புதன், 10 பிப்ரவரி, 2010

எனது முதல் பொதுக்குழு அனூபவம்.....


இது ஒரு தொடர் பதிவு......

தோழர்
ஆனேன்..2

எங்கள் சங்கத்தால் நடத்தப்படும் ஒவ்வொரு கூட்டங்களிலும் எனது அமர்வை தவறாமல் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.தொழிற்சங்க கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம் அதில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகளோடு எங்கள் வட்டார தோழர்கள் கலந்துரையாடிய முறை அங்கு பரிமாறப்பட்ட கருத்தாக்கங்கள் எல்லாமே எனக்கு வினோதமாகவும் அதேசமயம் விஷயம் செறிந்ததாகவும் இருக்கும்.அவர்களிடம் ஏதாவது கேள்விகள் கேட்டு எனது இருப்பை பதிவு செய்ய விரும்புவேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை அப்படி செய்யவிடாமல் தடுத்து விடும்....அது எனது தேவையற்ற கூச்சம் என்று நினைக்கிறேன்.

என்னுள் இருந்த அந்த கொஞ்ச நஞ்ச தயக்கங்களையும் களைந்து எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் தோழர்.சுந்தரவடிவேல் அவர்கள். அவர் அப்போது கீழக்கரை கிளையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். தொழிற்சங்கம் குறித்து எனக்குள் எழுந்த அத்துணை கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது.அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.அவரை உண்மையில் ஒரு ஆதர்ச நாயகனைப் போல் காணலானேன்.ஏனென்றால் அத்தனை கம்பீரமும்,உறுதியும் அவரிடம் உண்டு.தனக்கு தவறு என்று தோன்றினால் அதை தயங்காமல் தட்டிக்கேட்கும் துணிச்சலும் அவரிடம் உண்டு.

எங்கள் கிளையில் நீண்ட காலமாக சரி செய்யப்படாத கணக்குகளை சீர் செய்யும் பொருட்டு தோழர்.சுந்தரவடிவேல் அவர்களை எங்கள் கிளைக்கு தற்காலிக பணிமாற்றம் செய்தார்கள்.அவர் கணக்குகளில் இருந்த குழப்பங்களை மட்டும் அல்ல எனக்குள் தொழிற்சங்கம் குறித்து இருந்த சிறு சிறு குழப்பங்களையும் அந்த குறுகிய காலத்தில் சரி செய்தார்.

அந்த சமயத்தில் தான் எங்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் வைத்து நடைபெற்றது.அதுதான் எனது முதல் பொதுக்குழு கூட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் போராட்ட காலங்களை தவிர்த்து எங்கள் வங்கியின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் தோழர்கள் ஒன்றாக சங்கமிப்போம். ஒரு இரண்டு ஆண்டுகளில் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அசைபோட்டு விட்டும்... புதிய செயற்குழுவை தேர்ந்தெடுத்து விட்டும்... கலையும் சம்பரதாய கூட்டமல்ல அது.

அது எங்கள் குடும்ப விழா..... அங்கு வரும் தோழர்கள் தங்கள் கடந்தகால இனிமையான நினைவுகளை மீட்டெடுத்து அவர்கள் மேல் காலம் படர விட்ட முதுமையை களைந்து விட்டு புதிய பொலிவோடும், இளமையோடும் உற்சாகமாக இருக்கும் தருணங்கள் அவை. வேறு எந்த தொழிற்சங்கத்திற்கும் இல்லாத ஒரு பெருமை எங்கள் சங்கத்திற்கு உண்டு. அது கடைநிலை ஊழியர்,எழுத்தர்,அலுவலர் என்ற எந்த பாகுபாடும் எங்கள் தோழர்களுக்கு இடையில் கிடையாது. மேலாளரை கூட உரிமையுடன் பெயர் சொல்லியும்,உறவு சொல்லியும் அழைக்கும் எத்தனையோ கடைநிலை ஊழியர்களையும்,எழுத்தர்களையும் நான் கண்டதுண்டு. உத்தியோகத்தின் பெயர்களை தவிர வேறு எந்த பிரிவினையும் எங்களுக்கிடையில் இல்லை.

