ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணு உலையும்…. மீனவ மக்களின் போராட்டமும்:


நம் மூதாதையர்கள் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்து தொழிலும் அது சார்ந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் கொண்டிருந்தனர். நம் மண்ணையும் மண்ணில் வாழும் உயிர்களையும் தமிழ்மொழி திணை கொண்டே வகுத்து வைத்தது. அப்போதே மனிதர்கள் யாவரும் ஓர் திணையே என்றும் அஃது யாவும் உயர்திணையே எனவும் கொள்ளப்பட்டது. முடைநாற்றமெடுக்கும் சாதியப் பிரிவுகளால் தமிழ் மனிதர்களை பிரிக்கவில்லை.

நம் மண்ணையும் குறிஞ்சித் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை மற்றும் பாலைத் திணை என்றே வகுத்து வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் ஆரிய வருகைக்குப் பின் வர்ணாசரமத்தின் அடிப்படையில் ஜாதியின் பெயராலும், மொகலாயர்கள், போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பின்னால் மதத்தின் பெயராலும் பிளவுண்டு போனோம். இப்படியாக இந்த தேசம் சுதந்திரத்திற்கு முன்னால் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக வந்தேறிகளாலும் சுதந்திரத்திற்குப் பின்னால் சுயநலமும், பதவிவெறியும் பிடித்த இருந்தேறிகளாலும் சுரண்டப்பட்டு அவர்கள் தம் அதிகாரவெறிக்கு இரையாக்கியப் பின் மண் சார்ந்த வாழ்வும் நிலம் சார்ந்த தொழில்களும் அழித்தொழிக்கப் பட்டு வருகிறது.

இதோ மின்சாரத்தின் பெயரால்…… மற்றுமொரு அரசாங்க பயங்கரவாதம் இந்த மண்ணின் பூர்வ குடிகளில் ஒன்றான மீனவ மக்களின் மீது பாயத்துவங்கியுள்ளது.

மின்சாரம் மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிப் போன விஷயம் தான். இதனை மறுப்பதற்கில்லை. ஆனால் பசிக்கின்றது என்பதற்காக தாயின் முலை அரிந்து யாரும் உண்ணுவதில்லை. சரி! அணு உலைகள் பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை விவாதமாக்கும் முன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது…..

பல ஆயிரம் வருடங்களாக தலைமுறை தலைமுறையாய் இம் மண்ணில் வாழும் மனிதர்கள் எம் மக்கள். வங்கக் கடலைத் தவிர வேறு எந்த வாழ்வும் எத் தலைமுறையின் கனவிலும் இதுகாலும் யோசித்து அறியாதவர்கள். இந்த மண்ணிற்காக எம் மக்கள் இதுவரை இழந்தவைகள் வேறு எந்த இனமும் இந்த அகண்ட பெருந்தேசத்தில் இதுவரை இழந்திராதவை.

ஏன்?.... யூதர்கள் இஸ்ரேலுக்காகவும் அராபியர்கள் பாலஸ்தீனத்திற்காகவும் இழந்ததை காட்டிலும் மிக அதிகமாகவே எம் மக்கள் இழந்துள்ளார்கள். அப்படி என்ன இழந்துள்ளார்கள் என்கிறீர்களா?
காலத்தின் சக்கரத்தை ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பாக சுழலச் செய்து பார்த்தால் தெரியும் இந்த ஆகப்பெரும் தேசத்தின் வரலாற்றினை தத்தமது விருப்பு வெறுப்புகளை மையமாக கொண்டு எழுதி குவித்த வரலாற்று ஆசிரியர்களால் அதிகம் கண்டு கொள்ளப்படாத அல்லது முக்கியத்துவமின்றி சொல்லப்பட்ட எம் மக்களின் செந்நிற இரத்தம் தோய்ந்த மண்ணிற்கான போராட்டங்களை…….

இன்று அணு உலைக்காக இந்திய அரசு காவு கேட்கும் இதே மண்ணிற்காகத் தான் எம் மக்கள் தாங்கள் காலம் காலமாய் வழிபட்டு வந்த கடவுளர்களையே விட்டுக் கொடுத்தார்கள். எம் மக்களுக்கு கடவுளைக் காட்டிலும் இம்மண்ணே மேலானது. இம்மண்ணிற்காகத் தான் தங்களது வம்ச அடையாளங்களையே மாற்றிக் கொண்டார்கள் எம் மக்கள்.
முகமதியர்களின் வருகைக்கு முன்னால் ஏகபோக கடலாடிகளாக வங்கக்கரையையே தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் எம்மக்கள். இந்த தேசத்தின் முதல் அந்நிய வருவாயை ஈட்டியவர்களும் எம் மக்களே! (இன்று அந்நிய முதலீட்டுக்கே நம் தேசத்தை அடமானம் வைக்க துடிப்பவர்கள் தான் எம்மக்களுக்கு தீவிரவாதி பட்டம் சூட்டி மகிழ்கிறார்கள்)

முகமதியர்களின் வருகைதான் தமிழக மீனவர்களின் பொருளாதார வாழ்வையும் ஏகபோக கடலாடிகள் என்னும் நிலையையும் மாற்றி அமைத்தது. அதிலும் குறிப்பாக குமரியிலிருந்து மன்னார் வரையிலான பகுதிகளில் முத்துக்களின் விளைச்சல் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. தூத்துக்குடி தான் முத்துக்குளித்துறையின் தலைநகரைப் போல் அப்போது விளங்கியது. இந்த அபரிவிதமான முத்துக்களின் விளைச்சல் தான் மீனவர்களின் மாபெரும் இழப்புகளுக்கு காரணம். முகமதியர்கள் அதிகம் இப்பகுதியில் குடியேறியதற்கும் இம் முத்துக்களின் விளைச்சலே காரணம்.

குமரியிலிருந்து மன்னார் வரையிலான பகுதிகளை அப்போது இரண்டு பேரரசுகள் கோலோச்சி வந்தார்கள். குமரியில் இருந்து புன்னைக்காயல் வரை திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும் அங்கிருந்து மன்னார் வரை விஜய நகர பேரரசனின் ஆளுகையிலும் இருந்தது. மீனவ மக்களின் வாழ்வு குறித்த கவலைகள் ஏதுமின்றி முத்துக்குளித்துறையிலிருந்து வரும் வருவாயை மட்டுமே எதிர்நோக்கி ஆட்சி நடத்து வந்தார்கள். குமரியிலிருந்து வேம்பார் வரையிலான பகுதிகள் பரதவர்களின் கட்டுப்பாட்டில் ஏழு கடற்கரை கிராமங்களின் தலைமையில் இருந்தது. அவை மணப்பாடு, புன்னைக்காயல், வீரபாண்டியபட்டணம், தூத்துக்குடி,வேம்பார்,திருச்செந்தூர் மற்றும் வைப்பார். இந்த ஏழு ஊர்களின் தலைவரை பட்டங்கட்டியார் என்று அழைத்து வந்தார்கள். அவர்தான் பரதவமக்களின் தலைவராகவும், அப்போது இருந்தார்.

முகமதியர்களின் ஆதிக்கம் வங்கக்கறையில் ஓங்கத் துவங்கியது….. முத்து வாணிபம் செய்ய வந்த போர்ச்சுகீசியர்களும் முத்துக் குளித்துறையை கைப்பற்ற காத்துக் கிடந்தார்கள். முகமதியர்களுக்கும், பரதவர்களுக்குமான போராட்டங்கள் தொடர்ந்து நடக்கத் துவங்கியது. மீண்டும் பரவர்கள் முத்துக்குளித்துறையில் ஆதிக்கம் செலுத்த போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தசமயத்தில் தான் ஒரு பரதவனுக்கும், இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஒருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் அந்த பரதவனின் கடுக்கன் அணிந்த காதை இஸ்லாமியர் கடித்து துப்பியுள்ளார்.

பரதவன் ஒருவனின் காது கடித்தெறியப்பட்டது பரதவ இனத்துக்கே ஏற்பட்ட அவமானமாய் கருதப்பட்டது. ஆகவே இஸ்லாமிய சமூகத்தின் மீது மிகக் கடுமையான தாக்குதலை பரதவர்கள் தொடுத்தார்கள். அடிபட்ட புலியாய் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களும் அண்டை ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை குவித்து பரதவ இன அழிப்பை துவங்கினர், ஒரு பரதவனின் தலைக்கு ஐந்து பணம் என அறிவிக்கப்பட்டு பரவர்கள் கொல்லப்படலாயினர். பரதவ இனமே அழிவின் விளிம்பிற்கு சென்றது. பரதவர்களின் தலைவரான பட்டங்கட்டியார் செய்வதறியாமல் திகைத்து நின்றார், அப்போது குமரியில் குதிரை வாணிபம் செய்து வந்த ஜான்.டி.குரூஸ் என்பவரது வழிகாட்டுதலின் பெயரால் பரதவர்களின் தலைவரான பட்டங்கட்டியார் போர்ச்சுகீசியர்களின் உதவியை நாடினார்.

