செவ்வாய், 9 மார்ச், 2010

தோழர் ஆனேன்....5


இது ஒரு தொடர் பதிவு......

எங்களது அகில இந்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அப்போது பீகாரில் உள்ள புத்தகயா என்னும் ஊரில் வைத்து நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள எங்கள் சங்கத்தலைமையிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் மிகுந்த உற்சாகத்தோடு அதில் கலந்து கொள்ள என் விருப்பத்தை தெரிவித்தேன். அதுதான் எனது முதல் வட இந்திய பயணம். அதனால் மிகுந்த ஆவலோடு பயணத்திற்காக காத்திருந்தேன்.....அந்த நாளும் வந்தது....

தூத்துக்குடியிலிருந்து நானும், தோழர்.அருள்ராஜும் பயணமானோம்.....தூத்துக்குடி....சாத்தூர்....மதுரை என ஒவ்வொரு நிறுத்தங்களிலும் எங்கள் தோழர்கள் வந்திருந்து எங்களை வழியனுப்பி வைத்த அந்த நிமிடங்கள் நான் அதுவரை வாழ்வில் பார்த்திராதது. மிகவும் பெருமிதமான உணர்வோடு எனது அந்த பயணம் துவங்கியது.ஒவ்வொரு நிறுத்தங்களிலும் எங்களது சங்க நிர்வாகிகள் ஒவ்வொருவராய் எங்களோடு இணைந்து பயணிக்க ஆரம்பித்தார்கள்.

முற்றிலும் புதிய மனிதர்கள்....புதிய சூழல்....என எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தனிமை படர துவங்கியது. என்னோடு பயணித்தவர்களுக்கும் எனக்கும் ஒரு தலைமுறை இடைவெளி இருந்தது. எனக்கு அவர்களிடம் என்ன பேசுவது என்று கூட அப்போது தெரியவில்லை. ஆனால் எனக்குள் எழுந்த அந்த தயக்கத்தை அவர்கள் கொஞ்ச நேரம் கூட நீடிக்க விடவில்லை. ஒவ்வொருவராய் வந்து என்னிடம் தங்களைப் பற்றியும், எனது அம்மாவை பற்றியும் அவர்களது கடந்த கால நினைவுகளை பற்றியும் பகிர்ந்தபடி என்னிடம் நெருக்கம் கொள்ள ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நானும் சகஜமானேன்.

மறுநாள் காலை 9.30 மணியளவில் இரண்டு மணி நேர தாமதத்தோடு சென்னை எழும்பூர் சென்று சேர்ந்தோம். எங்களுக்கோ காலை 10.00 மணிக்கு சென்னை செண்ட்ரலில் இருந்து கிளம்பும் கோரமண்டல் ரயிலை பிடிக்க வேண்டிய நிர்பந்தம். அதாவது வெறும் அரை மணி நேர கால அவகாசமே இருந்தது. அவசர அவசரமாக அங்கிருந்து ஆட்டோ பிடித்து சென்னை நெரிசலில் மிதந்து செண்ட்ரல் சேரவும் ரயில் கிளம்பவும் மிகச் சரியாய் இருந்தது. எங்களது பெட்டி படுக்கைகளோடு சென்னை செண்ட்ரலில் நாங்கள் ஓடிய காட்சி தமிழ் சினிமாக்களின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல.

ஒருவழியாக ஆளுக்கு ஒரு பெட்டியில் ஏறி விழுந்து ஒருங்கிணைந்தோம். ஆனால் இதிலெல்லாம் எந்த சலனமும் இல்லாமல் ரயிலோ தனது வழக்கமான தடதடப்புடன் பயணித்து கொண்டிருந்தது.....

பொதுவாக பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அதிலும் இது போன்ற அசாத்திய சூழலும் இணையும் போது அதன் சுவாரஸ்யம் இரட்டிப்பாகத்தான் செய்கிறது. எனது முந்தய நாளின் தயக்கங்கள் முழுவதுமாக வடிந்துவிட்டிருந்தது.

நாங்கள் ரயிலேறிய விதத்தை சிலாகித்தபடி ஆரம்பித்த எங்கள் உரையாடல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடு பயணித்த தோழர்களின் அதற்கு முந்தைய இது போன்ற பயண அனூபங்கள்....முந்தைய அகில இந்திய மாநாட்டு அனூபவங்கள்....என கிளை விட துவங்கியிருந்தது. அவர்களுக்கு என்னிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும்....வரலாறுகளும் மீதம் இருந்தது. எனக்கோ அவர்கள் பேசிய ஒவ்வொன்றும் புதிதாகவும்,ஆவலை தூண்டுவதாகவும் இருந்தது.

நிறைய பேசினார்கள்....என்னையும் பேச வைத்தார்கள்.....தோழமை என்னும் அந்த வீரியமிக்க உணர்வை எனக்குள் செலுத்தி தலைமுறை இடைவெளியையும் தகர்த்தெரிந்தார்கள். தனது குடும்பம்...தனது வேலை...தனது தேவைகள்....என எல்லாவற்றையும் விடுத்து அவர்களிடம் பொதுவான பேசு பொருளாய் இருந்தது...தொழிற்சங்கம். அவர்கள் சிலாகிக்க....நெஞ்சம் விறைத்து பெருமிதம் கொள்ள....ஒருவரை ஒருவர் சீண்ட என எல்லாவற்றிற்கும் அவர்களுக்கு அந்த மந்திர சொல் வழிவகை செய்திருந்தது.

மேலாளர்..எழுத்தர்...கடைநிலை ஊழியர்....என எல்லா பதங்களும் மருவி தோழர் என்ற ஒற்றை சொல்லாய் அவர்களிடம் நிலை பெற்றிருந்தது. அது எனக்கு அவர்கள் மீதும்....எங்கள் தொழிற்சங்கத்தின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்த ரயில் பயணத்தை ஏதோ தங்களது இளமை காலத்தை நோக்கிய பயணமாய் அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். சீட்டு கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது....உற்சாக பானம் தந்த துணையோடு அவர்கள் அடித்த கொட்டம் அவர்களது நரைத்த மயிரை கூட கருக்க செய்வதாய் இருந்தது. கேலியும்,கிண்டலுமாய் தொடர்ந்த பயணம் மறுநாள் காலை புவனேஸ்வரில் இறங்கி வேறு ரயில் மாறிய பின்பும் கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்தது.

ஒருவழியாக நாங்கள் பீகார் ரயில் நிலையம் சென்று சேர்ந்த போது அதிகாலை 4.00மணி இருக்கும். அங்கு எங்களை வரவேற்க பீகார் மாநிலத்தின் கிராம வங்கி தோழர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தார்கள்.

