
தோழர்களே! நான் தோழர்.தமிழச்செல்வனின் (தமிழ்வீதி) ”மகளிர் தினமும் இரண்டு கதைகளும் என்னும்” என்ற பதிவையும் வெண்ணிற இரவுகளின் ”நீதிக்கு தண்டனை” என்னும் பதிவையும் நேற்று படித்தேன். அவர்களிருவரும் சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்பு ஒன்றை பற்றி மிக கடுமையான விமர்சனம் வைத்திருந்தார்கள். அந்த விமர்சனத்தின் எனது முரண்பாடை நான் தோழர்.தமிழ்செல்வனுக்கு பின்னூட்டமாக எழுதிவிட்டு அதை முடித்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் தற்போது எனது ’அன்புமாமா’ காமராஜ் (அடர் கருப்பு) போன்றவர்களும் மேற்கூறிய அதே விமர்சனத்தையே கொண்டுள்ளார்கள் என்பதால் நான் எனது இந்தப் பதிவை அதன் தொடர் பதிவாக இடுகிறேன்.....இது எனது சொந்த கருத்துக்கள்.....இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக மட்டுமே பார்க்கப்படும் எனவும் நம்புகிறேன்....
முதலில் அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்வோம்......’சுஷ்மா’ இவள் உத்திரபிரதேச மாநிலத்தவள்.தற்போது மும்பையில் வசிக்கும் 25 வயது இளம் யுவதி. பிராமண சாதியம் பூசிக்கொண்ட குடும்பத்தவள். இவள் கேரளத்தின் ’கீழ்சாதியான’ ஈழவ சமூகத்தை சார்ந்த பிரபு என்கிற இளைஞனை காதலித்து இருக்கிறாள். அவர்களது அந்த அழகான காதல் கல்யாணமாகவும் மலர்ந்திருக்கிறது. இல்லறத்தை துவக்கிய அந்த இளம் பிஞ்சுகளின் வாழ்வை சாதியவெறி அழித்தொழித்திருக்கிறது. ஆம்! சுஷ்மாவின் அண்ணன் திலீப் திவாரி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபுவின் வீட்டிற்கு செல்கிறான். அந்த நேரத்தில் கெட்டதிலும் ஒரு சிறு நல்லதாக கர்ப்பிணியான சுஷ்மா வெளியே சென்றிருந்திருக்கிறாள். அப்போது அந்த கொலைவெறி கும்பல் பிரபுவையும்...அவனது தந்தையையும், அங்கு விளையாடி கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்று குவித்து தங்களது சாதியவெறிக்கு இரையாக்கி இருக்கிறது.
அப்போது சுஷ்மா அந்த கொலையாளிகளை எதிர்த்து மும்பை கோர்ட்....மராட்டிய உயர்நீதி மன்றம்....என போராடி அவளது அண்ணனுக்கு தூக்கு தண்டனை பெற்று தந்திருக்கிறாள். அவன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறான். உச்சநீதி மன்றமுமோ அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கிறது. மேலும் தனது தீர்புக்கு வலு சேர்க்கும் விதமாக கீழ்கண்ட வற்றை காரணமாகவும் கூறுகிறது. அது......
The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”
It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “
”ஒரு குடும்பத்தில் ஒரு இளைய சகோதிரி வழக்கத்திற்கு மாறான ஒரு செய்கையில் ஈடுபட்டால்...அதாவது சாதிய மறுப்பு திருமணத்திலோ,அல்லது மதமறுப்பு திருமணத்திலோ அல்லது ரகசிய காதல் திருமணத்திலோ என்றால் இந்த சமூகம் அவளது மூத்த சகோதரனையே அத்தகைய செய்கையை தடுத்து நிறுத்தாதற்கான பொறுப்பாளியாக கருதும்.”
மேலும்:”அதாவது அவனே தனது செயல்களுக்கு முழுமுதற் பொறுப்பாளி என்றாலும் இந்த வழக்கை பொறுத்தவரை மரண தண்டனை என்பது சற்று அதிகபட்சமானது தான்....ஏனென்றால் சாதியம்,இனம்,மதம், போன்றவகளின் பிடிப்பு நியாயப்படுத்த முடியாத ஒன்றானாலும் அதன் தாக்கங்கள் தற்போதைய யதார்தமே...”என்கிறது.
இப்போது இந்த மேற்கண்ட தீர்பே பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இது உயர் சாதிய மனோபாவத்திற்கு துணை போகும் தீர்ப்பு என்றும் பெண்ணியத்திற்கு எதிரானதாகவும் விமர்சிக்க பட்டு வறுகிறது. மேலும் சுஷ்மா இந்த தீர்ப்பை எதிர்த்து போராடி வருகிறார். அதற்கு வலுசேர்க்கும் விதமான பதிவுகளே இங்கு பதியப்பட்டு வருகிறது.
தோழர்களே!
இங்கு ஒரு சில விஷயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. நீதி என்பது தனிமனிதனை போல் உணர்ச்சிவசப்பட்டு செயல்பட கூடிய அமைப்பாக மாறிவிட கூடாது. அது தான் ஆபத்தானது. இங்கு சுஷ்மா வேண்டுவது என்ன? தன் கணவனையும்,அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்ற தன் அண்ணனுக்கு மரண தண்டனை வேண்டுமென்பதே.
