வியாழன், 26 மே, 2011

நான் யார்....?


நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?

சாதி என்னும் அரக்கனின்

கொடூரப் பசிக்கு தினம்தினம் எம்

சனங்களின் உரிமைகளும் உயிர்களும்

இரையாகிக் கொண்டிருந்தாலும்

”அதற்கென்ன செய்யமுடியும்?”என்று

இருக்கும் கூட்டத்தில்- நான் யார்…?



ஊழலும், லஞ்சமுமாய் புரையோடிப்

போன அதிகாரவர்க்கத்தையும்,

அரசியல் விற்பன்னர்களையும்

காறி உமிழ்ந்தபடி- தன்

காரியம் சாதிக்க கையூட்டு கொடுக்கும்

கண்னியவான்களில் – நான் யார்…?


வணிகமும் வர்த்தகமும்

வாழ்வின் தேவைகளை சார்ந்திராமல்

ஆசைகளையும், நுகரும் வெறியையும்

அடிப்படையாக்கி சந்தைகள் மலிந்துபோய்

மனிதம் விலையாகிக் கொண்டிருக்கும்

வர்த்தகமயமான உலகில் - நான் யார்…?


எம் கைகெட்டும் தூரத்தில்

தம் உரிமைகளுக்காக போராடிய

எம் சகோதிர சகோதிரிகளை

இனவெறி அரசு அழித்து ஒடுக்கியபோதும்

இதயங்கள் மரத்துபோய்

துயரங்களைக் கூட செய்திகளாக

பார்க்கப் பழகிப்போன சமூகத்தில்- நான் யார்…..?


எம் தேசத்து வளங்களை

அந்நிய பெரும் முதலாளிகளுக்கு

தாரை வார்ப்பதையே ராஜ விசுவாசமாய்!

நினைத்துக் கொண்டு போட்டிப் போடும்

அரசியல் ’அடியாட்களின்’ அடாவடித்தனத்தை

சகித்துக் கொண்டு வாழப் பழகிய

கூட்டத்தில்- நான் யார்…?


கண்களை இறுக மூடிக்கொண்டும்

’கடவுளே! கடவுளே!’- என

கூப்பாடு போட்டுக் கொண்டும்

காசுக்காக ”கடவுளை” ஏலம் போடும்

கயவர்களின் பேச்சை நம்பிக் கொண்டும்

‘விதைக்காமல் விளைச்சலுக்காக ‘

கடவுளை அழைத்துக் கொண்டும்

காத்திருக்கும் கூட்டத்தில்- நான் யார்….?


மனிதத்தை மறந்து மதவெறி பிடித்து

சகமனிதர்களை வதைக்கும் மதங்களின்

அடையாளங்களை சுமந்து திரியும்

மடமைக் கூட்டத்தில்- நான் யார்….?


அக்கிரமங்களையும் அநியாயங்களையும்

கண்டு ஆத்திரம் கொள்ளாமல்

சுயநலமாய் சகித்து வாழ பழகிப்போன

சுயநலவாதிகளில்- நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?

நான் யார்….?!!!!!!!!

புதன், 25 மே, 2011

என் தேவதையின் சரிதை....5


இது ஒரு தொடர் பதிவு....

அவள் பிடியிலிருந்து நான் விடுபட்ட போது காலை முடிந்து நன்பகல் பிறந்துவிட்டது. மதுரையிலிருந்து அம்மா,அப்பா,பாட்டி,தாத்தா என அனைவரும் வந்துவிட்டிருந்தனர். பயணம் செய்த களைப்பில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்.பாட்டி சமையலறையின் நுழைவில் நின்று கொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வேலைக்கார அக்காவிடம் மருத்துவமனை அனூபவங்களை புலம்பலாக கொட்டிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதையே விதவிதமான வாக்கியங்களில் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதையும் ஏதோ சுவாரஸ்யமாய் கேட்பதைப் போல் கேட்டுக்கொண்டு அவள் புலம்பல்களுக்கு இசைவான வார்த்தைகளை பதிலாகவும் தந்துக்கொண்டிருந்தாள் அந்த அக்கா.

நான் என் அறையிலிருந்து வெளியில் வந்த போது எங்கோ வெளியில் போக தயாராய் இருந்த தாத்தா என்னைப் பார்த்துவிட்டு பாட்டியை நோக்கி எம்மா...இங்க பாரு பேரப்புள்ள முழுச்சிட்டாரு அவனுக்கு சாப்பாட்ட போடு...

அவனே இப்பதான் முழுச்சிருக்கான்....உடனே எப்படி சாப்புடுவான்...?" என தாத்தாவை கடிந்தபடி என்னைப் பார்த்து என்னய்யா நல்ல நித்திரையோ...?எனக் கேட்டாள்.

ம்...நீங்க எல்லாம் எப்ப வந்தீங்க...?

இப்பதான்...ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்....முதல்ல நீ போய் பல்ல வெளக்கிட்டு வா...என்றாள்.

தாத்தா மருமகன் குளிச்சாச்சா...? என பாட்டியிடம் கேட்டார்.

வருவாங்க....அதுக்குள்ளையும் என்ன அவசரம் உங்களுக்கு...? என சினந்து கொண்டாள் பாட்டி.

அவள் எப்போதும் இப்படித்தான் ஒருவித செல்லக் கோபத்தோடே தாத்தாவிடம் உரையாடுவாள். தாத்தாவும் அந்த எரிச்சாலான வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் உரிமைச் சீண்டலை புரிந்துகொண்டு ரசித்துக் கொள்வார். பெரும்பாலும் பொதுவிடங்களில் அவர்களது உரையாடல்கள் இந்த வகையை சார்ந்ததாகவே அமையும். அதேசமயம் அவள் தன்னைத் தவிர வேறு யாரும் தாத்தாவை கடிந்து கொள்ள அனுமதிக்க மாட்டாள். தான் பெற்ற பிள்ளைகள்...பேரப்பிள்ளைகள் என எந்தவித விதிவிலக்கும் அதில் இருந்ததில்லை. முதுமையில் காதல் கூட கோபத்தின் ரூபமாகவே வெளிப்படும் போலும்.

என்ன ஆச்சி...தாத்தா எங்க கெளம்பி இருக்காங்க..?முகத்தை அலம்பிவிட்டு பிரஷ்ஷில் பேஸ்டை வைத்தபடி கேட்டேன்.

உங்க தாத்தாவுக்கு துணி தொவைக்கனுமாம்....இன்னக்கி அங்க தண்ணி வர்ற நாளு வேற....அதனால அதையும் புடிச்சுவச்சிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கேன்....

தாத்தா....உங்கள வீட்ல கொண்டு போய் விடனுமா...?

இல்லய்யா.....அப்பா தம்பிய கூட்டிட்டு வர மாமா வீட்டுக்கு போறாங்களாம்....அதான் அப்படியே போற வழியில என்னைய வீட்டுல இறக்கி விட்டிற்றதா சொன்னாங்க....என்றவரிடம் பதிலேதும் பேசாமல் பற்களை விளக்க துவங்கினேன்.

வழக்கம்போல் அன்றாட நிகழ்வுகள் இயல்பாக தொடங்கியது........