பீகார் ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த நிமிடங்களிலிருந்து நாங்கள் பார்த்த ஒவ்வொரு காட்சியும் அந்த மாநிலத்தின் நிலையையும்,அந்த மக்களின் அவல நிலையையும் எடுத்துச் சொல்வதாய் இருந்தது.....

எங்களை ரயில் நிலையத்தின் அருகே ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அமரச் சொன்னார்கள். அந்த ரயில் நிலையத்திலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு அரைமணி நேர பயணமாவது ஆகும் என்றும் அதற்கு விடிந்த பின்பே பயணிப்பது பாதுகாப்பானது என்றும் எங்களை வரவேற்க வந்த தோழர்கள் கூறினார்கள். நாங்களும் அந்த மூத்திர நெடி சூழந்த கட்டிடத்திற்குள் ஒரு இரண்டு மணி நேரம் முடங்கிக்கொண்டோம். ஒருவழியாக 6.00மணி அளவில் இரண்டு வேன்களில் எங்களை புத்தகயாவிற்கு அழைத்து சென்றார்கள்.

---தொடரும்....

திங்கள், 8 மார்ச், 2010

தோழர் ஆனேன்....4

இது ஒரு தொடர் பதிவு.....

நாட்கள் சென்றன....நான் இரெகுநாதபுரத்திலிருந்து ஓட்டப்பிடாரம் கிளைக்கு எமது சங்கத்தின் பரிந்துரையின் பேரில் பணி மாறுதல் செய்யப்பட்டேன். ஓட்டப்பிடாரம்....இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரம் செறிந்த போராட்டங்களின் விளைநிலமாக விளங்கிய வீரபூமி. பரங்கியர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய வ.உ.சி அவதரித்த புண்ணிய பூமி. ஆனால் அதுவெல்லாம் அப்போது எனக்கு பெரிதாய் தெரியவில்லை.

எனக்குள் அந்த கிளை சம்பந்தமான ஆர்வத்தை தூண்டிய ஒரே விஷயம் அது என் தாய் மேலாளராக பணிபுரிந்த கிளை என்பதே! எத்தனை பிள்ளைகளுக்கு இந்த பாக்கியம் வாய்க்கும் என தெரியவில்லை.ஆனால் எனக்கு கிட்டியது. அவள் அமர்ந்த இருக்கைகளில் நான் அமரப்போகிறேன்..... அவள் பார்த்து பழகிய மனிதர்களிடம் நானும் பழகப்போகிறேன்...... என்பன போன்ற பல எண்ணங்கள் எனக்குள் ஆர்வத்தை தூண்டி இருந்தது.

அங்கு நான் பணிபுரிந்தது இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் அவை. என்னை பொறுத்தவரை அது வெறும் அலுவலகம் அல்ல. நான் புடம் போடப்பட்ட பட்டறை அது. அப்போது அங்கு ஜோசப் ரூபன் விக்டோரியா என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு எங்கள் வங்கியில் கறார் பேர்வழி எனப் பெயர். யாருக்காகவும், எதற்காகவும் வளைந்து கொடுத்து போகத் தெரியாதவர்.

அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டேன்.ஆனால் நானோ எனக்கு அறிவுரை சொல்லியவர்களிடம் நானா? அவரா? என பார்த்து விடுவேன் என சூளுரைத்து வந்திருந்தேன். ஓரிரு நாட்கள் இயல்பாக சென்றது. ஒரு நாள் அவசர விடுப்பொன்று எடுத்தேன். எனது அந்த விடுப்பையும் என் வீட்டில் வேலை செய்த அக்காவின் மூலம் மேலாளரிடம் சொல்ல சொல்லிவிட்டு வெளியூருக்கு பயணமானேன்.

மறுநாள் நான் பணிக்கு திரும்பியவுடன் அவர் எனது முறையற்ற தகவல் பரிமாற்றத்திற்காக என்னை கடிந்து கொண்டார். நான் செய்தது தவறு எனப் புரிந்தாலும் அவரை எப்படியாவது வேறு வழியில் பழிவாங்க வேண்டும் என முடிவு செய்து சந்தர்பத்திற்காக காத்திருந்தேன். ஆனால் எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காத வண்ணம் அவர் நடந்து கொண்டதோடு என்னை மெல்ல மெல்ல வாஞ்சையான வார்த்தைகளால் நெருங்கவும் செய்தார்.

கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் இருந்த வன்மம் குறைந்து நான் அவரை புரிந்து கொள்ள துவங்கினேன்....

எந்த தொழிற்சங்கத்திலும் உறுப்பினராய் இல்லாதவர். ஆனால் ஆழமான தொழிற்சங்க பார்வையும்,சமூகத்தின் மேலான அக்கறையும் அவரிடம் நான் கண்டதுண்டு. தனக்கு சரி என்று பட்டால் தயங்காமல் பாராட்டவும், தனக்கு தவறு எனப்பட்டதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டிக்காட்டுவார். அதேசமயம் மிகவும் மென்மையான மறுபக்கம் கொண்டவர். இசையின் மேல் அளப்பறிய காதலும் ,ஞானமும் அவருக்கு உண்டு. அது அவரிடம் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நான் அவரிடம் பல விஷயங்கள் குறித்து கருத்தாடி இருக்கிறேன். அவரும் சளைக்காமல் எனக்கு பதிலளித்து கொண்டு இருப்பார். எங்கள் சர்வீஸ் ஏரியாவில் உள்ள கிராமங்களில் நடைபெறும் குழு கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்ல ஆரம்பித்தார். இந்த சமூகத்தின் கடைகோடி மக்களையும் அவர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ள இது போன்ற கூட்டங்கள் எனக்கு பெரிதும் உதவியது. வங்கி அதிகாரிகள் என்பதால் அவர்கள் எங்களிடம் காட்டிய மரியாதையை பார்த்த போது என் பணிமீதான காதலும்,கர்வமும் எனக்குள் அதிகரித்தது.

வங்கித்துறை குறித்த தெளிவான பார்வை அவருக்கு உண்டு. எந்த ஒரு வேலையையும் அதன் அர்த்தம் புரிந்து செய்திட வேண்டுமென்பார். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்....சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால் மேலாளர்--எழுத்தர் என்பதையும் தாண்டி ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவே எங்களுக்குள் இருந்ததாய்.....இருப்பதாய்....உணர்கிறேன்.

இப்படியாக சென்று கொண்டிருந்த எனது அன்றாட வாழ்க்கையில் என் வாழ்வை திசைமாற்றிய அந்த பயணத்திற்கான அழைப்பு எங்கள் சங்கத்திலிருந்து வந்தது.......
தொடரும்..........

ஞாயிறு, 7 மார்ச், 2010

நான் பேசுகிறேன்...


