வியாழன், 14 ஏப்ரல், 2011

நான் பேசுகிறேன்....


“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.” என்கிறது கீதை.

மேற்கூறிய ‘அறிவுரையை’ சிலாகிக்காத ஆன்மீக வியாதிகளே இல்லை. பார்பனிய வேதத்தின் ‘மகிமை’யே இதுதான். மனிதகுலத்திற்கு விரோதமான சித்தாந்தங்களை கூட மிகவும் ஏற்புடையதாக மாற்றும் வித்தை அறிந்த கயவர்களின் வேதம் அது. ஏனென்றால் இதைவிட மிக நைச்சியமாக யாராலும் அடிமைத்தனத்திற்கு வக்காளத்து வாங்கி இருக்க முடியாது.

கீதையின் இந்தச் சாரம் நமக்குள் விதைக்க விரும்புவது என்னவென்றால் சுயமரியாதையை துறந்து நமக்கு ‘விதிக்கப்பட்ட’ அடிமைத்தனத்தை எந்தவித எதிர்ப்புகளுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே!

நடந்தவைகள் அனைத்தையும் நாம் நல்லவைகளாய் மாத்திரம் கொள்ள வேண்டுமாம். அது எப்படிச் சரியாகும்…? பிறப்பு என்பது ஒருமுறை தான். அதில் மனிதராய் பிறந்த நாம் ஏன் சக மனிதனிடம் ஜாதியின் பெயரால் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்? எப்படி நம்மைச் சுற்றி நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நல்லவைகளாய் எடுத்துக் கொள்ள முடியும்?

எதனைப்பற்றியும் கவலைப்படாமல் நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்கும் என முடங்கிப்போவதற்கு நாம் என்ன மாக்களா…?

எந்த முயற்ச்சியும் இன்றி சோம்பிக் கிடந்துவிட்டு நமக்கு நடப்பவைகள் எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் என எதிர்பார்ப்பது அறிவீனம் இல்லையா…? அது பேராசையல்லவா…?

நமது உழைப்பினையும்,விலை மதிப்பற்ற நேரத்தையும் உறிந்து விட்டு நமது உரிமைகளையும், உடைமைகளையும் பறித்துக்கொண்டு கொழுத்துச் செழிக்கும் பெருமுதலாளிகளின் கூட்டத்திடம் நாம் இழந்தது எதுவும் இல்லை என ஏற்றுக்கொள்ளச் சொல்வது அயோக்கியத்தனமானது இல்லையா…? நமது இந்த இழப்புகளுக்காக போராட்டங்களல்ல சிறு கதறல் கூட இருக்கக் கூடாது என்றால் இதனைவிட கயமைத்தனம் வேறென்ன இருக்க முடியும்…?

நமது ஒவ்வொரு துளி வியர்வையாலும், முயற்சிகளாலும், தியாகங்களின் விளைவுகளாலும் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் மீது நமக்கு உரிமையில்லையா…? நாம் நமது உழைப்பிற்கு எஜமானர்கள் இல்லையா…? நமது சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் நாம் தானே உடைமையாளர்கள்…? உரிமை என்பது அவரவர் உழைப்பை சார்ந்த விஷயமல்லவா…? அதனை எப்படி மற்றொருவருக்கு நம்மால் கைமாற்றி விட முடியும்?

தோழர்களே!

இப்படிப்பட்ட கேள்விகள் எதுவும் நமக்குள் எழுந்துவிட கூடாது என்பதால் மிகத் தெளிவாக ஜாதியக் கட்டுமானத்தை கொண்டு நம்மை அடிமைப்படுத்திக் கொண்டது அன்றைய பார்பனியம். நம்மைக் கொண்டே நம்மை அடிமைபடுத்தும் இந்த ஜாதிய கட்டமைப்பைத் தான் இன்றளவும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்கிறோம்.

மூத்திரச்சட்டியை வைத்துக் கொண்டு தனது தொன்னூறாவது அகவையிலும் நம்மை சிந்திக்க வைக்க பயணித்துக் கொண்டே இருந்த ஈரோட்டு சிங்கத்தின் போதனைகள் இன்னும் நம் காதருகே ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அதற்கு செவிமடுப்போமா…?

1 கருத்து:

சாமக்கோடங்கி சொன்னது…

ஓராயிரம் பெரியார் வந்தாலும் நாம் திருந்த மாட்டோம்.. சில விஷயங்கள் ரத்தத்தோடு கலந்து விட்டன நண்பரே..