திங்கள், 30 மே, 2011

என் தேவதையின் சரிதை.....8


இது ஒரு தொடர் பதிவு..............

வாசகர்களே…..! எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ எனது பழைய நினைவுகளுக்குள் உங்களை அழைத்து சென்றுவிட்டேன். நமது பழைய இனிய நினைவுகளை கொண்டு வலிமிகுந்த தருணங்களில் ஆறுதல் தேடிக் கொள்வது மனித இயல்புகளில் ஒன்று. மனிதனின் அதிசயிக்க தக்க குணாதிசயங்களில் இதுவும் ஒன்று. சரி! மீண்டும் என் வாழ்வின் வலிநிறைந்த அத்தியாயங்களுக்குள் செல்வோம்…..

அவள் எங்களுடன் இருக்கப் போகும் ஒவ்வொரு கணமும் அவளுக்கானதாய் நான் மாற்றத் துடித்தேன். முதலில் என் அம்மாவிற்கு அவளது நோய் கொஞ்சம் கொஞ்சமாய் குணமாகி வருவதாய் ஒரு எண்ணத்தை உருவாக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் நோயை காட்டிலும் அதன் மூலம் ஏற்படும் சுயபட்சாதாபமே நம்மை அதிகம் வதைக்கும். அதனால் நான் அவளிடம் முடிந்தவரை இயல்பாகவே பழகினேன்.

இதற்கு எனக்கு பெரிதும் உதவியது என் அம்மாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் அவர்கள். ஏதோ எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போலவே அவர் அந்த நாட்களில் இருந்தார். எந்த இரவிலும் அவரிடம் தயக்கமின்றி பேசும் உரிமை எனக்கு அளித்திருந்தார். என் நிலை உணர்ந்து தைரியமும் அளித்தார். மருத்துவமே வர்த்தகமயமாகிப் போன இந்தக் காலத்தில் மனித நேயத்தின் எச்சங்களாக இவர் போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் பூமியின் ஈரம் இன்னும் காயாமல் இருக்கிறது போலும்.

எங்கள் வீட்டின் வழக்கங்கள் எல்லாம் முற்றிலும் மாறிப்போயிருந்தது. யாராவது ஒருவர் என் தாயுடன் எப்போதுமே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. அவள் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட யாரையாவது

எதிர்பார்த்தே செய்யும் நிலைக்கு ஆளாகியிருந்தாள். வார்த்தைகளில் எளிதாக சொல்லிவிட்டேன் ஆனால் அவளுக்கோ அப்படி ஒருவரை அண்டி வாழ்வது துயரத்தின் உச்சமாக இருந்தது. எங்கள் குடும்பத்தின் வேராக எங்களை தாங்கி நின்றவள் அவள். இப்போதோ எழுந்து அமரவோ, நடந்து செல்லவோ முடியாதபடி காய்ந்த சருகாய் கட்டிலில் சுருண்டு இருந்தாள். அவளது அந்தக் கோலமே எங்கள் இயல்புகளை குலைக்க போதுமானதாய் இருந்தது.

எங்கள் குடும்ப பொருளாதாரத்தின் அடிப்படையே என் தாயின் வருமானத்தை பெருமளவு நம்பியிருந்தது. என் தந்தை அரசு பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றி வந்தாலும் அவரது வருமானத்தை வைத்து மட்டுமே எங்கள் குடும்பத்தின் அன்றாட தேவைகளை எதிர்கொள்ள முடியாதிருந்தது. அதற்கு நாங்கள் பழகிவிட்டிருந்த வாழ்க்கை முறையும் ஒரு மிகப்பெரிய காரணம். இப்போதோ என் தாயும் படுத்த படுக்கையாகிவிட்டாள். மருத்துவ செலவினங்களோ எங்கள் குடும்பத்தின் தனரேகையை கொஞ்சம் கொஞ்சமாய் மறைய செய்து கடன்ரேகைகளாக மாற்றிவிட்டிருந்தது.

அப்போது எனக்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன் நான் என் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவது என்று. ஆனால் எனது தீர்மானத்தை என் அம்மாவிடமோ அல்லது வீட்டில் உள்ளவர்களிடமோ நான் அப்போது வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் என் தாயின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று என் கல்வி. அதை எதன் பொருட்டும் அவள் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒருமுறை தனது மருத்துவ செலவினங்களுக்காக வாங்கிய கடனில் என் கல்லூரி கட்டணத்தை கட்டியிருந்தாள். அப்படிப்பட்டவளிடம் நான் என் தீர்மானத்தை சொன்னால் வேறு நோயே தேவையில்லை அவளை கொன்றுவிட.

