செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மலரின் நிழலைத் தேடி....

பயணங்கள் நமக்கு புதிதல்ல…..

வாழ்க்கை என்பதே ஒரு

தொடர் பயணம் தானே!

சில பயணங்கள்……

இறுதியிட்ட இலக்கை நோக்கி

இருக்கும்.

சில பயணங்கள்……

இலக்குகளை இறுதி செய்யாமல்

இருக்கும்.

என் பயணத்திற்கோ…

நோக்கம் உண்டு- ஆனால்

திசைகள் தெரியாது.

பயணத்திற்கான நோக்கம் இருந்தும்

திசைகள் தெரியாதது

விந்தையாக தோன்றலாம்.

இதில் விந்தை எதுவும் இல்லை

காரணம் என் பயணத்திற்கான

நோக்கம் அப்படியானது…..

ஆம்!

தன் இதழ்களை உதிர்த்துவிட்ட

மலரின் நிழலைத்தேடி நான்

இருளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மலர்கள் அழகானவைதான் –ஆனால்

காற்று அதை உணர்வதில்லை

அதற்காக காற்றை குற்றம் சுமத்தமுடியாது.

ஏனென்றால் காற்றுக்கு தெரிவதில்லை

தான் மலர்களுக்கு காலனாய்

மாறிப்போவது.

அதுமட்டுமின்றி……

என் மலரின் சுவாசம்

இப்போது

அந்த காற்றில் கலந்துவிட்டது.

காற்றில் கலந்துபோன என் மலரின்

சுவாசத்தை வாடை பிடித்துக்கொண்டு-என்

மலரின் நிழலைத்தேடி பயணிக்கிறேன்.

சனி, 25 செப்டம்பர், 2010

அயோத்தியா யாருக்கு சொந்தம்..?



’அயோத்தியா’ என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு “வெற்றி கொள்ள முடியாத பகுதி” எனப் பொருளாகும். இப்போது நம் தேசத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி ‘அயோத்தியின் சர்ச்சைக்குரிய பகுதியை வெற்றி கொள்ளப்போவது யார்?’என்பதே.

மிக நீண்ட வரலாறு கொண்ட இந்த கேள்விக்கு பதிலாக பல நூறு ஆண்டுகளாக பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் பதிலற்று நிற்கிறோம். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் அயோத்தி. இதை இந்துக்கள் ராமர் பிறந்த பூமி என நம்புவதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள். முஸ்லிம்களோ 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி என்பதால் அது தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள்.

இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகந் ராமசந்திர தாஸ்பரமஹன்ஸ் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் தீர்பு தான் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

’சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி’என்றொரு சொலவடை உண்டு. இந்தப் பிரச்சனையில் நமது அரசாங்கங்களின் பங்கு அந்த ஆண்டியை போலத்தான். ஆங்கிலேயே ஆட்சியில் கூட அண்ணன் தம்பிகளாக ஒரே இடத்தில் வழிபாடு நடத்திவந்தவர்களை அங்காளி பங்காளியாக்கி அலங்கோலப்படுத்தியது இந்திய ஆட்சியாளர்கள் தான். இப்போது ‘கலவரம்,கலவரம்’ என கூப்பாடு போடுபவர்களும் அவர்கள் தான்.

அதேபோல் இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கிய அடுத்த பெரியபங்கு ஊடகத்துறைக்கே சாரும். அவர்கள் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க இந்தப் பிரச்சனையை முடிந்த அளவுக்கு அரசியலாக்கி ஆதாயம் பார்த்தாகிவிட்டது.அடுத்து மத விற்பன்னர்கள்....சொல்லவே வேண்டாம் இந்தப் பிரச்சனையின் மூலமும் அவர்களே முடிவும் அவர்களே!

இப்போது வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கலவரங்களில் இறந்து போன அப்பாவி பொதுஜனங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை...அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை.... நாம் தொலைத்து விட்டு நிற்கும் சகோதிரத்துவத்திற்கும் தீர்வு பிறக்க போவதில்லை... இதையெல்லாம் இழந்துவிட்ட பிறகு கிடைக்கும் அந்த நிலத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம்? மீண்டும் ஒரு பாபர் மசூதியா? அல்லது ராமர் கோயிலா?

லட்சகணக்கான உயிர்களின் தன்னலமற்ற போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சுதந்திரத்தை...இந்த ஜனநாயகத்தை....பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக சொல்லப்படும்...நம்பப்படும் மன்னர்களுக்கு சொந்தமானது எனச் சொல்லி சண்டையிட்டு கொள்வது எத்தனை அபத்தமானது? இந்த தேசத்தின் ஒவ்வொரு மூலையும் இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே சொந்தமானது என்பதை நாம் எப்போது உணர்வோம்?

