செவ்வாய், 8 மே, 2012

கண்ணகி நின்னை காமுறுகிறேன்....






கண்ணகி நின்னை காமுறுகிறேன்….

கயவர்கள் போதித்த கற்பை

உரைசால் பத்தினியாய்

ஏந்தி நின்றமைக்காய் அல்ல…..



கண்ணகி நின்னை காமுறுகிறேன்…..

கோவலன் கேவலனாய்

மாறிய பின்பும்

காதலோடு காத்திருந்தமைக்காய் அல்ல…..



கண்ணகி நின்னை காமுறுகிறேன்…..

கொலு மண்டபத்தில் சிலம்புடைத்து

கணவன் கள்வனல்ல வென்று

நீதியை நிலை நாட்டியமைக்காய் அல்ல…..



கண்ணகி நின்னை காமுறுகிறேன்…..

நீதி மறுக்கப்பட்ட நாட்டில்

நிரபராதி யொருவன்

நியாயமின்றி அதிகாரச் செருக்கிற்கு

பலியான பின்பும்

நமக்கேன் வீண் வம்பு……

நாட்டில் நடக்கும் அநியாயங்களை

நாம் ஏன் தட்டிக் கேட்க வேண்டும்?

நாமுண்டு நம் தேவையுண்டு

நமக்கென்று வந்தால் பார்த்துக் கொள்ளலாம்….

அண்டை வீடு பற்றி எறிந்தால்

நமக்கென்ன….? என்று

கண்டும் காணாமல் போன

கயவர்களை….. சுயநல பேடிகளை…..

எரியும் தனல் கொண்டு

அழித்தாயே!!! -அதற்காகவே

கண்ணகி நின்னை காமுறுகிறேன்….

கருத்துகள் இல்லை: