செவ்வாய், 27 அக்டோபர், 2009

இது ஒரு காதல் கதை....


வாழ்வில் சில நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுகிறது.அப்படி ஒரு அற்புதமான நாளை கடந்த ஒரு சில தினங்களில் நான் இந்தப் பதிவை இடுகிறேன்.......

அவனை நான் முதல்முதலில் சந்தித்தது ஒரு பாரில்(BAR) வைத்துதான்.சரியாக சொல்லவேண்டுமென்றால் அந்த சந்திப்பு நடந்து ஆறுவருடங்கள் ஆகிறது.எனது தாயின் ”திடீர்” மரணம் என்னை மிகவும் பாதித்திருந்த சமயம் அது.நான் என்னை எனது மதுவுடன் கலந்து கொண்டிருக்கும் போது அவன் கையில் மதுவுடன் என் அருகில் வந்தமர்ந்தான்,வேறு இருக்கை இல்லாததால்.

அந்த அரை இருட்டும்,ஏ.சி குளிரும் என்னை புகை பிடிக்க தூண்டியதால் சிகிரெட்டை எடுத்து வாயில் வைத்தேன்.அப்போது அவனும் சிகிரெட் பற்றவைத்தபடி இருந்ததால் சற்று நிதானித்து தீப்பெட்டிக்காக கை நீட்டினேன்.அவன் சிரித்தபடி எனக்கும் பற்றவைத்து விட்டான்.பரஸ்பரம் நிக்கோடின் புகையோடு அறிமுகமாகிக் கொண்டோம்.ஒவ்வொரு லார்ஜின் இடைவெளியிலும் எங்களது பகிர்வு படலம் தொடர்ந்தது......

மதுவின் கைங்கர்யமா? அல்லது எனது துயரின் தவிப்பா? தெரியவில்லை அந்த முதல் சந்திப்பிலேயே எனக்குள் அழுந்திக்கொண்டிருந்த எனது தாயின் மரணத்திற்கும்,அதனால் எனக்குள் ஏற்பட்டிருந்த ரணத்திற்கும் அவனிடம் ஆறுதல் தேடத்துவங்கியிருந்தேன்.அவனும் பல வருடங்கள் பழகிய தோழமையுடன் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.எந்த ஒளிவும் மறைவும் இன்றி நான் என் குடும்ப விவகாரங்களை அவனோடு பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ அவனும் தனக்குள் அறித்துக் கொண்டிருந்த தனது காதல் கதையயும் என்னோடு பகிர்ந்து கொள்ள துவங்கினான்......

அவன் தனது காதலுக்கு ஏழு வயதாகிறது என்ற அறிமுகத்தோடு ஆரம்பித்தான்.அவள் தான் தனது காதலை அவனிடம் முதலில் வெளிப்படுத்தியதாகவும், அவன் சிறு தயக்கத்துடன் அவளது காதலை ஏற்றுக்கொண்டதாகவும் சொன்னான்.அவன் தனது காதல் கதையை என்னிடம் சொல்லும் போது அந்த அறையின் இருளையும் தாண்டி அவனது முகம் மிகவும் பொலிவுடனும்,பூரிப்புடனும் காணப்பட்டது.ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கு உண்டான நேர்த்தியுடன் அவன் தனது காதல் அநூபவத்தின் மகிழ்ச்சியான பக்கங்களை எனக்கு புரட்டி கொண்டிருந்தான்.ஊடலும்,கூடலுமாய் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவனது காதலில் இரண்டு சம்பவங்களின் குறுக்கீடுகளால் அவனது காதல் பயணம் திசைமாற துவங்கியிருக்கிறது.

ஒன்று அவனது காதலியின் தங்கையின் திடீர் மரணம்.அதில் அவளது குடும்பமே நிலைகுலைந்து போயிருந்திருக்கிறது.அப்போது இவனும்,இவனது நண்பர்களுமே அவளது தங்கையின் இறுதிச் சடங்கின் காரியங்களை முன்நின்று செய்திருக்கிறார்கள்.அவளுக்கு உடன்பிறந்த ஆண்கள் இல்லையாதலால் இவனே ஓர் ஆண்வாரிசை போல அனைத்தையும் செய்திருக்கிறான்.அவளது குடும்பமே இவனிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்த போது தான் அந்த இரண்டாவது சம்பவம் நடந்திருக்கிறது.அது....