ஆம்! எனக்கு ஒரு தம்பி உண்டு அவன் என்னைவிட நான்கு வயது இளையவன். அப்போது அவன் பத்தாம் வகுப்பு தேர்வுகள் எழுதிவிட்டு பரீட்சை முடிவுக்காக காத்திருந்தான். நாங்கள் இரண்டு பிள்ளைகள் தான்.பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறவர்களாக இருந்தபடியால் திசைக்கொன்றாய் வளர வேண்டிய சூழல். அவன் ஆரம்பத்திலிருந்தே என் தாய்மாமாவின் வீட்டில் தான் அதிகம் வளர்ந்து வந்தான். ஆரம்பகாலத்தில் நாங்கள் தாத்தா,பாட்டி,மாமா,அத்தை என கூட்டு குடும்பமாக தான் இருந்து வந்தோம்.

தூத்துக்குடியின் மைய பகுதிகளில் ஒன்றான அந்தோனியார் கோயிலை ஒட்டிய ஒரு சிறு தெருவில் இருந்த எங்கள் பாட்டியின் பூர்வீக வீட்டில்தான் ஒன்றாக இருந்தோம். தனிநபர் தேவைகள் கொஞ்சம் பெருகியவுடன் இட நெருக்கடியும்,மன நெருக்கடியும் அதிகரிக்க துவங்கியது. உறவுகள் நிலைக்க கொஞ்சம் இடைவெளி இருப்பது அவசியம் என புரிந்து கொண்டாள் என் அன்னை. அதனால் அப்போது நகருக்கு கொஞ்சம் ஒதுக்குப் புறமாகவும் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகேயும் இருந்த வாடகை வீட்டிற்கு குடிபோவது என முடிவு செய்யப்பட்டு தனிக்குடித்தனம் சென்றோம்.

எங்களது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் அந்த அமைதியும், தனிமையும் தேவையானதாய் இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கோ கூட்டு குடும்பத்தில் உறவுகளின் அரவணைப்பிலும், வண்ணத்துப் பூச்சிகள் போன்ற நண்பர்களின் கூட்டத்திலும் திளைத்திருந்து விட்டு திடீரென அவர்களை பிரிய நேர்ந்ததால் வேரோடு பிடிங்கி வேறு இடத்தில் நடப்பட்ட செடிகளைப் போல் வாடிப்போனோம். வாழ்வில் தனிமை என்ற ஒன்றையே சுவைத்திராத நான் முதன்முதலாக ஒரு நாளின் அதிகப்பட்சமான நேரங்களை தனிமையுடன் கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளான சமயம் அது. தனிமைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு நாமாக விருப்பத்துடன் அதை ஏற்றுக்கொள்ளும் போது தனிமை நமக்கு இனிமை சேர்க்கும் மாறாக அது மற்றவர்களால் நமக்கு திணிக்கப்படும் போதோ தனிமை கொடுமையான தண்டனையாக மாறிப்போகும்.

எனக்கும் அது அப்படித்தான் ஆகிப்போனது....

நான் அப்போது ஆறாம் வகுப்பும் தம்பி இரண்டாம் வகுப்பும் படித்து கொண்டிருந்த சமயம் அது. தம்பியோ பள்ளி முடிந்தவுடன் அவனுக்காக அமர்த்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி என் தாய்மாமா விட்டிற்கு சென்றிடுவான். ஆனால் நானோ பள்ளி முடிந்தபின்பும் பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயே டியூஷனும் முடித்துவிட்டு எனக்கு வாங்கி கொடுக்கப்பட்டிருந்த சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு போய்விட வேண்டும். அம்மாவும்,அப்பாவும் வெவ்வேறு வெளியூர்களில் பணிபுரிந்து வந்தனர். தினமும் பணிமுடிந்து முதலில் ஊர் திரும்புபவர் தம்பியை மாமா வீட்டிலிருந்து அழைத்து வரவேண்டும். பெரும்பாலும் அதற்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும். இதுதான் எங்களது அன்றாடம்...... அதாவது என் அம்மாவிற்கு எங்கள் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு மாறுதல் கிடைக்கும் வரை ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கும் மேல் இதுதான் நடைமுறையாக இருந்தது.

பெற்றவர்களின் தீவிர பொருளாதார தேடலால் என் பதின்ம பருவத்தில் எனக்கு பரிசளிக்கப்பட்ட தனிமையை தவிர்க்க நான் புதிய நண்பர்களை உருவாக்கி கொண்டேன். அவர்கள் புகைவடிவாகவும், திரவ வடிவாகவும், நிர்வாணத்தின் நிழல் வடிவாகவும் உருவகம் கொண்டவர்கள். ஆம்! தண்ணியடிப்பதும், புகைபிடிப்பதும் எனக்கு ஆறாம் வகுப்பிலேயே பழக்கம் ஆகியிருந்தது. கையில் கிடைக்கும் அல்லது எடுக்கும் காசுகளை எல்லாம் எனது இந்த புதிய நண்பர்களுக்காக அர்ப்பணம் செய்ய ஆரம்பித்தேன். பள்ளிப்பருவத்திலே இவர்களது சகவாசம் கிடைத்து விட்டதால் படிப்பும் பல்லை இழிக்க ஆரம்பித்தது. இதற்கு கைமாறாக இவர்களோ என்னைப் போன்றே குடும்பச் சூழல் அமையப்பெற்ற என் வயதொத்தவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

வாழ்க்கை இலக்குகள் இல்லாமல் பயணிக்க துவங்கியது. பெற்றவர்கள் இருக்கும் நேரத்தில் ஒருமாதிரியும் அவர்களது கண் மறைவில் வேறு ஒரு உலகிலும் சஞ்சீகரிக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தின் மீதான பிடிப்புகள் குறையத் துவங்கியது. எங்களை தனிமைப்படுத்திய சமூகத்தை நாங்கள் ஒன்றாக இணைந்து ஒதுக்க முடிவெடுத்தோம். ஆம்! நண்பர்களோடு சேர்ந்து ஊரை விட்டே ஓடிப்போக முடிவு செய்தேன்.....

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். முதலில் நான் இந்த திட்டத்தை முன்மொழிந்ததும் என் நண்பர்கள் வட்டத்தில் ஏகபோக வரவேற்பு இருந்தது. பத்திற்கும் மேற்பட்டோர் தாங்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள். நாட்கள் செல்ல செல்ல திட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்ததும் பயத்தால் ஒப்புக்கொண்ட ஒவ்வொருவராய் திட்டத்திலிருந்து விலக ஆரம்பித்தார்கள். கடைசியில் என்னுடன் சேர்ந்து வர வினோத்தும்,ராஜ்குமாரும் மட்டுமே ஒப்புக்கொண்டார்கள். ஒரு சனிக்கிழமை ஓடிப்போவதாய் முடிவுசெய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு அன்றே வீட்டிலிருந்த உண்டியலை எடுத்து பதுக்கிக் கொண்டேன். மறுநாள் சனிக்கிழமை விடுமுறை நாளாதலால் விளையாடப் போவதாய் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன். ஏற்கனவே பேசி வைத்த ஒதுக்குப்புரமான இடத்தில் மூவரும் சந்தித்து கொண்டோம். மற்ற இருவரும் எனக்கு முன்பே வந்திருந்தனர். இருவர் முகமும் வாடிப் போயிருந்தது. காரணம் கேட்ட போது வீட்டில் பணமே எடுக்க முடியவில்லை என்றும் இருவர் கையிலுமாய் சேர்த்து மொத்தம் பதினைந்து ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறினார்கள். அதனால் திட்டத்தை வேண்டுமானால் வேறு ஒருநாளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என சொல்லிப்பார்த்தார்கள்.

