சனி, 25 செப்டம்பர், 2010

அயோத்தியா யாருக்கு சொந்தம்..?



’அயோத்தியா’ என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு “வெற்றி கொள்ள முடியாத பகுதி” எனப் பொருளாகும். இப்போது நம் தேசத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி ‘அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதியை வெற்றி கொள்ளப்போவது யார்?’என்பதே.

மிக நீண்ட வரலாறு கொண்ட இந்த கேள்விக்கு பதிலாக பல நூறு ஆண்டுகளாக பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் பதிலற்று நிற்கிறோம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் அயோத்தி. இதை இந்துக்கள் ராமர் பிறந்த பூமி என நம்புவதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள். முஸ்லிம்களோ 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி என்பதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள்.

இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகந் ராமசந்திர தாஸ்பரமஹன்ஸ் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் தீர்பு தான் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

’சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி’என்றொரு சொலவடை உண்டு. இந்தப் பிரச்சனையில் நமது அரசாங்கங்களின் பங்கு அந்த ஆண்டியை போலத்தான். ஆங்கிலேயே ஆட்சியில் கூட அண்ணன் தம்பிகளாக ஒரே இடத்தில் வழிபாடு நடத்திவந்தவர்களை அங்காளி பங்காளியாக்கி அலங்கோலப்படுத்தியது இந்திய ஆட்சியாளர்கள் தான். இப்போது ‘கலவரம்,கலவரம்’ என கூப்பாடு போடுபவர்களும் அவர்கள் தான்.

அதேபோல் இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கிய அடுத்த பெரியபங்கு ஊடகத்துறைக்கே சாரும். அவர்கள் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க இந்தப் பிரச்சனையை முடிந்த அளவுக்கு அரசியலாக்கி ஆதாயம் பார்த்தாகிவிட்டது.அடுத்து மத விற்பன்னர்கள்....சொல்லவே வேண்டாம் இந்தப் பிரச்சனையின் மூலமும் அவர்களே முடிவும் அவர்களே!

இப்போது வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கலவரங்களில் இறந்து போன அப்பாவி பொதுஜனங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை...அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை.... நாம் தொலைத்து விட்டு நிற்கும் சகோதிரத்துவத்திற்கும் தீர்வு பிறக்க போவதில்லை... இதையெல்லாம் இழந்துவிட்ட பிறகு கிடைக்கும் அந்த நிலத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம்? மீண்டும் ஒரு பாபர் மசூதியா? அல்லது ராமர் கோயிலா?

லட்சகணக்கான உயிர்களின் தன்னலமற்ற போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சுதந்திரத்தை...இந்த ஜனநாயகத்தை....பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக சொல்லப்படும்...நம்பப்படும் மன்னர்களுக்கு சொந்தமானது எனச் சொல்லி சண்டையிட்டு கொள்வது எத்தனை அபத்தமானது? இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையும் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே சொந்தமானது என்பதை நாம் எப்போது உணர்வோம்?

ஆரியர்கள் வந்தார்கள் இந்துக்களோனோம்... முகலாயர்கள் வந்தார்கள் முஸ்லிம்களானோம்... ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறுத்தவர்களானோம்... சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சிரிங்க ப்ளீஸ்...


எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே...

***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.
ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள்.
உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள்.
திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி.

***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?

மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம்ன்னு பிரிச்சு கொடுத்துடுறேன். சரிதானே..?

கணவன்: ?????

***ஒருவன்: டாக்டர் சார், மரணமே இல்லாம வாழ்றதுக்கு ஏதாவது வழியிருக்கா?

டாக்டர்: அதுக்கு நீங்க கல்யாணம் தான் பண்ணிக்கனும்.

ஒருவன்: என்னது கல்யாணம் பண்ணிட்டா மரணமே இல்லாம வாழ வழி கிடைக்குமா?

டாக்டர்: நீங்க வேற...அப்பத்தான் இப்படிப்பட்ட விபரீதமான எண்ணங்கள் வராது.

***ஒருவன்: சார். என்னோட பொண்டாட்டிய காணோம்.

போஸ்ட்மாஸ்டர்: யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா..போயி போலிஸ் ஸ்டேஷன்ல புகார் கொடு.

ஒருவன்: அய்யோ...சந்தோசத்துல எங்க போறதுன்னே தெரியாமபோச்சே!!!