அந்த பொதுக்குழு கூட்டத்தின் வரவேற்பில் வருகை பதிவேடுடன் அமர்ந்திருந்தார் தோழர்.காமராஜ் (அடர்கருப்பு).நான் முதலில் அவரை எதிர்கொண்டவுடன் அவர் என் பெயரை கேட்டார்.நான்,”அண்டோ...”என்றேன்.அவர் விடாமல் முழுபெயரையும் சொல் என கொஞ்சம் குரலுயர்த்தினார்.நான் முறைப்பாக,”அண்டோ கால்பட்...”என்றேன்.அவர் உடனே சிரித்தபடி,”நீ கன்சோலா அக்கா மகன் தானே...நானும் உங்க அம்மாவும் ஒண்ணா வேலை பாத்திருக்கோம் தம்பி...எங்க அக்கா அவ....”என்று நிறுத்தியவரிடம்.நான் சமாதானமாக,”அப்படியா சார்...”என முடிப்பதற்குள்..”சார் என்ன சார்....மாமான்னு கூப்பிடு என அன்பு கட்டளையிட்டார்.அன்றுலிருந்து அவர் எனக்கு ’மாமா’மட்டும் தான்......

அங்கு நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் என் தாயின் பெயரை சொல்லி அறிமுகமாக துவங்கினேன்.அப்போது ஒவ்வொருவரும் என் அம்மாவின்... அவர்களது நினைவுகளையும் என் அம்மாவை பற்றிய தங்களது மேலான மதீப்பீடுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள துவங்கினர். அப்போது தான் நான் அவர்களுக்கு அந்நியமானவன் அல்ல என்பதை உணரத்துவங்கினேன்.

நான் அந்த பொதுக்குழுவிற்கு சென்றதற்கு மேலும் ஒரு முக்கியமான காரணம்....எப்படியாவது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கத்தை சந்தித்து எனது சொந்த ஊருக்கு பணிமாறுதல் வாங்கித்தர உதவி கேட்பதற்கே.அவரை அதற்கு முன் எனது பணிநியமனத்தின் போதும்...ஓரிரு முறை இராமநாதபுர மாவட்டத்தில் வைத்து நடைபெற்ற எங்கள் சங்க கூட்டங்களிலுமே சந்தித்திருந்தேன். அந்த சந்திப்புகளின் போது அவர் என் தோள் தட்டி நலம் விசாரிப்பார் ஆனால் என் பதிலுக்கு கூட காத்திராமல் அடத்தவரிடம் சென்றிடுவார்.அதனால் அவரை எப்படியாவது பொதுக்குழுவில் வைத்து பிடித்துவிட வேண்டும் என தீர்மானித்து சென்றிருந்தேன்.

அவரோ என்னிடம் சிக்குவதாய் இல்லை. ஏதோ கால்களில் இறக்கை முழைத்தவர் போல் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தார். ஒருவழியாக தோழர்.முருகானந்தம் அவர்களின் உதவியோடு அவரை பிடித்தேன். அவரோ,”இன்னும் கல்யாணம் கூட ஆகல தானே... இன்னும் கொஞ்ச நாள் அங்க இருக்கலாமே....”என இடியை இறக்கினார். நான் என் குடும்ப நிலையையும் என்னோடு இராமநாதபுரத்தில் தங்கியிருந்த எனது தாத்தா,பாட்டியின் உடல் நிலைகுறித்தும் விவரித்து எனது பணிமாறுதலுக்கான அவசியத்தை எடுத்துச் சொன்னேன்.உடனே அவரும் உறுதியளித்தார். நான் அதற்கு ’நன்றி’ சொல்வதற்கு முன் வழக்கம் போல் மறைந்துவிட்டார்!!!!!

ஒருவழியாக பொதுக்குழு ஆரம்பமானது. தலைவர்களின் உரை...தீர்மானங்கள்....பொதுச்செயலாளர் அறிக்கை...அதன் மேல் விவாதங்கள்....பொதுச்செயலாளரின் பதில்கள்.....புதிய செயற்குழுவின் தேர்வு....என அங்கு நடந்தேறிய எல்லாமே எனக்கு புதிய விஷயங்கள் தான்.”தொழிற்சங்கம்” என்பது தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்ட சுயநல கூடாரமல்ல என்பதை நான் அநூபவ பூர்வமாக அன்று உணர்ந்தேன். தொழிற்சங்கத்தின் வேர்களை நோக்கி எனது பார்வையை செலுத்த வைத்த அற்புதமான வைபவம் அது.அதன் ஒவ்வொரு நினைவுகளும் இன்றும் என்னுள் பசுமையாக மலர்கிறது.....


தொடரும்..................

4 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

ம்..... உன் அனுபவம் எனக்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் தருகிறது. அருமை. முதல் அத்தியாயம் இனிதான் படிக்கணும். தொடர்வேன். எழுது.

Unknown சொன்னது…

நன்றி அண்ணா...இந்த தொடரின் inspiration-ஏ உங்களது இருட்டிலுருந்து தான்...

Joe சொன்னது…

சுவாரஸ்யமான இடுகை.

ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
அநூபவ --> அனுபவ

Unknown சொன்னது…

நன்றி ஜோ...திருத்தங்களை ஏற்றுக்கொள்கிறேன்....திருத்திக்கொள்கிறேன்..