இவனது காதலியின் தமக்கை அவளது காதலனை கைப்பிடிக்க வீட்டிலிருந்து வெளியேறியது.கடைசி மகளை காலனும்,மூத்த மகளை காதலனும் கூட்டிச் சென்றதால் அவளது பெற்றோரின் ஒரே நம்பிக்கையாக இவனது காதலி மாற்றப்பட்டிருக்கிறாள்.அவர்கள் தங்களுக்கான ஆறுதலாய் அவளை அவளது தாய்மாமனுக்கு கல்யாணம் செய்துவைக்க தீர்மானித்திருக்கிறார்கள்.அவளது நிலை திரிசங்கு சொர்க்கமாய் மாற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவள் தற்கொலைக்கும் முயன்று பார்த்திருக்கிறாள்.ஆனால் அதுவும் நிறைவேறாமல் காலத்தின் விருந்தாய் மாறிப்போயிருக்கிறாள்.இவனோ அவளது நிலை கண்டு பதைத்து எதை கேட்டாலும் தருவேன் என காதல் போதையில் உளறியிருக்கிறான். அவளோ வேறு வழியின்றி இவனிடம் ”காதல் கருணை”கேட்டிருக்கிறாள்.இவனோ நிலை குலைந்து போயிருக்கிறான்.அந்த நிலையில் தான் எங்களது சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.....

அவன் தனது காதல் கதையை சொல்லிமுடிக்கையில் ஒருவித சூன்யம் எங்களுக்கிடையில் சூழ்ந்திருந்தது.எனக்கு ஆறுதல் சொன்னவனுக்கு அப்போது ஆறுதல் சொல்ல கூட என்னிடம் வார்தையில்லை.....அதனால் மீண்டும் ஆளுக்கு ஒரு லார்ஜ் மட்டும் ஆர்டர் செய்துவிட்டு அமைதியானேன்.மது வந்தது.....அருந்தினோம்....மீண்டும் சந்திப்போம் என உறுதி சொல்லிவிட்டு பிரிந்தோம்......

மீண்டும் ஒருவாரம் கழித்து அதே பாரில் வைத்து அவனை சந்தித்தேன்.அப்போது அவனது முகம் மிகவும் வாடிப்போயிருந்தது.நான் அவன் அருகில் போய் அமர்ந்தேன்.என்னை அடையாளம் கண்டு கொண்டு என் நலம் விசாரித்தான்.முன்னுரைகளின்றி என்னால் அப்போது அவனிடம் நேரடியாகவே அவனது காதலின் நிலை குறித்து கேட்கமுடிந்தது.அவனும் உரிமையோடு என்னிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.......

அவன் நேரடியாகவே போய் அவளது பெற்றோரை பார்த்திருக்கிறான்.அவர்களும் மிக தன்மையாகவே இவனிடம் அவர்களது நிலை குறித்து சொல்லி இவனை உதவிட வேண்டியுள்ளார்கள். வேறு வழியின்றி இவனும் அவர்களுக்கு உறுதியளித்தபடி திரும்பிவிட்டதாக சொன்னான்.அவனது நிலையை காண பரிதாபமாக இருந்த அதே நேரத்தில் அவன் மீது மரியாதையும் கூடிப்போயிருந்தது.....தனது காதலை தவிற வேறு எவருடைய மனநிலையையுமே பிரதானமாக நினைக்காத இன்றைய தலைமுறையினர் மத்தியில் இப்படியும் ஒருவனா? என்றிருந்தது.

அதன்பின் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்.எங்கள் நட்பு நாளொரு பாரும் பொழுதொரு பீருமாக தொடர்ந்தது.இப்படியே குடித்துக் கொண்டிருந்தால் கவலைகள் குறைந்து விடாது என போதையே புத்தி சொன்னது.அது போதியில் கிடைத்த புத்தியல்ல....என்றாலும் போதை சொன்னதை புத்தி கேட்டது.கவலைகளை மறக்க கவனத்தை திசை மாற்ற வேண்டும் என முடிவு செய்தோம்.

அதனால் ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு தொழில் தொடங்குவது என முடிவு செய்தோம்.அதனடிப்படையில் அத்தியாவசிய பொருள்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விற்கும் STOCKIST-களாக மாறினோம்.இந்த இடைவெளியில் அவனது காதலிக்கு கல்யாணமாகி அவளும் சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டிருந்தாள்.மீண்டும் அவனது பார்வை பாருக்குள் செல்ல துவங்கியது.எங்களது வருவாய்களெல்லாம் மதுவகைகளாக மாறிக்கொண்டிருந்தது.அந்த நேரத்தில் தான் கருணை அடிப்படையில் எனது அம்மாவின் வேலை எனக்கு கிடைத்ததற்கான உத்தரவு வங்கியிலிருந்து வந்தது.