***மனைவி: நான் இப்படியே உங்களுக்கு சமைச்சு கொட்டிக்கிட்டே இருந்தா எனக்கு என்ன கிடைக்க போவுது?

கணவன்: ஆங். என்னோட இன்ஷுரன்ஸ் பணம் கிடைக்கும்...சீக்கிரமா...

***நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?
வீட்டிலிருப்பவனை ஒயின் ஷாப்பிற்கு போகவைப்பது காதல்.
ஒயின் ஷாப்பிலிருந்து தள்ளாட்டமாய் திருப்பி வீட்டிற்கு கூட்டி செல்வது நட்பு.

***அப்பா: டேய்! ஏண்டா இப்படி அழுவுற..?

மகன்: அம்மா அடிச்சிட்டாங்க...

அப்பா: இதுக்கா அழுவுற.ச்சீ அழாத...

மகன்: யோவ் போயா...உன்ன மாதிரியெல்லாம் என்னால அடிதாங்க முடியாது.

அப்பா: ????

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஒரு பட்டுப்பூச்சியின் மரணம்...


அவள் என் நண்பனின் மகள். வண்ண வண்ண கனவுகளுக்கும், மனம் மலரும் ஆசைகளுக்கும் சொந்தக்காரி. ஆறு வயது கிழவி அவள்.ஆம்! அத்தனை முதிர்ச்சியாக வாயாடுவாள். ஏதோ கேள்விகளின் அரசி போல் அத்தனை கேள்விகள் அவளிடம் உண்டு. சமாளிப்பாக நாம் எதுவும் சொல்லிவிட முடியாது. குடைந்து எடுத்துவிடுவாள். அதனாலே அவளிடமிருந்து வரும் கேள்விகளை நான் மிகவும் கவனமாகவே எதிர் கொண்டு பதிலளிப்பேன். எப்போதும் சுறுசுறுப்பாகவும்,சிறு குறும்பு பார்வையுடனும் உலா வரும் அவள் அன்று அவள் வீட்டிற்கு சென்றபோது அமைதியே உருவாக அமர்திருந்தாள்.

நான் அவள் அருகே சென்று அமர்ந்தேன். சோகமே உருவாக கன்னத்தில் கை வைத்து அம்ர்திருந்தவளை என் பக்கம் திருப்பினேன்.

‘என்னடா செல்லம் ஏன் கோவமா இருக்கீங்க..?’என்றவுடன்.

’டாடியும், மம்மியும் ஏசிட்டாங்க..’என்றது.

‘என் தங்கத்தயா திட்டுனான்....டேய்!ஏண்டா புள்ளய திட்டுனே...’அவளுக்காக நண்பனிடம் பொய் கோபம் காட்டினேன்.

‘நீ உன் செல்லத்துக்கிட்டேயே கேளு...வர வர கழுதக்கு அடம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..’என்று அவனும் விரைத்தான்.

நான் அவனை முறைத்துவிட்டு எனக்கு தேநீர் கொடுக்க வந்த அவன் மனைவியிடம் ‘ஏம்மா இந்தப் பய சும்மா இருக்க மாட்டானா? நீயும் ஏன் அவன் கூட சேந்துகிட்டு புள்ளய திட்டுற...’

‘அண்ணே! உங்களுக்கு தெரியாது வரவர இவளுக்கு எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் தான்...எது நாளும் புடிச்ச புடில வேணும்...’என்று அவளும் சேர்ந்து கொண்டாள்.

‘பக்கத்து விட்டு பொண்ணுக்கு இன்னக்கி பொறந்த நாளு அவ முட்டாய் கொடுக்க இங்க வந்தா...அவள பாத்திட்டு அவ போட்டிருந்த மாதிரியே இவளுக்கும் பட்டுப்பாவாடை வேணுமாம்..சரி! உனக்கு பர்த்டே வரும் போது வாங்கித் தாரேன் இவுங்க அப்பா சொன்ன பிறகும் ஒரே அடம். உடனே வேணுமாம்...’

‘எப்பா...ஆ இவ இப்படி பிடிவாதம் பிடிச்சா இவளுக்கு ஒண்ணும் வாங்கி கொடுக்காதீங்க....’என மேலும் எரியூட்டிய படி சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட துவங்கினாள்.

இப்போது குழந்தை மௌனம் உடைத்து விசும்ப தொடங்கியது.

