அப்பா சொன்ன பிறகும் ஒரே அடம். உடனே வேணுமாம்...’

‘எப்பா...ஆ இவ இப்படி பிடிவாதம் பிடிச்சா இவளுக்கு ஒண்ணும் வாங்கி கொடுக்காதீங்க....’என மேலும் எரியூட்டிய படி சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட துவங்கினாள்.

இப்போது குழந்தை மௌனம் உடைத்து விசும்ப தொடங்கியது.

நான் அவள் கண்களை துடைத்தபடி ‘உங்க ரெண்டு பேருக்கும் அறிவே கிடையாதா? அவளே அழுதுகிட்டு இருக்கா...இதுல நீ வேற சும்மா இருக்க மாட்டியாம்மா?’என நண்பனின் மனைவியை கடிந்தபடி..’வாடா! செல்லம் அங்கிள் உனக்கு பட்டுப்பாவாடை வாங்கித் தரேன்...அழக்கூடாது கிளம்பு..’ என்றேன்.

நான் ஏதோ சமாளிப்பதாய் நினைத்து கொண்டவள் கொஞ்சமும் சமாதானம் ஆகாமல் எழுந்து அழுதபடியே சோபாவில் போய் படுத்துக்கொண்டாள்.

இதைப் பார்த்து கொண்டிருந்த என் நண்பன் ‘விடு அவ அப்படித்தான்...அழுத்தக்காரி...கொஞ்ச நேரத்துல அவளே அழுது அடங்கிருவா... சரி! வாடா நாம போகலாம் ...’என்றான் எதையும் அலட்டிக்கொள்ளாமல்.

‘டேய்! அவ அழுதுக்கிட்டு இருக்காடா...பாவம் புள்ளய கூட்டிட்டு போவோம்..’என்றேன்.

அதற்கு உள் இருந்தபடியே அவன் மனைவி,’அண்ணே! நீங்க போயிட்டு வாங்க அவ சரியாயிருவா...நான் தான் இருக்கேன்ல...’என்றபடி நண்பனுக்கும் ஏதோ குறிப்பால் உணர்த்தினாள்.

அதை கவனிக்காதவன் போல் நானும் நண்பனோடு கிளம்பினேன்.

வழக்கமாக போகும் கடைக்கு சென்று ஆளுக்கு ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தபடி அவனிடம் ‘டேய்! நீயும் தான் அவளுக்கு அத வாங்கி கொடுத்தா என்ன?’என்றேன்.

‘மச்சான் மாச கடைசி வேற...அடுத்த மாசம் அவளுக்கு பொறந்த நாளு வருது அப்ப பாத்துக்கலாம் விட்டுட்டேன்’ என்றான்.

ஒருவழியாக நானும் சமாதானம் ஆகி வேறு விஷயங்களை கதைக்க தொடங்கினோம்.நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம்.

நாட்கள் சென்றது...அவளது பிறந்தநாளும் வந்தது...நானும் ஞாபகமாக அவளுக்கு ஒரு பட்டுப்பாவாடையை பிறந்தநாள் பரிசாக வாங்கிச் சென்றேன்.

என்னை உற்சாகமாக ஜீன்ஸ் பேண்டிலும், டீ சர்டிலும் எதிர்கொண்டு இனிப்பு வழங்கினாள். அவள் பட்டுப்பாவாடையை மறந்து விட்டாள் போலும் என நினைத்தபடி அவளிடம் ‘அங்கிள் இன்னக்கி உனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு பாப்போம்...’என அவளிடம் கேட்டேன்..

‘தெரியலியே..! நீங்களே சொல்லுங்களேன்...’என்றவளிடம் மேலும் புதிர் போட விரும்பாமல் பார்சலை பிரித்து ‘என் செல்லத்துக்கு பிடித்த பட்டுப்பாவாடை டோய்...’என்றபடி அவளிடம் நீட்டினேன்.

அதுவரை உற்சாகமாக இருந்த அவளது விழிகள் பட்டுப்பாவாடையை பார்த்தவுடன் சுருங்கியது ‘ஓ! இதுவா...’ என்றாள் உற்சாகமின்றி.

அவளே தொடர்ந்தாள் ‘அங்கிள் இது வேணாம் எனக்கு...’என்றாள்.

‘ஏம்மா...’ என்றேன் எதுவும் புரியாமல்.

‘அங்கிள் இத பட்டுப்பூச்சிய கொன்னு அதுல இருந்து செய்வாங்களாம் மம்மி சொன்னாங்க...பாவம் அதுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...அதோட மம்மி,டாடி எல்லாம் ரொம்ப அழுதிருப்பாங்க இல்ல...அதானால இது எனக்கு வேண்டாம் அங்கிள்...’என்றாள்.

நான் வாயடைத்து போய் நின்று கொண்டிருந்தேன். என்னை ஏறிட்டு பார்த்தவள் ‘அங்கிள் இதை பத்திரமா அடக்கம் பண்ணிருங்க அங்கிள்...’என கூறிவிட்டுச் சென்றாள்....

ஏதோ போதி மரம் என்னிடம் உரையாடி விட்டு சென்றதைப் போல் உணர்ந்தேன்.

3 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

பாக்கிற யாவற்றையும் சிலையாக்குகிற உளிமனது எழுத்து வாய்த்திருக்கிறது.எழுத எழுத இன்னும் அதிகமாக மிளிரலாம்.

☼ வெயிலான் சொன்னது…

நல்ல பதிவு!

ஒரு இடத்தில் பட்டுப்புடவை என தவறாக இருக்கிறது. திருத்திக் கொள்ளவும்.

Unknown சொன்னது…

நன்றி வெயிலான்..நானும் கவனிக்கவில்லை...மாற்றிவிட்டேன்.