ஆரியர்கள் வந்தார்கள் இந்துக்களோனோம்... முகலாயர்கள் வந்தார்கள் முஸ்லிம்களானோம்... ஆங்கிலேயர்கள் வந்தார்கள் கிறுத்தவர்களானோம்... சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது நாம் எப்போது இந்தியர்கள் ஆவோம்?

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சிரிங்க ப்ளீஸ்...


எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே...

***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.
ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள்.
உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள்.
திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி.

***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?

மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம்ன்னு பிரிச்சு கொடுத்துடுறேன். சரிதானே..?

கணவன்: ?????

***ஒருவன்: டாக்டர் சார், மரணமே இல்லாம வாழ்றதுக்கு ஏதாவது வழியிருக்கா?

டாக்டர்: அதுக்கு நீங்க கல்யாணம் தான் பண்ணிக்கனும்.

ஒருவன்: என்னது கல்யாணம் பண்ணிட்டா மரணமே இல்லாம வாழ வழி கிடைக்குமா?

டாக்டர்: நீங்க வேற...அப்பத்தான் இப்படிப்பட்ட விபரீதமான எண்ணங்கள் வராது.

***ஒருவன்: சார். என்னோட பொண்டாட்டிய காணோம்.

போஸ்ட்மாஸ்டர்: யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா..போயி போலிஸ் ஸ்டேஷன்ல புகார் கொடு.

ஒருவன்: அய்யோ...சந்தோசத்துல எங்க போறதுன்னே தெரியாமபோச்சே!!!

***மனைவி: நான் இப்படியே உங்களுக்கு சமைச்சு கொட்டிக்கிட்டே இருந்தா எனக்கு என்ன கிடைக்க போவுது?

கணவன்: ஆங். என்னோட இன்ஷுரன்ஸ் பணம் கிடைக்கும்...சீக்கிரமா...

***நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?
வீட்டிலிருப்பவனை ஒயின் ஷாப்பிற்கு போகவைப்பது காதல்.
ஒயின் ஷாப்பிலிருந்து தள்ளாட்டமாய் திருப்பி வீட்டிற்கு கூட்டி செல்வது நட்பு.

***அப்பா: டேய்! ஏண்டா இப்படி அழுவுற..?

மகன்: அம்மா அடிச்சிட்டாங்க...

அப்பா: இதுக்கா அழுவுற.ச்சீ அழாத...

மகன்: யோவ் போயா...உன்ன மாதிரியெல்லாம் என்னால அடிதாங்க முடியாது.

அப்பா: ????

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஒரு பட்டுப்பூச்சியின் மரணம்...


அவள் என் நண்பனின் மகள். வண்ண வண்ண கனவுகளுக்கும், மனம் மலரும் ஆசைகளுக்கும் சொந்தக்காரி. ஆறு வயது கிழவி அவள்.ஆம்! அத்தனை முதிர்ச்சியாக வாயாடுவாள். ஏதோ கேள்விகளின் அரசி போல் அத்தனை கேள்விகள் அவளிடம் உண்டு. சமாளிப்பாக நாம் எதுவும் சொல்லிவிட முடியாது. குடைந்து எடுத்துவிடுவாள். அதனாலே அவளிடமிருந்து வரும் கேள்விகளை நான் மிகவும் கவனமாகவே எதிர் கொண்டு பதிலளிப்பேன். எப்போதும் சுறுசுறுப்பாகவும்,சிறு குறும்பு பார்வையுடனும் உலா வரும் அவள் அன்று அவள் வீட்டிற்கு சென்றபோது அமைதியே உருவாக அமர்திருந்தாள்.

நான் அவள் அருகே சென்று அமர்ந்தேன். சோகமே உருவாக கன்னத்தில் கை வைத்து அம்ர்திருந்தவளை என் பக்கம் திருப்பினேன்.

‘என்னடா செல்லம் ஏன் கோவமா இருக்கீங்க..?’என்றவுடன்.

’டாடியும், மம்மியும் ஏசிட்டாங்க..’என்றது.

‘என் தங்கத்தயா திட்டுனான்....டேய்!ஏண்டா புள்ளய திட்டுனே...’அவளுக்காக நண்பனிடம் பொய் கோபம் காட்டினேன்.