சமீபத்தில் நடந்தேறிய ஒரு மூன்று சம்பவங்களும் அதன் விளைவாக இந்த சமூகத்தில் ஏற்பட்ட சில அதிர்வுகளும் நிச்சயம் விவாதிக்கபட வேண்டியது. விவாதங்களும் பெரும் அளவில் நடைபெற்றுள்ளது. ஆனால் பெரும்பான்மையான விவாதங்களில் நடுநிலைத் தன்மை என்பது காவு வாங்கப்பட்டு தனிமனித அரசியலும்,மூடத்தனங்களும் மேலோங்கி இருப்பதாய் எனக்கு படுவதால் நான் இந்த பதிவை இடுகிறேன்.....

முதலில் அந்த சம்பவங்கள்.....

1.உத்திரப்பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர்.சீனிவாச ராமச்சந்திரா சிராஸ் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக “புகார்” கூறி அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

2.தோழர்.டபிள்யு.ஆர்.வரதராஜனின் மரணம்.

3.நித்தியானந்த சாமிகளின் ”லீலைகள்”.

முதலாவது சம்பவம் ‘வாய்ஸ் ஆஃப் நேஷன்’ (VNI) என்னும் இந்தி சேனலின் நிருபர்கள் குழு ஒன்று ரகசிய கேமிரா மூலம் பேராசிரியரின் படுக்கை அறையை பதிவு செய்து அவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வெளியிட்டு உள்ளார்கள். இந்த மாபெரும் ”சமூக சேவை”யின்
விளைவு....பேராசிரியர் குற்றவாளி கூண்டில் நிறுத்தபடுகிறார்....சஸ்பெண்ட் செய்யபடுகிறார்....ஓரின சேர்க்கை தேசிய குற்றமாக மலினபடுத்த பட்டு விவாதங்கள் அரங்கேறுகிறது.

ஆனால் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக களமிறங்கிய கயவர்கள் சமூக ஆர்வலர்களாக மாறிப் போகிறார்கள்....ரகசிய பதிவுகள் ஒளிபரப்பப்பட்டு வர்த்தகமாக்கப்படுகிறது.

இதில் எது குற்றம்? ஓரினச் சேர்க்கையா? அல்லது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான வர்த்தக அராஜகமா?

ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்ப்பது பாசிச பார்வையே ஆகும். இயற்கையை ஏற்க மறுக்கும் மூடத்தனம். நாம் அணிதிரள வேண்டியது இந்த வர்த்தக அராஜகத்திற்கு எதிராகத்தான்.பத்திரிகை சுதந்திரம்...எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித அந்தரங்கங்களை படமாக்கும் அபத்தக்களுக்கு எதிராகத்தான்.

இரண்டாவது சம்பவம்...

தோழர்.டபிள்யு.ஆர். வரதராஜனின் மரணம். அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு எதிராக ஏந்திய கடைசி ஆயுதம் “மரணம்”.ஆனால் நாம் அதையும் சர்ச்சையாக்கி அரசியல் ஆதயம் தேடும் தொடர் முயற்சியில் இறங்கி இருப்பது கொடுமையிலும் கொடுமை. உழைக்கும் வர்க்கத்திற்காக தனது வாழ்க்கையை அர்பணித்த அந்த அற்புத தோழர் தனது மரணத்தை தன் தரப்பு நியாயங்களுக்காக அர்பணித்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? பெண் ஒருவருக்கு ‘தகாத குறுந்தகவல்கள்’ அனுப்பினார் என்பதே. அவர் அப்படி அனுப்பியதாய் வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு என்று எனக்கு புரியவே இல்லை. வன்புணர்ச்சி குற்றம்...தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதுமா குற்றம்?

அந்தந்த காலகட்டத்தின் தனிமனித ஒழுக்கங்களாய் ஒரு சமூகம் கொண்ட வரையறைகளை மீறியவர் என்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட இந்த சமூகமும் அவர் சார்ந்த கட்சியும் வரையறுத்த ஒழுக்க நெறிகளை மீறியவர் என்றும் குற்றம் சாட்டலாமா? இப்படி எந்த விரலை நீட்டி குற்றம் சாட்ட முயற்சித்தாலும் தன் எண்ணங்களை வெளிப்படுத்த அவர் முயற்சித்ததை குற்றமாக எப்படி பாவிக்க முடியும்? குற்றம் எவர் செய்தாலும் குற்றமே! என்று கண்ணை மூடிக்கொண்டு தீர்பளித்து விட்டோம். இனி சிதறியவை மாணிக்க பரல்கள் எனத் தெரிந்தால் என்ன செய்யலாம்?”யானோ அரசன்?யானே கள்வன்?”என உயிர்(பதவி) துறந்திடுவோமா? நிச்சயம் மாட்டோம்.

பொதுவாக மரணத்திற்கு மௌனத்தை அஞ்சலியாக செலுத்துவது நமது மரபு.ஆனால் அதை கூட நாம் அந்த அற்புத தோழனுக்கு தர மறுப்பது எந்த வகையில் நியாயம்?

மூன்றாவது சம்பவம்.....

காவி துறந்து காமம் தழுவிய ‘சாமியாரின்’ கதை. இதில் எனக்கு நித்தியானந்தரின் மேல் எந்த கோபமும் இல்லை. அவர் நிச்சயம் புத்திசாலிதான். சொல்பவன் பேச்சை கேட்டு கேட்பவன் மதியை இழந்தால் குற்றவாளி சொல்பவனா? கேட்பவனா? இந்த நேரத்தில் எனக்கு ஒரு சர்தார்ஜி ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது....

சர்தார்ஜி: நான் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு என் பக்கத்து வீட்டுகாரரிடம் பந்தயம் கட்டி இரண்டாயிரம் ரூபாய் இழந்துவிட்டேன்.

நண்பர்: யாராவது ஒரு மேட்சிற்கு இரண்டாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுவார்களா?

சர்தார்ஜி: நான் என்ன முட்டாளா? நான் ஆயிரம் ரூபாய்தான் ஒரு மேட்சிற்கு பந்தயம் கட்டினேன்.

நண்பர்: பின்பு எப்படி இரண்டாயிரம் இழந்தீர்கள்?

சர்தார்ஜி: நான் நேற்று முன்தினம் நடைபெற்ற மேட்சிற்கு ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டினேன். மறுநாள் மேட்சில் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு நேற்று ஹைலைட்சிலாவது ஜெயிப்பார்கள் என நம்பி மீண்டும் பந்தயம் கட்டி இந்தியாவை நம்பி மோசம் போனேன்....என புலம்பினானாம்.