நான் திடமாக மறுத்துவிட்டு நான் எடுத்து வந்த உண்டியலை அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் உற்சாகமானார்கள். உண்டயலை உடைத்து எண்ணிப்பார்த்த போது ஐம்பத்தி ஆறு ரூபாய் மாத்திரமே இருந்தது. இருவரும் மீண்டும் சோர்ந்து போனார்கள். நான் இருவருக்கும் ஆறுதலளித்து பேசி திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொள்ள வைத்தேன். கையில் உள்ள காசு தீரும் வரை பயணம் செய்வதென்றும்....காசு தீரும் இடத்தில் இறங்கி உழைத்து பிழைத்து கொள்வதென்றும் ஏகமனதாக தீர்மானம் செய்து பயணத்தை துவக்கினோம்.

என் பெற்றோருடன் திருநெல்வேலியில் உள்ள என் அத்தை (அப்பாவின் அக்கா) வீட்டிற்கு அதிகம் பயணம் செய்திருந்தபடியால் அந்த அனூபவத்தின் அடிப்படையில் முதலில் திருநெல்வேலிக்கு பயணமானோம். அதுவரை பெற்றோர்கள் உடன் மட்டுமே பயணம் செய்திருந்தவர்களுக்கு அது ஒரு உற்சாகமான அனூபவமாகவே இருந்தது. வீட்டை விட்டு ஓடிப்போகிறோம் என கொஞ்சம் நஞ்சம் இருந்த பதட்டமும் அந்த பயணத்தின் உற்சாகத்தில் மறைந்துவிட்டிருந்தது. வழக்கமாக பேருந்தில் ஏறிய அடுத்த கணமே நான் தூங்கிவிடுவேன். ஆனால் அன்றோ எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை.

அடிக்கடி பயணம் செய்த பாதையாக இருந்த போதிலும் அன்று நான் பார்த்த இடங்கள் எல்லாம் புதியனவையாகவே தோன்றிற்று. மனதுக்கினிய நண்பர்கள்....கனவுகள் நோக்கிய பயணம்......கட்டுப்பாடுகள் இல்லா புதிய உலகம்...என சிறகடித்துக் கொண்டிருந்தோம். அப்படியே முடிவில்லாமல் பேருந்து பயணித்து கொண்டே இருக்காதா? என்பதே அப்போதைய எங்களது ஒரே ஆசையாக இருந்தது. இன்பமான தருணங்கள் வேகமாக கடந்து போய்விடும் என்னும் சார்பியல் தத்துவத்தின் கூறுகள் படி அந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம் ஒரு நொடிப் பொழுதைப் போல் கடந்துபோனது. நாங்களும் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டிருந்தோம்.

மேற்கொண்டு மீதம் இருந்த காசில் எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ள குறைவான பயணிகள் இருந்த பேருந்துகளில் ஏறி பின் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கிருந்த பயணிகள் நடத்துனரிடம் அவர்கள் பயணிக்கும் ஊர்களின் பெயரை சொல்லி பயணக் கட்டணத்தை கேட்பதை வைத்து எங்கள் கையிருப்பை சரிபார்த்து கொண்டே வந்தோம். எங்கள் கையிருப்புக்கு அதிகமாக கட்டணம் வரும் பேருந்துகளிலிருந்து நடத்துனர் எங்களை நெருங்கும் முன்பே இறங்கிவிடுவோம்.

இப்படியாக ஓரிரு பேருந்துகளில் ஏறி இறங்கி கடைசியாக மணிமுத்தாறு செல்லும் பேருந்தில் ஏறினோம். எங்கள் கையிருப்புக்கு அது ஒத்துவருவதாய் இருந்தது. அதனால் மணிமுத்தாறுக்கு மூன்று டிக்கெட்டுகள் வாங்கி பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் எடுத்து வந்த பணம் முழுவதும் பயணக் கட்டணத்திற்கே செலவாகிப் போனதால் மதிய உணவருந்த காசு இல்லாமல் போனது. அதுவரை நேரத்திற்கு சாப்பிட்டு பழகிய எனக்கு பசி என்ற புதிய நண்பன் அறிமுகமானது அப்போது தான். வாழ்வில் முதல் முறையாக அவனை நான் அன்று தான் சந்தித்தேன்.

அதுவரை ஏட்டிலும் மற்றவர்களது பேச்சிலுமே அவனைப் பற்றி கேள்விப்பட்டிருந்த எனக்கு அவனது நேரடி அறிமுகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாழ்வின் யதார்த்தங்கள் எங்கள் முகத்தில் அறைந்தது. சற்று நேரத்திற்கு முன் கரைபுரண்ட உற்சாகம் திடீரென்று மறைந்துபோயிருந்தது. மூவரும் பசியின் பிடியில் சிக்கியதால் சோர்ந்து போய் தூங்கிவிட்டோம்.....முரட்டுக்கரம் ஒன்று எங்களை துயில் கலைத்தது. நாங்கள் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தோம் பேருந்து காலியாக இருந்தது......

.............தொடரும்.

செவ்வாய், 24 மே, 2011

என் தேவதையின் சரிதை....4


இது ஒரு தொடர் பதிவு....

எந்தவொரு நட்சத்திரத்திற்கும் வால் முளைக்காத ஒரு இயல்பான நாளில் சாதாரண மீனவக் குடும்பத்தில் ஒரு தம்பிக்கும், தங்கைக்கும் மூத்தவளாக பிறந்தவள் என் அன்னை. அவளது பூர்வீகம் தூத்திக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் “பழையகாயல்” என்னும் கடற்கரை கிராமம். ஆனால் பிள்ளைகளின் படிப்பிற்காக அறுபதுகளின் ஆரம்பத்திலேயே தூத்துக்குடிக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டனர் எனது பாட்டியும் ,தாத்தாவும். என் தாத்தாவோ கப்பலில் மாலுமியாக இருந்தவர். கடலாறு மாதம் கரை ஆறு மாதம் என கடலில் தத்தளித்து குடும்பத்தை கரையேற்றி வந்திருக்கிறார். அவர் திடீரென ஒருமுறை மனச்சிதைவுக்கு ஆளாகி உடல் சுகவீனமில்லாமல் படுத்தபடுக்கையாகி போனார். கையிலிருந்த பணம், வீட்டிலிருந்த நகை, பொருள் என எல்லாமும் தாத்தாவின் மருத்துவ செலவிற்கு தாரைவார்க்கப் பட்டதால் எதிர்பாராத வறுமைக்கு அப்போது என் அம்மாவின் குடும்பம் ஆளாகியிருக்கிறது.

அது எழுபதுகளின் இறுதிக் காலம்......

வண்ணக்கனவுகளுடன் கல்லூரிச் சாலைக்குள் நுழைந்த என் அன்னைக்கோ குடும்பச் சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே விடவேண்டிய நிர்பந்தம். இருந்த கல்வி தகுதியை வைத்துக் கொண்டு கிடைத்த வேலைக்கு சென்றுள்ளார். முதலில் ஒரு பெயிண்ட் கம்பெனியில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் வேலை கிடைத்திருக்கிறது. வீடு...வீட்டை விட்டால் பள்ளி என சிறு வட்டத்தில் சுழன்று வந்தவளுக்கு வெளியுலகின் யதார்த்தங்கள் அப்போது புரிந்திருக்கவில்லை.

