செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

"தோழர்" ஆனேன்....


“தொழிற்சங்கம்” என்ற வார்த்தையே தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒன்றுதான்.ஆறு வருடங்களுக்கு முன்பு நானும் அவர்களில் ஒருவராகத்தான் இருந்தேன்.என் தாயின் திடீர் மரணம்....எனது அப்போதைய குடும்பச் சூழல் எல்லாம் சேர்ந்து எனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு என்னை எனது தாயின் வங்கிப்பணியை வாரிசு உரிமை அடிப்படையில் ஏற்கச் செய்தது.

என்னை இராமநாதபுர மாவட்டத்தில் இருக்கும் இரகுநாதபுரம் என்னும் ஊரில் உள்ள எங்கள் வங்கி(பாண்டியன் கிராம வங்கி) கிளைக்கு ’எழுத்தராக’ பணிநியமனம் செய்தார்கள்.அங்கு எங்களது சங்கத்தின் (பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்) அப்போதைய உதவி பொதுச்செயலாராக இருந்த தோழர்.முருகானந்தம் அவர்கள் காசாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.அவரிடமிருந்து தான் எனது தொழிற்சங்க வாழ்வின் அகரம் ஆரம்பமானது.

அதுவரை நான் கேட்டறிந்தது எல்லாம் ஒரு வங்கி கிளையில் மேலாளர் என்பவர் சர்வ அதிகாரம் படைத்தவர். அவர் நினைத்தால் அந்த கிளையின் ஊழியர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் அவர் சொல்படி கேட்டு அவரது விருப்பபடி நடந்தால் மட்டுமே என் போன்ற ஊழியர்களின் வேலை தப்பும்.அதற்கு மாறாக தொழிற்சங்கத்தில் இணைந்தால் அவர்கள் நம்மை காரணமில்லாமல் போராட செய்து மேலாளரின் கோபத்திற்கும், நிர்வாகத்தின் கோபத்திற்கும் நம்மை ஆளாக்கி நமது வேலையை இழக்கும்படி செய்துவிடுவார்கள் என்பதுமே ஆரம்பத்தில் எனக்கு தொழிற்சங்கம் குறித்த கேள்விஞானமாக இருந்து வந்தது.

ஆனால் தோழர்.முருகானந்தம் அவர்களிடம் எங்கள் கிளைமேலாளர் மட்டுமல்லாமல் அப்போதைய இராமநாதபுர வட்டாரமேலாளரே நடந்து கொள்ளும் விதம் எனக்கு பெரும் வியப்பளித்தது.ஒரு சாதாரண காசாளருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ஒரு வட்டார மேலாளரே தனது வட்டார ஆளுமையின் கீழ் இயங்கும் வங்கிகள் குறித்தும் நிர்வாகத்தால் தனக்கு இடப்பட்டிருக்கும் முக்கிய உத்தரவுகள் குறித்துமான தனது அன்றாட நிகழ்வுகளை ஏன் இவ்வளவு சிரத்தையுடன் ஒரு காசாளரிடம் பகிர்ந்து கொள்கிறார்?என்பன போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தது.

எனது அத்தனை கேள்விகளுக்கும் அவர் ஒரு “தொழிற்சங்க தலைவர்” என்ற பதிலே எனக்கு கிடைத்தது.”தொழிற்சங்கம்” குறித்தான எனது பயங்களும்,தவறான புரிதல்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.தயக்கங்கள் களைந்து தொழிற்சங்கம் என்னும் மாபெரும் விருட்சத்தின் விழுதுகள் நோக்கி எனது கைகள் நீள துவங்கின.தோழமையுடனும்,வாஞ்சையுடனும் இராமநாதபுர வட்டார தோழர்கள் என்னுள் நெருக்கம் பிடித்தனர்.மெல்ல மெல்ல அவர்கள் கைப்பிடித்து நான் தொழிற்சங்க கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.அப்போது எனக்கு அது ஒரு புதுவிதமான அநூபவமாக இருந்தது.

மாபெரும் தொழிற்சங்க பாரம்பரியமும்,சளைக்காத உழைப்புக்கும் கொண்ட எங்கள் சங்கத்தின் பெரும்பான்மையான தோழர்களுக்கும் எனக்கும் ஒரு தலைமுறையின் இடைவெளி உண்டு.ஆனால் அவர்கள் என்னிடம் பாராட்டிய தோழமையை என் சக வயதினரிடம் கூட நான் அதுவரை கண்டதில்லை.என் தாயின் திடீர் மரணத்தால் எனக்குள் ஏற்பட்டிருந்த ரணத்திற்கு அவர்களது தோழமையே சிறு மாறுதலை தருவித்தது.

எங்கள் வங்கியின் நிர்வாகம் எப்போதெல்லாம் ஊழியர் விரோத நடவடிக்கையில் இறங்கியதோ அப்போதெல்லாம் சங்க நிர்வாகிகளின் தலைமையில் எங்கள் வட்டார(இராமநாதபுரம்) தோழர்களும் நிர்வாகத்திற்கு எதிராக களம் கண்டனர்.”பயம்” என்ற சொல்லை கூட கேட்டறியாதவர்களை போல் அவர்கள் வீதியில் இறங்கி செய்யும் முழக்கங்கள் என்னை மட்டுமல்ல விண்ணையும் அசைப்பதாய் இருக்கும்.முதலில் அவர்களோடு வீதியில் இறங்கி கோஷமிடுவதற்கு எனக்கு கொஞ்சம் கூச்சமாக கூட இருந்தது.ஆனால் அவர்களது போராட்டத்தின் வீச்சும் அதை உறுதியோடு அவர்கள் முழங்கிய விதமும் என்னையும் அறியாமல் எனது குரலை அவர்களோடு உயர செய்தது.நரம்பு புடைக்க நமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புது இரத்தம் பாய்வதை நாம் உணரலாம்.நான் உணர்ந்தேன்....!

........தொடரும்

3 கருத்துகள்:

na.jothi சொன்னது…

வாழ்த்துக்கள் தோழர்

காமராஜ் சொன்னது…

என்ன மாப்ள இப்படி திடீர்னு முடிச்சுட்ட, தோவண்ணா மட்டுமே வந்திருக்கு. ஏமாந்து போனேன் அல்லது ஆவலாய் இருக்கிறேன்
ஒழுங்கா சீக்கிரம் தொடரணும்.
மகளிடம் சொல்லிக்கொள்ளலாம்.
அப்றம்.. அள்ளி முகந்து கொள்ளும் நடை. அசத்து.

Unknown சொன்னது…

நன்றி தோழர்.ஜோதி...

நன்றி மாமா...நிச்சயம் தொடர்வேன்...