வெள்ளி, 10 ஜூலை, 2009

நான் பேசுகிறேன்....


தொடர்ந்து எங்கள் வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை எதிர்த்து எங்களது தொழிற்சங்கத்தின் சார்பில் இயக்கங்கள் நடந்து வருவதால் ஒரு சிறு இடைவேளை விழுந்து விட்டது.இந்த இடைவேளையில் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.சரி ஒவ்வொன்றாய் பார்போம்....

***இந்திய அரசின் குற்றவியல் சட்டம் 377-ன் கீழ் ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது என தண்டிப்பது அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்ற (இந்திய) வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.பாராட்டுக்குறியது.

மேலை நாடுகளில் ஓரின ஜோடிகள் சட்டப்பூர்வமாக பதிவு செய்வது நடைமுறையில் இருந்தாலும் கலாச்சாரம்,கருமாந்திரம் என உளரி கொட்டும் மூடர்கள் நிறைந்த நமது தேசத்தில் இந்த தீர்ப்பு நீதிமன்றங்களின் மேல் மரியாதையை அதிகரிக்க செய்கிறது.

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த தீர்ப்பு வந்த தினமே இந்திய ஓரினத் தம்பதிகளின் சுதந்திர தினம் ”.

***நீதிபதி ரகுபதி தன்னை ஒரு மத்திய அமைச்சர் அவருக்கு வேண்டிய ஒருவருக்கு ஜாமீன் தரச் சொல்லி மிரட்டியதாக பகிரங்கமாக சொன்னது நாடு தழுவிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் சாமான்யர்களின் நம்பிக்கைச் சின்னங்கள்.

அப்படிப்பட்ட நீதிமன்றங்களை ஆளும் நீதிபதிகளை மிரட்டியோ அல்லது வேறு வகையிலோ அடிபணிய வைக்க முடியும் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவர் தன்னை சர்வாதிகாரியாக கருதுகிறார் என்றே அர்த்தம்.அப்படிப்பட்ட ஒருவர் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் ஒளிந்திருப்பது நம் ஜனநாயகத்திற்கே ஆபத்தானது.

அந்த ஜனநாயக விரோதியை அடையாளம் காட்டத் தவறுவது குற்றத்திற்கு துணை போவதற்கு சமம்.ஆகவே தன்னை மிரட்டியவரை மக்கள் மன்றத்திற்கு முன் அம்பலப்படுத்துவது நீதிபதி ரகுபதியின் ஜனநாயக கடமை.

***அவனது திறமையாலும்,விடா முயற்சியாலும்,தன்நம்பிக்கையாலும் அவனை நிராகரித்தவர்களும்,வெறுத்து ஒதிக்கியவர்களும் கூட அவனை கொண்டாட செய்தான்.

ஐந்து வயதிலே தொழில்முறை நடனக்குழுவிற்கு வந்து தன் குழந்தைபருவத்தை தொலைத்தவன்.அதை மீட்டெடுக்கும் விதமாக 2700 ஏக்கர் பரப்பளவில் கலிபோர்னியாவில் நெவர்லேண்ட் ராஞ்ச் என்னும் குழந்தைகளுக்கான மாளிகை கட்டி அதில் தானும் ஒரு குழந்தையாக வாழ முயற்சித்தான்.ஆனால் சில சுயநல விஷமிகளால் வீண் பழிக்கும் கடும் விமர்சனங்களுக்கும் ஆளான போதும் அவனை கோடிக்கணக்கான இதயங்கள் நேசிக்கவே செய்தன.

உலகின் எல்லா மூலைக்கும் தன் இசைதிறமையாலும், நடன அசைவுகளாலும் அவன் அறிமுகமாகி புகழும்,பணமும் அவனை வந்து சேர்ந்த போதும் அவன் நாடியது தனிமையும், நிம்மதியுமே. நிம்மதியாய் துயில மாத்திரைகள் வாங்கினான் அவன் உயிரை விலையாய் கொடுத்து.

ஆம்!இப்போது நிம்மதியாய் துயில்கிறான்.....மைக்கேல் ஜாக்சன்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்