கள்ளம் கபடமற்ற சிநேகங்களோடும், பிரியமான உறவுகளோடும் மட்டுமே பழகியிருந்தவளுக்கு ஓநாய்களின் ஓரப்பார்வையும், வல்லூறுகளின் வட்டமிடலும் அப்போது தெரிந்திருக்கவில்லை. அதனால் தன்னுடன் வேலை பார்த்து வந்த அனைவருடனும் சகஜமாக பழகி வந்திருக்கிறாள். அதை சாதகமாக எடுத்துக்கொண்ட அங்கிருந்த சூப்பர்வைசர் ஒருவன் அவளிடம் சில சில்மிஷங்களை முயற்சித்திருக்கிறான். அதில் பயந்து போனவள் வீட்டிற்கு வந்து இனிதான் எங்கும் வேலைக்கே போகப்போவதில்லை என சொல்லி அழுதிருக்கிறாள். ஆனால் குடும்பத்தின் வறுமைச் சூழல் அவளை விடுவதாயில்லை. மீண்டும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்....

இம்முறை ஒரு டூடோரியல் சென்டரில் ஆங்கிலப் பாடம் எடுக்கும் வேலை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் கௌரவமான வேலை எனப் போனவளுக்கு. அங்கே பசங்களின் கேலிகளும், கிண்டல்களும் தொல்லையாக மாறியிருக்கிறது. ஆனால் அவைகள் அவளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கவில்லை காரணம்... அதை அவள் முன்கூட்டியே கொஞ்சம் யூகித்திருந்தாள். அதனால் அவர்களது கேலிப்பேச்சுகளை கேட்டும் கேட்காததைப் போல் அவளது வேலையில் மட்டுமே கருத்தாய் இருக்க தன்னை பழக்கிக்கொண்டாள். நாட்கள் செல்ல செல்ல அவளது இயல்பான ஆளுமையால் அத்தகைய கேலிப் பேச்சுக்களும் குறைந்து விட்டிருந்தது.

வாழ்வின் யதார்த்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கு பழக்கப்பட இந்த சமூகத்தின் நிஜமான முகமும் புரிபட துவங்கியிருந்தது. அந்தசமயத்தில் தான் ஒரு அரசு வங்கியில் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தவும், தேர்வெழுதவும் கூட அப்போது அவளிடம் பணம் இருந்திருக்கவில்லை. உறவுகளே கூட சீண்ட தயங்கிய அந்த வறுமையான சூழலில் ஒரே தெருவில் குடியிருந்த பழக்கத்தை தவிர வேறு எந்த உறவும் இல்லாது எங்கள் தெருவாசியாக இருந்த கனியாச்சியின் தயவிலே தான் அந்த வேலைக்காக என் தாயால் விண்ணப்பிக்க கூட முடிந்திருக்கிறது.

சிறுசிறு தேவைகளுக்காக வாழ்க்கையில் மிகப் பெரும் போராட்டம் நடத்தி வந்தவளுக்கு அந்த அரசு வங்கியில் வேலை கிடைத்தது வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இருபது வயதில் தோளில் பையை தூக்கிக் கொண்டு குடும்பத்தை வறுமையின் பிடியில் இருந்து மீட்க சென்றவள் தற்போது புற்றுநோயின் பிடியில் சிக்கும் வரை ஓய்வென்பதே அறிந்திராமல் ஓடிக்கொண்டிருந்தாள். தனது திருமணம்....தங்கையின் திருமணம்....தந்தையின் மருத்துவ செலவினங்கள்.....குடும்பத்தின் பொருளாதார ஏற்றம் என எங்களது குடும்பத்தின் அத்துணை காரியங்களையும் ஒரு பொறுப்புள்ள ஆண்மகனைப் போல் நடத்திக்காட்டியவள் என் அன்னை.

ஒரு ஆணாதிக்க சமூகத்தில் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் எந்தவித பக்கபலமும் இன்றி அவள் தன் வாழ்வில் கண்டுள்ள ஏற்றங்கள் எல்லாம் சாதாரணமானவை அல்ல. அதற்கு பின்னால் அவளது அளப்பெரிய உழைப்பும், தனித்துவம் வாய்ந்த ஆளுமையும் நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு கம்பீரமான வாழ்வுக்கு சொந்தக்காரியானவள் என் அன்னை. ஒரு சுயம்புவைப் போல் தன்னைத் தானே வளர்த்துக்கொண்டு எங்களுக்கெல்லாம் ஒரு ஆலமரத்தைப் போல் நிழலளித்து வந்த என் அன்னையின் கைகளைத்தான் பிடிக்க மரணத்தின் கொடுங்கரங்கள் நீண்டு கொண்டிருந்தது.....

யாரோ என் தோள்களை தடதடவென தட்டினார்கள்.....திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன்....நீல நிறை உடையில் அந்தக் குட்டை மனிதர் தன் வழுக்கை தலையை தடவியபடி எரிச்சலோடு என்னிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு புரியவில்லை....சில கணங்கள் பிடித்தது நான் சுயநினைவிற்கு வர...அப்போது தான் மெல்ல உரைத்தது நான் பேருந்தில் இருப்பது. வெளியில் பார்த்தேன்....தூத்துக்குடி பேருந்து நிலையம் என மங்கலாக தெரிந்தது. ஆம்! கடுமையான அயர்ச்சியில் தூங்கி விட்டிருந்தேன்....மெல்ல எழுந்து பேருந்திலிருந்து இறங்கினேன். இரவு மணி 1.30க்கு மேல் அகியிருந்தது....கால்கள் இயல்பாக ஆட்டோக்கள் நிற்கும் இடைத்தை நோக்கி பயணப்பட்டது. நான் அங்கு போகும் முன்பே அவர் என்னை தன் ஆட்டோவோடு வந்து எதிர்கொண்டு..என்ன அண்ணாச்சி எங்க போகனும்.... என எதிர்கொண்டார். அவருக்கு நிச்சயம் என் தந்தை வயதை ஒத்திருக்கும்.

நான் முத்தம்மாள் காலனி 7ஆவது தெரு போகனுண்ணே..என்றேன். அவர் தன் ஆட்டோவின் கதவுகளை திறந்து என்னை ஏற்றிக்கொண்டார். அவரிடம் பேசுவதற்கு தோன்றாததால் நான் மௌனமாய் இருந்தேன். பலவகைப்பட்ட மனிதர்களை பார்த்தவராதலால் அவரும் என் மௌனத்தை கலைக்கவில்லை. எனக்கு அது பிடித்திருந்தது. நளினமாய் தன் உடலை வளைத்து செல்லும் பாம்பினைப்போல் குண்டு குழிகளில் விழந்து விடாமல் அவர் தன் ஆட்டோவை என் வீட்டை நோக்கி ஊரச்செய்தார். எங்கள் தெருவுக்குள் ஆட்டோ நுழையும் சமயத்தில் என் பக்கம் திரும்பாமலே என் வீட்டின் அடையாளத்தை கேட்டார். மஞ்சள் நிற பூக்களை சூடியபடி அந்த இரவிலும் நிலவின் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்த எங்க வீட்டின் மதில்சுவரை அடையாளப்படுத்தி காட்டினேன்.

அவரோ புன்முறுவல் பூத்தபடிஓ! பேங்க்கார அக்கா வீடா...என்றார். எனக்கு அது ஆச்சர்யமாய் இல்லை. ஏனென்றால் இது வழக்கம் தான். பெரும்பாலும் என் அம்மாவை தெரியாத ஆட்டோக்காரர்கள் எங்கள் ஊரின் புதிய பேருந்து நிலையத்தில் இருக்க முடியாது. அவள் எப்போது பணி முடிந்து திரும்பினாலும் ஏதோ ஒரு ஆட்டோவில் தான் வீடு வந்திறங்குவாள். ஆட்டோ ஓட்டுனர் என்ற கோணத்தில் அல்லாமல் சகமனிதனாக உள்ளார்ந்த அன்போடு அவள் உரையாடுவதே அதற்கு காரணமாய் இருந்தது. எளிய மனிதர்கள் பணத்தை காட்டிலும் இனிய வார்த்தைகளுக்கும் அன்புடன் கூடிய மரியாதைக்குமே அதிகம் மதிப்பளிப்பவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் நாம் இதை உணர்வதில்லை.

ஆமண்ணே..! என்றேன்.

நீங்க தான் வெளியூர்ல டாக்டருக்கு படிக்கிறீகளா...?

ஆங்...அது நான் தாண்ணே..உணர்ச்சிகளற்று பதிலளித்து கொண்டிருந்தேன். இதுவே மற்ற நேரமாக இருந்தால் கர்வத்தோடு கூடிய பெருமிதத்தை வார்த்தைகளாக்கியிருப்பேன்.

எம் மூத்த மவனும் இப்ப இஞ்சினியரிங் படிக்கிறாப்ல...திண்டுக்கல்ல...நம்ம அம்மாதான் பாரம்லாம் (APPLICATION FORM) நிரப்பி தந்தாவ...என பெருமிதம் பொங்கச் சொன்னார்.

அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆட்டோ என் வீட்டை அடைந்திருந்தது.அவரது உணர்வை அங்கீகரிக்கவோ...அல்லது அவரது மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவோ அப்போது எனக்கு தோன்றவில்லை. அதனால் வெறுமையாக அப்படியா...என்று மட்டும் சொல்லிவிட்டு இறங்கிக்கொண்டேன். அவருடன் மேலும் பேச்சை வழக்காமல் வீட்டின் வாசலில் இறங்கி அவருக்கான பணத்தை எடுத்து கொடுத்தேன். அவரது முகம் அப்போது ஏமாற்றம் அடைந்ததைப் போல் இருந்தது அல்லது எனக்கு அப்படி தோன்றியது. ஆனால் நான் அதை பற்றியெல்லாம் அப்போது அலட்டிகொள்ளாமல் வீட்டின் இரும்பு கதவுகளுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அழைப்பு மணியின் விசையை அழுத்தினேன்.

எந்த சலனமும் இல்லாததால் மீண்டும் தொடர்ந்து விசையை அழுத்திப் பிடித்தேன். இது போன்ற அழிச்சாட்டியங்கள் என்னைத் தவிர யாரும் செய்யமாட்டார்கள் என்பதால் வீட்டிற்குள்ளிருந்தபடியே வெளியில் உள்ள கதவை திறக்கும் முன்பே வேலைக்கார அக்கா தம்பி தோ...வாரேன் வாரேன்...என பதறியடி குரல் கொடுத்தார். படபடப்போடு வீட்டின் கதவை திறந்து கொண்டு நான் நின்று கொண்டிருந்த வாயில் கதவை நோக்கி ஓடி வந்தார்.

கதவை திறந்தபடியே.... என்ன தம்பி அம்மாவ பாத்திட்டு வாரீங்களா...?என்றார்

ஆமா..

எப்புடி இருக்காங்க அம்மா....

நாளைக்கு காலைல வந்திருவாங்க...என்றபடி வீட்டிற்குள் நுழைந்து என் அறைக்குள் விரைந்தேன்.

தம்பி சாப்பிட்டாச்சா...?பதில் தெரிந்தாலும் கடமைக்காக கேள்வி வந்தது.

ஆச்சு...நீங்க படுத்துக்கோங்க.... என உள்ளிருந்தபடியே அவருக்கு பதிலளித்தேன்.

சரிதம்பி... என சொல்லி முடிக்கும் முன்பே சமையலறை விளக்குகள் அணைக்கப்பட்டது.

மனப்புழுக்கமும்,உடல் சோர்வும் சேர்ந்து என்னை கசகசக்க செய்தது. கொஞ்சம் குளித்தால் தேவலாம் என தோன்றியதால் உடைகளை களைந்து கைலி மாற்றிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தேன். ஷவரைத் திறந்து குளிர்ந்த நீரை உடலில் பரவவிட்டேன். நீரில் கரையாதது ஒன்றுமில்லை என்று ஒரு விஞ்ஞான கூற்று உண்டு. ஆம்! அது உண்மைதான்.... எனக்கு மீண்டும் ஒருமுறை அப்போது அது நிரூபனம் ஆனது.

நீரின் குளிர்ச்சி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் இளக்கி அதுவரை நான் கட்டுபடுத்தி வைத்திருந்த என் கண்ணீரை கரை உடைக்க செய்தது. என் கண்ணீரின் வெப்பம் நீரின் குளிர்ச்சியையே கொஞ்சம் கதகதப்பாக்கியது. வலிக்க வலிக்க அழுது ஓய்ந்தேன். மனம் காற்றில் மிதக்கும் இறகு போல் மாறிப்போனது. அந்த நீரின் குளிர்ச்சி கொஞ்சம் தேவைப்பட்டதால் குளித்து முடித்த பின்பும் தலை துவட்ட பிடிக்காமல் ஈரம் சொட்டியே சென்று மின்விசிறியை சுழலவிட்டு படுக்கையில் விழுந்தேன்.காத்திருந்த காதலனை கண்ட காதலி போல் நித்திரை என்னை ஆரத்தழுவிக் கொண்டாள்.

............தொடரும்.

சனி, 21 மே, 2011

என் தேவதையின் சரிதை....3


இது ஒரு தொடர் பதவு…..

நான் மருத்துவமனைக்குள் நுழைகையிலேயே கேண்டீனில் பால் வாங்க வந்திருந்த என் தந்தையை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்தவுடன் என்னுடன் பேசியபடியே மருத்துவமனை வரவேற்பரையை நோக்கி திரும்ப நடக்க ஆரம்பித்தார்.

என்ன மக்களே….காலேஜில் இருந்து நேரா இங்கதான் வர்றீயா...பரீட்சையெல்லாம் எப்படி எழுதுன...? மிக சகஜமாய் என்னை எதிர் கொண்டார்.

நல்லா பண்ணியிருக்கேன்பா....ஆமா என்ன ஆச்சு அம்மாவுக்கு..?முந்தாநாளு பேசும் போது கூட ஏதோ சலின்னு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறதா சாதாரணமா சொன்னீங்க... எப்ப இங்க அட்மிட் பண்ணீங்க...? அம்மாவுக்கு என்னாச்சுப்பா…?

உனக்கு போன் பண்ணும் போதே அம்மாவை இங்கே அட்மிட் பண்ணியாச்சு....அவதான் உங்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னா...இருமல் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு....கொஞ்சம் இரத்தம் வேற வந்திடிச்சு...அதான் பயந்து போயி இங்க வந்திட்டோம்...

