திங்கள், 8 ஜூன், 2009

நவீன கொத்தடிமைகள்.....


நேற்று எனது தொழிற்சங்க வாழ்வில் ஒரு முக்கியமான நாள். எங்களது பாண்டியன் கிராம வங்கியில் (முற்றிலும் மத்திய அரசிற்கு சொந்தமானது)இருநூற்றி ஐம்பதிற்கும் மேலான தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் கிளைகளில் நிரந்தரப் பணியாளர்களான நாங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள்(சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் வேலைகளில் பாதியளவு கூட நாங்கள் செய்வது இல்லை).

ஆனால் அவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ஐம்பது முதல் நூறு ருபாய் வரை என வாரக்கூலி வழங்கப்படுகிறது.அவர்களுக்கு பணிபாதுகாப்பு கிடையாது.(மேலாளர்களோ அல்லது உடன் புரியும் எவரேனும் நினைத்தால் எந்த முகாந்திரமும் இன்றி எந்த நிமிடமும் அவர்களை வேலையிலிருந்து நீக்க முடியும்).

அவர்கள் பணிபுரியும் கால நேரம் என்பது நாள் ஒன்றிற்கு 10 முதல் 12 மணி நேரம் வரையாகும்.தேவைப்பட்டால் மேலாளர் அவர்களை விடுமுறை நாட்களிலும் வருவிப்பார்.அவர்கள் பதிலேதும் பேசாமல் வரவேண்டும் இல்லையேல் வேலை காலி.அவர்கள் ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலும் அவர்களுக்கு சம்பளம் கிடையாது.மேலும் லீவு(ஞாயிற்றுக்கிழமை உட்பட) நாட்களில் அவர்களூக்கு சம்பளம் கிடையாது.

இந்த உழைப்பு சுரண்டல் எல்லாம் செய்யும் எங்கள் நிர்வாகமே தந்திரமாக மேலாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் அந்தந்த வங்கியில் இல்லை என (போலி) சான்றிதல் வாங்கிவிடும்.மேலாளர்களும் அப்படியே செய்திடுவர்.

வருகைப் பதிவேடுகளிலோ அல்லது அவர்களுக்கு வழங்கும் சம்பளச் சீட்டுகளிலோ தற்காலிகப் பணியாளர்களின் கையொப்பம் வராமல் பார்த்துக் கொள்வர். நபார்டிலிருந்தோ(NABARD) அல்லது வேறு மத்திய சர்காரின் ஆய்வுத்துறையிலிருந்தோ எவரேனும் வந்தால் அந்த தற்காலிகப் பணியாளர்களை அவர்களின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்வர்.

ஆம்! இப்படியாக அவர்கள் நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இப்படியொரு சூழலில் தான் இந்த கொடுமைகளை காணச் சகியாது எங்கள் தொழிற்சங்கம் (PGBEA-PANDYAN GRAMA BANK EMPLOYEES ASSOCIATION) இதை மேலும் வளர விடக்கூடாது என முடிவு செய்தது.முதற் கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள எங்கள் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் அத்துணை தற்காலிகப் பணியாளர்களையும் விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்கத்தில் நேற்று ஒன்று திரட்டியது.அதில் நூற்றி அறுபதிற்கும் மேலான இளம் தற்காலிகப் பணியாளர் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.அதில் பெரும்பான்மக்கும் மேலாக பெண் தோழர்களே வந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 10 மணக்கு கூட்டம் ஆரம்பிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்து இருந்தோம்.அதனால் இராமநாதபுரம்,சிவகங்கை,தேனி,திண்டுக்கல், நாகர்கோவில்,திருநெல்வேலி,தூத்துக்குடி,திருச்செந்தூர் என பல்வேறு தொலைதூரப் பகுதிகளிலிருந்து கிளம்பியவர்கள் நேரமாகிவிடுமோ என தங்களது காலை உணவைக் கூட துறந்து விட்டு வந்திருந்தனர்.

