சனி, 26 மே, 2012

என்று தணியும் எந்தன் சுதந்திர தாகம்

அன்பானவர்களுக்கு

தியாகமே வாழ்வாகி விடுதலைப் போரிலும், இடதுசாரிகள் இயக்கத்திலும் பெரும் பங்களிப்பு செய்த வீராங்கனை, எளிய தாயுள்ளம் கொண்ட உன்னதத் தோழர் மீனா கிருஷ்ணசாமி தமது 90 ம் வயதில் இன்று காலை பிரியா விடை பெற்றார்.....
மகத்தான அந்தத் தோழர் நினைவுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன்..

                                           

தேசியத்தின் விளைநிலமான மதுரையில் 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்தேன். அக்கால கட்டத்தில் மதுரையின் தேச பக்தி வெள்ளம் யாரையும் தனக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. ருக்மணி லெட்சுமிபதியும், சரோஜினி நாயுடுவும் தங்கள் தோளில் கதரைப் போட்டுக் கொண்டு, கெஜக்கோலுடன் வீடு வீடாகச் சென்று கதர்த் துணியை விற்பனை செய்து வந்த காலமது.

எனது தந்தையார் கோபால்ராவ் எனது சிறுவயதின்போதே காலமாகிவிட்டதால், தாயார் லக்ஷ்மிபாயே குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.

எனது தாயார் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்திலும், சுதேசி துணி மறியலிலும் (அந்நிய துணி பகிஷ்காரம்) தீவிரமாக ஈடுபட்டவர். ஒரு முறை எனது தாயார் சுதேசி துணி மறியலில் ஈடுபட்டபோது அவரையும் அவரது தோழி சொர்ணம்மாளையும் தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி கைது செய்து வேனில் ஏற்றினான. வேன் ஊருக்கு வெளியில் வரும்வரை அவர்கள் இருவரையும் அடித்து உதைத்தான் கோவிந்தன். பிறகு அவர்களைப் பிறந்த மேனியாக்கிக் காட்டில் ஒரு பள்ளத்தில் தள்ளி விட்டுச் சென்று விட்டான். இருவரின் அலறலையும் கேட்டு ஓடிவந்த கிராமவாசிகள், அவர்களின் மானம் மறைக்கத் துணி கொடுத்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கூட எனது தாயார் தேசியப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இத்தகைய தேசபக்தி மிகுந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததால், எனக்கும் இயற்கையாகவே தேசிய உணாச்சி அதிகமிருந்தத

வாழ்க்கையில் ஜான்சிராணி லக்ஷ்மிபாய், சிட்டகாங் வீராங்கனை கல்பனாததைப் போன்று நானும் சாதனைகள் செய்யவேண்டும்; வெள்ளையர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று சபதமெடுத்தேன்.

தேசிய உணர்ச்சி அதிகமிருந்ததால் பன்னிரெண்டு வயதாக இருக்கையில் சுதேசி துணி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டேன். நீதிபதியிடம் 'பதினாறு வயது' என்று பொய் சொல்லிச் சிறை சென்றேன். பத்து நாட்கள் மதுரை சிறையில் வாசம் செய்த பிறகு கேரளம் கண்ணனூர் சிறைக்கு மாற்றினார்கள்.

நிலாவே வா!

கண்ணனூர் சிறையில் வெளியுலகத்தையோ, வானத்தையோ பார்க்க முடியாது. ஒரு நாள் வார்டன் அம்மாவிடம், "நிலாவைப் பார்க்க ஆசையாக இருக்கிறது" என்று சொன்னேன். மனிதாபிமானமிக்க அந்த வார்டன் எல்லோரும் உறங்கியபிறகு கதவைத் திறந்து எனக்கு நிலாவைக் காண்பித்து எனது ஆசையை நிறைவேற்றினார்கள்.

மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தபோது சுதேசி இயக்கத்திற்காக என் காதில் போட்டிருந்த சிறு கம்மலைக் கழற்றி அவரிடம் தந்தேன். அவர், "இனிமேல் நீ நகையே போடக் கூடாது" என்று என்னிடம் சொன்னார். அதன் பிறகு நானும் நகைகள் அணிவதையே நிறுத்திவிட்டேன்.