என்னப்பா சொல்றீங்க....நான் என்ன சின்ன பையனா...? எங்கிட்ட முதல்லே சொல்லக்கூடாதா...? சரி! இப்ப டாக்டர் என்ன தான் சொல்றாரு..?

நான் இப்படி கேட்டவுடன்...அதுவரை இயல்பாய் பேசிக்கொண்டிருந்தவர் சற்று உடைந்து போனார். நான் இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை. எனக்கும் பதற்றமாகி போனது...

என்னென்னமோ சொல்றாங்க மக்களே....ரொம்ப பயமாயிருக்கு.....அம்மா இன்னும் மூணு மாசந்தான் நம்ம கூட இருப்பான்னு டாக்டர் சொல்றாரு....நீயே அவருகிட்ட போயி பேசிப்பாரு...அவர் பேசி முடிக்கும் முன் எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது. அப்போது எங்களை சுற்றியிருந்தவர்களைப் பற்றியெல்லாம் பிரஞ்ஞை அற்றவனாக அப்பாவைப் பார்த்து கத்தினேன்…

லூஸு மாதிரி உளராதீங்க...போயும் போயும் உங்ககிட்ட கேட்டேன் பாருங்க...அவரிடமிருந்து விலகி நேராக என் அம்மாவை பார்க்க விரைந்தேன்.

தனது கம்பீரங்களையெல்லாம் நோய்க்கு கொடுத்துவிட்டு காய்ந்த சருகை போல் கட்டிலில் கிடந்தாள் என் அன்னை. இடைவிடாத இருமல் மட்டுமே அவளது இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது. தனது மகளின் நிலையை கண்டு உருக்குலைந்து போய் அங்கிருந்த பென்ச்சில் சுருண்டு கிடந்தார் என் தாத்தா....அவரது கால்பக்கமாய் தலைவைத்தபடி சாய்ந்தவாக்கில் அமர்ந்திருந்தார் என் பாட்டி....நான் உள்ளே நுழைந்தவுடன் ஏதோ புத்துயிர் பெற்றவர்களைப் போல் என்னை வாஞ்சையுடன் வரவேற்றார்கள். நான் என் தாயின் அருகில் சென்றேன். அவள் என்னை கண்டவுடன் எழுந்து கொள்ள பிரயாசைப்பட்டாள்....நான் அவள் தோள் தொட்டு அவளது முயற்சிக்கு மறுப்பு தெரிவித்தேன்.

இல்லடா நான் ரொம்ப நேரமா படுத்து தான் கெடக்கேன்....கொஞ்சம் எழும்பி உக்கார்ந்தா ஆத்தலா இருக்கும்...என்றவளை மெல்ல தூக்கி அமரச்செய்து தலையனையை அவள் முதுகுக்கு அடை கொடுத்தேன்.

மொரட்டு கையா இருக்குடா...பாத்து பாத்து...என முனங்கியபடி எழுந்து அமர்ந்தவள் என்னைப் பார்த்து செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் நல்லபடியா எழுதிட்டியா...?என்றாள்.

அதெல்லாம் பண்ணியாச்சும்மா...நீங்க எப்படி இருக்கீங்க..? என்ன இப்படி இருமிகிட்டு இருக்கீங்க.....?சொல்லச் சொல்ல கேட்காம ஜெபக் கூட்டம்...மண்ணாங்கட்டின்னு...போயிட்டு ஒழுங்கா மாத்திரை கூட திங்காம இப்படி இழுத்து வச்சிருக்கீங்க...

நானே இந்த கெடையா கெடக்கேன்....நீ இதுல தேவ நிந்தனை வேற பண்ணாதப்பா...என்னால தாங்க முடியல...

நீங்கெல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்....இப்படியே முட்டாத்தனமா நம்பி நம்பி காச பறிகொடுத்தது தான் மிச்சம்...நானும் அவள் நிலை மறந்து எதிர்வாதம் பண்ணத்துவங்கினேன்.

என்னை இடைமறித்த பாட்டி...வந்துட்டாரு பெரிய அஞ்ஞானி...சட்டம் பேசிக்கிட்டு…. உங்கய்யா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இங்க மனுஷனை பாடாய் படுத்திக்கிட்டு அலையறாரு...இப்ப இவரும் அவருக்கு துணையா வந்திருக்காரு...என ஏதேதோ பேசிக்கொண்டு போனவளை அங்கிருந்த என் தாத்தா... என்ன ஆளாளுக்கு வந்ததும் வராததுமாய் புள்ளைக்கிட்ட வரிஞ்சுகெட்டிட்டு நிக்கிறீங்க...என செல்லமாய் அதட்டினார்.

குண்டில போற குசு தெரியாம கெடந்தவருக்கு...பேரனை பாத்தவுடனே பவுஸு வந்திருச்சி பாரேன்...என அம்மாவை பார்த்து பாட்டி கூறினாள்.

எம்மா...நீங்க சும்மா கெடங்க ஆஸ்பத்திரியில இருக்கோம்ன்னு நெனைப்பே இல்லாம என்னத்தையாவது பேசாதீங்க....யாரும் கேட்டா என்ன நினைப்பாங்க...என பாட்டியை பொய் கோபத்துடன் கடிந்து கொண்டாள் அம்மா..

உனக்கு உங்க அப்பன சொன்னா பொறுக்காதே...என பாட்டி அம்மாவைப் பார்த்து சொல்லிக்கொண்டிருக்கும் போதே அப்பா பால் பாத்திரத்தோடு உள்ளே நுழைந்தார்.

என்ன அத்தைக்கும் மாமாவுக்கும் இளமை திரும்புதாக்கும்...உங்க இரண்டு பேர் சத்தம் தான் வெளிய வரைக்கும் கேக்குது..என்றவரை பார்த்து பாட்டி...எல்லாம் உங்க மாமாதான் பேரனை பார்த்தவுடன் துள்ளிக்கிட்டு இருக்காப்ல...

பாட்டியை பார்த்து சிரித்துவிட்டு என்னை நோக்கி நீ முகங்கால் கழுவிட்டு டாக்டரை போய் பாத்திட்டு வா...என்றார்.

ம்..போறேன்..என்றபடி அருகிலிருந்த துண்டை எடுத்துக்கொண்டு அங்கு இருந்த சிறிய குளியல்+கழிப்பறைக்குள் சென்று முகம் அலம்பிக்கொண்டு வந்தேன்.சற்று நேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்து விட்டு மருத்துவரை காணச் சென்றேன். தரைத்தளத்தில் அவரது அறை இருந்தது. படியிறங்க சோம்பேறித்தனம் கொண்டு லிப்டிற்காக காத்து நின்று அது மேலே வந்தவுடன் இறங்கிப்போனேன்.

ஆச்சர்யமாக அப்போது டாக்டரை காண அவ்வளவு கூட்டம் இல்லை....அதனால் ஒரு பத்து நிமிட காத்திருப்பிலேயே அவரைக் காண அனுமதி கிடைத்தது. நான் என் அம்மாவின் பெயரைச் சொல்லி அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். தமிழ் சினிமா நாயகர்களைப் போல் யாரும் தனது வயதை எளிதில் கணித்து விடக் கூடாது என்ற முனைப்பில் இருப்பவரை போல் இருந்தது அவரது தோற்றம். வழக்கமான தனது சன்னமான குரலிலே என்னிடம் பேச ஆரம்பித்தார் ஏதோ மெடிக்கல் சம்பந்தமா படிக்கிறதா அம்மா சொன்னாங்களே அது நீங்க தானா..?