நான் அவள் கண்களை துடைத்தபடி ‘உங்க ரெண்டு பேருக்கும் அறிவே கிடையாதா? அவளே அழுதுகிட்டு இருக்கா...இதுல நீ வேற சும்மா இருக்க மாட்டியாம்மா?’என நண்பனின் மனைவியை கடிந்தபடி..’வாடா! செல்லம் அங்கிள் உனக்கு பட்டுப்பாவாடை வாங்கித் தரேன்...அழக்கூடாது கிளம்பு..’ என்றேன்.

நான் ஏதோ சமாளிப்பதாய் நினைத்து கொண்டவள் கொஞ்சமும் சமாதானம் ஆகாமல் எழுந்து அழுதபடியே சோபாவில் போய் படுத்துக்கொண்டாள்.

இதைப் பார்த்து கொண்டிருந்த என் நண்பன் ‘விடு அவ அப்படித்தான்...அழுத்தக்காரி...கொஞ்ச நேரத்துல அவளே அழுது அடங்கிருவா... சரி! வாடா நாம போகலாம் ...’என்றான் எதையும் அலட்டிக்கொள்ளாமல்.

‘டேய்! அவ அழுதுக்கிட்டு இருக்காடா...பாவம் புள்ளய கூட்டிட்டு போவோம்..’என்றேன்.

அதற்கு உள் இருந்தபடியே அவன் மனைவி,’அண்ணே! நீங்க போயிட்டு வாங்க அவ சரியாயிருவா...நான் தான் இருக்கேன்ல...’என்றபடி நண்பனுக்கும் ஏதோ குறிப்பால் உணர்த்தினாள்.

அதை கவனிக்காதவன் போல் நானும் நண்பனோடு கிளம்பினேன்.

வழக்கமாக போகும் கடைக்கு சென்று ஆளுக்கு ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தபடி அவனிடம் ‘டேய்! நீயும் தான் அவளுக்கு அத வாங்கி கொடுத்தா என்ன?’என்றேன்.

‘மச்சான் மாச கடைசி வேற...அடுத்த மாசம் அவளுக்கு பொறந்த நாளு வருது அப்ப பாத்துக்கலாம் விட்டுட்டேன்’ என்றான்.

ஒருவழியாக நானும் சமாதானம் ஆகி வேறு விஷயங்களை கதைக்க தொடங்கினோம்.நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம்.

நாட்கள் சென்றது...அவளது பிறந்தநாளும் வந்தது...நானும் ஞாபகமாக அவளுக்கு ஒரு பட்டுப்பாவாடையை பிறந்தநாள் பரிசாக வாங்கிச் சென்றேன்.

என்னை உற்சாகமாக ஜீன்ஸ் பேண்டிலும், டீ சர்டிலும் எதிர்கொண்டு இனிப்பு வழங்கினாள். அவள் பட்டுப்பாவாடையை மறந்து விட்டாள் போலும் என நினைத்தபடி அவளிடம் ‘அங்கிள் இன்னக்கி உனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு பாப்போம்...’என அவளிடம் கேட்டேன்..

‘தெரியலியே..! நீங்களே சொல்லுங்களேன்...’என்றவளிடம் மேலும் புதிர் போட விரும்பாமல் பார்சலை பிரித்து ‘என் செல்லத்துக்கு பிடித்த பட்டுப்பாவாடை டோய்...’என்றபடி அவளிடம் நீட்டினேன்.

அதுவரை உற்சாகமாக இருந்த அவளது விழிகள் பட்டுப்பாவாடையை பார்த்தவுடன் சுருங்கியது ‘ஓ! இதுவா...’ என்றாள் உற்சாகமின்றி.

அவளே தொடர்ந்தாள் ‘அங்கிள் இது வேணாம் எனக்கு...’என்றாள்.

‘ஏம்மா...’ என்றேன் எதுவும் புரியாமல்.

‘அங்கிள் இத பட்டுப்பூச்சிய கொன்னு அதுல இருந்து செய்வாங்களாம் மம்மி சொன்னாங்க...பாவம் அதுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...அதோட மம்மி,டாடி எல்லாம் ரொம்ப அழுதிருப்பாங்க இல்ல...அதானால இது எனக்கு வேண்டாம் அங்கிள்...’என்றாள்.

நான் வாயடைத்து போய் நின்று கொண்டிருந்தேன். என்னை ஏறிட்டு பார்த்தவள் ‘அங்கிள் இதை பத்திரமா அடக்கம் பண்ணிருங்க அங்கிள்...’என கூறிவிட்டுச் சென்றாள்....

ஏதோ போதி மரம் என்னிடம் உரையாடி விட்டு சென்றதைப் போல் உணர்ந்தேன்.