அப்போது காந்தி காதர், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, இந்தி படித்தல் ஆகிய தன் நான்கு அம்சத் திட்டத்தை நாடெங்கும் பிரயாணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார். அந்த திட்டத்தின்படி, இந்தி படிக்க தலைவர்கள் என்னைத் தேர்வு செய்தார்கள்.

ஞானயாத்திரை

பி.ராமமூர்த்தி வழிகாட்டுதல்படி 'ஞானயாத்திரை' என்ற பெயரில் நானும் சில இளைஞர்களும் பிரபல இந்தி கவிஞரான மகாதேவி வர்மா நடத்தி வந்த 'மகிலா வித்யா பீடத்தில்' சேர்ந்து இந்தி படிக்க அலகாபாத் சென்றோம்.

மகாதேவி வர்மா, பதினான்கு வயதான நான் இந்தி படித்தால் மட்டும் போதாது என்று கூறி, முறையான கல்வியும் பயில்வதற்காக ஆறாம் வகுப்பில் சேர்த்தார். ஏழு ஆண்டுகள் அலகாபாத்தில் கல்வி பயின்று, பனாரஸ் மெட்ரிக்கில் தேறினேன். இந்தியில் உயர் பட்டமும் பெற்றேன்.

வாழ்க்கைப் பயணத்தில் எனது துணைவராக இணைந்த திரு எஸ் கிருஷ்ணசாமி அப்போது காசியில் உள்ள பனாரஸ் சர்வகலாசாலையில் தேசிய கல்வி பயின்று வந்தார். என்னை சந்தித்துப் பேச அவர் சில சமயம் அலகாபாத்திற்கு வருவதுண்டு.

காந்தி ஆசிரமம்

1939ம் ஆண்டு மதுரைக்குத் திரும்பினேன். அப்போது வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமத்திற்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காந்தி ஆசிரமத்தில் சேவை புரிந்தேன். பல தேசிய தலைவர்களை அருகிலேயே பார்க்கவும், அவர்கள் உரையைக் கேட்கவும் அறிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

ஒருமுறை நேருஜி சீனப் பயணம் செய்துவிட்டு வருகையில் ஒரு பேனாவிற்குள் அடங்கும் பட்டுத் துணியை வாங்கிவந்து எங்களிடம் காண்பித்து எங்களை அசர வைத்தார்.

செய் அல்லது செத்துமடி!

1942ம் ஆண்டு ஆகஸ்டு கிளர்ச்சியில், காந்தி கைதாகும்போது அவருக்கு வெற்றித் திலகமிட்டு வழியனுப்பினோம்.

'செய் அல்லது செத்துமடி' (Do or Die) என்ற கோஷத்தை எழுப்பிக் கொண்டு வார்தாவின் வீதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களுக்குக் கிளர்ச்சியூட்டினோம்.

1942
ல் 'வெள்ளையனே வெளியேறு ' போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு ஜபல்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டேன். பதின்மூன்று மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, 1943ல் விடுதலையாகி மீண்டும் மதுரைக்கு வந்தேன்.

காங்கிரசிலிருந்து கம்யூனிசத்திற்கு

அச்சமயம் மக்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். ராட்டையும், கதரும், தீண்டாமையும் மட்டும் எப்படி சுதந்திரத்தை வாங்கித் தரும் என்ற கேள்வியை மக்கள் எழுப்பினர். அக்கேள்வி என்னுள்ளும் எழுந்தது. சிறையிலிருக்கையில் பொதுவுடைமை நூல்களை நிறைய படித்ததால் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையின்பால் மெல்ல மெல்ல பற்று உண்டாயிற்று.

தோழர் எஸ் கிருஷ்ணசாமி அப்போது மதுரையில் சோஷியலிஸ்ட் கட்சியின் கிளையினை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றி வந்தார். காலத்தின் கட்டாயத்தால் சோஷியலிஸ்ட் கட்சியே மெல்ல மெல்ல 'கம்யூனிஸ்ட்' கட்சியாக உருவானது. நானும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, சுரண்டல் இல்லாத சமுதாயம் உருவாக்க உறுதி கொண்டேன்.

பெப்பர்மின்ட் கல்யாணம் !

