செவ்வாய், 3 நவம்பர், 2009

இனி தடையேதும் இல்லை....


விடிகாலை மூன்று மணி ஆகிவிட்டது நான் எங்கள் ஊரின் பேருந்து நிலையம் வந்திறங்கும் போது.பௌர்ணமி நிலவான் தன் ஒளிக்கதிர்களை கொண்டு இருளை துரத்திக்கொண்டிருந்தான்.மழையின் கைங்கர்யத்தால் தார்ச்சாலைகள் நீர்தேக்கங்களாக மாறியிருந்தன.

தூக்க கலக்கமும்,உடல் அசதியும் ஒன்றிணைந்து என்னை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்த போதும் என் மனம் வீரச்சமர் புரிந்து வெற்றிக்களிப்புடன் தன் தாய்மண்ணிற்கு திரும்பிய ராணுவ வீரனைப் போல் உற்சாகமாயிருந்தது.

காரணம்...........

எனது தொழிற்சங்க வாழ்வின் மற்றுமொரு முக்கியமான தினமாய் முந்தைய நாள் மாறிப்போய் இருந்ததே....

எங்களது வங்கியில்(பாண்டியன் கிராம வங்கி) முந்நூறுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவது குறித்தும்,அவர்களது பணியை நிரந்தரமாக்க கோரி எங்கள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் குறித்தும் கடந்த ஜூன் மாதமே ”நவீன கொத்தடிமைகள்” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன்.

(அந்தப் பதிவின் விளைவாக எங்கள் நிர்வாகத்தால் நான் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும் அதை எதிர்த்து எமது தொழிற்சங்கத்தின் உதவியோடு போராடி மீண்டும் பணிக்கு திரும்பியது குறித்தும் “எங்கள் போராட்டம்....”,”போராட்டம் வென்றது..” என்ற எனது முந்தைய தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்)

அந்த தற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.அதன் தொடர்ச்சியாக மதுரையில் தொழிலாளர் நல ஆணையாளர் முன்பு ’தற்காலிகப் பணியாளர்களை’ பணி நிரந்தரம் செய்யக் கோரி ’தொழிற்தாவா’ ஒன்று தொடுத்தோம்.அதன் விளைவாக வங்கியின் நிர்வாகத் தரப்பையும்,எங்களையும்(தொழிற்சங்கம்) அழைத்து தொழிலாளர் நல ஆணையாளர் ’உடன்படிக்கை’ பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

வங்கி நிர்வாகமோ கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் முழுப்பூசனியை சோற்றில் மறைப்பதைப் போல் ‘தற்காலிகப் பணியாளர்கள்’ என்று எவருமே எங்கள் வங்கியில் இல்லை என கூறி வருகிறார்கள்.மேலும் சத்தமில்லாமல் தற்காலிகப் பணியாளர்களை கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி பணி நீக்கம் செய்யும் முனைப்பில் இறங்கினார்கள்.அதனால் நாங்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது எனக் கோரியும், தற்போதுள்ள நிலையிலேயே status quo maintain செய்யப்பட வேண்டும் என்று கோரியும் writ of mandamus வழக்கு ஒன்று பதிவு செய்தோம்.

எமது தரப்பு நியாயங்களை நடுநிலையோடு பார்த்த மதுரை உயர்நீதிமன்றம் எங்கள் வழக்கை ஏற்றுக் கொண்டதோடு,வங்கி நிர்வாகம் தற்காலிகப் பணியாளர்களுக்கான வழக்கு முடியும் வரை யாரையும் பணிநீக்கம் செய்ய கூடாது என ஆணையிட்டு தடை உத்தரவை நேற்று வழங்கியது.இது வெறும் தடை உத்தரவு மட்டுமல்ல.....

இது அந்த தற்காலிக ஊழியர்களின் இருப்பை அங்கீகரிக்கும் உத்தரவு.இது எங்கள் போராட்டத்திற்கும் அந்த இளம் தோழர்களின் எதிர்காலத்திற்குமான கரைகள் வெகு தொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் கலங்கரை வெளிச்சம். அந்த வெளிச்சம் தந்த உற்சாகமே எமது வலிகளை துடைத்து விட்டிருந்தது.....

ஆம் தோழர்களே!

நாம் மற்றவர்களுக்காக வாழும் போதும்,சக தோழனுக்காக போராடும் போதும் தான் நமது வாழ்விற்கான அர்த்தம் நமக்கே புரிபட துவங்குகிறது.....!

4 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

நன்றாக உழாது
உண்மைய அலது கதையா

Unknown சொன்னது…

தோழா!இது கதையல்ல நிஜம்!!

மாதவராஜ் சொன்னது…

தடைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. எதிலும் சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு தீர்மானிப்பதோ, முடிவுக்கு வருவதோ சரியாய் இருக்காது என்பதை உனக்குத் திரும்பவும் ஒருமுறை இந்த பதிவின் மூலம் சொல்ல விரும்புகிறேன்.

குப்பன்.யாஹூ சொன்னது…

heard this in maadhavaraj's teeraatha pakkangal blog.