‘நீ உன் செல்லத்துக்கிட்டேயே கேளு...வர வர கழுதக்கு அடம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..’என்று அவனும் விரைத்தான்.

நான் அவனை முறைத்துவிட்டு எனக்கு தேநீர் கொடுக்க வந்த அவன் மனைவியிடம் ‘ஏம்மா இந்தப் பய சும்மா இருக்க மாட்டானா? நீயும் ஏன் அவன் கூட சேந்துகிட்டு புள்ளய திட்டுற...’

‘அண்ணே! உங்களுக்கு தெரியாது வரவர இவளுக்கு எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் தான்...எது நாளும் புடிச்ச புடில வேணும்...’என்று அவளும் சேர்ந்து கொண்டாள்.

‘பக்கத்து விட்டு பொண்ணுக்கு இன்னக்கி பொறந்த நாளு அவ முட்டாய் கொடுக்க இங்க வந்தா...அவள பாத்திட்டு அவ போட்டிருந்த மாதிரியே இவளுக்கும் பட்டுப்பாவாடை வேணுமாம்..சரி! உனக்கு பர்த்டே வரும் போது வாங்கித் தாரேன் இவுங்க அப்பா சொன்ன பிறகும் ஒரே அடம். உடனே வேணுமாம்...’

‘எப்பா...ஆ இவ இப்படி பிடிவாதம் பிடிச்சா இவளுக்கு ஒண்ணும் வாங்கி கொடுக்காதீங்க....’என மேலும் எரியூட்டிய படி சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட துவங்கினாள்.

இப்போது குழந்தை மௌனம் உடைத்து விசும்ப தொடங்கியது.

நான் அவள் கண்களை துடைத்தபடி ‘உங்க ரெண்டு பேருக்கும் அறிவே கிடையாதா? அவளே அழுதுகிட்டு இருக்கா...இதுல நீ வேற சும்மா இருக்க மாட்டியாம்மா?’என நண்பனின் மனைவியை கடிந்தபடி..’வாடா! செல்லம் அங்கிள் உனக்கு பட்டுப்பாவாடை வாங்கித் தரேன்...அழக்கூடாது கிளம்பு..’ என்றேன்.

நான் ஏதோ சமாளிப்பதாய் நினைத்து கொண்டவள் கொஞ்சமும் சமாதானம் ஆகாமல் எழுந்து அழுதபடியே சோபாவில் போய் படுத்துக்கொண்டாள்.

இதைப் பார்த்து கொண்டிருந்த என் நண்பன் ‘விடு அவ அப்படித்தான்...அழுத்தக்காரி...கொஞ்ச நேரத்துல அவளே அழுது அடங்கிருவா... சரி! வாடா நாம போகலாம் ...’என்றான் எதையும் அலட்டிக்கொள்ளாமல்.

‘டேய்! அவ அழுதுக்கிட்டு இருக்காடா...பாவம் புள்ளய கூட்டிட்டு போவோம்..’என்றேன்.

அதற்கு உள் இருந்தபடியே அவன் மனைவி,’அண்ணே! நீங்க போயிட்டு வாங்க அவ சரியாயிருவா...நான் தான் இருக்கேன்ல...’என்றபடி நண்பனுக்கும் ஏதோ குறிப்பால் உணர்த்தினாள்.

அதை கவனிக்காதவன் போல் நானும் நண்பனோடு கிளம்பினேன்.

வழக்கமாக போகும் கடைக்கு சென்று ஆளுக்கு ஒரு சிகிரெட்டை பற்ற வைத்தபடி அவனிடம் ‘டேய்! நீயும் தான் அவளுக்கு அத வாங்கி கொடுத்தா என்ன?’என்றேன்.

‘மச்சான் மாச கடைசி வேற...அடுத்த மாசம் அவளுக்கு பொறந்த நாளு வருது அப்ப பாத்துக்கலாம் விட்டுட்டேன்’ என்றான்.

ஒருவழியாக நானும் சமாதானம் ஆகி வேறு விஷயங்களை கதைக்க தொடங்கினோம்.நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம்.

நாட்கள் சென்றது...அவளது பிறந்தநாளும் வந்தது...நானும் ஞாபகமாக அவளுக்கு ஒரு பட்டுப்பாவாடையை பிறந்தநாள் பரிசாக வாங்கிச் சென்றேன்.

என்னை உற்சாகமாக ஜீன்ஸ் பேண்டிலும், டீ சர்டிலும் எதிர்கொண்டு இனிப்பு வழங்கினாள். அவள் பட்டுப்பாவாடையை மறந்து விட்டாள் போலும் என நினைத்தபடி அவளிடம் ‘அங்கிள் இன்னக்கி உனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு பாப்போம்...’என அவளிடம் கேட்டேன்..

‘தெரியலியே..! நீங்களே சொல்லுங்களேன்...’என்றவளிடம் மேலும் புதிர் போட விரும்பாமல் பார்சலை பிரித்து ‘என் செல்லத்துக்கு பிடித்த பட்டுப்பாவாடை டோய்...’என்றபடி அவளிடம் நீட்டினேன்.

அதுவரை உற்சாகமாக இருந்த அவளது விழிகள் பட்டுப்பாவாடையை பார்த்தவுடன் சுருங்கியது ‘ஓ! இதுவா...’ என்றாள் உற்சாகமின்றி.

அவளே தொடர்ந்தாள் ‘அங்கிள் இது வேணாம் எனக்கு...’என்றாள்.

‘ஏம்மா...’ என்றேன் எதுவும் புரியாமல்.

‘அங்கிள் இத பட்டுப்பூச்சிய கொன்னு அதுல இருந்து செய்வாங்களாம் மம்மி சொன்னாங்க...பாவம் அதுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...அதோட மம்மி,டாடி எல்லாம் ரொம்ப அழுதிருப்பாங்க இல்ல...அதானால இது எனக்கு வேண்டாம் அங்கிள்...’என்றாள்.

நான் வாயடைத்து போய் நின்று கொண்டிருந்தேன். என்னை ஏறிட்டு பார்த்தவள் ‘அங்கிள் இதை பத்திரமா அடக்கம் பண்ணிருங்க அங்கிள்...’என கூறிவிட்டுச் சென்றாள்....

ஏதோ போதி மரம் என்னிடம் உரையாடி விட்டு சென்றதைப் போல் உணர்ந்தேன்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

புதுச்சேரியில்-ஒரு தொழிற்சங்க வைபவம்


கடந்த 08.08.2010 அன்று புதுச்சேரியில் உள்ள பார்வதி திருமண நிலையத்தில் வைத்து சிறப்பு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு கூட்டத்தை புதுவை பாரதியார் கிராம வங்கியின் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இணைந்து நடத்தினர். இதை வழக்கமாக கூட்டப்படும் தொழிற்சங்க கூட்டமாக நாம் பார்க்க முடியாது.ஏனென்றால் “தொழிற்சங்கம்” என்ற வார்த்தையை கூட இதுவரை எதிர்கொண்டிராத ஒரு புதிய தலைமுறையின் வண்ணமயமான தொழிற்சங்க பிரவேச விழா இது.

விழித்தெழ விசனப்பட்டுக்கொண்டு விடியலை மறுத்துக்கொண்டிருந்த அந்த அதிகாலைப்பொழுதை மலர்ச்சியாக்க மெல்லப் பரவும் ஒளிக்கீற்றுகள் போல பல்வேறு பக்கங்களில் இருந்தும் தோழர்களின் வருகை இருந்தது. AIRRBEA என்னும் எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கும் புதிய உறுப்பினர்கள் கூட்டிய சிறப்பு தொழிற்சங்க கூட்டத்தில் பங்கேற்க பாண்டியன் கிராம வங்கி,பல்லவன் கிராம வங்கி,சவுத் மலபார் மற்றும் சப்தகிரி கிராம வங்கிகளில் இருந்தும் திரளான தோழர்கள் வந்து குவிய துவங்கினார்கள்.வண்ணத்துப்பூச்சிகளின் திடீர் படையெடுப்பு போல இருந்தது புதுவை தோழர்களின் வருகை. அவர்கள் வந்திறங்கிய சிறிது நேரத்தில் அந்த இடமே ஒரு கல்லூரிவளாகம் போல் உருமாறியது. பல மணிநேர பயணக் களைப்பையும் மீறி ஒருவித புத்துணர்ச்சி எங்களுக்குள் பரவத்துவங்கியது.

முதலில் சிறிது தயக்கத்துடன் நுழைந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான நிலைக்கு திரும்பி எங்களோடு சகஜமாக உரையாட துவங்கினர். விழா அரங்கத்தை சீரமைப்பது,பேனர்கள் கட்டுவது என பரபரப்பானார்கள். மணப்பெண்ணை தயார் செய்வது போல் கருமசிரத்தையோடு அரங்கத்தை தயார் செய்தனர். எங்களது அகில இந்திய தலைவர்களின் வருகைக்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் கூட்டம் மிகச் சரியாக 11.00மணிக்கு துவங்கியது.