இப்படித்தான் இருக்கிறது நம்மவர்களின் கதைகள். எத்தனை தடவை பட்டாலும் நமக்கு உறைக்காது. முதலாவது சம்பவத்தை போலவே செய்திதாள்களும், டி.வி சேனல்களும் இதை பரபரப்பாக்கி விற்பனை செய்வதே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. எந்தவித சமூக சிந்தனையும் இவர்களுக்கு கிடையாது. வியாபாரம் ஒன்றே தான் இவர்களது குறிக்கோள். நாமும் தொடர்ந்து இவர்களது வியாபார தந்திரந்திற்கு பலியாகி வருகிறோம். நாம் நியாயப்படி கோபப்பட வேண்டியது இவர்களைப் போன்ற வியாபாரிகளை பார்த்தும்....நமது முட்டாள்தனத்தை நினைத்தும் தான்.

தோழர்களே!

மேலே நான் குறிப்பிட்ட மூன்று சம்பவங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது காமம் குறித்து இந்த சமூகத்தின் புரிதல்களே ஆகும். காமம் ஒரு இயற்கையான உணர்வு. பாலின பேதம் காமத்திற்கு இல்லை. அது ஒரு உயிரின உணர்வு. அதற்கான வடிகால்களும் இயல்பானதே! எந்த ஒரு உயிரையும் வன்புணர்ச்சி செய்வதே இயற்கைக்கு மாறானது. அதுதான் கண்டனத்திற்கு உரியது. எல்லா உயிரினமும் தனக்கான உணவை தானே தேடிக்கொள்கிறது. காமமும் அது போலத்தான். தனக்கான இணையை தானே முடிவு செய்வது தனிமனித சுதந்திரம். காமத்திற்கான பொதுவிதிகளை வரையறுக்க இங்கு தனிமனிதருக்கோ அல்லது ஒரு சமூக அமைப்பிற்கோ உரிமை கிடையாது. ஆனால் நாம் அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்.

விவிலியத்தில் ஒரு சம்பவம் உண்டு விபச்சாரம் செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை கல்லால் அடிக்க முற்படுவர். அப்போது இயேசுநாதர் அவர்களை தடுத்து,”உங்களில் எவன் குற்றமற்றவனோ அவனே முதல் கல்லை எறியட்டும்” என்பார் உடனே தங்கள் கைகளில் உள்ள கற்களை வீசியெறிந்து விட்டு அனைவரும் கலைந்து செல்வதாய் ஒரு கதையுண்டு.

இதைத்தான் நாமும் இங்கே சொல்ல விரும்புவது மேலே சேற்றை வாரி இறைக்கவும்....நீதி சொல்லவும்.....சேதப்படுத்தவும் செய்வோரெல்லாம் யோக்கியர்கள் தானா? இல்லை குற்றமற்ற மகாத்மாக்களா?

தவறுகள் தான் மனிதன்.அதனால் தண்டனைகள் தந்து தலையறுப்பதை விட. மன்னித்து அரவணைப்பதே மனித செயல். நாம் மனிதர்களாக மாறுவோமா?

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தோழர் ஆனேன்...3


இது ஒரு தொடர் பதிவு.....

குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை பாதையை நாம் வாழும் சமூகத்தை நோக்கி திரும்ப செய்தது எமது தொழிற்சங்கம் தான். இந்த சமூகத்தின் நிஜமான பக்கங்களை அது எனக்கு புரட்டிக் காட்டியது.அதுவரை நான் கண்டு நம்பி வந்த பிம்பங்களின் சுயரூபங்கள் தோலுரிக்கபட்ட போது நான் பெரிதும் அதிர்ந்து போனேன்.

இந்த சமூகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் இருக்கும் அரசியலை தெரிந்து கொள்ள எனது தேடுதலை துவங்கினேன். அப்போது நிழல்கள் நிஜங்களாகவும்...நிஜங்கள் நிழல்கள் கூட இல்லாமலும் இருப்பதை கண்டேன். கார்ல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின்,ஸ்டாலின்,சேகுவேரா,காஸ்ட்ரோ...என ”புதிய புதிய” தோழர்கள் எனக்கு அறிமுகமாகத் துவங்கினார்கள். எனக்குள் தோன்றாத கேள்விகளுக்கு கூட அவர்களிடம் பதில்கள் கிடைத்தது.

“கம்யூனிஸம்” என்ற அவர்களது நூற்றாண்டு கால கனவு என்னை வசீகரித்தது. அது வெறும் சித்தாந்தம் அல்ல.மனித சமூகத்தில் பல நூறு ஆண்டுகளாக நிலவும் பல்வேறு வகையான ஏற்றதாழ்வுகளுக்கான ஒரு தீர்வு என புரிந்துகொண்டேன். எனக்கு புரிந்த வரை ஒரு சில வார்த்தைகளில் அதன் சாரத்தை சொல்ல வேண்டுமானால் வர்க்கப் பேதமற்ற, தேச பிரிவினைகளற்ற, தட்டுப்பாடுகளற்ற ஒன்றிணைந்த ஒரே மனித சமூகம் என்ற நிலையே கம்யூனிசமாகும். உலகத்தின் எந்த மூலையிலும் இதுவரை பூரண கம்யூனிச ஆட்சி மலர்ந்ததில்லை,சோவியத் ரஷ்யா உட்பட. ஏனென்றால் லெனின்,ஸ்டாலின் போன்றவர்களால் கூட ரஷ்யாவில் சேஷியலிச ஆட்சியை தான் மலரச் செய்யமுடிந்தது. சோஷியலிசம் என்பது கம்யூனிசத்தின் முதல்படியே ஆகும். கம்யூனிசம் என்பது மனித சமூகத்தின் உன்னதமான நிலை.

ஆனால் இந்த உன்னதமான நிலையை மனித சமூகம் அடைந்து விட கூடாது என நினைக்கும் சுயநலவாதிகள் தான் சோவியத் வீழ்ந்தது...கம்யூனிசம் தோற்றது...என தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து நம்மை மூளைச் சலவை செய்துள்ளார்கள். பெரும் முதலாளிகளுக்கும், அவர்களை அண்டிப்பிழைத்து உடல் உழைப்பில்லாமல் ஊனை வளர்க்கும் வீணர்களான முதலாளித்துவ தரகர்களுக்கும் கம்யூனிசம் பொது எதிரியானது வியப்பிற்குரிய ஒன்றல்ல.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களை அடிமைகளாகவும், கூலிகளாகவும் சுரண்டிப் பிழைத்தவர்களுக்கு தொழிலாளற்களின் எழுச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே எல்லோருக்கும் எல்லாம் சமம் என்றாகிவிட்டால் நாமும் உழைத்து பிழைக்க வேண்டி வருமே என்ற பயமே அவர்களை கம்யூனிசத்தை வெறுக்க செய்தது. அதனால் தான் தொழிற்சங்கங்களை முனை மழுங்க செய்ய தங்களாலான அத்துணை முயற்சிகளையும் இன்றளவும் செய்து வருகிறார்கள்.