சில இளம் பெண் தோழர்கள் தங்களது தாய்,தந்தை,கணவன்,சகோதிரன் என அழைத்து வந்திருந்தனர்.இதில் கணவனால் கைவிடப்பட்டோர்,மாற்றுத்திறனுடையோர் என சமூகத்தாலும்,இயற்கையாலும் வஞ்சிக்கப்பட்டோர் இங்காவது தங்களுக்கான உரிமைகள் நிலை நாட்டப்படாதா? என அவர்களின் கண்களில் ஏக்கத்தோடு எங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வெவ்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் வரவேண்டி இருந்ததால் கூட்டம் ஒருமணி நேரம் தாமதமாகவே துவங்கியது.அந்த இடைப்பட்ட நேரத்தில் வந்திருந்த தோழர்கள் கிளைகளில் தங்களது பணிச் சூழலைப் பற்றியும் தாங்கள் எதிர் கொள்ளும் அன்றாட சிரமங்கள் குறித்தும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அதாவது அவர்களின் எல்லா துயர்களையும் எங்களால் துடைக்க முடியும் என்ற அவர்களது நம்பிக்கையே அதில் மேலோங்கி இருந்தது.

நிகழ்ச்சி துவங்கியது.தலைமை தாங்கிய தோழர்களான (மாதவராஜ்,சோலைமாணிக்கம்,சங்கர்,செல்வகுமார் திலகராஜ்,பிச்சைமுத்து)ஆகியோரின் சிறப்புரைகளுக்கு பின் அந்த தோழர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை எழுச்சி அவர்களுக்குள் எழுந்ததை காண முடிந்தது.அந்த இளம் தோழர்களின் நம்பிக்கையும் எழுச்சியும் எங்கள் தொழிற்சங்கத்திற்கான கடமையையும்,எதிர்காலப் பயணத்தையும் உணர்த்துவதாக அமைந்தது.

எங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக வருகிற 20ஆம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் அவர்களூக்காக இருக்க எங்களது ஊழியர் சங்கமும்,அலுவலர் சங்கமும் முடிவு செய்துள்ளது.

நண்பர்களே!

இது ஏதோ எங்கள் வங்கியில் உள்ள பிரச்சனை மட்டும் அல்ல.இது இந்த தேசத்தின் பிரச்சனை.ஆம்! BSNL,NLC,TNEB,போன்றவற்றில் ஏற்கனவே இது போன்ற தற்காலிக ஊழியர்களூக்கான நிரந்தரமாக்கும் போராட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது(சமீபத்தில் மின்சார வாரியத்தில் இரண்டாம் கட்டமாக ஜுன் 3ஆம் தேதி ஆறாயிரம் ஊழியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு வழங்கியது தமிழக அரசு).

வங்கித்துறையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.அதேபோல் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிலும்,அரசு அலுவலகங்களிலும் கூட பல ஆயிரம் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன அவை இன்று தற்காலிக ஊழியர்களின் உதவியாலே இயங்குகிறது.

ஏன்?ஏன்?ஏன்?ஏன் இந்த நிலை.....?

ஒரு பக்கம் வேலவாய்ப்பு திண்டாட்டம்.வறுமை.என மத்தியில் மாநிலத்தில் ஆளும் அத்துனை கட்சிகளும் எந்தவித கட்சிப் பாகுபாடும் இல்லாமல் கூச்சலிட்டுக் கொண்டே.....அந்நிய முதலீடுகளுக்கு ஒரு பக்கம் கதவுகளை திறந்து விட்டுக்கொண்டே...காசுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள்.

மறுபக்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை இந்தியஅரசு வெகு வேகமாக பார்த்து வருகிறது.ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு பெரும் முதலாளிகளூக்கும் அந்நிய முதலீட்டாளர்களூக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரை சதவிகித வட்டிக்கும்,ஒரு சதவிகத வட்டிக்கும் (பொது மக்களின் பணமான)அரசு வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்குகிறது.அப்படி கடனாக வாங்கும் பணத்தையும் அந்த ”பணக்கார தொழில் முனைவோர்” திரும்ப செலுத்த மாட்டார்கள்.அதை ஒவ்வொரு நிதியாண்டிலும் ‘மாண்புமிகு’ நிதியமைச்சர் அவர்கள் மக்கள் வரிப்பணத்தை கொண்டு தள்ளுபடி செய்து அந்த ’பணக்கார’ கடன்காரர்களை காப்பாற்றி விடுவார்.(இதில் தொழிற்சாலைகள் அமைக்க,தொழிற்பூங்காக்கள் தொடங்க என விவசாயிகளின் விளைநிலங்களை வேறு கையகப்படுத்தி தனியாருக்கு தாரை வார்ப்பார்கள்.)

ஆனால் விவசாயிகளுக்கு 7சதவிகித வட்டியில் கடன் கொடுப்பதற்கோ ஆயிரத்தி எட்டு நொள்ளை நொட்டை பார்பார்கள்.சிறு தொழில் முனைவோருக்கு கடன்கள் 12%ற்கு வழங்குவதற்கு கூட இந்த பொதுத்துறை வங்கிகள் தயாரில்லை.ஆனால் சுயதொழில் சுயதொழில் என கூப்பாடு மட்டும் போடுவார்கள்.

வேலை வாய்ப்பு திண்டாட்டத்தை ஒழிக்க இங்கு காலியாக கிடக்கும் மத்திய மாநில அரசுகளின் பணியிடங்களில் முறையான ஆள் எடுக்கும் பணி தொடங்க வேண்டும்.அதே நேரத்தில் எந்த வித பணி பாதுகாப்பும் இன்றி இரவுபகல் பாராமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி வரும் அத்துனை தற்காலிகப் பணியாளர்களும் அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை நிரந்திரம் செய்திடல் வேண்டும்.

தொழிற்சங்க அமைப்புகளை பலவீனப்படுத்தவும், போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலை உரிமை போன்ற தொழிலாளர் நலச் சட்டங்களை நிர்மூலமாக்க துடிக்கும் தனியார் ’கைகூலிகளின்’ தந்திரங்களை முறியடிக்கவும் அத்துனை வெகுஜன அமைப்புகளூம் போராட துவங்கவேண்டும். நாம் அனுபவிக்கும் அதே சலுகைகளை அடுத்த நம் தலைமுறையினருக்கும் கிடைத்திட வழி செய்திட வேண்டியது நமது கடமை.

நாங்கள் இந்த நவீன கொத்தடிமைகள் முறைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட துவங்கிவிட்டோம்.வாருங்கள் எங்கள் கரங்களை பலப்படுத்த நீங்களும்.......

7 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

இந்த விஷயத்தை நானும் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். முந்திக் கொண்டாய். அப்படியொரு பாதிப்பு உனக்கு என்று நினைக்கிறேன்.
நம்பிக்கையோடிருப்போம்.

velji சொன்னது…

not only by caste,language,religion etc..people are also divided by their work! what i mean is one group dont have sympathy for the other.
you clearly describe the plight of temporary workers.
i wish you success for your struggle!

காமராஜ் சொன்னது…

very nice article. spread the
disparity to the wold.

காமராஜ் சொன்னது…

sorry , spread the wave against
disparity

Unknown சொன்னது…

அண்ணா! நிச்சயம் நீங்கள் எழுத வேண்டும்.இன்னும் ஆயிரமுறை பலமாகவும்,பிரபலமாகவும் நம் குரல்களை உங்களால் ஒலிக்க செய்திட முடியும்.

நன்றி velji.உங்கள் வருகைக்கும் ஆதிரவிற்கும்.....

மாமா!இந்த அலையை உங்களால் தான் என்னை காட்டிலும் அதிகமாக பரப்பிட முடியும். நீங்களும் அண்ணனும் எங்கள் விரல்களை பற்றிக் கொண்டு அழைத்து செல்கிறீர்கள். நாங்கள் நம்பிக்கையோடும்,உறுதியோடும் உங்கள் பின்னால் நிற்போம்.

Jude Rayar சொன்னது…

maapillai

Bold perception frm d vulnerable temporay employees. Keen 2 c ur nxt article.

Keep it up maapillai

Ungal Machaan

Soodoo

Joe சொன்னது…

அற்புதமான கட்டுரை அன்டோ.

இந்த இடுகை பலரின் மனசாட்சியை எழுப்பியிருக்கும் என்று நம்புவோம். (அதெல்லாம் நமக்கு இருக்கிறதா என்பது வேறு கேள்வி)

உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Can you please change the template, or else change the color of the text, as it's too difficult to read? I had to triple-click on paragraphs and then read, as it provides a white & blue effect.