புதிய இளம் தலைமுறையினருக்கு இடையே பல தலைமுறைகளை கடந்த பழுத்த பழமாக எங்களது அகில இந்திய சங்கத்தின் (AIRRBEA) பொதுச்செயலாளர் தோழர்.D.K.முகர்ஜி அவர்கள் அமர்ந்திருந்தார். சமீபத்தில் தான் செய்து கொண்ட அறுவைசிகிச்சையின் காயம் கூட ஆறாத நிலையில் தனது குடும்பத்தின் புதிய அங்கத்தினர்களோடு கலந்துரையாட மிகுந்த உற்சாகத்தோடு காத்திருந்தார். கூட்டத்தை புதுவை பாரதியார் கிராம வங்கியின் அலுவலர் சங்கத்தலைவர் தோழர். முருகன் துவக்கி வைத்தார். புதுவை பாரதியார் கிராம வங்கியின் ஊழியர் சங்கத்தலைவர் தோழர்.சசிகுமார் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

அதுவரை உறவுகளின் முறைகளை சொல்லியும், நண்பர்களின் பெயர்களை சொல்லியும் மட்டுமே பழக்கப்பட்டிருந்த அவர்களின் உதடுகள் முதல்முதலாக “காம்ரேட்” என உச்சரிக்க துவங்கியதால் சிறிது பதட்டத்துடன் அதை பதம் பார்த்தார்கள். குழந்தைகளின் ’கிள்ளை’ மொழி போல அதுவும் அழகாகதான் இருந்தது.தோழர்.ரமன்யா வரவேற்புரையை தெளிந்த ஆங்கில நடையில் வழங்கினார். எங்கள் சங்கத்தின் (AIRRBEA) தமிழ்மாநில பொதுச்செயலாளரும், புதுவை பாரதியார் கிராம வங்கியின் தொழிற்சங்க அமைப்பாளருமான தோழர்.சோலைமாணிக்கம் அவர்கள் ஒரு மூத்த தகப்பனை போல் அவர்களுக்கு மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களை பற்றியும்,எங்கள் சங்கத்தின் பாரம்பரியத்தை பற்றியும் விளக்கி கூறினார்.

எங்கள் அகில இந்திய சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான் தோழர்.வெங்கடேஸ்வர ரெட்டி (GS-NFRRBO) அவர்கள் மிகத்தேர்ந்த வார்த்தைகளில் காலம் கருதி சுருக்கமாக தனது சிறப்புரையை வழங்கினார். அடுத்து பேசிய தோழர்.ராஜீவன் (PRESIDENT-NFRRBE) அவர்கள் புதிய தோழர்களின் வருகையால் தனக்கு அளப்பரிய உற்சாகமும், சங்கத்தின் எதிர்காலம் குறித்தான புதிய நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அவரை தொடர்ந்து தோழர்.K.கிருஷ்ணன் (SECRETARY-BEFI) அவர்கள் மெல்ல தன் முழக்கத்தை ஆரம்பித்தார். தோழர்.D.K.முகர்ஜியின் ஓய்வறியா வாழ்க்கை முறையையும், போராட்டங்கள் நிறைந்த அவரது தொழிற்சங்க பயணத்தையும் இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கை பாடமாக கொள்ள வேண்டுமென கூறினார். மேலும் தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை குறித்தும்,அதிகாரவர்க்கத்தின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத போக்கினை குறித்தும் அவர்தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

எமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.D.K.முகர்ஜி அவர்கள் தனது சிறப்புரையை மிக மெல்லிய குரலில் ஆரம்பித்தவர் தனது உடல்நிலையையும் மறந்து மெல்ல மெல்ல தனது வழக்கமான கர்ஜனைக்கு மாறினார்.கிராம வங்கிகளுக்கு புதியவர்களின் வருகை புதுரத்தம் பாய்ச்சியிருப்பதாகவும் அதேசமயம் கிராம வங்கி ஊழியர்களுக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதாகவும் உறுதியளித்தவர். கிராம வங்கிச் சேவையிலிருந்து புதியவர்கள் வேறு வேலைகளுக்கும் மாற்றலாகி போகவேண்டாம் என்ற தனது கோரிக்கையையும் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் வைத்தார். கிராம வங்கி ஊழியர்களின் போராட்டங்கள் நிறைந்த கடந்த காலங்களை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைத்தார். நமது நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்தும் அதன் இன்றைய நிலை குறித்தும் மிக தெளிவாக எடுத்துரைத்தார்.ஒருமணி நேரத்திற்கும் மேலான அந்த நீண்ட உரையை தங்களது பசியையும் மறந்து வடித்து வைத்த சிலைகளைப் போல சிறு சலனமும் இன்றி உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.அவர் தனது சிறப்புரையை நிறைவு செய்த போதும் அரங்கத்தின் சுவர்களில் அவரது குரல் எதிரொலித்து கொண்டே இருந்தது.