தொழிற்சங்கம் என்ற ஒன்றை பற்றி இனிவரும் தலைமுறையினர் கனவிலும் நினைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து தொழிற்சங்கங்கள் குறித்தும், தொழிற்சங்க தலைவர்களை குறிவைத்தும் உண்மையற்ற பிரச்சாரங்களை மிகவும் நைச்சியமாக மக்கள் மத்தியில் படரவிட்டு வருகின்றனர். இதை புரிந்து கொள்ளாத நம்மவர்களும் தொழிற்சங்கம் என்றால் தொட்டதற்கெல்லாம் வேலைநிறுத்தம் செய்பவர்கள்,சம்பளத்தை உயர்த்தக் கோரியும், போனஸ் கோரியும் கொடி பிடிப்பார்கள் என்பன போன்ற தவறான பிம்பங்களே இருக்கிறது.

உதாரணமாக.....

நாம் வீதிகளில் பயணிக்கும் போது அவ்வப்போது செங்கொடி ஏந்தி நகரத்தின் முக்கிய இடங்களில் ஒரு சிலர் ஒன்று கூடி முழக்கங்கள் செய்த வண்ணம் இருப்பதை கண்டிருப்போம். அப்போது நாம் அவர்களுக்கு இதைவிட்டால் வேறு வேலையே இல்லை என முணங்கியபடி ஒருவித எரிச்சலுடன் அவர்களை கடந்தும் சென்றிருப்போம். ஆனால் கொடுமை என்னவென்றால் அவர்கள் நமக்காகத்தான் அவர்களது அன்றைய ஊதிய இழப்பை கூட பொருட்படுத்தாமல் முழங்கி கொண்டிருப்பர்.

அதேசமயம் மாபெரும் பொருட்செலவில் தேவையில்லாத ஆடம்பரத்துடன் பொது சொத்துக்களை விரயம் செய்தபடியும் மிக அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியபடிம் தமது அன்றாட பணிகளையே ஏதோ மாபெரும் சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும் நம்மை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றும் பொய்யர்களுக்குப் பின்னால் அணிவகுப்போம். ஊடகங்களும் இத்தகைய அரசியல் விற்பன்னர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவர்களது கோமாளிதனங்களை தலையில் வைத்து கொண்டாடும் போக்கே இன்றைய யதார்த்தம்.

இந்தப் புள்ளியில் தான் வியாபாரிகள் வீரத் தலைவர்களாகவும்....போராளிகள் பிழைக்க தெரியாதவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள்.

ஆனாலும் மனம் தளரா மார்க்கண்டேயர்களாக இன்னும் எங்களை போன்ற தொழிற்சங்கங்கள் மக்களுக்கான போராட்டங்களை மிகவும் நம்பிக்கையோடு முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம்.

-தொடரும்.........

புதன், 10 பிப்ரவரி, 2010

எனது முதல் பொதுக்குழு அனூபவம்.....


இது ஒரு தொடர் பதிவு......

தோழர்
ஆனேன்..2

எங்கள் சங்கத்தால் நடத்தப்படும் ஒவ்வொரு கூட்டங்களிலும் எனது அமர்வை தவறாமல் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.தொழிற்சங்க கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம் அதில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகளோடு எங்கள் வட்டார தோழர்கள் கலந்துரையாடிய முறை அங்கு பரிமாறப்பட்ட கருத்தாக்கங்கள் எல்லாமே எனக்கு வினோதமாகவும் அதேசமயம் விஷயம் செறிந்ததாகவும் இருக்கும்.அவர்களிடம் ஏதாவது கேள்விகள் கேட்டு எனது இருப்பை பதிவு செய்ய விரும்புவேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை அப்படி செய்யவிடாமல் தடுத்து விடும்....அது எனது தேவையற்ற கூச்சம் என்று நினைக்கிறேன்.

என்னுள் இருந்த அந்த கொஞ்ச நஞ்ச தயக்கங்களையும் களைந்து எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் தோழர்.சுந்தரவடிவேல் அவர்கள். அவர் அப்போது கீழக்கரை கிளையில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். தொழிற்சங்கம் குறித்து எனக்குள் எழுந்த அத்துணை கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருந்தது.அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.அவரை உண்மையில் ஒரு ஆதர்ச நாயகனைப் போல் காணலானேன்.ஏனென்றால் அத்தனை கம்பீரமும்,உறுதியும் அவரிடம் உண்டு.தனக்கு தவறு என்று தோன்றினால் அதை தயங்காமல் தட்டிக்கேட்கும் துணிச்சலும் அவரிடம் உண்டு.

எங்கள் கிளையில் நீண்ட காலமாக சரி செய்யப்படாத கணக்குகளை சீர் செய்யும் பொருட்டு தோழர்.சுந்தரவடிவேல் அவர்களை எங்கள் கிளைக்கு தற்காலிக பணிமாற்றம் செய்தார்கள்.அவர் கணக்குகளில் இருந்த குழப்பங்களை மட்டும் அல்ல எனக்குள் தொழிற்சங்கம் குறித்து இருந்த சிறு சிறு குழப்பங்களையும் அந்த குறுகிய காலத்தில் சரி செய்தார்.

அந்த சமயத்தில் தான் எங்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் வைத்து நடைபெற்றது.அதுதான் எனது முதல் பொதுக்குழு கூட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் போராட்ட காலங்களை தவிர்த்து எங்கள் வங்கியின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் தோழர்கள் ஒன்றாக சங்கமிப்போம். ஒரு இரண்டு ஆண்டுகளில் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அசைபோட்டு விட்டும்... புதிய செயற்குழுவை தேர்ந்தெடுத்து விட்டும்... கலையும் சம்பரதாய கூட்டமல்ல அது.

அது எங்கள் குடும்ப விழா..... அங்கு வரும் தோழர்கள் தங்கள் கடந்தகால இனிமையான நினைவுகளை மீட்டெடுத்து அவர்கள் மேல் காலம் படர விட்ட முதுமையை களைந்து விட்டு புதிய பொலிவோடும், இளமையோடும் உற்சாகமாக இருக்கும் தருணங்கள் அவை. வேறு எந்த தொழிற்சங்கத்திற்கும் இல்லாத ஒரு பெருமை எங்கள் சங்கத்திற்கு உண்டு. அது கடைநிலை ஊழியர்,எழுத்தர்,அலுவலர் என்ற எந்த பாகுபாடும் எங்கள் தோழர்களுக்கு இடையில் கிடையாது. மேலாளரை கூட உரிமையுடன் பெயர் சொல்லியும்,உறவு சொல்லியும் அழைக்கும் எத்தனையோ கடைநிலை ஊழியர்களையும்,எழுத்தர்களையும் நான் கண்டதுண்டு. உத்தியோகத்தின் பெயர்களை தவிர வேறு எந்த பிரிவினையும் எங்களுக்கிடையில் இல்லை.