அவனும் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னை வாழ்த்தி வழியனுப்பினான்.ராமநாதபுர மாவட்டதில் போய் பணியில் அமர்ந்தேன்.அவனோ தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் தொடர் நஷ்டத்தால் தொழிலை மூடியதாய் ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது சொன்னான்.பயிற்சி காலமாதலால் என்னாலும் ஊருக்கு அதிகம் செல்லமுடியாமல் போனது.வாரங்கள் நாட்களையும்,மாதங்கள் வாரங்களையும் விழுங்கி கொண்டு சென்றது.ஒருவழியாக மூன்று மாதங்கள் கழித்து ஊருக்கு செல்வதற்கு தோதாக மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது.ஊருக்கு வந்ததும் வராததுமாய் அவனை தொடர்பு கொண்டு பாருக்கு வரச்சொல்லி விட்டு அவனை காணச் சென்றேன்.

அப்போது அவனது முகத்தில் கொஞ்சம் தேஜஸ் கூடியிருந்தது.ஆளும் உற்சகமாயிருந்தான்.எனக்கு அவனை அப்படி பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.அவனது பொலிவிற்கான காரணத்தை கேட்டேன்.அவன் சிரித்தபடி அவனுக்கு துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணி கிடைத்துள்ளதாக சொன்னான்.ஆளுக்கொரு பீரை ஆர்டர் செய்துவிட்டு,’ வேறு ஏதாவது விசேஷம் உள்ளதா?’ எனக் கேட்டேன்.எனது அந்தக் கேள்வியை எதிர் பார்த்தவன் போல் சிறு தயக்கமுமின்றி அவளை மீண்டும் சந்தித்ததாக சொன்னான்.கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து கேட்கும் ஆவலும் வந்தது.அவனே தொடர்ந்தான்........

விசா புதுப்பிப்பதற்காக ஊருக்கு திரும்பியவளை மிக தற்செயலாக இவனது பிறந்த நாள் அன்று கடைத்தெருவில் வைத்து சந்தித்திருக்கிறான்.இவனது பிறந்தநாளை நினைவு கூர்ந்தவளாய் அவளும் வாழ்த்தியிருக்கிறாள்.சந்திப்பின் ஊடே செல்போன் நம்பர்களையும் பரிமாற்றி இருக்கிறார்கள்.வீட்டிற்கு வந்து தொடர்பு கொண்டவனிடம் மெல்ல மெல்ல அவளது தாம்பத்ய கொடுமைகளையும்,அவனது நினைவுகளை மறக்க முடியாத தன் நிலையையும் சொல்லி கண்ணீரோடு கரைந்திருக்கிறாள்.அவனது சமாதனங்கள் அவளிடம் தோற்றுப் போனதாகவும் சொன்னான்.

நான் அவளை அதுவரை ஒருமுறை கூட சந்தித்ததோ அல்லது பேசியதோ கூட கிடையாது.எனக்கு அவனை தெரியும் அவ்வளவுதான்.ஆனாலும் எனக்கு அப்போது அவனிடம் இப்படி கேட்க தோன்றியது.....

“மச்சான்! அவ திரும்பி வந்தா நீ ஏத்துக்குவியா...?” எனக்கேட்டேன்.
“டேய்! நான் அவள லவ் பண்றண்டா...”என்றான்.

ஒருவகையில் நான் அவனிடம் இந்த பதிலை எதிர்பார்த்தேன் என்பதும் உண்மை.என்னிடம் சட்டென்று சொன்ன இந்த பதிலை அவனால் அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன்....காரணம் அவளாலும் நான் அவனிடம் கேட்டதைப் போல் நேரடியாய் கேட்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கலாம் என தோன்றியது.

அதனால் நான் அவர்கள் இருவரிடமும் பேசவிரும்புவதாய் சொன்னேன்.அவனும் அவளிடம் கேட்டுச் சொல்வதாய் ஒப்புக்கொண்டான்.ஆனால் ஒரு அவசர அலுவலின் காரணமாக நான் மறுநாளே ராமநாதபுரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவர்களை சந்திக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டது.