1944ல் மதுரையில் வைத்து எனக்கு திருமணம் நடந்தது. கல்யாண நாளன்று காலையில் மறியல், ஆர்ப்பாட்டம், மாலையில் கல்யாணம் என்று முடிவு செய்திருந்தோம். அன்று காலை மறியலில் ஈடுபட்டதற்காக வேண்டுமென்றே கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டேன்.

 அன்று மாலைப் பொழுதில் எனக்கும், எஸ் கிருஷ்ணசாமிக்கும் தோழர் பி ராமமூர்த்தி தலைமையில் கே பி ஜானகி அம்மாள் மாலை எடுத்துக் கொடுக்க திருமணம் நடந்தது. திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின் நாங்களிருவரும் மாலை மாற்றிக் கொண்டோம்.

M.R.S. மணி என்ற தோழர் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பெப்பர்மின்ட் வாங்கி வந்து கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுத்து விழாவை நிறைவு செய்தார். எங்கள் கல்யாணம் எளிமையான கல்யாணம்.

அன்றிரவு அம்பாள் ஓட்டலில், எனக்கும் எனது கணவருக்கும் தலைவர் பி ராமமூர்த்தி ஒரு தோசையும், காப்பியும் வாங்கித் தந்து கல்யாண விருந்து வைத்தார்.

பஞ்சும் பசியும்

1944 , 45 ல் கே.பி ஜானகி அம்மாளுடன் சேர்ந்து ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரிசி, பருப்பு, விறகு, மண்ணெண்ணெய்க்காகப் போராட்டங்கள் நடத்தினேன்.

குறிப்பாக பெண்களின் பசியைப் போக்க, மதுரை ஹார்வி மில்லில் பனி புரியும் பெண் தொழிலாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி, ஒரு குறிப்பிட்ட தினத்தன்று ஊர்வலத்திற்கு வர ஏற்பாடு செய்தோம்.

 ஏற்கெனவே சொல்லிவைத்தபடி, மில்லின் பெண் தொழிலாளர்கள் அன்றைய தினம் பகல் 12 மணிக்கு தங்களது ஷிப்டு முடிந்ததும் தலைகளை உதறாமல் அப்படியே பஞ்சுத் தலையுடன் ஊர்வலமாகத் திரண்டு வந்தனர்.

 மதுரை ஆற்றுப் பாலம் முழுவதும் வெண்பஞ்சுத் தலைகளாக இருந்தது. அந்த பஞ்சுத் தலைகள் பனித்தலைகளாகத் தெரிந்தன.அந்த ஊர்வலத்தைப் பார்க்கையில், இமயமலையே நகர்ந்து வருவதைப் போலிருந்தது. ஊர்வலமாகச் சென்று நாங்கள் கலெக்டரைச் சந்தித்துப் பேசி கஞ்சித் தொட்டிகளைத் திறக்கச் செய்தோம்.

 மக்களின் தோழன்

 பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று அவர்களின் துயரங்களைத் துடித்தது அன்று கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. ஒவ்வொரு நாளும் விடியற்காலை ஆறு மணிக்கே ரேஷன் கடைக்குச் சென்று ஏழைகளுக்கு அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணிப்போம். அரிசி மூட்டைகளும், எண்ணெய் டின்களும் காலியான பிறகு தான் நாங்கள் வீடு திரும்புவோம். இந்த இயக்கங்களையும், போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர் எம்.ஆர்.வெங்கட்ராமன்.

இந்த இயக்கங்கள் தான் கம்யூனிஸ்டுகள் தேச விரோதியல்ல, மக்களுக்காக உண்மையாகப் பாடுபடக் கூடியவர்கள், கண்ணியமானவர்கள் என்ற எண்ணப் போக்கை மக்களிடம் தோற்றுவித்தது.