இறுதியாக கூட்டத்தின் நிறைவு உறையை இளம் தோழர்.மனோஜ் பிரபாகர் அவர்கள் வழங்கி அந்த அருமையான அமர்வை நிறைவு செய்தார். தொழிற்சங்கங்களை முடக்குவதிலும், தொழிலாளர் உரிமைகளை சிதைப்பதிலும் அதிக சிரத்தையோடு ஆளும் அதிகார வர்க்கம் செயல்பட்டு வரும் வேளையில் இது போன்ற தொழிற்சங்க கூட்டங்கள் நடைபெறுவது நமக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும்,புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது.

வியாழன், 27 மே, 2010

என் ஜீவன்...


சுற்றும் பூமியிலிருந்து சற்றே விலக செய்து
அவனை சுற்றி வரவிட்டான்....

என் சிந்தனைகளை சிறைபிடித்து அவனைதாண்டி
படராமல் பார்த்துக்கொண்டான்....

என் இரவுகளை பகலாக்கி
எனது பகல்களை இரவுகளாக மாற்றிவிட்டான்....

தன் பொக்கைச்சிரிப்பில் என்னை மயங்கவைத்து
அவன் என் கைகளை கட்டிவிட்டான்....

தன் பிஞ்சுக்கால்களை என் நெஞ்சில் உதைத்து
என்னை அவன் அடிமையாக்கிக்கொண்டான்....

என் விரைத்த மார்பில் அவன் கழித்த சிறுநீர்தான்
என்னை இளக செய்ததோ...?தெரியவில்லை...ஆனால்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றிக்கொண்டும் வருகிறான்....

என்னை கடித்த எறும்பை கூட மெல்ல பிடித்து
தரையில் விடுகிறேன்...பத்திரமாக தன் குட்டிகளுக்கு
இரையெடுத்து செல்லட்டுமென....

வேகமாக வந்து என்னை மோதுவது போல்
கடந்து சென்றவனையும்...ஆத்திரப்படாமல் பார்த்து சிரிக்கிறேன்
என்னைப் போல் அவன் தன் பிள்ளையை காணச் செல்கிறான் என...

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்....
இந்தப் புரிதலும்,பொறுமையும் எனக்கு கூட சாத்தியமா?
என என்னையே நான் வியக்கிறேன்..

’பெற்றவள் சொல்லி கேட்காத நீ உன் பிள்ளையிடம் அடங்கிப்போவாய்..’என
எப்போதோ என் அன்னை விட்ட சாபம்
இப்போது இன்பமாய் பலிக்கிறது.

இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம்...என
என் உலகையே தனதாக்கி கொண்டு என்னை முழுவதுமாய்
ஆக்கிரமித்துவிட்டான்.....என் ஜீவன்...!!!!!!!!!

சனி, 13 மார்ச், 2010

எனது பார்வை...


தோழர்களே! நான் தோழர்.தமிழச்செல்வனின் (தமிழ்வீதி) ”மகளிர் தினமும் இரண்டு கதைகளும் என்னும்” என்ற பதிவையும் வெண்ணிற இரவுகளின் ”நீதிக்கு தண்டனை” என்னும் பதிவையும் நேற்று படித்தேன். அவர்களிருவரும் சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்பு ஒன்றை பற்றி மிக கடுமையான விமர்சனம் வைத்திருந்தார்கள். அந்த விமர்சனத்தின் எனது முரண்பாடை நான் தோழர்.தமிழ்செல்வனுக்கு பின்னூட்டமாக எழுதிவிட்டு அதை முடித்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் தற்போது எனது ’அன்புமாமா’ காமராஜ் (அடர் கருப்பு) போன்றவர்களும் மேற்கூறிய அதே விமர்சனத்தையே கொண்டுள்ளார்கள் என்பதால் நான் எனது இந்தப் பதிவை அதன் தொடர் பதிவாக இடுகிறேன்.....இது எனது சொந்த கருத்துக்கள்.....இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக மட்டுமே பார்க்கப்படும் எனவும் நம்புகிறேன்....