நான் மீண்டும் வருவதற்கு நாளாகக் கூடும் என்பதாலும்,செல்போனிலோ தொலைப்பேசியிலோ பேசுவதை விட கடிதமே சிறந்தது என தோன்றியதாலும் நான் அவர்களிடம் நேரில் பேச நினைத்ததை ஒரு கடிதமாக எழுதினேன்.அதை அவளோடு சேர்ந்து படிக்க சொல்லி அவனிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பினேன்.

ஓரிரு நாளில் அவனிடமிருந்து எனக்கு போன் வந்தது.அவர்களிருவரும் சேர்ந்து வாழ தீர்மானித்திருப்பதாக சொன்னவன் அவளும் என்னுடம் பேச விரும்புவதாக சொன்னான்.ஏற்கனவே சொன்னது போல் நான் அதுவரை அவளை பார்த்ததோ பேசியதோ கூட இல்லை அப்படியிருக்கையில் அவள் என்னிடம் தன் வாழ்வின் மிக முக்கயமான ஒரு முடிவை எடுக்கும் போது ஆலோசிக்க சம்மதம் தெரிவித்து என்னிடம் பேச விரும்பியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.எனக்கு பெருமையாகவும் இருந்தது.நாங்கள் மூவரும் கான்பரன்ஸ்(CONFERENCE CALL) கால் மூலமாக பேசினோம்....

பல நாள் பழகிய தோழமையுடன் இருந்தது அவளது பேச்சு.எனது குடும்பச் சூழல் குறித்தும் அவளிடம் சொல்லி இருப்பான் போல் ஆதலால் அவள் மிக அக்கறையுடன் எனக்கு ஆறுதல் சொன்னாள்.அதன்பின் வழக்கமான கிண்டல் கேலிப்பேச்சுகளுக்கு பிறகு அவளது முடிவு குறித்து கேட்டேன்.அவள் தீர்க்கமாய் இருந்தாள்.எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.அவளது பெற்றோரின் நிலை குறித்து கேட்டேன்.பெற்றவர்களின் சுயநலத்திற்காக உணர்ச்சி வேகத்தில் செய்த ’தியாகம்’ தங்களது வாழ்க்கையை சூன்யமாய் மாற்றிவிட்டதாய் சொன்னாள்.

கண்கானாத தேசத்தில் அவளை கைபிடித்தவனின் சந்தேக கொடுமைகளை அவள் விவரித்த போது எனக்கு பிரகாஷ்ராஜ் படங்களின் நினைவுகள் வந்து போனது.அவள் அங்கு மீண்டும் திரும்பி போகபோவதில்லை என்றும் அவனிடம் விவாகரத்து கோரமுடிவு செய்திருப்பதாகவும் சொன்னாள்.அவள் பேசிக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் ஆணாக பிறந்ததற்கே எனக்கு அவமானமாக கூட தோன்றியது.’காலம்காலமாக இப்படி எத்தனை நூற்றாண்டுகளுக்கு நத்தைகளைப் போல் எங்கள் விருப்பு வெறுப்புகளை அடக்கிக் கொண்டே வாழ்வது?’என அவள் கேட்ட போது என்னிடம் மௌனம் மட்டுமே மிச்சமிருந்தது.

அவள் தரப்பு நியாயங்கள் எனக்கு மிகவும் இயல்பாகவும்,சரியாகவுமே தோன்றியது.ஏனென்றால் வாழ்க்கை என்பது ஒருமுறை.அந்த அற்புதத்தை கஷ்டப்பட்டு கடமைக்காக வாழ்ந்து கழிப்பதைவிட இஷ்டப்பட்டு அனூபவித்து வாழ்வதே சரி.

இப்போது எனக்கு என் நண்பனிடம் கேட்பதற்கே கேள்விகள் மீதம் இருந்தது......

அவனது இந்த முடிவு உணர்ச்சிவயபட்டதாக இருக்ககூடாது எனக்கேட்டுக் கொண்டேன்.அவன் தனது உறுதியை ஒரு அரைமணி நேர தொடர் உரையின் மூலம் உறுதிபடுத்த முயற்சித்தான்.அவன் பேசி முடித்ததும் அவள் தொடர்ந்தாள்.....அவனது உறுதியே தன்னை இப்படியொரு துணிச்சலான முடிவெடுக்க தூண்டியதாகவும் சொன்னாள்.அவர்களது இந்த முடிவு எனக்கு காதல் மேல் மேலும் அதிக மரியாதையை தந்தது.