அந்த பொதுக்குழு கூட்டத்தின் வரவேற்பில் வருகை பதிவேடுடன் அமர்ந்திருந்தார் தோழர்.காமராஜ் (அடர்கருப்பு).நான் முதலில் அவரை எதிர்கொண்டவுடன் அவர் என் பெயரை கேட்டார்.நான்,”அண்டோ...”என்றேன்.அவர் விடாமல் முழுபெயரையும் சொல் என கொஞ்சம் குரலுயர்த்தினார்.நான் முறைப்பாக,”அண்டோ கால்பட்...”என்றேன்.அவர் உடனே சிரித்தபடி,”நீ கன்சோலா அக்கா மகன் தானே...நானும் உங்க அம்மாவும் ஒண்ணா வேலை பாத்திருக்கோம் தம்பி...எங்க அக்கா அவ....”என்று நிறுத்தியவரிடம்.நான் சமாதானமாக,”அப்படியா சார்...”என முடிப்பதற்குள்..”சார் என்ன சார்....மாமான்னு கூப்பிடு என அன்பு கட்டளையிட்டார்.அன்றுலிருந்து அவர் எனக்கு ’மாமா’மட்டும் தான்......

அங்கு நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் என் தாயின் பெயரை சொல்லி அறிமுகமாக துவங்கினேன்.அப்போது ஒவ்வொருவரும் என் அம்மாவின்... அவர்களது நினைவுகளையும் என் அம்மாவை பற்றிய தங்களது மேலான மதீப்பீடுகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள துவங்கினர். அப்போது தான் நான் அவர்களுக்கு அந்நியமானவன் அல்ல என்பதை உணரத்துவங்கினேன்.

நான் அந்த பொதுக்குழுவிற்கு சென்றதற்கு மேலும் ஒரு முக்கியமான காரணம்....எப்படியாவது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கத்தை சந்தித்து எனது சொந்த ஊருக்கு பணிமாறுதல் வாங்கித்தர உதவி கேட்பதற்கே.அவரை அதற்கு முன் எனது பணிநியமனத்தின் போதும்...ஓரிரு முறை இராமநாதபுர மாவட்டத்தில் வைத்து நடைபெற்ற எங்கள் சங்க கூட்டங்களிலுமே சந்தித்திருந்தேன். அந்த சந்திப்புகளின் போது அவர் என் தோள் தட்டி நலம் விசாரிப்பார் ஆனால் என் பதிலுக்கு கூட காத்திராமல் அடத்தவரிடம் சென்றிடுவார்.அதனால் அவரை எப்படியாவது பொதுக்குழுவில் வைத்து பிடித்துவிட வேண்டும் என தீர்மானித்து சென்றிருந்தேன்.

அவரோ என்னிடம் சிக்குவதாய் இல்லை. ஏதோ கால்களில் இறக்கை முழைத்தவர் போல் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தார். ஒருவழியாக தோழர்.முருகானந்தம் அவர்களின் உதவியோடு அவரை பிடித்தேன். அவரோ,”இன்னும் கல்யாணம் கூட ஆகல தானே... இன்னும் கொஞ்ச நாள் அங்க இருக்கலாமே....”என இடியை இறக்கினார். நான் என் குடும்ப நிலையையும் என்னோடு இராமநாதபுரத்தில் தங்கியிருந்த எனது தாத்தா,பாட்டியின் உடல் நிலைகுறித்தும் விவரித்து எனது பணிமாறுதலுக்கான அவசியத்தை எடுத்துச் சொன்னேன்.உடனே அவரும் உறுதியளித்தார். நான் அதற்கு ’நன்றி’ சொல்வதற்கு முன் வழக்கம் போல் மறைந்துவிட்டார்!!!!!

ஒருவழியாக பொதுக்குழு ஆரம்பமானது. தலைவர்களின் உரை...தீர்மானங்கள்....பொதுச்செயலாளர் அறிக்கை...அதன் மேல் விவாதங்கள்....பொதுச்செயலாளரின் பதில்கள்.....புதிய செயற்குழுவின் தேர்வு....என அங்கு நடந்தேறிய எல்லாமே எனக்கு புதிய விஷயங்கள் தான்.”தொழிற்சங்கம்” என்பது தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்ட சுயநல கூடாரமல்ல என்பதை நான் அநூபவ பூர்வமாக அன்று உணர்ந்தேன். தொழிற்சங்கத்தின் வேர்களை நோக்கி எனது பார்வையை செலுத்த வைத்த அற்புதமான வைபவம் அது.அதன் ஒவ்வொரு நினைவுகளும் இன்றும் என்னுள் பசுமையாக மலர்கிறது.....


தொடரும்..................

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

"தோழர்" ஆனேன்....


“தொழிற்சங்கம்” என்ற வார்த்தையே தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒன்றுதான்.ஆறு வருடங்களுக்கு முன்பு நானும் அவர்களில் ஒருவராகத்தான் இருந்தேன்.என் தாயின் திடீர் மரணம்....எனது அப்போதைய குடும்பச் சூழல் எல்லாம் சேர்ந்து எனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு என்னை எனது தாயின் வங்கிப்பணியை வாரிசு உரிமை அடிப்படையில் ஏற்கச் செய்தது.

என்னை இராமநாதபுர மாவட்டத்தில் இருக்கும் இரகுநாதபுரம் என்னும் ஊரில் உள்ள எங்கள் வங்கி(பாண்டியன் கிராம வங்கி) கிளைக்கு ’எழுத்தராக’ பணிநியமனம் செய்தார்கள்.அங்கு எங்களது சங்கத்தின் (பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்) அப்போதைய உதவி பொதுச்செயலாராக இருந்த தோழர்.முருகானந்தம் அவர்கள் காசாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.அவரிடமிருந்து தான் எனது தொழிற்சங்க வாழ்வின் அகரம் ஆரம்பமானது.