முதலில் அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்வோம்......’சுஷ்மா’ இவள் உத்திரபிரதேச மாநிலத்தவள்.தற்போது மும்பையில் வசிக்கும் 25 வயது இளம் யுவதி. பிராமண சாதியம் பூசிக்கொண்ட குடும்பத்தவள். இவள் கேரளத்தின் ’கீழ்சாதியான’ ஈழவ சமூகத்தை சார்ந்த பிரபு என்கிற இளைஞனை காதலித்து இருக்கிறாள். அவர்களது அந்த அழகான காதல் கல்யாணமாகவும் மலர்ந்திருக்கிறது. இல்லறத்தை துவக்கிய அந்த இளம் பிஞ்சுகளின் வாழ்வை சாதியவெறி அழித்தொழித்திருக்கிறது. ஆம்! சுஷ்மாவின் அண்ணன் திலீப் திவாரி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபுவின் வீட்டிற்கு செல்கிறான். அந்த நேரத்தில் கெட்டதிலும் ஒரு சிறு நல்லதாக கர்ப்பிணியான சுஷ்மா வெளியே சென்றிருந்திருக்கிறாள். அப்போது அந்த கொலைவெறி கும்பல் பிரபுவையும்...அவனது தந்தையையும், அங்கு விளையாடி கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்று குவித்து தங்களது சாதியவெறிக்கு இரையாக்கி இருக்கிறது.

அப்போது சுஷ்மா அந்த கொலையாளிகளை எதிர்த்து மும்பை கோர்ட்....மராட்டிய உயர்நீதி மன்றம்....என போராடி அவளது அண்ணனுக்கு தூக்கு தண்டனை பெற்று தந்திருக்கிறாள். அவன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறான். உச்சநீதி மன்றமுமோ அவனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கிறது. மேலும் தனது தீர்புக்கு வலு சேர்க்கும் விதமாக கீழ்கண்ட வற்றை காரணமாகவும் கூறுகிறது. அது......

The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “

”ஒரு குடும்பத்தில் ஒரு இளைய சகோதிரி வழக்கத்திற்கு மாறான ஒரு செய்கையில் ஈடுபட்டால்...அதாவது சாதிய மறுப்பு திருமணத்திலோ,அல்லது மதமறுப்பு திருமணத்திலோ அல்லது ரகசிய காதல் திருமணத்திலோ என்றால் இந்த சமூகம் அவளது மூத்த சகோதரனையே அத்தகைய செய்கையை தடுத்து நிறுத்தாதற்கான பொறுப்பாளியாக கருதும்.”

மேலும்:”அதாவது அவனே தனது செயல்களுக்கு முழுமுதற் பொறுப்பாளி என்றாலும் இந்த வழக்கை பொறுத்தவரை மரண தண்டனை என்பது சற்று அதிகபட்சமானது தான்....ஏனென்றால் சாதியம்,இனம்,மதம், போன்றவகளின் பிடிப்பு நியாயப்படுத்த முடியாத ஒன்றானாலும் அதன் தாக்கங்கள் தற்போதைய யதார்தமே...”என்கிறது.

இப்போது இந்த மேற்கண்ட தீர்பே பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இது உயர் சாதிய மனோபாவத்திற்கு துணை போகும் தீர்ப்பு என்றும் பெண்ணியத்திற்கு எதிரானதாகவும் விமர்சிக்க பட்டு வறுகிறது. மேலும் சுஷ்மா இந்த தீர்ப்பை எதிர்த்து போராடி வருகிறார். அதற்கு வலுசேர்க்கும் விதமான பதிவுகளே இங்கு பதியப்பட்டு வருகிறது.

தோழர்களே!

இங்கு ஒரு சில விஷயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. நீதி என்பது தனிமனிதனை போல் உணர்ச்சிவசப்பட்டு செயல்பட கூடிய அமைப்பாக மாறிவிட கூடாது. அது தான் ஆபத்தானது. இங்கு சுஷ்மா வேண்டுவது என்ன? தன் கணவனையும்,அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்ற தன் அண்ணனுக்கு மரண தண்டனை வேண்டுமென்பதே.

இதில் உச்சநீதிமன்றத்தின் பார்வை மிகச்சரியான ஒன்றுதான். அது திலீபின் மரண தண்டனையை 25ஆண்டுகள் சிறைதண்டனையாக மாற்றித்தான் தீர்ப்பளித்திருக்கிறது. அவனை நிரபராதி எனக் கூறி விடுதலை செய்யவோ அல்ல அவனது கொலைகளை நியாயப்படுத்தவோ செய்யவில்லை.ஆனால் அவனது செய்கைக்கான காரணிகளை சமூக யதார்த்தத்தோடு முன்வைத்து அலசியிருக்கிறது. எந்த ஒரு கொலைக்கும் கொலையாளியை விட அதற்கான காரணிகள் தான் முக்கியமானதாக கருதப்பட வேண்டும். இங்கும் அதைத்தான் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.... இப்படி ஒரு சாதிய கட்டமைப்பில் உருவாகும் இளைஞர்கள் வேறு எப்படி செயல்படுவார்கள்? என்ற கேள்வியையும் இந்த கொலைகளுக்கான காரணிகளாக சாதிய கட்டமைப்பையும் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது. ஆகவே நாம் ரௌத்திரம் கொள்ள வேண்டியது இந்த சாதிய கட்டமைப்புகளுக்கு எதிராகத்தானேயொழிய இது போன்ற தனிநபர்களுக்கு எதிராக அல்ல.

ஒரு பேச்சுக்கு அப்படியே மரண தண்டனை வழங்கப்பட்டு விட்டால் இனிமேல் இது போன்ற திலீப்களை இந்த சாதிய சமூகம் உருவாக்காமல் விட்டு விடுமா? இதுதான் இது போன்ற கொலைகளுக்கு தீர்வா? கொலைக்கு கொலை தீர்வாகுமா? மரணம் என்பது ஒரு தண்டனையா?

பொதுவாக தண்டனைகள் என்பது தனிமனிதர்கள் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள இந்த சமூகம் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவே அமைய வேண்டும். அது தனிமனித வன்மத்தின் வடிகால்களாக அமைந்து விடக்கூடாது.

மரணதண்டனைகள் நம் சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. குறிப்பாக சுதந்திரத்திற்குப் பின்னும் அது தொடர்வது கொடுமையானது. ஆனால் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதே தவிற குறைந்து விடவில்லை. இதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது மரணதண்டனையின் மூலம் எந்த தாக்கத்தையும் இந்த சமூகத்தில் ஏற்படுத்தி குற்றங்களை குறைத்து விடமுடியாது என்பதே!

அதனால் நாகரிகமான ஒரு மனித சமூகத்தில் ’மரணம்’ என்பது ஒரு தண்டனையாக தொடர்வதை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சரி! இது போன்ற நிகழ்வுகளுக்கு என்னதான் தீர்வு?

தனிமனிதர்களால் உருவானதே சமூகம். அதனால் தனிமனித மாற்றங்களால் தான் இதை சரி செய்ய முடியும்.ஆம்! நாம் நமது அடுத்த தலைமுறையையாவது சாதிய அடையாளத்திலிருந்து விடுவிக்க வேண்டும். நமது சாதிய அடையாளங்கள் நம்மோடு ஒழிந்து போட செய்ய வேண்டும்.

சரி இந்த இடத்தில் சில கேள்விகள் எழலாம்....சாதிய அடையாளங்களை தொலைத்து விட்டால் நமது குழந்தைகள் பொதுப் பிரிவில் அல்லவா சேர்க்கப்படுவார்கள்? அப்படியென்றால் இடஒதுக்கீட்டு சலுகைகளை நம் குழந்தைகள் இழந்து விடுவார்களே?

ஆம்! உண்மைதான்.... பல நூறு ஆண்டுகளின் கழிவை சிறு சிறாய்ப்புகள் கூட இல்லாமல் இங்கு சரி செய்ய முடியாது. பல லட்சம் பேர் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் செய்த தியாகத்தின் விளைவுதான் இன்றைய நமது சுதந்திர சுவாசம்.

வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்... சாதிய அடையாளத்தை துடைத்து எறிவோருக்கு என்று புதிய....ஏன் எந்தப் பிரிவினருக்கும் இல்லாத அதிக சலுகைகளை கோரி இயக்கங்கள் நடத்தலாம். இதை முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் சார்ந்த சாராத அமைப்புகள் ஒருங்கிணைத்து போராடலாம்.ஆனால் இதுவெல்லாம் ஒரே இரவில் நடைபெறக் கூடிய ஒன்றல்ல......என்பது யதார்த்தம்.

ஆனால் அதேநேரத்தில் இங்கு நடைமுறையில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் மாபெரும் போராட்டங்களின் விளைவாகவே உருவாக்கப்பட்டவை (உதாரணம்: தொழிற் தாவா சட்டங்கள்).....என்பது சரித்திரம்.

நாம் ஒன்றிணைவோமா.....? புரிந்து கொள்வோமா....?