அவர்களது துணிச்சல் பேச்சோடு நின்றுவிடவில்லை.அதேநேரத்தில் அவர்களது இந்த முடிவை நடைமுறை படுத்துவதும் அவர்களுக்கு அத்தனை இலகுவாக இல்லை.ஏனென்றால் இருவரும் வேறு வேறு ஜாதி,அவள் ஏற்கனவே திருமணமானவள் என எதிர்புகளுக்கான காரணங்கள் மிக நீளமாகவே இருந்தது.ஆனால் இந்த சமூகத்தின் அத்துணை கலாச்சார மூடத்தனங்களையும் எதிர்த்து போராட அவர்களிடம் காதல் இருந்தது. எனவே ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு அவர்கள் தங்களை தயார் படுத்த துவங்கினார்கள்.இன்னும் சொல்லப்போனால் ஆழம் தெரிந்தே காலை வைத்தார்கள்.

முதலில் அவன் உள்ளூரில் அல்லாமல் வேறு ஏதாவது வெளியூரில் வேலை தேடுவது என முடிவு செய்யப்பட்டது.பல இடங்களுக்கு விண்ணப்பித்ததில் அவனுக்கு மும்பை துறைமுகத்தில் வேலை கிடைத்தது.அவன் அங்கு வேலையில் போய் அமர்ந்தான்.ஓரிரு மாதங்களில் அவளை அங்கு அழைத்து கொள்வதாய் முடிவானது.அந்த இடைவெளியில் அவள் விவாகரத்திற்கு விண்ணபிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமாய் இல்லை.ஏனென்றால் அவளது தாயாரும் ஒரு வழக்கறிஞர் தான்.மேலும் அவளது வீட்டில் அவளது விவாகரத்து முடிவுக்கு கடும் எதிர்ப்பு வேறு.அவளது தாய் வழக்கறிஞராக இருப்பதால் அவரது சம்மதமின்றி அவளது விவாகரத்து வழக்கில் ஆஜராக எங்கள் ஊரில் வழக்கறிஞர்கள் யாரும் சம்மதிக்கவில்லை.அதனால் எனது நண்பன் ஒருவனின் உதிவியோடு வெளியூரிலிருந்து வேறு ஒரு வக்கீலை பிடித்து வழக்கு தொடுக்கப்பட்டது.

அவளுக்கு ’தாலிகட்டியவன்’ சிங்கப்பூரில் இருந்ததால் அவனால் தொடர்ந்து இரு சம்மன்களுக்கு கூட வரமுடியாமல் போனது.அவனும் அதற்குண்டான விளக்கமும் கொடுக்கவில்லை.அது வழக்கிற்கு சாதகமாகி அவளுக்கு வெகு விரைவிலேயே விவாகரத்தும் கிடைத்தது.விவாகரத்து பெற்ற கையோடு தான் மும்பையில் வேலைக்கு விண்ணப்பத்ததாகவும் அங்கு தனக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் வீட்டில் சொல்லிப்பார்த்தாள்.அவர்கள் சம்மதிக்க மறுத்தார்கள்.வீட்டை விட்டு வெளியேறினாள்.அவன் மும்பையில் இருந்ததால் நானே அவளை திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று வழியனுப்பிவைத்தேன்.அங்கே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.அங்கிருந்து கொஞ்ச நாட்களில் அவனுக்கு துபாய் துறைமுகத்தில் வேலை கிடைத்தது.இருவரும் துபாய் சென்றார்கள்.

இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தத்தம் பெற்றோர்களிடம் தாங்கள் சேர்ந்து வாழும் விஷயத்தை சொல்லி ஊர் திரும்பினார்கள்.இருவர் வீட்டிலும் கண்ணீரும்,மிரட்டலுமாய் அவர்களை பிரிக்க பார்த்தார்கள்.கடைசியில் அவர்களது காதலுக்கும்,உறுதிக்கும் முன்னால் இந்த சமூகத்தை பீடித்திருக்கும் ஜாதியமும்,கலாச்சாரத்தின் பெயரால் நடத்தப்பட்டு வரும் அபத்தங்களும் மண்டியிட்டன......
இப்போது அவன்,"மாபிள்ளை நாளைக்கு பார்டிக்கு வந்திடுன்னு" நாங்கள் முதலில் சந்தித்த பாருக்கு அழைத்துள்ளான்....

(குறிப்பு:இருவீட்டார் சமதத்துடன் கடந்த அக்டோபர் 25ஆம் அவர்களது திருமணம் இனிதே முடிந்தது.)