இப்படி பல விஷயங்களை எனக்குள் புதைத்து கொண்டு அவள் முன் இயல்பாக இருப்பது போல் நடிக்க துவங்கினேன். உலகில் எந்தப் பிள்ளையும் ஏற்க கூடாத பாத்திரமது. அழுகையை கூட சிரிப்பால் மறைக்க வேண்டிய துரதிஷ்டசாலியாய் ஆகிப்போனேன். வலிக்க வலிக்க ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன். என்னை சுற்றி இருந்தவர்கள் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். அப்படி எல்லா வகையிலும் மனப்புழுக்கத்தால் வாடிய எனக்கு ஒரு ஆறுதலும் இருந்தது அது என் காதல்!

ஆம்! நானும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தோம். அவள் என் அக்காவின் தோழி. முதலில் இந்த இடத்தில் என் அக்காவை உங்களுக்கு அறிமுகம் செய்து விடுகிறேன். அவள் பெயர் பிரவீணா. என் தந்தையின் அண்ணன் மகள். கூட்டப்புளி என்னும் எங்கள் கடலோர கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தூத்துக்குடியில் எங்கள் வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்தாள். என்னைவிட இரண்டு வயது மூத்தவள்.

அவளுடைய கல்லூரித் தோழி ஒருத்திதான் என் காதலி. என் அக்காவை வைத்து அறிமுகமானாள். எனக்கும் நல்ல தோழியாகவே. ஆனால் எங்கள் நட்பு மெல்லமெல்ல அடுத்த படி நிலையை எட்டத் துவங்கியது. அதற்கு தொலைப்பேசி பேரூதவியாக இருந்தது. பதின்ம பருவத்தில் காதலிப்பதே சுகம்! அதிலும் நாம் காதலிக்கப்படுவோமேயானால் அது பரமானந்தம்!

அந்தப் பரமானந்ததிற்கு ஜாதி,மதம்,வயது எதுவும் தடைபோட்டு விட முடியாது. எத்தகைய சமூக அடிப்படைகளையும் தூக்கியெறியும் வல்லமை அதற்கு உண்டு. ஆம்! எங்கள் காதலுக்கும் அது இருந்தது. வாழ்வின் அழகான நாட்கள் அவை. எனக்கான ஒரு உலகத்தை நான் சிருஷ்டித்துக் கொண்டு வாழ்ந்த அற்புதமான காலம் அது.

எனக்கு பல பெண் தோழிகள் உண்டென்பது என் அம்மாவிற்கு தெரியும். நான் அவர்களுடன் இயல்பாக பழகுவதற்கு என் அம்மா தான் முக்கிய காரணம். ஏனென்றால் நான் அவளிடம் இருந்து தான் பாலின பேதங்களை கற்றதும்….கடந்ததும். அதனால் அவள் எங்களது நட்பை சந்தேகிக்கவில்லை. அவளது என்மீதான அந்த திடமான நம்பிக்கையே அவளிடம் என் காதல் கதையை மறைக்க செய்தது. அதுவரை எல்லாவற்றையும் மிக எளிதாக பகிர்ந்து கொள்ள முடிந்த என்னால் என் காதலியை ஒரு தோழியாக மட்டுமே என் அம்மாவிடம் அறிமுகம் செய்ய முடிந்தது….. விந்தையல்ல…..யதார்த்தமே!

எனக்கு ”சரி”க்கும் “தவறு”க்குமான எளிய வித்தியாசங்களை இனம் கண்டுக்கொள்ள கற்றுக்கொடுத்ததே அவள் தான். என்னால் அவளிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிந்த எந்தவொரு செய்கையையும் ”சரியானவை”யே என்றும் பகிர்ந்து கொள்ள தயக்கம் ஏற்படுத்தும் எல்லாம் ”தவறானவை”யே என்றும் போதித்திருந்தாள். நானும் அதையே அளவுகோளாய் கொண்டு எனது சரிகளை அவளிடத்திலும் தவறுகளை என் அந்தரங்கத்திடமும் அடைகாக்க துவங்கினேன். ஆம்! என் அந்தரங்கத்தின் முதல் அறையை என் காதலுக்காக ஒதுக்கிக் கொடுத்தேன்.

என் காதலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் காதலித்து வளர்த்தேன். ஏதோ உலகையே வென்ற மிதப்பில் நடமாடத் துவங்கினேன். காதல் என்பதை இன்பத்தின் மறுபெயராய் எண்ணி காலத்தை என் காதலுக்காக கறைக்க துவங்கினேன். காதலை கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடி விட்டேன் போலும். இயற்கைக்கு மட்டுமல்ல காதலிலும் நிலையாமையே நிரந்திரமானது என்பதை காலம் சொல்லி கொடுக்க தொடங்கியது…..