1945ல் எனது கணவர் எஸ் கிருஷ்ணசாமி பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகையில் ஹார்வி மில்லில் ஒரு மாபெரும் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அதில் கலந்து கொள்கையில் எனது மகன் மோகனுக்கு ஒரு வயது. மேலும் என் வயிற்றில் மூன்று மாதக் கரு. அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் எனக்கு கருச் சிதைவு ஏற்பட்டது. ஹார்வி மில் நிர்வாகத்தின் தாக்குதலைத் தடுத்தபோது, ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்குதான் பிற்காலத்தில் மதுரை கம்யூனிஸ்ட் சதி வழக்கு என்று அறியப்பட்டது. இந்த வழக்கிற்காக கட்சியின் முக்கிய தலைவர்களையும், தொண்டர்களையும் தேடித் தேடி போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் ஆறேழு மாதங்களாகச் சிறையிலிருந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி பெண்களால் தான் நடத்தப் பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் 1947 ஆகஸ்ட் மாதம் விடுதலையாகி வரும் வரை, ஆறேழு மாதங்கள் கம்யூனிஸ்ட் கட்சியைக் காப்பாற்றி அதன் தலைவர்களிடம் திருப்பிக் கொடுத்த பெருமை பெண்களையே சாரும்.

செங்குருதிப் புனல்

1948-50 காலகட்டத்தில் இந்தியாவெங்கும் எதேச்சதிகாரம் கோலோச்சியது. தமிழகத்தின் சிறைகளில் கம்யூனிஸ்டுகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து இரத்தம் சிந்திய காலமது. குறிப்பாக கடலூர் சிறையில் கம்யூனிஸ்டுகளின் செங்குருதி புனலாக ஓடியது. கட்சியின் அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

வறுமையும் சிவப்பும்

1950ல் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்து பார்த்தால், கட்சியிடமே பணமில்லை; எங்களிடமும் பணமில்லை; வயிறு காய்ந்தது; வறுமை துரத்தியது. குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை அதிகமானது.

 இந்தி பிரச்சார சபாவில் டீச்சர் வேலை கேட்டுச் சென்றேன். கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டேன் என்று கடிதம் எழுதி அதில் என்னைக் கையெழுத்திடச் சொன்னார்கள். கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு வெளியே வந்தேன். வறுமையும், பசியும் நிழலைப் போல் எங்களைப் பின் தொடர்ந்து வந்த காலமது. இந்தி ட்யூஷன் எடுத்துக் குடும்பத்தை சில காலம் ஓட்டினேன். பின்னர் எனது கணவர் ஜனசக்தியிலும், நியூ செஞ்சுரி புத்தக நிலையத்திலும் நிர்வாகியாகப் பணியாற்றினார். நிலைமை சிறிது சீரானது.

 நல்ல டீச்சர்

 எனக்கும் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் உதவியால் அவரது சிந்தாதிரிப்பேட்டை ஹை ஸ்கூலில் இந்தி டீச்சர் வேலை கிடைத்தது. அந்தப் பள்ளியிலேயே இருபத்தியெட்டு ஆண்டுக்காலம் பணியாற்றி 1980ல் ஓய்வு பெற்றேன். அந்த வருடத்திலேயே எனது கணவரையும் இழக்க நேரிட்டது.

 1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டபோது நானும் எனது கணவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே எங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தோம். கொள்கைகளில் மாறுபட்டாலும், எங்களுடன் எம் ஆர் வெங்கட்ராமனும், பி. ராமமூர்த்தியும் இறுதிவரை நட்புறவோடு தான் பழகி வந்தனர்.

 சுதந்திர தாகம்

 காலங்கள் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்திற்காகவும், பாட்டாளிகளுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்ட எனக்கு இன்று கட்சி இயக்கங்களில் பங்கு பெறாமல் இருப்பது சந்தோஷத்தைத் தரவில்லை. கண்ணொளி பாதிக்கப்பட்டு இருப்பதால், எனது குடும்பத்தினர் நான் தனியாக வெளியே போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கின்றனர். அவர்களுக்கு என்மேல் அவ்வளவு அக்கறை.

 ஆனால் சின்னப் பிள்ளைகளை வெளியே போகக் கூடாது என்று சொல்லும்போது அவர்களுக்கு வருமே கோபம், அதைவிட பல மடங்குக் கோபம் எனக்கு வருகின்றது. என்ன செய்வது? காந்தி வாழ்ந்த காலத்தில் பிறந்த எனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சுதந்திர தாகம் தணிந்து விடுமா?

 எழுத்தாக்கம்: ராஜன் பாபு (இந்தியன் வங்கி)

நன்றி: பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி: ஆகஸ்ட் 2006
தொகுப்பு : எஸ் வி வேணுகோபாலன்




                                    
                                                             



கருத்துகள் இல்லை: