வியாழன், 15 செப்டம்பர், 2011

ஐரோம் ஷர்மிளா ஒரு போராளியின் காதல்...


இளவயதின் சலனங்களோ
மயக்கப் பொழுதுகளோ
உயிரியலின் இயல்பான தூண்டுதல்களோ கூட
மறுத்துக் கொண்ட வாழ்வு உனது

பேருந்துக்குக் காத்திருந்த
அப்பாவி மனிதர்களை
இராணுவ துப்பாக்கிச் சனியன்கள்
பலிவாங்கிப் பழி தீர்த்துக் கொண்ட நாளொன்றில்
பத்தாண்டுகளுக்குமுன் தொடங்கியது உனது போராட்டத் தவம்.

உனது நாக்குக்குப் பதில் சொல்ல முடியாத அரசு
மூக்கு வழியாக உணவளித்து
உனது பட்டினிப் போரை எதிர்கொண்டு தவிக்கிறது
சிறப்பு ஆள்தூக்கி இராணுவச் சட்டத்தை
உரித்தெறிய மறுபபோர்முன் நீயும்
உடைத்தெறிய மறுக்கிறாய் உனது தவத்தை

'அன்னா' விரதத்தின் பக்கமிருந்து நகர மறுத்த
ஊடக வலைப்பின்னல்கள்
உனது உண்ணாவிரதத்தைச் சொல்வதே இல்லை மக்களிடம்

"அமைதியின் நறுமணத்தில்" ***
கவிதைகளால் பேசியிருந்தாய்
உனது திட சித்தத்தை..

வாய் திறந்திருக்கிறாய் போராளியே
முதன்முறை உனது காதலைப் பற்றி
இனியேனும்
என் வழியே என் வாழ்வை நடத்தவிடு என்னும்
உனது குரலில் யாசகமில்லை
சிறப்புச் சட்டத்தை நீக்கவேண்டுமெனும்
நிபந்தனையின் மீது தான் நிற்கிறது
உனது காதல் தூரிகை

வெட்கமற்ற ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளட்டும்
போராளிகளுக்கும் காதல் உண்டென்பதை
அவர்களது முதல் காதல்
போராட்டக் கோரிக்கைகள் என்பதை -
அமைதி வாழ்க்கைக்கான வாசலை அடைத்திருக்கும்
இரும்புக் கதவுகள் உடைபடுமுன்
திறப்பது நல்லது என்பதை!
எஸ் வி வேணுகோபாலன்

*** (அமைதியின் நறுமணம்: ஐரோம் சர்மிளா அவர்களின் கவிதை தொகுப்பு. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது)
இந்தியாவைச் சார்ந்த பிரிட்டிஷ் குடிமகன் ஒருவரைத் தாம் காதலிப்பதாகவும், சிறப்பு இராணுவச் சட்டம் எடுக்கப்பட்டுவிடுமானால் தாம் அவரை மணந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப விரும்புவதாகவும் ஐரோம் சர்மிளா அண்மையில் பத்திரிகையாளர் ஒருவரிடம் சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

















1 கருத்து:

vimalanperali சொன்னது…

போராளிகளின் உள் மனதில் பூத்த காதல் அர்த்தமும் அடர்த்தியும் நிறைந்ததாக.