அதுவரை நான் கேட்டறிந்தது எல்லாம் ஒரு வங்கி கிளையில் மேலாளர் என்பவர் சர்வ அதிகாரம் படைத்தவர். அவர் நினைத்தால் அந்த கிளையின் ஊழியர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் அவர் சொல்படி கேட்டு அவரது விருப்பபடி நடந்தால் மட்டுமே என் போன்ற ஊழியர்களின் வேலை தப்பும்.அதற்கு மாறாக தொழிற்சங்கத்தில் இணைந்தால் அவர்கள் நம்மை காரணமில்லாமல் போராட செய்து மேலாளரின் கோபத்திற்கும், நிர்வாகத்தின் கோபத்திற்கும் நம்மை ஆளாக்கி நமது வேலையை இழக்கும்படி செய்துவிடுவார்கள் என்பதுமே ஆரம்பத்தில் எனக்கு தொழிற்சங்கம் குறித்த கேள்விஞானமாக இருந்து வந்தது.

ஆனால் தோழர்.முருகானந்தம் அவர்களிடம் எங்கள் கிளைமேலாளர் மட்டுமல்லாமல் அப்போதைய இராமநாதபுர வட்டாரமேலாளரே நடந்து கொள்ளும் விதம் எனக்கு பெரும் வியப்பளித்தது.ஒரு சாதாரண காசாளருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ஒரு வட்டார மேலாளரே தனது வட்டார ஆளுமையின் கீழ் இயங்கும் வங்கிகள் குறித்தும் நிர்வாகத்தால் தனக்கு இடப்பட்டிருக்கும் முக்கிய உத்தரவுகள் குறித்துமான தனது அன்றாட நிகழ்வுகளை ஏன் இவ்வளவு சிரத்தையுடன் ஒரு காசாளரிடம் பகிர்ந்து கொள்கிறார்?என்பன போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தது.

எனது அத்தனை கேள்விகளுக்கும் அவர் ஒரு “தொழிற்சங்க தலைவர்” என்ற பதிலே எனக்கு கிடைத்தது.”தொழிற்சங்கம்” குறித்தான எனது பயங்களும்,தவறான புரிதல்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.தயக்கங்கள் களைந்து தொழிற்சங்கம் என்னும் மாபெரும் விருட்சத்தின் விழுதுகள் நோக்கி எனது கைகள் நீள துவங்கின.தோழமையுடனும்,வாஞ்சையுடனும் இராமநாதபுர வட்டார தோழர்கள் என்னுள் நெருக்கம் பிடித்தனர்.மெல்ல மெல்ல அவர்கள் கைப்பிடித்து நான் தொழிற்சங்க கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.அப்போது எனக்கு அது ஒரு புதுவிதமான அநூபவமாக இருந்தது.

மாபெரும் தொழிற்சங்க பாரம்பரியமும்,சளைக்காத உழைப்புக்கும் கொண்ட எங்கள் சங்கத்தின் பெரும்பான்மையான தோழர்களுக்கும் எனக்கும் ஒரு தலைமுறையின் இடைவெளி உண்டு.ஆனால் அவர்கள் என்னிடம் பாராட்டிய தோழமையை என் சக வயதினரிடம் கூட நான் அதுவரை கண்டதில்லை.என் தாயின் திடீர் மரணத்தால் எனக்குள் ஏற்பட்டிருந்த ரணத்திற்கு அவர்களது தோழமையே சிறு மாறுதலை தருவித்தது.

எங்கள் வங்கியின் நிர்வாகம் எப்போதெல்லாம் ஊழியர் விரோத நடவடிக்கையில் இறங்கியதோ அப்போதெல்லாம் சங்க நிர்வாகிகளின் தலைமையில் எங்கள் வட்டார(இராமநாதபுரம்) தோழர்களும் நிர்வாகத்திற்கு எதிராக களம் கண்டனர்.”பயம்” என்ற சொல்லை கூட கேட்டறியாதவர்களை போல் அவர்கள் வீதியில் இறங்கி செய்யும் முழக்கங்கள் என்னை மட்டுமல்ல விண்ணையும் அசைப்பதாய் இருக்கும்.முதலில் அவர்களோடு வீதியில் இறங்கி கோஷமிடுவதற்கு எனக்கு கொஞ்சம் கூச்சமாக கூட இருந்தது.ஆனால் அவர்களது போராட்டத்தின் வீச்சும் அதை உறுதியோடு அவர்கள் முழங்கிய விதமும் என்னையும் அறியாமல் எனது குரலை அவர்களோடு உயர செய்தது.நரம்பு புடைக்க நமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புது இரத்தம் பாய்வதை நாம் உணரலாம்.நான் உணர்ந்தேன்....!

........தொடரும்

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சரித்திரத் தேர்ச்சி கொள்....


”நம் பள்ளிக்கூடங்களில் உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது. சரித்திர பாடம் கற்றுக் கொடுப்பதன் நோக்கம்,சில தேதிகளையும் சம்பவங்களையும் மாணவர்கள் உருப்போட்டு மனப்பாடம் செய்ய வேண்டுமென்பதல்ல. ஒரு தளபதியோ அல்லது வேறொருவரோ பிறந்த தினம்,ஒரு மன்னரின் பட்டாபிஷேக நாளை அறிந்து கொள்வதில் மாணவர்களுக்கு என்ன சிரத்தையிருக்க முடியும்? அவை அவ்வளவு முக்கியமான விஷயங்களா? சரித்திரப் பிரசித்தமான சம்பவங்களுக்கு காரணங்களையும்,அச்சம்பவங்களை உருவாக்கிய சக்திகளையும் ஆராய்ந்தறியும்படி செய்வதுதான் சரித்திர பாடத்தின் தத்துவம்....”- ’மெய்ன் காம்ப்’(எனது போராட்டம்) என்னும் தனது சுயசரிதையில் அடால்பு ஹிட்லர்

”சரித்திரத் தேர்ச்சி கொள்”
என்கிறான் பாரதி. அவன் சரித்திரத்தை தெரிந்து கொள் என சொல்லவில்லை.மாறாக தேர்ச்சி கொள் என்கிறான். ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது என்பது கற்றலின் தொடக்கம் அதுவே தேர்ச்சி கொள்வது என்பது கற்றலின் உச்சம். தேர்ச்சி கொள்ளுதல் என்றால் திறம்பட வினாக்களுக்கு விடையளித்தல் என பொருள் கொள்ளுதல் கூடாது.ஒன்றை நடுநிலையுடன் ஆராய்ந்து கசடற கற்று அதை திறம்பட கையாளுதலே தேர்ச்சியாகும்.

சரி! இன்றைய காலகட்டத்தில் சரித்திரத் தேர்ச்சி அவ்வளவு அவசியமான ஒன்றா?

இன்றைய சமூகத்தில் சரித்திர பாடத்திட்டம் ஏட்டு சுரக்காயாகவே பார்க்கப்படுகிறது. பிந்தைய தலைமுறையினருக்காக தங்களது இளமையையும்,வாழ்வையும் தொலைத்த வீர புருஷர்களின் சரித்திரங்கள் தெரிந்து கொள்ளாததால் தான் இன்றைய இளைய தலைமுறையினர் அரசியலை அருவருக்க தகுந்த ஒன்றாக பார்கிறார்கள். அதனால்தான் இன்று கண்ட கண்ட தரித்திரங்களையெல்லாம் தலையில் வைத்து தலைவனாக கொண்டாடும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் மாறிப்போய்யுள்ளனர்.

சரித்திரங்கள் முலமாக தான் வெற்றிக்கான வழிகளையும்,தோல்விக்கான காரணங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும்!

மனிதர்களாகிய நாம் சமூக மிருகங்களே! இந்த சமூக அமைப்பை சாராமல் வனங்களில் கூட இன்று தனித்து வாழ முடியாது. அப்படி இருக்கும் போது இந்த சமூகத்தின் கட்டுமானங்களை தெரிந்து கொள்ளாமல் வாழ முயற்சிப்பது எவ்வளவு அபத்தம்?நாம் சார்ந்த சமூகத்தில் இன்று நாம் அனுபவித்து வரும் ஒவ்வொரு சலுகைக்கும் ஒரு வரலாறு உண்டு.

ஆனால் இது எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் நாம் நம்மைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டு சுயநலமாய் வாழ்ந்து மடிவது நியாயமாகுமா?

முந்தைய சரித்திரங்களிலிருந்து பாடங்கள் படிக்காத எத்தனையோ இனக்குழுக்களும்,பேரரசுகளும்கூட இருந்த தடம் தெரியாமல் அழிந்து போன வரலாறுகள் ஏராளம் இங்குண்டு.

இதற்கு மிக சமீபத்தில் நாம் கண்கூடாக பார்த்த ஒரு மிகச் சிறந்த உதாரணம் இலங்கை......

விடுதலை புலிகளின் கிளர்ச்சி இலங்கை வரலாற்றில் நிச்சயம் ஒரு சகாப்தம் தான். ஆம்! வரலாற்றின் பாடமும் அதுதான். அது ஒரு சகாப்தம் மட்டுமே!(சகாப்தம்-ஒரு காலப்பகுதி). அது ஒரு நீண்ட கால தீர்வல்ல. ஆயுத முனையில் பெறப்படும் எந்த ஒரு பிரிவினையும் நிலைத்ததல்ல என்பதே சரித்திரம் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் பாடம். உலகின் ”வெற்றிகரமான” பிரிவினைகள் எல்லாம் அரசியல் மூலமாய் வலிகளுடன் ”அமைதியாய்” ஏற்பட்டவையே! (உதாரணம் இந்தியா-பாகிஸ்தான்.)

அமெரிக்க கறுப்பின புரட்சி என்பது இலங்கை தமிழர் பிரச்சனையை காட்டிலும் நீண்ட கால வரலாறு கொண்டது.தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல கறுப்பினத்தின் வலிகள்.கறுப்பின தோழர்கள் பல நூற்றாண்டுகளாய் சிந்திய இரத்தம் பசிபிக் பெருங்கடலை விட அடர்த்தியானது.

இன்று வெள்ளை மாளிகையின் அதிபராக ஒரு கறுப்பின பிரதிநிதி கொலுவேறி இருப்பதற்கு காரணம் அங்கு மால்கம் எக்ஸ் போன்றவர்கள் ஆயுதம் அளித்த அதேவேளையில் மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் மக்களுக்கு அரசியலையும் வழங்கினார்கள்.

அமெரிக்க கறுப்பின போராட்டங்களின் வெற்றி என்பது ஏதோ ஒரு நூற்றாண்டின் போராட்ட வெற்றியல்ல.நூற்றாண்டுகால அடிமைதழைகளை ஒரு தலைமுறை போராட்டத்திலே வேரோடு களைந்திட முடியும் என நினைப்பது கடல்நீரை கையால் அள்ளி இடம்மாற்றிடலாம் என எண்ணுவது போலாகும்.

விடுதலை புலிகளின் விழ்ச்சி என்பது அவர்கள் முந்தைய சரித்திரங்களில் இருந்து பாடங்களை ஏற்காமல் இயக்கம் வேறாகவும் மக்கள் வேறாகவும் கடைசிவரை தனித்து அல்லது வேறுபட்டு இருந்ததேயாகும். எந்த ஒரு போராட்டமும் அது முழுமையான மக்கள் இயக்கமாக மாறாமல் வெற்றி அடைந்தது இல்லை என்பதே வரலாறு. ஆனால் விடுதலை புலிகள் இயக்கமோ வீட்டுக்கு ஒருவருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய அதேவேளையில் மற்றவர்களுக்கு அரசியல் பயிற்சியும் வழங்கி இருந்தால் இன்று நிச்சயம் இந்த வீழ்ச்சி தவிற்க பட்டிருக்கும்.

அதேசமயம் புலிகள் தரப்பு அந்தந்த காலகட்டங்களில் ஏற்படவிருந்த அமைதி ஒப்பந்தங்களில் இருந்த பாதகமான அம்சங்களுக்காக அவர்களுக்கு கிடைக்கவிருந்த சிறுசிறு வெற்றிகளையும் தங்களது இறுதி இலக்கிற்காக(தமிழீழம்) புறந்தள்ளியதும் இந்த வீழ்ச்சிக்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்று.

எந்த ஒரு போராட்ட வடிவத்தாலும் நேரடியாக நமது இறுதி இலக்கை அடைந்துவிட முடியாது. சிறுசிறு போராட்டங்கள் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் தற்காலிக ஒப்பந்தங்கள்.... அந்த ஒப்பந்தங்களின் சாதகமான அம்சங்களை போராட்டத்தின் வெற்றியாகவும்,பாதகமான விஷயங்களை அடுத்தகட்ட போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாகவும் மாற்றி... மீண்டும் போராட்டங்கள்.... அதை தொடர்ந்து வரும் சிறுசிறு வெற்றிகளின் மூலமாகவுமே இறுதி இலக்கை அடைந்திட முடியும்.

தோழர்களே!

வரலாறு என்பது காலக்கண்ணாடி. நமது இன்றைய நிலையை அதன் முன் நிறுத்தி ஒப்பீட்டு பார்த்தால் அது நமக்கான பாதையை மிக தெளிவாக காட்டும். நமது தவறுகளை அதை பார்த்து களைந்து விட்டு நம்பிக்கையோடு நமது போராட்ட பயணத்தை தொடர்ந்தால் இன்றைய நிலையும் மாறும். நாளைய வரலாறும் நமதாகும். ஆதலினால் சரித்திரத் தேர்ச்சி கொள்வீர்!