வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

பிப்ரவரி28 தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் ஏன்?




உலகின் மிகப்பெரும் பொருளாதார மேதையாக அறிமுகப்படுத்தப்பட்ட மௌனச் சாமியாரின் ஆட்சியில் தற்போது கடுமையான விலைவாசி உயர்வினால் பெரும்பான்மைக்கும் அதிகமான குடிமக்களின் அடிப்படை வாழ்வாதரங்கள் கூட கேள்விக்குறியாகியுள்ளது.



உழைக்கும் வர்க்கத்தின் மீது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான தாக்குதல்களையும் இந்த முதலாளித்துவ அடியாட்கள் தொடுத்து வருகிறார்கள். மிக நைச்சியமாய் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும், போராடிப் பெற்ற சலுகைகளையும் பறிக்கும் வேலைகளையே தொடர்ந்து இந்த அரசாங்கம் செய்து வருகிறது.


ஏன் இந்த அரசாங்கம் தொழலாளர்களின் உரிமைகளை பறிப்பதில் தற்போது இத்தனை வேகமாய் உள்ளது?


தொன்னூறுகளின் துவக்கத்திலேயே உலகமயமாக்கலை தமது புதிய பொருளாதார கொள்கையாக இதே காங்கரஸ் ஆட்சியாளர்கள் அறிவித்து கொண்டாலும் அவர்களால் முழுவீச்சாக பொதுத்துறை நிறுவனங்களை ஏகாதிபத்திய அரசாங்கங்களின் விருப்பத்துக்கேற்ப பன்னாட்டு பெருநிறுவனங்களிடமும் இங்குள்ள பெருமுதலாளிகளிடமும் முழுவதுமாய் ஒப்படைக்க முடியவில்லை. அதற்கிருந்த காரணிகளில் முக்கியமானதாய் இருந்தது இடதுசாரிகளின் அரசியல் ஆதிக்கமும், இந்திய தொழிற்சங்கங்களின் வலுவான கட்டமைப்பும் தான். அதனால் முதலில் அவர்களால் அந்நிய முதலீடுகளை நேரடியாக பொதுத்துறைகளில் அனுமதிக்க முடியவில்லை.

அதனால் ”தேசத்தின் வளர்ச்சி” என்னும் பெயரில் அந்நிய முதலீடுகளை தனியார் தொழிற்சாலைகள் போன்ற விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் புகுத்தினார்கள். அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிகளுக்கு அவர்கள் அப்போது நினைத்தும் பார்த்திராத ஊதியங்களை வழங்கி அதற்கு பதிலாக அவர்களிடம் காலநேரமற்ற உழைப்பையும், அடிப்படை தொழிற்சங்க உரிமைகளையும் பறித்துக் கொண்டன அந்த பன்னாட்டு நிறுவனங்கள். அவர்களும் ”விட்டில்பூச்சி மனிதர்களாய்” ஆகிப்போனார்கள். இந்தக் காலகட்டத்தில் கணிணியின் பயன்பாடும், அது சார்ந்த தொழிற்நுட்ப வேலைகளும் அதிகமாய் உருவெடுக்க ஆரம்பித்தது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்கள் கடைகளை பரப்ப ஆரம்பித்தார்கள். இதனால்


இரண்டு விஷயங்கள் நடந்தேறின......

ஒன்று......

இந்த அபரிவிதமான பணப்புழக்கம் நடுத்தர வர்க்கத்திலேயே ஒரு புதிய மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்கியது. அதன்விளைவாக பன்னாட்டு நிறுவன வேலை மோகம் மலேரியாவைப் போல் பரவத் துவங்கியது. அதேசமயம் அரசாங்க உத்தியோங்களின் மீதான மோகம் குறையத் துவங்கி பட்டதாரி இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள். அதற்கு ஏதுவாக அந்நிறுவனங்களும் கல்லூரி வளாகங்களை வேலைவாய்ப்பு சந்தைகளாக மாற்றினார்கள்.

கல்வி சாலைகள் வியாபார கூடமாக மாற்றப்பட்டது. மாணவர்களும் பந்தைய குதிரைகளாக மாற்றப் பட்டார்கள். ஒழுக்கத்தையும், அறிவையும் போதிக்க வேண்டிய கல்வி அடிமைதனத்தையும், வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளையுமே கற்றுத் தரலாயின. இதனால் இந்த தலைமுறையே ”கார்பரேட் அடிமைகளாக” உருவெடுத்து போனார்கள்.

இரண்டு.....

இந்தக்காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிநியமனங்களும் வெகுவாக குறைக்கப் பட்டன. அல்லது முற்றிலுமாய் நிறுத்தி வைக்க பட்டது. ஆனால் வேலைபளுவோ பல நூறு மடங்குகளாக அதிகரிக்க துவங்கின. இந்த பணிச்சுமையின் காரணமாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பணிச்சுமை கூடிப்போனது.


அதிகரித்து போன பணிச்சுமையை எதிர்கொள்ள ஆங்காங்கே தற்காலிகப் பணியாளர்கள் தினக்கூலிகளாக நியமிக்க படலாயினர். அப்படி தற்காலிகமாய் நியமிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு நிகரான எந்தவொரு உரிமையையும் வழங்கப்படவில்லை. ஆக இங்கும் தொழிசங்க அரணில்லா “நவீன கொத்தடிமைகள்” உருவாகத்துவங்கினார்கள்.

அதேசமயம் பொதுமக்கள் மத்தியிலும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கப் படுவதே இதெற்கெல்லாம் ஒரே தீர்வாகவும் பேசப் பட வைக்கப்பட்டது. அதாவது பெரும்பான்மை சமூகத்தை தனியார்மயத்தை நோக்கி பண்படுத்தும் வேலைகள் நடந்தேற துவங்கின.

இந்தச் சூழலில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கிய முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி பல பன்னாட்டு நிறுவனங்களையும் ஏகாதிபத்திய நாடுகளையும் மிகப்பெரும் சிதைவுக்குள்ளாக்கியது. இந்த வீழ்ச்சியில் உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வியபோது. இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் சின்னஞ்சிறு சேதாரம் கூட இல்லாமல் கம்பீரமாக நிலைத்து நின்றது. (இதற்கும் இந்திய தொழிற்சங்கங்களின் வலுவான கட்டமைப்பே காரணம்.). இதனால் பன்னாட்டு நிறுவன மோகம் பிடித்து இருந்தவர்கள் எல்லாம் மொத்த மொத்தமாய் பொதுத்துறைகளை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளார்கள்.

முதலாளித்துவ அடியாட்களோ தற்போது இலாபகரமாய் இயங்கி வரும் பொதுத்துறைகளை பெருமுதலாளிகளுக்கும், அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்க முடிவு செய்துள்ளது. அப்படி தனியார்மய படுத்தப் படும் போது தொழிற்சங்க இடையூறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவே தற்போது தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வேலைகளில் தீவிரமாய் இறங்கி உள்ளது.

இதை எதிர்தே வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் நடத்தப்படும் இவ்வேலை நிறுத்தம் வெல்லட்டும்!!!!!

1 கருத்து:

rajamelaiyur சொன்னது…

//ஏன் இந்த அரசாங்கம் தொழலாளர்களின் உரிமைகளை பறிப்பதில் தற்போது இத்தனை வேகமாய் உள்ளது?

//

இது அமைச்சர்களுக்காக உள்ள அரசாங்கள் .. மக்களுக்காக அல்ல