கூடிக் கொண்டாடிய காதல் பொழுதுகளை கண்ணீருக்கு தாரை வார்க்க வேண்டி வரும் என எந்தக் கனவுகளும் என்னிடம் அப்போது ஆரூடம் சொல்லி இருக்கவில்லை. ஆனால் சொல்லப்படாத ஆரூடங்கள் தான் எப்போதும் பலித்தே போகும். எனக்கும் அப்படித்தான் ஆகிப்போனது. நான் காதல் மொழி பேசி கனிந்து உருக வேண்டிய கணங்களை என் தாயின் நிலை சொல்லியும்….எனக்கு நானே ஈசிக் கொண்ட அரிதாரத்தைப் பற்றிச் சொல்லியும் கறைக்கவே சரியாக இருந்தது. என் தாயின் கடைசி நாட்களில் எனக்கிருந்த ஒரே ஆறுதலாய் என் காதல் மாறிப்போனது.

நான் உடையும் போது என்னை தேற்றி எழச்செய்தாள். நான் உருகும் போது என்னை உறுதி கொள்ள செய்தாள். நம்பிக்கையால் காதல் கொடுத்தாள். எல்லாம் முடிந்து போகப்போகிறது என நான் எண்ணிய போது "தான்" இருப்பதாய் சொல்லி நிழல் கொடுத்து நின்றாள். தலை கொள்ளும் வெள்ளத்தில் தோள் கொடுத்து நீந்தச் செய்தாள்…..நீந்தத்துவங்கினேன்.

...............தொடரும்.

ஞாயிறு, 29 மே, 2011

என் தேவதையின் சரிதை.....7


இது ஒரு தொடர் பதிவு......

என்னைப் பற்றி என்னைவிட என் தாய் தான் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். எனக்கு பிடித்தவைகள் என்னவென்பதே அவள் சொல்லித்தான் பலமுறை நான் அறிந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. தனது வாஞ்சையான அன்பினால் எனக்குள் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை அவளுக்கு இருந்தது. முதலில் என் தனிமையை புரிந்து கொண்டவள் நான் செய்த தவறுகளையும் ஏற்றுக்கொண்டாள்.

ஆனால் அவைகளை அவள் ஒருபோதும் நேரடியாக என்னிடம் குற்றங்களாக பட்டியலிட்டதுமில்லை, கண்டித்ததுமில்லை. அதேபோல் என்னைப் பற்றி அவளிடம் யாராவது குறை கூறினால் அவர்களிடம் எனக்காக எதிர்வாதம் செய்து என்னை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்திருப்பதாய் உணரச் செய்தாள். என் மீதான அவளது அந்த அளப்பெரிய நம்பிக்கை தான் அவள் குரல்களுக்கு என் செவிகளை சாயச்செய்தது.

அந்த சமயத்தில் தான் புத்தகங்கள் என்னும் ராட்ஷசநண்பனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அதேபோல் தான் ரசித்த கவிதைகளைப் பற்றி சிலாகித்து பேசி என்னையும் அவைகளை ரசிக்க செய்தாள். தூரிகைகளை கையில் கொடுத்து ஓவியம் பழக்கினாள். பாலசந்தர்,பாக்கியராஜ்,மகேந்திரன் என தனக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களை எனக்கும் பிடிக்க செய்தாள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் தான் விரும்பிய வகையில் என்னை செதுக்க துவங்கினாள். உளியின் வலி தெரியாமல் சிலை வடிக்கும் கலையில் கைதேர்ந்தவளாய் இருந்தாள்.

அவள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த புத்தகம் என்னும் ராட்ஷசன் என்னை முழுவதுமாய் சுவீகரித்து கொண்டான். ராஜேஷ்குமார், சுஜாதா, பாலகுமாரன் என பித்து பிடித்தாற் போல் படித்து திரிந்தேன். புத்தகங்களை என் கையில் கொடுத்து எனக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்த தனிமையை என் நண்பனாக்கிவிட்டாள்.

எனக்கான எல்லா பிரச்சனைகளுக்கும் அவளிடன் ஒரு தீர்வு இருந்தது. அவளிடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னால் பேசமுடிந்தது. அவளும் என்னை தனது நண்பனைப் போல் உணரச்செய்தாள்.

ஆம்! அவளால் என்னிடம் அவளது கடந்த காலங்களின் சோகங்கள்….. தோல்விகள்….வெற்றிகள்….. சந்தோஷங்கள்…. என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அது போன்ற தருணங்களில் என்னை அவள் ஒருபோதும் தன் மகன் என நினைத்து சில சம்பவங்களை விழுங்கியோ….மறைத்தோ எதுவும் சொன்னதில்லை. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால் அவள் தான் ஒரு பெண்ணாக அதுவும் சமூகத்தில் பலதரப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்பு உள்ளவளாக இருப்பதினால் தான் சந்தித்து வந்த பாலியில் தொந்தரவுகளைக் கூட என்னிடம் இயல்பாக சொல்வாள். நானும் ஒரு ஆணாக இருப்பதினாலோ என்னவோ அவள் அப்படிச் சொல்லும் போதெல்லாம் அவைகள் எனக்கு ஒருவித குற்றவுணர்வுடன் கூடிய படிப்பினையாகவே நான் பெரும்பாலும் அதனை எடுத்துக் கொள்வதுண்டு. அவளும் ஒருவேளை அதன் பொருட்டும் சொல்லியிருக்கலாம்.

அப்படி ஒருநாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ”காதல்” குறித்த உரையாடல்கள் வந்தது. (அது நான் ’காதலுக்கு மரியாதை’ படம் பார்த்துவிட்டு வந்த சமயம் என நினைவு…..)

நான் ”அம்மா…. படம் சூப்பரா எடுத்திருக்கானுங்க…. அதுவும் அந்த கிளைமேக்ஸ் சீன்…. நானெல்லாம் படம் முடிஞ்சு போச்சுன்னு சோகமா கிளம்பிட்டேன்….. ஆனா நல்லவேளை விஜய ஷாலினி கூட சேத்துவிச்சு நல்ல Happy ending-ஆ கிளைமேக்ஸ மாத்திட்டானுங்க….”

அம்மா “டேய் காதல்ங்கிறது கல்யாணத்துல முடிஞ்சா தான் ஜெயிச்சதா நினைக்கிறது முட்டாத்தனம்டா….. நிச்சயமா காதலோட வெற்றி கல்யாணம் இல்லடா….. உண்மைய சொல்லனும்னா காதலோட முடிவு தான் கல்யாணம்….” என்றபடி அவள் ஏதேதோ பேசிச் சென்றாள். நானும் அவளை மறுத்தும், கேலி செய்தும் அன்று விட்டுவிட்டேன். ஆனால் அன்று அவள் பேசிய வார்த்தைகளுக்குள் இருந்த தீர்க்கம் எனக்கு உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. இப்படி வாழ்வில் பல விஷயங்களில் அவளுக்கு மிகத் தெளிவான, தீர்க்கமான் பார்வையிருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை தவிர….. அது அவளது மூடத்தனமான கடவுள் பக்தி…..

அவளுக்கோ கிறுத்துவ மதத்தின் மீது அப்படியொரு பற்றும் நம்பிக்கையும் இருந்தது. என்னையும் என் தம்பியையும் அப்படியே அவள் வளர்க்க விரும்பினாள். எங்களது சிறு பிராயத்திலேயே கோயில் காரியங்களில் எங்களை ஈடுபடச் செய்தாள். வாரம் தவறாமல் பூசைக்கு கூட்டிச் சென்றாள். கிறுத்துவ மதச் சித்தாந்தங்களை போதித்தாள்.

ஆனால் இவையெல்லாம் எனக்குள் பக்தியை தந்த அளவிற்கு பல கேள்விகளையும் தொடர்ந்து எழச் செய்து கொண்டே இருந்தது. என் கேள்விகளுக்கு அவள் ”தேவ நிந்தனை” என்ற ஒற்றை வார்த்தையையே பதிலாக்கிக் கொண்டிருந்தாள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் நான் அப்போதும் முழுமையாக ”கடவுளின் இருப்பை” மறுத்துவிடவில்லை.

அந்தச் சம்பவம் வரை…….

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு புதுவருடத்தின் பிறப்பை ஒட்டிய நேரம். உலகமே புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாட்டமாய் இருந்தது. எங்கள் ஊரான தூத்துக்குடியிலும் புது வருடக் கொண்டாட்டங்கள் களை கட்டிய அந்த சமயத்தில் தான் அந்த ஜாதிக் கலவரம் வெடித்தது. எங்கள் ஊரான தூத்துக்குடியில் பரதவர் இனமும், நாடார் சமுதாயமும் பெரும்பான்மை எண்ணிக்கையில் வாழும் இரு சமுகத்தவர்கள். பெரும்பாலும் பரதவர்கள் கிறுத்துவ மதத்தையும், நாடார்கள் இந்து மதத்தையும் தழுவிய நம்பிக்கையாளர்கள். இந்த இரு வேறுபாடுகளைத் தவிர வேறு எந்தவகையிலும் வேறுபடாதவர்கள். ஒருவருக்கொருவர் அத்தனை அன்னியோன்னியமாய் ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்ந்து வருபவர்கள். அப்படிப்பட்ட அந்த இரு சமுகத்தவர்களிடேயே தான் அந்தக் கலவரம் வெடித்தது. இரு சமுகத்தை சேர்ந்த ஓரிரு குடிகாரர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை ஊர் கலவரம் ஆனது.

கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ”பம்ஸ்” என்னும் கையெறி குண்டுகளும், பெட்ரோல் வெடிகளும் இரு சமுகத்து உறவுகளையும் வெடிக்கச் செய்தன. சாதிய அடிப்படையிலும், மத அடையாளங்களினாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்பாவி பொது மக்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. மனித நேயம் குற்றுயிரும் குலை உயிருமாய் ஆனது. கலவரம் மூண்ட இரண்டாம் நாளின் நடுஇரவில் எங்கள் வீட்டின் தொலைப்பேசி அலறியது நான்தான் அதை எடுத்தேன். எங்கள் உறவுக்காரர் ஒருவர் பதற்றமாய்…… எங்கள் வீட்டுப் பகுதியில் கலவரக்காரர்கள் வரப்போகிறார்கள் என்றும் அதனால் நாங்கள் உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு ஒடும் படியும் எச்சரிக்கை செய்தார்.

உடுத்திய ஆடைகளோடு வீட்டை பூட்டிவிட்டு என்னையும் என் தம்பியையும் அழைத்துக் கொண்டு என் அம்மாவும் அப்பாவும் அந்த நடுஇரவில் எங்கள் பக்கத்து தெருவில் வசித்து வந்த குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஒரு இரவு என் வாழ்க்கையில் மறக்க முடியாததாய் போனது. ஜாதியின் பெயரால், மதத்தின் அடிப்படையால் நாங்கள் வீதியில் ஓடிய அந்த நாள் எனக்கு உணர்த்தியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் இந்தக் கடவுளும்…..இந்த பாழாய்போன ஜாதியும்…. என் சகமனிதனை என் மேல் வெறுப்புறச் செய்யுமானால் எனக்கு இந்தக் கடவுளும் தேவையில்லை….ஜாதியும் தேவையில்லை…. என்பதே!

வெள்ளி, 27 மே, 2011

உயிரானவள்...


பெண்ணே!

உன்னை நிலமென்றால்

பூரித்துப் போகதே….!

அவன் என்றும் உன்னை

தன் கால்களுக்கு

கீழே வைக்க சதி செய்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை நிலவென்றால்

குளிர்ந்து போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் இரவின் துணையாக்கி

காமத்திற்கு இரையாக்க முடிவுசெய்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை நீரென்றால்

உருகிப் போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் தேவைக்கு பருக

உன் சுதந்திரத்திற்கு அணைகட்ட துணிந்துவிட்டான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

உன்னை மலரென்றால்

மலர்ந்து போகாதே!

அவன் என்றும் உன்னை

தன் உடைமைகளில் ஒன்றாக்கிக்கொள்ள

உன்னை காம்பறுக்க போகிறான்

எனப் புரிந்து கொள்!


பெண்ணே!

நீலமாய்…..

நிலவாய்….

நீராய்….

மலராய்….

அவன் என்றும் உன்னை

வர்ணிப்பது….. நீ!

உயிராய் வாழ்வதையே உன்னை

மறக்க செய்வதற்கே….

எனப் புரிந்து கொள்!

உன் வாழ்வை உனக்கென

மாற்றிக்கொள்!!!!

என் தேவதையின் சரிதை.....6


இது ஒரு தொடர் பதிவு.....

எங்கள் இருக்கைக்கு அருகே நின்றபடி மிரட்டும் தொனியில் நடத்துனர் என்னலே எங்கனையும் இறங்காம இப்படியே தூங்குனீகனா எப்படி? எந்த ஊருடே போவனும்..?

மற்ற இருவரும் வாயடைத்துப் போய் நிற்க நானும் பயந்தபடியே மணிமுத்தாறு போகணும்... எனப் பம்மினேன்.

அப்ப ஊரு வந்தும் இறங்காம இருக்கீ...ய....? கூட பெரியவுக யாரும் தொணைக்கு வரலையா...?என மேலும் விசாரணையை அதிகப்படுத்தினார்.

அவர் சந்தேகபடுவதை புரிந்து கொண்டு நான் சுதாகரித்து கொண்டேன்.இங்க எங்க மாமா வீடு இருக்கு....நாங்க லீவுக்கு வந்திருக்கோம்...எங்கமாமா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எங்கள கூட்டிட்டு போயிருவாரு... என படபடவென புழுகிமுடித்தேன்.

முன்னாடி இருந்து ஓட்டுனரின் குரல் வந்தது அவனுகள சீக்கிரம் இறக்கி விடுப்பா....சின்னப் பயளுகள போட்டு நோண்டிக்கிட்டு....என அங்கலாய்த்தார். நாங்களும் இதுதான் சமயம் என வேகமாக இறங்கிக் கொண்டோம்.

பேருந்து கிளம்பியவுடன் கால்போனப் போக்கில் சற்று தூரம் நடந்தோம். எங்கள் வயதொத்த சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டதும் அவர்களை நெருங்கி பேச்சுக் கொடுத்தோம். அவர்களாகவே நாங்கள் ஏதும் N.C.C கேம்பிற்கு வந்துள்ளோமா? எனக் கேட்டவுடன் நாங்களும் தலையாட்டி வைத்தோம். அப்போது தான் அவர்கள் அங்கே ஒரு அணைக்கட்டு இருப்பதை சொன்னார்கள். நாங்களும் அதை சுற்றி பார்க்க விரும்பியதாக கூறியவுடன் அதற்கு வழியும் காண்பித்தார்கள். அப்போது பசியும் அடங்கிவிட்டிருந்தது. நாங்கள் அணைக்கட்டு ஏறினோம். அணைக்கட்டின் பிரம்மாண்டம் எங்களை மலைக்க செய்தது. ஏதோ சுற்றுலா பயணிகளைப் போல் அங்கே சுற்றித் திரிந்து விட்டு கால்கள் ஓய்ந்து போய் அணையிலிருந்து இறங்கினோம்.

தாகத்தால் நாக்கும் வறண்டு போயிருந்தது. கீழே இறங்கி சற்று தொலைவு ஊருக்கு எதிர்புறமாக நடந்தபோது ஒரு சின்ன நீரோடை தெரிந்தது. பசுவைக் கண்ட கன்று போல் துள்ளிக்குதித்து நீரில் விழுந்தோம். நேரம் போவதே தெரியாமல் நீரில் விளையாடிக் கொண்டிருந்து விட்டு ஒருவழியாக களைத்து ஓய்ந்து அருகிலிருந்த மரத்தின் அடியில் அமர்ந்தோம். அப்போது கருக்கலும் ஆரம்பமாக துவங்கியது....போக வழியும் தெரியவில்லை.....பையில் காசும் இல்லை.....கொஞ்சம் கொஞ்சமாய் பயம் வரத் தொடங்கியது. ஒவ்வொருவராய் புலம்ப ஆரம்பித்தோம். வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய நினைப்பு வரவும் கலங்க தொடங்கினோம். மெல்ல மெல்ல வீட்டை விட்டு ஓடி வந்தது எவ்வளவு பெரிய அபத்தம் என புரிய துவங்கியது.

இருள் அடர்த்தியாகிக் கொண்டே வர பயமும் அதிகரிக்க துவங்கியது. திசைகள் தெரியாமல் கால்களை செலுத்த துவங்கியிருந்தோம். மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த மரங்கள் நிரம்பிய பகுதிகளுக்குள் பிரவேசித்திருந்தோம்....திடீரென ஒரு மனித குரல் எங்களை நோக்கி ஓங்கி ஒலித்தது நாங்கள் பயந்து போய் அப்படியே நின்று விட்டோம். மரத்திற்கு பின்னால் ஏதோ செய்து கொண்டிருந்த உருவம் எங்களை நோக்கி சத்தமிட்டபடி வந்தது.

யாருப்பா நீங்க....? இங்க எங்க போறீக.....? என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். நாங்கள் பதிலற்று உரைந்து நின்றோம்.

வாயத் தொரந்து பேசுங்க டே...

தடுமாறியபடி நான் இல்ல ஊருக்கு....

ராஜ்குமார் என்னை இடைமறித்தபடி தூத்துக்குடிக்கு போவனும்...

என்னது தூத்துக்குடிக்கா...? அதுக்கு இங்க எதுக்கு வந்தீக…? அதுவும் இந்த நேரத்துல...?

இல்ல சும்மா சுத்திப்பாக்க...என்றேன்.

சுத்திபாக்கவா....? நான் மட்டும் பாக்கலைன்னா காட்டுப்பன்னிக்கிட்ட கடிபட்டு செத்துலடே போயிருப்பீக...என அவர் சொன்னவுடன் எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.

சரிச்சரி... இங்கன நின்னு பேச வேண்டாம்... எம் பொறத்தால வாங்க...என்றபடி எங்களை திரும்பி அழைத்து கொண்டு எங்கோ சென்றார். எங்களுக்கும் வேறு வழி இல்லாததால் அவரைப் பின் தொடர்ந்தோம். வழியில் அந்த கானகத்தில் உள்ள மிருகங்களைப் பற்றி ஏதோ கதைகளை சொல்லியபடி எங்களை எங்கோ அழைத்துச் சென்றார். நாங்கள் பதிலேதும் பேசாமல் மௌனமாக அவரை பின் தொடர்ந்தோம்....

மணிமுத்தாறு காவல்துறை பயிற்சி மையத்திற்கு அருகே இருந்த ஒரு சின்ன பெட்டிக்கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார். அப்போது பெட்டிக்கடையில் ஓரிருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். எங்களை அழைத்து சென்றவரோ பெட்டிக்கடைக்காரரிடம் எங்களை சந்தித்த விவரங்களை கூறிவிட்டு பயலுவ அமுக்குனிகளா இருக்கானுவ.....பார்த்தா பெரிய இடத்து புள்ளைவ மாதிரியும் தெரியுதுக... நீரு கொஞ்சம் என்னென்னு கேளும்... என்றார்.

நானும், ராஜ்குமாரும் பயந்தபடியே நின்று கொண்டிருந்தோம். வினோத் விம்மி விம்மி அழத்துவங்கியிருந்தான்....பெட்டிக்கடைகாரர் வாயில் வெத்தலையை சுவைத்தபடி எங்களை நோக்கி இன் நேரத்துல காட்டுப் பக்கமா என்ன ஜோலியா டே போனீக....? காட்டுப்பன்னிகள பசியாத்தவா.... என்றபடி பயங்கரமாய் சிரித்தார்.

நாங்களோ பயத்தால் நா எழாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தோம். அவரோ வினோத்தைப் பார்த்து நீ ஏம்டே இப்ப அழுதுகிட்டு கெடக்க....உன் சேக்காளி மாரப்பாரு எப்படி கல்லுளிமங்கனுவ மாதிரி நிக்கானுவன்னு...என்று நாலு பேர் முன்னிலையில் எங்களை கேலி பேசிக்கொண்டிருந்தது எனக்கு அவமானமும், கோபமும் ஒரு சேர கொள்ள செய்தது.

அதற்கு மேல் அங்கே அமைதியாக நின்று கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியதால் தைரியத்தை வரவழைத்து கொண்டு நானே பேச ஆரம்பித்தேன் நாங்க மூணு பேரும் சும்மா சுத்தி பாக்கலாம்ன்னு இங்க வந்தோம்...சுத்தி பாத்துக்கிட்டே வழி தெரியமா காட்டுப்பக்கமா போயிட்டோம்...

கடைக்காரர் சுத்தி பாக்க வந்தீகளா... (என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு) எனக்கு சின்ன வயசுலே காது குத்தியாச்சுடே தம்பி.... எந்த ஊருல இருந்து வாரீக...? அது என்ன கையில பையி?என்றபடி என் கையிலிருந்த பையை கேட்டார்.

தூத்துக்குடி... என்றபடி நான் கையிலிருந்த பையை கொடுக்க தயங்கவும்....அவரே தொடர்ந்தார் குடு டே என்ன இருக்குன்னு பார்ப்போம்.... என்றபடி ஏறத்தாழ பிடுங்கிக் கொண்டார். உள்ளிருந்து நாங்கள் எதற்கும் தேவைப்படும் என பாதுகாப்பிற்காக எடுத்து வந்திருந்த கத்தி, கவுட்டை, புகைத்தது போக மீதம் வைத்திருந்த பீடிகள், எங்கள் உடைகள் என ஒவ்வொன்றையும் அவர் வெளியில் எடுத்த போது நான் கொஞ்சம் நஞ்சம் வரவழைத்திருந்த தைரியமும் மறைந்து போனது.

அருகிலிருந்த ஒருவர் தம்பிகளா... என்ன படிக்கிறீக...? என கேலியாக கேட்டார்.

இந்த வயசுலே பீடிக்கட்டும், கத்தியுமா சுத்துனா என்ன படிக்கப் போறானுக....-இது அங்கே நின்று கொண்டிருந்த மற்றொருவர்.

இப்போது எங்களை அழைத்துக் கொண்டு வந்தவர் கடைகாரரிடம் யோவ் பயலுவ வீட்டுல இருந்து ஓடி வந்திருக்கானுக தெரியுதா...? அதான் இந்த முழிமுழிக்கிறானுவ...

கடைகாரர் எங்களை நோக்கி இந்த வயசிலயே பீடி, சிகரெட்டுன்னு அலையறீகளே உருப்புடுறதுக்கா...?உங்க பேரு என்னடே..?

நான் மூவரின் பெயரையும் சொன்னேன். ஏனென்றால் அப்போது ராஜ்குமாரும், வினோத்துடன் சேர்ந்து அழத் துவங்கியிருந்தான். எனக்கோ பயமாக இருந்ததே ஒழிய அழுகை வரவில்லை.

ராஜ்குமாரும், வினோத்தும் அழுதபடியே நாங்கள் வீட்டிலிருந்து ஓடிவந்ததிலிருந்து அங்கு சுற்றி திரிந்தவரை ஒவ்வொன்றாய் அழுதபடியே ஒப்பித்து முடித்தார்கள். நான் மௌனமாய் நின்று கொண்டிருந்தேன். எங்கள் பெற்றோர்களைப் பற்றியும் எங்களை பற்றியும் விசாரித்து விட்டு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் எங்களுக்கு அறிவுரைகளை அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார்கள். அதிலும் அந்த கடைக்காரர் அப்போது மிகவும் வாஞ்சையான குரலுக்கு மாறிவிட்டிருந்தார்.

அவர் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் அதில் அவரது கால்கள் பறிபோனதாகவும் சொல்லி தனது செயற்கை கால்களை எங்களிடம் காண்பித்தார். அதுவரை அமர்ந்து கொண்டு எங்களிடம் பேசியதால் நாங்கள் அவரது கால்களை கவனிக்கவில்லை. அப்படி அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே தற்செயலாக அருகிலிருந்த காவல்துறை பயிற்சி மையத்திலிருந்து நான்கைந்து பணியாளர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்களிடம் எங்களைப் பற்றி கூறி எங்கள் வழி செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அவர்களில் ஒருவருடன் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்திற்கு எங்களை அனுப்பி வைத்தனர்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையம்..... இரவு 8.00 மணிக்கு......

வாழ்வில் முதல்முறையாக காவல்நிலையத்திற்குள் காலடி எடுத்துவைத்தோம். மனம் பயத்தின் உச்சத்தில் படபடக்க துவங்கியது. சினிமாக்களில் வரும் பயங்கரமான காவல்நிலைய காட்சிகள் நினைவுகளில் நிழலாடி மேலும் அச்சம் கொள்ள செய்தது. ஆனால் எங்களோடு வந்தவர் எங்களைப் பற்றி எடுத்து கூறியதும் காவல்நிலைய அதிகாரிகள் ஏதோ தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல் எங்களை கவனித்து கொண்டார்கள்.

அதிலும் அங்கிருந்த அதிகாரி ஒருவர் எங்களிடம் மிகவும் இயல்பாக உரையாடி எங்கள் வீட்டு தொலைப்பேசி எண்களை வாங்கி எங்கள் வீடுகளுக்கு தகவல் சொல்லி விட்டிருந்தார். இதற்கிடையில் எப்படியோ எங்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒரு பத்திரிகையின் நிருபர் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம் அந்த அதிகாரி எங்களை தனது உறவினர்களின் பிள்ளைகள் எனச் சொல்லி அனுப்பிவிட்டு அங்கிருந்த சக காவல் பணியாளர்களை எங்களுக்காக கடிந்தும் கொண்டார்.

வாடகை கார்களை பிடித்துக் கொண்டு ஓரீரு மணிநேரங்களில் பரிதவிப்போடு எங்களது பெற்றோர்களும் அம்பை காவல்நிலையம் வந்து சேர்ந்தார்கள். அதிலும் என் மாமா (அப்பாவின் அக்கா மாப்பிள்ளை) ஒருவர் தனது தேடலின் தவிப்பை கோபமாக வெளிப்படுத்தியபடி வந்ததும் வராததுமாய் தன் கைகளை ஓங்கியபடி என்னை அடிக்க நெருங்கினார். அப்போது அந்த அதிகாரி அவரை இடைமறித்து கடிந்து கொண்டார். அவர் எங்களது பெற்றோர்களை ஆசுவாசப்பட வைத்து நிதானமாக எங்கள் சார்பாக அவர்களிடம் பேசி அவர்களது கோபத்தையும் தணித்தார். பின்னர் எங்கள் பக்கம் திரும்பி கைகுலுக்கிய படி விடையளித்தார்.

அந்தச் சம்பவம் என்னை பெரிதும் மாற்றியது. என் பெற்றோர்களின் அன்பை எனக்கு புரிய வைத்த தருணம் அது. அதிலும் என் தாயின் கண்களில் தெரிந்த தவிப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவள் என்னை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த போது நான் ஒரு முடிவு செய்து கொண்டேன் இனி வாழ்வில் எத்தகைய சூழலிலும் அவளை விட்டு பிரியக் கூடாது என்று.


...............தொடரும்.