ம்ம்ம்...நாந்தான் பிஸியோதிரபி படிக்கிறேன் டாக்டர்...

ஓ..

இப்ப அம்மாவோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு டாக்டர்...?

நீங்க படிக்கிற பையன்....அதுவும் மெடிக்கல் அலைட்டா(medical allied) படிக்கிறவரு....நான் உங்களுக்கு அதிகம் சொல்லனும்ன்னு இல்ல...அம்மாவுக்கு இப்ப கேன்சர் ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கு.....அதிகப்பட்சம் இன்னும் மூணு மாசம்தான்....குணப்படுத்துற கட்டத்தை அவங்க தாண்டிட்டாங்க...”

அவரது ஒவ்வொரு வார்த்தையும் என் தலையில் இடியை இறக்குவது போல் இருந்தது. என் தந்தை சொல்லும் போது கூட அவர் ஏதோ மிகைபடுத்தப்பட்ட பயத்தில் பேசுவதாகவே எண்ணிக்கொண்டேன். ஆனால் இப்போதோ என் தலையில் யாரோ நெருப்பை அள்ளி கொட்டியதை போல் உணர்ந்தேன். ஒருவாறு சமாளித்தபடி அவரைப் பார்த்துடாக்டர்...நீங்க சொல்றது புத்திக்கு உரைக்கு ஆனா மனசு கேக்க மாட்டேங்குது....நீங்க தப்பா எடுக்கலைன்னா ஒண்ணு கேக்குறேன்...” என்று தயங்கியவனை பார்த்து அவர்..”சும்மா கேளுங்க...” என்று தைரியம் அளித்தார்.

இதைவிட அட்வான்ஸ்டு டிரீட்மண்ட் (advanced treatment) எங்கயாவது கொடுக்க முடியுமா சொல்லுங்க....நாங்க எங்க வேணா எங்க அம்மாவ கூட்டிட்டு போறோம்...

நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கனும் இன்னைக்கி மருத்துவ உலகம்கிறதை ஒரு உள்ளங்கைகுள்ள அடக்கிடலாம் எங்க என்ன லேட்டஸ்ட் டிவெலப்மெண்ட் (latest developement) வந்தாலும் அதை நாம உடனே இங்கே கொண்டுவந்திர முடியும்...அதனால இந்த ஸ்டேஜ்ல நீங்க உலகத்துல எங்க கூட்டிட்டு போனாலும் இது தான் டிரீட்மெண்ட்....நாம அது பரவுற வேகத்தை குறைக்கலாமே தவிற அதை குணப்படுத்த முடியாது...அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான்....இப்ப கொடுக்குற மருந்து மாத்திரை எல்லாம் ஒரு சைகாலஜிக்கல் சப்போர்டுக்குதான் (pshycological support)...அதனால இப்போ உங்கம்மாவோட கண்டிஷனை புரிஞ்சிக்கோங்க....அவங்கள முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா பாத்துக்கோங்க இதுதான் நாம இப்போ பண்ணக்கூடியது....

என்னிடம் எதிர்வாதம் பண்ணக்கூடிய அளவுக்கு அப்போது வார்த்தைகளில்லை...உங்கம்மாவை முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா பாத்துக்கோங்க..என்ற அவரது கடைசி வரிகள் மட்டும் எனக்குள் பதிந்து இருந்தது....ஒரு திடீர் மௌனம் எங்களுக்குள் நிலவியது நானே அந்த அமைதியை உடைத்து கொண்டு..டாக்டர் நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணணும்...

ம்… சொல்லுங்க...

ஒண்ணுமில்லை இப்ப எங்கம்மாவோட ஹெல்த் கண்டிஷனை எங்கப்பா கிட்டயும் எங்கிட்டயும் தான சொல்லியிருக்கீங்க....?

’ஆம்’ என்பது போல் தலையசைத்தார்.

தயவு செய்து இனிமே யார் கேட்டாலும் அம்மாவோட ஹெல்த்துல நல்ல முன்னேற்றம் இருக்கு...அவங்க சீக்கிரமா குணமாயிடுவாங்கன்னு சொல்லமுடியுமா டாக்டர்..?

அவர் தன் புருவத்தை உயர்த்தி ஒரு நொடி என்னைப் பார்த்தார். பின்னர் என்னை புரிந்து கொண்டவரைப் போல் தாடையில் கைவைத்தபடி புன்முறுவல் செய்தார்.

நானே தொடர்ந்தேன் இல்ல டாக்டர் எங்கம்மா தான் எங்க குடும்பத்துல எல்லாமே...அவங்களுக்கு ஒண்ணுனா நாங்கெல்லாம் ஒண்ணுமில்லாம போயிருவோம்...வார்த்தைகள் தடை பட்டு கண்ணீர் கரை உடைந்திருந்தது...எல்லாம் நடக்கும் போது நடக்கெட்டும் டாக்டர் அதுவரைக்காவது எல்லாரும் கொஞ்சமாவது சந்தோஷமா இருப்பாங்க இல்லையா...

நீங்க என்னையும் உங்கள்ல ஒருத்தராவே எடுத்தக்கலாம்....என்னால நிச்சயமா என்ன முடியுமோ அதை செய்யுறேன்....இது என்னோட கார்ட் நீங்க எந்த நேரத்திலேயும் என்னை காண்டக்ட் பண்ணலாம்... என்றபடி அவர் தனது விசிட்டிங் கார்டையும் என்னிடம் கொடுத்தார். எப்போதும் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாதவர் என நான் எண்ணிக்கொண்டிருந்தவர் என்னிடம் அப்படி பேசியது எனக்கு அந்த கணத்திலும் ஆச்சிர்யமாகவே இருந்தது.

அம்மாவ எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க டாக்டர்...?

நீங்க நாளைக்கே உங்க அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்...அதான் நான் சொல்லிட்டேன்லியா இனிமே நீங்க பாத்துக்கிறதுல தான் எல்லாமே இருக்கு...

ரொம்ப நன்றி டாக்டர்... என கையெடுத்து அவரை வணங்கிவிட்டு விடைபெற்றேன்.

என்னுடைய நிலையை கண்டு எனக்கே அப்போது பரிதாபமாக இருந்தது. தாயின் மரண தேதியை முன்கூட்டியே அறிந்து கொண்டு வாழ்வதைவிட ஒரு மகனுக்கு வேறு என்ன கொடுமை வாழ்வில் நேர்ந்துவிடும். மனிதன் என்பவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது. தாய்மையின் உன்னதமும் எனக்கு அப்போதுதான் புரிந்தது. நமக்காக பத்துமாதங்கள் சுவாசித்து உயிரளித்தவளுக்கு நம்மால் ஒரு நொடி கூட சுவாசம் அளிக்க முடியவில்லையே என்ற யதார்த்தம் எனக்கு உரைத்து என்னை மேலும் முடக்கியது.