ஓடுமீன் ஓட ஒருமீன் வரும் வரை காத்திருந்த போர்ச்சுகீசியர்களும் பரதவர்களுக்கு உதவ முன்வந்தனர். ஒருநிபந்தனையுடன்…….ஆம்!! அது மதமாற்றம் தான்.

1535 ஆம் ஆண்டு…..

தம் மண்ணில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தாங்கள் இதுவரை வழிபட்டு வந்த குமரியம்மனையும், பெண் எடுத்த கடவுளாக நம்பப்பட்ட திருச்செந்தூர் முருகனையும் தத்தமது ஆதி தெய்வங்களையும் சிலுவையில் அறைந்துவிட்டு செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முப்பத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரதவர்கள் ஒரே சமயத்தில் கிறுத்துவத்தை தழுவினர். 

கருத்தனுக்கும், வேலாயிக்கும் போர்ச்சுகீசியன் ஞானத் தந்தையாக நியமிக்கப் பட்டதால் கருத்தன் சிலுவை பர்னாண்டோ ஆனான் வேலாயி ஹெலன் ரொட்ரிகோவாக மாறினாள். சரி மண்ணிற்காக இத்தனை இழந்த பின்பாவது அவர்களது நிலை மாறியதா என்றால்? அதுவும் இல்லை….. முன்னிலும் மோசமானது. அடுப்பில் இருந்து தப்பித்து நெருப்பில் விழுந்த கதையாக மீனவர்களை அடிமைகளாக ஏற்றுமதி செய்யத் துவங்கினார்கள் போர்ச்சுகீசியர்கள்…. பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

இந்தச் சமயத்தில் தான் போர்ச்சுகல்லில்  இருந்து சேசு சபையினர் கிறுத்துவம் போதிக்க வரலாயினர். அப்படி சேசு சபையால் அனுப்பப்பட்டவர் தான் சவேரியார். இவர் இங்கே வெறும் போதகராக மட்டும் இல்லாமல் போர்ச்சுகீசிய ஆளுகையின் கீழான இப்பகுதியின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார்.  கொஞ்சம் மனிதாபிமானம் நிறைந்த மனிதராக கடற்கரையோரும் வலம் வந்தவரால் மீனவ மக்களின் மரியாதைக்குரிய மனிதராகவும் இருந்துள்ளார். இவர் போர்ச்சுகீசியர்களின் அடாவடித்தனங்களை கொஞ்சம் அடக்கவும் செய்துள்ளார்.

மதுரையை ஆண்டு வந்த விஜயநகர பேரரசின் பிரதிநிதிகளான வடுகர்களுக்கு பரதவர்களின் மதமாற்றத்தால் முத்துக்குளித்துறையின் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் அவ்வப்போது பரதவர்கள் மீது படையெடுப்புகள் நடத்தி அவர்களது குடியிருப்புகளை சூறையாடுவதும் பெண்களை மானபங்கப்படுத்துவதும் தொடர்ந்து நடந்துள்ளது.

முகமதியர்கள், போர்ச்சுகீசியர்கள், வடுகர்கள், டச்சுகாரர்கள் அதன் பின்னர் ஆங்கிலேயர் என தொடர்ந்த படையெடுப்புகளில் சிக்கி தவித்த போதும் சரி…. இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது வாரிக் கொடுத்த பின்பும் சரி….. எம்மக்கள் ஒருபோதும் இம்மண்ணை யாருக்காகவும் எத்தகைய நிலையிலும் விட்டுக் கொடுத்ததில்லை.

தங்கள் வாழ்வையும் வளத்தையும் வங்கக்கரைக்கே வாரிக் கொடுத்துவிட்டு இருண்டு போனவர்களின் வாழ்வில் சுதந்திரம் அடைந்த பிறகாவது விடியல் பிறந்ததா? என்றால்….. இல்லை!!! தொடர்ந்து இந்த தேசம் எம்மக்களை வஞ்சித்தே வந்துள்ளது.

பரவன்….. என்பது ஒரு ஜாதியல்ல…. அது ஒரு பழங்குடி இனம். ஆனால் இந்த தேசத்தில் பரதர்கள் பட்டியலினத்தவராய் கொள்ளப்படாமல் மிகவும் தாழ்த்தபட்டவர்களாகவே இடமளிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். வெறும் வாக்கு வங்கியாகவே பார்க்கப் படும் எம்மக்களின் கல்வித்தரம் குறித்தோ அல்லது சுகாதாரம் குறித்தோ அல்லது அடிப்படை கட்டமைப்புகள் குறித்தோ இந்த தேசத்தின் எந்தத் தலைவனுக்கும் அல்லது கட்சிக்கும் கவலையில்லை. இன்னும் கிறுத்தவ சபைகளின் கட்டுப்பாடுகளில் தான் எம் மக்களின் பெரும்பகுதி வாழ்ந்து வருவதாவது தெரியுமா?

இந்த தேசத்தின் கரைகளில் தம்மை தாமே ஒதுக்கிக் கொண்டவர்களை ஒட்டுமொத்த தேசமும் இதுவரை தீண்ட மறுப்பதற்கு பெயர் என்ன?

இப்படியாக தொடர்ந்து சமூகநீதி மறுக்கப்பட்டு வந்தபோதும் எம்மக்கள் எதர்காகவும் இந்திய ஆட்சியாளர்களை நோக்கி இத்தனை உக்கிரமாய் போராடியதில்லை. இதுதான் எம்மக்கள் செய்திட்ட மாபெரும் தவறும் கூட. ஆனால் இன்று பல நூறு ஆண்டுகள் கழித்த போதும் தம் மண்ணிற்கு அணுவின் பெயரால் ஆபத்து என்னும் போது தம் பேதங்கள் கடந்து இணைந்துள்ளார்கள்.

மண்ணுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கும் அஸ்திரங்கள் அனைத்தையும் ஆளும் அதிகாரவர்ககம் போராடும் மக்களுக்கு எதிராக ஏவி வருகிறது. இவர்கள் கனம வளத்தை பன்னாட்டு முதலாளிகளுக்காக சுரண்டுவதை எதிர்த்தால் நக்சலைட்டுகள் என தீவிரவாத முத்திரை குத்தப்படும். அணு உலைக்கு எதிராக போராடினால் அந்நிய நிதியுதவியின் தயவால் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என மீண்டும் அதே தீவிரவாதி முத்திரை.

இப்படி போராடும் பொதுமக்களை “தீவிரவாதி” என்று சொல்லி அச்சுறுத்தும் முதலாளித்துவ அடியாட்கள் வரலாற்றின் பக்கங்களில் இருந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இதில் உள்ளது….

எம்மக்கள் தம் மண்ணிற்கு ஆபத்து என்னும் நிலை ஏற்படுவதை உணர்ந்து கொண்டால் தங்கள் மண்ணைக் காப்பாற்ற எத்தகையை தியாகமும் செய்வார்கள் என்பதே அது!!!

2 கருத்துகள்:

Zeegod சொன்னது…

ஒரு சிறிய ஆனால் மிக பெரிய திருத்தம், ஆரிய நிறுத்தம் மற்றும் நிறுவம் தவறு, இரானிய (பெர்சியன்) வருகை தான் மிகப் பெரிய அழிவினை தமிழர் ஆண்ட இந்த நில பகுதியினை இன்றைய நிலைக்கு ஆக்கியது. இரானிய வருகை சமஸ்கிரிதத்தை மட்டும் அன்றி அந்நாளில் உயர்ந்து, பரந்து விளங்கிய தமிழையும் கொல்ல துவங்கியது, இன்றளவும் இராணி என்பதை குல பெயராக கொண்ட ஆனால் இந்தியர்கள் எனும் லட்சகணக்கான மக்கள் இந்தியாவில் உண்டு. ஹிந்தி என்பது அதற்கு சான்று.

Zeegod சொன்னது…

ஹிந்தி என்ற மொழி சமஸ்க்ரிதத்தையும் இரானிய அரபி மொழியையும் கொண்டு உருவான பேச்சு மொழி.ஹிந்தி என்ற மொழி சமஸ்க்ரிதத்தையும் இரானிய அரபி மொழியையும் கொண்டு உருவான பேச்சு மொழி. ஆனால் தமிழ் இம் மூன்று மொழிகளுக்குமே தாய் மொழி என்பதை பல நூற்றாண்டுகளாக மறைத்து வரும் மக்களினங்களுக்கு இடையே தான் தமிழர் எனும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் தான் தமிழன் என்றால் அச்சம் கலந்த பற்றாமை.