இதில் உச்சநீதிமன்றத்தின் பார்வை மிகச்சரியான ஒன்றுதான். அது திலீபின் மரண தண்டனையை 25ஆண்டுகள் சிறைதண்டனையாக மாற்றித்தான் தீர்ப்பளித்திருக்கிறது. அவனை நிரபராதி எனக் கூறி விடுதலை செய்யவோ அல்ல அவனது கொலைகளை நியாயப்படுத்தவோ செய்யவில்லை.ஆனால் அவனது செய்கைக்கான காரணிகளை சமூக யதார்த்தத்தோடு முன்வைத்து அலசியிருக்கிறது. எந்த ஒரு கொலைக்கும் கொலையாளியை விட அதற்கான காரணிகள் தான் முக்கியமானதாக கருதப்பட வேண்டும். இங்கும் அதைத்தான் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.... இப்படி ஒரு சாதிய கட்டமைப்பில் உருவாகும் இளைஞர்கள் வேறு எப்படி செயல்படுவார்கள்? என்ற கேள்வியையும் இந்த கொலைகளுக்கான காரணிகளாக சாதிய கட்டமைப்பையும் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது. ஆகவே நாம் ரௌத்திரம் கொள்ள வேண்டியது இந்த சாதிய கட்டமைப்புகளுக்கு எதிராகத்தானேயொழிய இது போன்ற தனிநபர்களுக்கு எதிராக அல்ல.
ஒரு பேச்சுக்கு அப்படியே மரண தண்டனை வழங்கப்பட்டு விட்டால் இனிமேல் இது போன்ற திலீப்களை இந்த சாதிய சமூகம் உருவாக்காமல் விட்டு விடுமா? இதுதான் இது போன்ற கொலைகளுக்கு தீர்வா? கொலைக்கு கொலை தீர்வாகுமா? மரணம் என்பது ஒரு தண்டனையா?
பொதுவாக தண்டனைகள் என்பது தனிமனிதர்கள் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள இந்த சமூகம் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைய வேண்டும். அது தனிமனித வன்மத்தின் வடிகால்களாக அமைந்து விடக்கூடாது.
மரணதண்டனைகள் நம் சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னும் அது தொடர்வது கொடுமையானது. ஆனால் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதே தவிற குறைந்து விடவில்லை. இதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது மரணதண்டனையின் மூலம் எந்த தாக்கத்தையும் இந்த சமூகத்தில் ஏற்படுத்தி குற்றங்களை குறைத்து விடமுடியாது என்பதே!
அதனால் நாகரிகமான ஒரு மனித சமூகத்தில் ’மரணம்’ என்பது ஒரு தண்டனையாக தொடர்வதை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சரி! இது போன்ற நிகழ்வுகளுக்கு என்னதான் தீர்வு?
தனிமனிதர்களால் உருவானதே சமூகம். அதனால் தனிமனித மாற்றங்களால் தான் இதை சரி செய்ய முடியும்.ஆம்! நாம் நமது அடுத்த தலைமுறையையாவது சாதிய அடையாளத்திலிருந்து விடுவிக்க வேண்டும். நமது சாதிய அடையாளங்கள் நம்மோடு ஒழிந்து போட செய்ய வேண்டும்.
சரி இந்த இடத்தில் சில கேள்விகள் எழலாம்....சாதிய அடையாளங்களை தொலைத்து விட்டால் நமது குழந்தைகள் பொதுப் பிரிவில் அல்லவா சேர்க்கப்படுவார்கள்? அப்படியென்றால் இடஒதுக்கீட்டு சலுகைகளை நம் குழந்தைகள் இழந்து விடுவார்களே?
ஆம்! உண்மைதான்.... பல நூறு ஆண்டுகளின் கழிவை சிறு சிறாய்ப்புகள் கூட இல்லாமல் இங்கு சரி செய்ய முடியாது. பல லட்சம் பேர் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் செய்த தியாகத்தின் விளைவுதான் இன்றைய நமது சுதந்திர சுவாசம்.
வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்... சாதிய அடையாளத்தை துடைத்து எறிவோருக்கு என்று புதிய....ஏன் எந்தப் பிரிவினருக்கும் இல்லாத அதிக சலுகைகளை கோரி இயக்கங்கள் நடத்தலாம். இதை முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் சார்ந்த சாராத அமைப்புகள் ஒருங்கிணைத்து போராடலாம்.ஆனால் இதுவெல்லாம் ஒரே இரவில் நடைபெறக் கூடிய ஒன்றல்ல......என்பது யதார்த்தம்.
ஆனால் அதேநேரத்தில் இங்கு நடைமுறையில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் மாபெரும் போராட்டங்களின் விளைவாகவே உருவாக்கப்பட்டவை (உதாரணம்: தொழிற் தாவா சட்டங்கள்).....என்பது சரித்திரம்.
நாம் ஒன்றிணைவோமா.....? புரிந்து கொள்வோமா....?