இரண்டு மாடிகளை சுயநினைவே இல்லாமல் ஏறிச்சென்று அம்மாவின் அறைக்கு சென்றேன். அவளது அறையை நெருங்க நெருங்க நான் மேலும் உடைந்து கொண்டே இருந்தேன்...கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை....ஒருவழியாக அறைக்கு வெளியே நின்று முகத்தை கைகுட்டையால் துடைத்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றேன். என் வருகைக்காக எல்லோரும் ஆவலாக காத்து இருந்தார்கள். அப்பா மட்டும் எங்கோ வெளியில் போயிருந்தார்.

நான் நேராக கட்டிலில் அமர்ந்திருந்த என் அம்மாவிடம் சென்று அவளை இறுக அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன். என் உதடுகளை பிரிக்கும் முன்பே அவளது கண்ணீர் என் கன்னத்தை நனைத்து விட்டிருந்தது. நான் சுதாகரித்து கொண்டு அவளிடமிருந்து விலகி...எம்மா உங்களுக்கு ஒண்ணுமில்லையாம்...எல்லாம் சரிபடுத்திறலாம்ன்னு நம்பிக்கையாதான் டாக்டர் சொன்னாரு....

அதுக்குள்ளையும் உங்க அய்யா என்னென்னவோ சொல்லி எங்களை பயமுறுத்திட்டாரு....உங்கம்மா கிட்டையே நேர வந்து ரொம்ப சிரமம்தான்.. டாக்டர் சொன்னதா சொல்லிட்டாரு என் ஈரக்கொலையே அறுந்து போன மாதிரி ஆயிருச்சு...அதான் உங்கம்மாகிட்ட சொல்லிகிட்டு இருந்தேன் உம்மவன் வந்தா எல்லாம் தெளிவா கேட்டு சொல்வான்னு...ஆண்டவனுக்கு தோத்திரமய்யா... என படபடத்து முடித்தாள் என் பாட்டி.

எம்மா அவுரு கெடக்காரு....இன்னைக்கு நேத்தா நான் இதை அனூபவிக்கேன்...அவருக்கு வாக்கப்பட்ட நாளில் இருந்து இந்தப் பாடுதான பட்டுட்டு இருக்கேன்...என அம்மாவும் அங்கலாய்த்தாள்.

எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு கேட்டியாம்மா...? என பாட்டி என்னைப் பார்த்து கேட்டாள்.

நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கலாம்...அநேகமா இப்ப ரவுண்ட்ஸ் வரும் போது சொல்லிருவாருன்னு நினைக்கிறேன்...நீங்களும் ஒருதடவை அவருக்கு ஞாபகப்படுத்திடுங்க...

எம்மா...நான் இப்போ ஊருக்கு கிளம்புறேன்....நாளைக்கு போடுறதுக்கு கூட எனக்கு துணியில்ல....எல்லாம் அழுக்காகெடக்கு...அதுமட்டுமில்லாம இங்க படுக்கவைக்க அவ்வளவு வசதியும் இல்லை...எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு...என ஏதேதோ காரணங்களை அடுக்கி நான் ஊருக்கு கிளம்புவதாய் சொன்னேன். உண்மையில் அப்போது எனக்கு அங்கு இருக்கமுடியவில்லை என்பதே நிஜம்...ஒருவகையான தனிமையும் அப்போது எனக்கு தேவைப்பட்டது.

அதான் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு சொல்றியே ஒரு ராத்திரி எனக்காக இங்க இருக்ககூடாதா...”என ஏக்கத்தோடு அம்மா என்னைப் பார்த்துக் கேட்டாள்.

ஆனாலும் நான் பிடிவாதமாக ”என்னைய புரிஞ்சுக்கோங்கம்மா....எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப வலிக்கு ஏற்கனவே அஞ்சு மணிநேரத்துக்கும் மேலா பஸ் பிரயானம் வேற செஞ்சிருக்கேன் கொஞ்சமாவது தூங்கனும்மா...”

நான் சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்...” என்றாள் விரக்தியாக.

அவதான் இவ்வளவு சொல்றாள்ல நீயுந்தான் ஒரு ராத்திரி இருக்ககூடாதா....தாத்தாவ வேணும்னா வெளியில உள்ள பெஞ்ச்சுல படுக்க சொல்லிடுறேன்...” என பாட்டி அம்மாவிற்காக என்னிடம் வக்காலத்து வாங்கினாள்.

ஆமய்யா...நான் வேணும்னா வெளியில படுத்துக்கிறேன்...” இது தாத்தா.

நீங்க இரண்டு பேரும் சும்மா இருக்க மாட்டீங்களா....எனக்கு தெரியும் எல்லாம்...” நான் அவர்களை பார்த்து எரிச்சலோடு கத்தினேன்.

விடுங்கம்மா....அவன் இஷ்டம்...நீங்க யாரும் எனக்காக பேச வேண்டாம்....நீ போயிட்டு வாப்பா...”

அதற்குமேல் அங்கே நின்று கொண்டிருந்தால் நானே மனம் மாறி விடுவேன் என்பதால் வேகமாக கிளம்பினேன். அப்போது மணி இரவு ஒன்போதரைக்கு மேல் ஆகியிருந்தது. ஒருவாறு எல்லோரையும் சமாளித்துவிட்டு அறையை விட்டு வெளியேறி படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது அப்பாவை எதிர் கொண்டேன். அவர் கையில் இரவு சாப்பாட்டுக்கான பொட்டலத்தோடு இருந்தார். அவர் வாயில் போட்டிருந்த வெத்தலையையும் மீறி மதுவின் நெடி அடித்தது.

என்னய்யா...எங்க கெளம்பிட்ட..? ஊருக்கா..?

ஆமப்பா...ஊருக்குதான். நாளைக்கு காலைல அம்மாவ டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்களாம் பாத்து கூட்டிட்டு வாங்க...

உனக்கும் சாப்பாடு வாங்கிட்டேனே....இத கொண்டு போறியா... என்றபடி ஏதோ ஒரு பொட்டலத்தை நீட்டினார்.

அதெல்லாம் வேண்டாம்ப்பா....நான் கிளம்புறேன்... என்றபடி அவரது பதிலுக்கு கூட காத்திராமல் படியிறங்கி மருத்துவமனையின் வாசலுக்கு வந்து சேர்ந்தேன். நான் வாசலுக்கு வரவும் தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்து ஒன்று மருத்துவமனை நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. நான் வேகமாக ஓடிச் சென்று அதில் ஏறிக்கொண்டேன்.

இரவு நேரமாதலால் பேருந்தில் கூட்டமும் அவ்வளவாக இல்லை. இரண்டு பேர் அமரக்கூடிய ஒரு காலியான இருக்கையில் ஜன்னலோரும் சென்று அமர்ந்து கொண்டேன்.நடத்துனரும் நான் தூத்துக்குடிக்கே நேரடியாக டிக்கெட் கேட்டதால் எந்தவொரு புலம்பலும் இல்லாமல் கட்டணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட்டை கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார். பேருந்தின் வேகம் அதிகமாகிய போது குளிர்ந்த காற்று முகத்தில் அறைய துவங்கியது....குதூகலமாய் ஆரம்பித்த அன்றைய பயணம் எதிர்பாராத திடீர் அதிர்ச்சிகளால் என்னை மிகவும் பலவீனமாக மாற்றியிருந்தது. மனவலியும்,இயலாமையும் மேலும் முடக்கியது. ஏதோ ஒரு சூன்யமான மனநிலையில் அந்த இருளையே வெறித்தபடி கண்ணயர்ந்தேன்.....

…………….தொடரும்